மாமன்னர்கள் ஈசனுக்கு கோவில்கள் கட்டியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சிறுத்தொண்ட நாயனார் பரமனுக்கு மிக அற்புதமான ஆலயம் ஒன்றை அமைத்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள உசுப்பூர் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் இது உள்ளது.

esan

Advertisment

சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவராவார். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றிகொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார் என்பதையும் குறிப்பிடவேண்டும். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதி யார். இவர் ஆயுர்வேதக் கலையிலும், வட நூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர். யானையேற்றம், குதிரையேற்றம் ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகளை ஒழிவின்றிப் பயின்றதனால், சிவன் கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்தவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.

இங்கு அவர் ஏன் கோவில் அமைத்தார்? அர்ஜுனன் பாசுபதம் வேண்டி ஈசனைநோக்கித் தவம்புரிந்த இடம் உசுப்பூர். பாசுபதம் பெற்ற இடம் திருவேட்களம். உசுப்பூர் கிராமத்தில் அடர்த்தியான மூங்கில் காடுகளில்தான் அர்ஜுனன் ஈசனை நோக்கித் தவம்புரிந்தான்.

அப்பொழுது அங்கே வேடர்கள் உருவில் ஈசனும் பார்வதியும் வந்து, அர்ஜுனனின் பக்தி உண்மையா என்றறிய ஒரு திருவிளையாடலை நடத்தினார்கள். ஒரு பன்றியை உசுப்பிவிட்டு தவத்தைக் கலைக்க பரமன் முயன்றார். ஈசனே வில் லெடுத்து அந்தப் பன்றிமீது எய்தார். அப்போது அந்தப் பன்றி "அர்ஜுனா, அபயம்!' என்று அர்ஜுனனின் காலடியில் போய்விழுந்தது. வேடர்கள் உருவில் வந்திருப்பது ஈசனும் உமையாளுமே என்று தெரியாமல் அர்ஜுனன் ஈசனிடம் சண்டையிட்டான். (இருவரும் சண்டையிட்டுக்கொண்ட இடம் தான் சிவாரி என்னுமிடம். அது தற்சமயம் சிவபுரி என்று வழங்கப்படுகிறது.)

Advertisment

பரமன் அர்ஜுனனை விண்ணை நோக்கி வீசியெறிந்தார். சுழன்றபடியே மேலேசென்ற அர்ஜுனன் கீழே வரும்பொழுது, உமையாள் தாயாக மாறி அர்ஜுனனை இரு கைகளாலும் ஏந்திப் பிடித்தாள். அதன்பிறகு தாங்கள் யாரென்பதை அர்ஜுனனுக்கு உணர்த்தினர்.

esan

பிறகு "பரமனே' என்று அர்ஜுனன் உணர்ச்சி வசப்பட்டுக் கூற, அப்பொழுது திரு வேட்களம் சென்று அங்கு பாசுபதத்தை இருவரும் அர்ஜுனனுக்கு வழங்கினார்கள். இப்படியொரு அற்புத நிகழ்வு நிகழ்ந்த இடத்தில் பர மனுக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்னும் நோக்கில் இங்கு கைலாசநாதர் ஆலயத்தை சிறுத்தொண்ட நாயனார் அமைத்தார்.

பன்றியை உசுப்பிவிட்ட தால் இந்த ஊரின் பெயர் உசுப்பூர் எனப்படுகிறது. இந்த ஆலயத்தில் பூவராக சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உடன் காட்சிதருகிறார். சிவன் கோவிலில் பூவராகப் பெருமாள் கோவில் இருப்பது அபூர்வம். மகாவிஷ்ணுவின் அவதாரமான பன்றியை உசுப்பிவிட்டதால் இங்கு பூவராகர் சந்நிதி அமைக் கப்பட்டுள்ளது.

இத்தலம் பலநூறு ஆண்டு களாகப் பராமரிப்பின்றி மக்க ளால் வழிபாடு செய்யப் பட்டு வந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தான் இவ்வாலயம் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

உசுப்பூர் சிவன் கோவில் தெருவில் கைலாசநாதர், கல்யாணசுந்தரி ஆலயம், மிக அற்புதமான எழில் கொஞ்சுமிடத்தில் அமைந் துள்ளது. ஆலயத்தின் எதிரில் என்றுமே வற்றாத சிவ தீர்த்தம் உள்ளது. சிவ தீர்த்தத்தின் நேர் எதிர்புறம் ஆலயம் உள்ளது. ராஜகோபுரம் கிடையாது. ஆலய வெளிப்புறத்தில் கொடிமரம் அழகுற காட்சிதருகிறது. மகா மண்டபத்துக்கு வெளிப்புறம் மேலே சிவன்- பார்வதி அமர்ந்திருக்க, இடப்பக்கம் விநாயகர், வலப்பக்கம் முருகப்பெருமான், அவர் களுக்கு இருபுறமும் நந்தியின் சுதைச் சிற்பங்கள்.

