தேஜனம் எனும் ஆசிரமத்தில் தங்கி, புத்த பிக்குகளுக்கு மனப் பக்குவத்தையும், பொதுமக்களுக்கு நற்சிந்தனைகளையும் போதித்துக் கொண்டிருந்தார்.
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புத்தரை நேரில் பார்க்கவும், புத்தரின் போதனைகளைக் கேட்டும் திரும்பினார்.
புத்தரின் கருத்தும், அவருடைய புகழும் மக்களிடையே சிலாகித்துப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.
புத்தரின் புகழ் ஓங்குவதைப் பொறுக்கமுடியாத எதிரிகள் ஒரு காரியம் செய்தனர்.
அதன்படி...
புத்தரின் போதனைகளைக் கேட்டுவிட்டு வனத்தின் வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் மக்கள்.
எதிரில்... மிக அழகிய தோற்றம் கொண்ட, இளமையும் கவர்ச்சியும் கொண்ட ஒரு பெண் புத்த பிக்குணி உடையணிந்து, கையில் பழங்களும், வாசமிகு சந்தனம் மற்றும் மலர்களும் அடங்கிய கூடையை ஏந்திக்கொண்டு வந்தாள்.
"ஏம்மா... இப்படி இருட்டுற நேரத்துல தன்னந்தனியா வனத் துக்குள்ள போறியே... இது ஆபத் தில்லையா? அதிலும் இந்நேரத்தில எங்க போற?'' எனக் கேட்டனர் சிலர்.
"நான் தேஜனம் மடத் திற்குப் போகிறேன். இரவு புத்தருடன் தங்கி விட்டு, காலையில்தான் திரும்புவேன்'' என்றாள். அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மறுநாள் காலையில் கலைந்த கோலமும், களைப்புமாய் வனத் தின் வழியே ஊரைநோக்கி அந்தப் பெண் செல்ல... புத்தரின் போதனையைக் கேட்க வனத் தின் வழியே மடத்துக்குப் போய்க் கொண்டிருந்தவர்கள் அவளைப் பார்த்தார்கள்.
அவள் ஒருவித நமட்டுச் சிரிப்புடன் அம்மக்களை பார்த்துவிட்டுச் சென்றாள். பல நாள் இது நடந்த நிலையில்... புத்தர்மீது மக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
ஒருநாள்... போதனை கேட்கப் போனவர்கள்... அந்த இளம் பெண் பிரச்சினையைக் கிளப்பினர்; தொடர்ந்து அதுபற்றியே கேள்வியெழுப்பினர்.
ஆனால் புத்தர் பதட்டமடையவில்லை; பதிலும் சொல்லவில்லை. எப்போதும்போல் இயல்புடனே சிரித்தார்.
இந்தச் சம்பவத்தால் புத்தர்மீது அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை குறைந்தது.
எதிரிகள் மகிழ்ந்தனர். அந்த இளம் பெண்ணும் கொலை செய்யப்பட்டாள்.
அரசின் உளவாளிகள் நடத்திய விசாரணையில்... புத்தரின் புகழைக் கெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டவள் என்பதையும், தன்னை இப்படி செய்யச் சொன்னவர்களை அவள் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவளைக் கொலை செய்ததை யும் கண்டுபிடித்தனர்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
உண்மையறிந்த மக்கள் மடத்துக்கு ஓடினர். புத்தரிடம் மன்னிப்புக் கோரினர்.
"எங்களை மன்னிச்சிட்டதா ஒரு வார்த்தை சொல்லுங்க!'' எனக் கேட்டனர்.
இப்போதும் புத்தர் பதட்டமோ... கர்வமோ அடையவில்லை. எப்போதும்போல் இயல்புடனே சிரித்தார்.
"அருணோதயம்' படத்தில் சிவாஜிக்காக டி.எம். சௌந்தரராஜன் பாடி, கே.வி. மகாதேவன் இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் போற்றத்தகுந்தவை.
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பார்த்துக்க நல்லபடி- உன்
மனச பார்த்துக்க நல்லபடி!'
குற்றம் செய்யாத நிலையில் குறளி வித்தை காட்டும் பொல்லாத மனிதர்களின் "புரளி வித்தை'க்கு நாம் ஏன் பயமோ... பதட்டமோ... சலனமோ படவேண்டும்?
மனதை திடமாக வைப்போம்!
(பெருகும்)