அவற்றை வணங்கிவிட்டு மகா மண்டபத்திற்குள் நுழைந்தால் அங்கு பலிபீடம், நந்தி. மகாமண்டபத்தின் வலப்புறம் கல்யாணசுந்தரி அம்பாள் தனிச் சந்நிதியில் தெற்கு பார்த்து அருள்கிறாள். அர்த்த மண்டபத்தின் முன் இடப்பக்கம் ஆட்கொண்டார், வலப்பக்கம் உய்யக்கொண்டார் என இரு துவார பாலகர்களும் கம்பீரமாய் காட்சிதர, உள்ளே சென்றால் விநாயகப் பெருமான் காட்சிதருகிறார்.

அதையடுத்து கிழக்கு நோக்கிய கருவறை. மகேஸ்வரன் வட்ட பீடத்தில் லிங்க வடிவில் அற்புதமாய்க் காட்சியளிக்கிறார்.

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், சிவ துர்க்கை ஆகியோர் உண்டு.

esan

வெளி முதல் சுற்றில் கிழக்கு பார்த்து வரசக்தி விநாயகர், அதற்கு அடுத்தபடியாக சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடனும், பூவராகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர்.

சப்த கன்னியர்கள், பைரவர், நவகிரகங்கள், தலவிருட்சம் பூவரசு ஆகியவையும் உண்டு.

இக்கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் சிறப்புவாய்ந்தது. பலநூறு ஆண்டுகளாக இத்திருவிழா இவ்வாலயத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த அமுது படையல் விழா இக்கோவிலில்தான் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அமுதுபடையல் திருவிழாவின்போது குழந்தைப் பேறில்லாதவர்கள் கோவிலின் எதிரிலிருக்கும் சிவ தீர்த்தத்தில் நீராடிவிட்டு, ஈரத்துணியுடன் இங்கிருக் கும் பரமனை வேண்டி, மகாமண்டபத்தில் சப்த ரிஷிகளாக அமர்ந்திருக்கும் சிவனார் வேடமிட்ட சாமியார் களிடம் மடிப்பிச்சை ஏந்தி அன்னம் கேட்கவேண்டும்.

அவர்களும் அன்னம் தருவார் கள். அதனுடன் குழந்தைப் பேறுக்காக சிறப்பு மூலிகை மருந்தொன்று இவ்வாலயத்தில் வழங்கப்படுகிறது. இந்த மருந்தை தம்பதியினர் இருவரும் சாப்பிடவேண்டும். இந்த மருந்தை சாப்பிட்ட ஓராண்டுக்குள் நிச்சயமாகக் குழந்தைப்பேறு கிட்டும்; இது சத்தியமான வாக்கு என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் பிள்ளைப்பேறு மருந்தானது அமுது படையல் அன்று மட்டுமல்ல; சாதாரண நாட்களிலும் வழங்கப்படுகிறது. இந்த மருந்தை வாங்குவதற்கு வெளியூரிலிருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் நிறையபேர் இங்குவந்து செல்வதாகக் கூறப்படுகிறது. அப்படி ஒரு அற்புத சக்திவாய்ந்த மருந்தாக இதை பக்தர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் அம்பாள் கல்யாணசுந்தரி திருமணத் தடைகளை நீக்குகிறாள். ஆண்- பெண் இருபாலருமே மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல் ஆகியவற்றை வைத்துப் பூஜைசெய்து, அதைப் பிரசாதமாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு வீட்டில் பூஜையறையில் வைத்தால், நிச்சயமாக மங்கள இசை விரைவில் ஒலிக்கும். அப்படி திருமணம் நடைபெற்றவுடன் திருமணக் கோலத்திலேயே இவ்வாலயத்திற்கு வந்து கைலாசநாதரையும் கல்யாணசுந்தரியையும் ஏராளமான மணமக்கள் வணங்கிச் செல்கின்றனர்.

இவ்வாலயத்தில் இருக்கும் பூவராகர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சுவாதி நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் செய்து வழிபாடு செய்தால் கடன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்குமென்று பக்தர்கள் உறுதியுடன் கூறுகிறார்கள்.

இவ்வாலயத்தில் சிவராத்திரியன்று சிறப்புப் பூஜைகளும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகமும் வெகுவிமர்சையாக நடைபெறும். பிரதோஷ தினங்களில் சிறப்புப் பூஜைகளும், தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்புப் பூஜையும், கிருத்திகை, சஷ்டியன்று சுப்பிரமணியருக்கு சிறப்புப் பூஜைகளும் நடைபெறுன்றன.

சிறுத்தொண்ட நாயனார் கட்டிய திருத்தலம் என்பதால் இங்கு பக்தர்கள் சிறப்பு வழிபாடாக அன்னதானத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். அன்னம் பாலிக்கும் சிற்றம்பலம் சிதம்பரத்திற்கு வருபவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்று கூறுவார்கள்.

அதேபோல்தான் இவ்வாலயத்திற்கு வரும் யாரும் பசியோடு செல்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு அற்புதத் தலம் தில்லை மண்ணில் உள்ளது. தரிசனம் செய்ய அவசியம் ஒருமுறை வாருங்கள்.

கோவில் இருப்பிடம்: சிதம்பரத்திலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் சென்று அம்மாபேட்டை நிறுத்தத்தில் இறங்கி கிழக்குப் பக்கம் உள்ள சாலையில் அரை கிலோமீட்டர் நடந்தால் கோவிலை அடையலாம்.

கோவில் சம்பந்தமான தொடர்புக்கு குமார், பொறியாளர், அலைபேசி: 94432 29114.

தரிசன நேரம்: காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை.