மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவி என்று இரண்டு மனைவியர். சிவனுக்குப் பார்வதி; கங்கையைத் தலையில் ஏந்தியுள்ளார். பிரம்மாவுக்கு சரஸ்வதிதான் பத்தினி. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புஷ்கர் என்னுமிடத்தில் பிரம்மா யாகம்செய்ய ஆரம்பிக்க, அந்த நேரத்தில் சரஸ்வதி வராததால் சாவித்திரியை ஏற்றார். காயத்ரி, சாவித்திரி என இரு தனி மலைகளில் அவர்களை தரிசிக்கலாம்.
பொதுவாக கணபதியை பிரம்மச்சாரி என்போம். அவருக்கு பிரம்ம புத்திரிகளான சித்தி தேவி, புத்திதேவி என இரு மனைவிகள் உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. யுத்தங்களிலும் அவர்கள் விநாயகருக்கு உதவியதாக விநாயக புராணம் கூறுகிறது.
சூர பத்மாதியர்களை அழிக்க சிவனே கந்தனாக, ஜோதி சொரூபனாக அவதரித்தார். பராசக்தியே வேலாக மாற, ஐப்பசி மாத வளர்பிறை சஷ்டி திதியில் முருகன் அசுரர்களை அழித்தான். பிரம்மன் அறியாத பிரணவத்திற்கு விளக்கம் என்னவென்று முருகனிடம் சிவன் கேட்க, முருகன் தகப்பனுக்கு உபதேசம் செய்ய, சிவகுருநாதன், சுவாமிநாதன் ஆனான் கந்தன்.
தேவசேனை திருமணம்
மகாவிஷ்ணுவின் ஆனந்தக் கண்ணீரிலிருந்து உதித்தவர்கள் சுந்தரவல்லி, அமிர்தவல்லி ஆகியோர். அவர்களுக்கு முருகனே ஷடாக்ஷர உபதேசம் செய்தான். அதனைத் துதித்த அவர்கள் முருகனிடமே தங்களை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டினர். "யாம் இப்போது உங்களுக்கு குரு; எனவே உங்கள் விருப்பம் பின்னர் நிறைவேற்றப்படும்' என்றான் முருகன்.
அமிர்தவல்லி தேவேந்திரன் மகளாக- தேவசேனையாக அவதரித்தாள். பின்னர் முருகன் சூரபத்மாதியர்களைப் போரில் அழிக்க, மகிழ்ந்த தேவேந்திரன் தன் மகள் தேவசேனையை கந்தனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் மணம் செய்துகொடுத்தான். இதனால் முருகன் குஞ்சரி ரமணன், தேவசேனா காந்தன், சேனைநாதன் என்றெல்லாம் வணங் கப்படுகிறான்.
பெரும்பாலும் அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டிக்கு மறுநாள் தேவசேனை திருமணம் நடைபெறும்.
திருப்பரங்குன்றத்தில் கருவறை பிரதான உற்சவ விக்ரகத்தில் முருகனுடன் தேவசேனையை மட்டுமே காணலாம். தனியே உள்ள தேவசேனை, முருகன் விக்ரகங்களும் உள்ளன. திருவிடைக்கழி தலத்திலும் தேவசேனையை மட்டுமே காணலாம்.
திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திரநாளில் திருமண வைபவம் நடைபெறும். அன்று தேவசேனை கந்தனின் இடப்புறம் இருப்பாள். பல ஆலயங்களில் தைப்பூசம், மாசி பூசம், பங்குனி உத்திரம் என்று வள்ளி, தேவசேனை திருமண வைபவம் நடைபெறுகிறது. கல்யாண முருகன் பக்தர்களுக்குத் திருமண வரம், மங்கலம் பொழிகிறான்.
வள்ளி பிறப்பும் திருமணமும்
தேவசேனை எங்கு, எப்போது பிறந்தாள் என்னும் விவரம் புராணங் களிலோ தல வரலாறுகளிலோ இல்லை. ஆனால் வள்ளியின் பிறப்பு, திருமணம் போன்றவை வினோதமே. இதை கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தில் ஒரே துதியில் இவ்வாறு கூறுகிறார்-
"மாதவன் ஓர் மாதவனாய் மாதவம் செய்திடலும்
வன மானாய் வந்தெதிர்ந்த மலைமானைப் புணர
பூதல மங்கையர் உருவாய் அவதரித்த வள்ளி
பொருப்புறையும் பொருப்பர்மனை விருப்பமுடன் வளர்த்து
தீதகலும் தினை காத்து வேங்கை உருவெடுத்த
செவ்வேளை அவ்வேளை சேர்ந்திருளக் கோளும்
காதலுடன் புரிந்திறைவன் வலப்பாகத் தமரும்
கன்னியென்னும் வள்ளி கழல் உன்னி வழுத்திடுவாம்.'
மகாவிஷ்ணு யோகியாய் தவம்செய்ய, அங்கு மகாலட்சுமி ஒரு பெண் மானாய் வர, இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று நோக்க, ஒரு பெண் குழந்தை உதித்தது. அது வள்ளிக்கிழங்குச் செடியின் கீழே இடப்பட்டது. அந்த இடம் வேடுவர் தலைவன் நம்பிராஜனுக்கு சொந்தமானது. அவர்களின் குலதெய்வம் முருகனே. பிள்ளைவரம் வேண்டி முருகனிடம் வேண்டிவந்தனர். மலையைச் சுற்றிவந்த நம்பி குழந்தையின் அழுகுரல் கேட்க, வள்ளிச் செடியின் கீழேயிருந்த குழந்தையைக் கண்டு, கந்தன் அருளே என எடுத்து, வள்ளி என்று பெயரிட்டு வளர்த்தனர்.
வள்ளி தினைக் கொள்ளையை காவல்காக்கச் சென்றாள். அங்கு நாரதர் அவள்முன் தோன்றி, "கந்தனே உன் கணவன்' என்றாராம்.
கந்தனிடம் நாரதர் வந்து, "சுந்தரவல்லி, வள்ளிதேவியாக நம்பி ராஜனால் வளர்க்கப்படுகிறாள். நீ முன்னர் கூறியபடி அவளைத் திருமணம் செய்வது உன் பொறுப்பு' என்றாராம்.
ஆண்டாள் திருமணமும், பத்மாவதி திருமணமும், ருக்மிணி திருமணமும், பார்வதி திருமணமும் யாவும் வினோதமே.
அதுபோன்று வள்ளி திருமணமும் வினோதமே.
பகவான் பக்தனுக்கு அருளிட அவனைத் தேடிச் செல்கிறான் என்னும் ஆழ்ந்த- நூதன தத்துவம் பொதிந்த வைபவங்கள்.
நம்பி வேடுவ குலத்தினன். எனவே கந்தன் வேடுவ வேடம் தரித்து வள்ளியைத் தேடி தினைப் புனத் துக்குச் சென்றான்.
அவளுடன் பேசும் போது, "யாரோ ஒரு வேடுவன், முன்பின் அறிமுகமில்லாதவன் வந்துள்ளானே' என வள்ளி நடுங்கினாள்.
அப்போது நம்பிராஜன் அங்குவர, வேடனாக
வந்த வேலன் வேங்கை மரமானான். அதைக்
கண்ட நம்பி, "இந்த
வேங்கை மரம் ஏது?
இதை வெட்டிவிடட் டுமா?'' என்று வள்ளி யிடம் கேட்க, அவள் "வேண்டாம்; நிழலுக்கு உதவும்'' என்றாள்.
நம்பி அங்கிருந்து சென்றதும் வேங்கை மரம் கிழவனாகியது. கிழவனாகிய முருகன் வள்ளியிடம் பேச்சு கொடுத்து, "பசிக்கிறது'' என்று கூற, தன்னிடமிருந்த தேன், தினைமாவு ஆகியவற்றை வள்ளி அவனுக்குக் கொடுத்தாள். சிறிது தின்ற கிழவன், "விக்கல் வருகிறது; நீர் வேண்டும்'' என்று சொல்ல, வள்ளி அவனது கையைப் பிடித்து நீர்நிலைக்கு அழைத்துச்சென்று தண்ணீர் குடிக்கவைத்தாள். பசிதீர்ந்த அவன், "என் காமப் பசியையும் தீர்க்கவேண்டும்" என்றான்.
அவள், "இது என்ன விபரீத எண்ணம்?'' என்று கோபப்பட்டாள். அப்போது கந்தன் கணபதியை நினைக்க, கணபதி யானையாக அங்குவர, யானையைக் கண்டு அஞ்சிய வள்ளி கிழவனை அணைக்க, அவன் கந்தனாகவே தரிசனம் தந்தான்.
இதனை வள்ளியின் தோழிகள் நம்பியிடம் ஒருவிதமாக சொல்ல, வீட்டில் சிறைப் பட்டாள் வள்ளி. கந்தன் நள்ளிரவில் வந்தான். வள்ளி, தோழியின் உதவியால் வெளிக்கொணரப்பட்டாள். இதையறிந்த நம்பியின் படைகள் கந்தனுடன் போரிட்டன. கந்தன் தன் சேவற்கொடியை நினைக்க, சேவல் ஓங்காரமிட, படை வீரர்கள் அனைவரும் மாண்டனர். வள்ளி வேண்டிக் கொள்ள, சேவல் ஓங்காரமிட, அனைவரும் உயிர்பெற்றனர்.
முருகனின் தரிசனம் கண்ட நம்பி மன்னிப்புக் கேட்டுப் பணிந்தான். பின்பு அனைவர் முன்னிலையிலும் வள்ளி- கந்தன் திருமணம் செம்மையாக நடந்தேறியது.
திருத்தணி அருகே யுள்ள வள்ளிமலையில் தான் தைப்பூச தினத்தில் வள்ளி பிறந்தாள். மலையின் கீழேயும் மேலேயும் சுனைகள் உள்ளன. திருத்தணிகை மலையில்தான் வள்ளி திருமணம் நடைபெற்றது என்பர். மாசி மாத பூசுத்தன்று திருமணம் நடைபெற்றதாகக் கூறுவர். உற்சவங்கள் நடக்கின்றன. திருச்செந்தூர் கோவில் கடலருகேயுள்ள வள்ளி குகையே வள்ளி பிறந்த இடமென்றும் கூறுவர். திருச்செந்தூர் ஆலயக் கருவறையில் முருகன் தனியே, சூர பத்மாதியயை வதம் செய்தபிறகு சிவனைப் பூஜிக்கும் தோரணையில் உள்ளார். உற்சவ மூர்த்திகளாக வள்ளி, தேவசேனையுடன் முருகனைக் காணலாம். வள்ளியூரிலுள்ள ஆலயம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டது. பிரதான கருவறையில் முருகனுடன் வள்ளி, தேவசேனையைக் காணலாம். வள்ளி பிறந்து வளர்ந்தது இங்குதான் என்பர். வள்ளியை மட்டும் தனிக் கருவறையிலும் காணலாம். ஆக, ஊர்ப் பெயரும் வள்ளியூர் ஆயிற்றென்பர்.
இலங்கையில் கொழும்பு நகரிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள முருகன் தலம் கதிர்காமம். 2,500 வருடங் களுக்கு முற்பட்டது என்பர். சுமார் நூறு வருடங் களாகத்தான் அங்குசெல்ல சாலைவசதி, இன்னும் பல வசதிகள் செய்யப்பட்டன. பக்தர்கள் பலரும்வந்து வழிபட ஆரம்பித்தனர்.
சீதை சிறைப்பட்ட இடம், இராமன் வந்த தலம் போன்றவை இதனருகே உள்ளன. இங்குள்ள வழிபாடுகள் யாவையும் புதிரா னவை. தமிழர்கள், பௌத்தர்கள், முகம்மதியர் கள், கிறிஸ்துவர்கள் அனைவருமே வந்து வணங்குகின்றனர். கோவிலில் மூர்த்தி இல்லை. வள்ளி, தேவசேனை, முருகன் கூடிய- மயில்வாகனத் திரை முருகனே உள்ளார். உள்ளே ஒரு பெட்டியில் சண்முக சக்கரம் உள்ளது. அது ரகசியம் என்கின்றனர்.
ஆடி அமாவாசையை அடுத்த பிரதமையன்று ஆரம்பித்து 14 நாட்கள் திருவிழா நடக்கும். பௌர்ணமிக்கு மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். இத்தலத்தில் வள்ளிக்கு தனிக் கோவிலுண்டு. தேனும் தினையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இலங்கை வந்த கிரேக்கர்கள், ரோமானியர்கள் தங்கள் தெய்வம் இதுவென வழிபட்டுள்ளனர்.
இங்கு பௌத்தர்களே பூசாரிகளாக இருக்கி றார்கள்.
கந்தன், கணபதி, வள்ளி, தேவசேனை, புத்தர், பைரவர் ஆகியோருக்கு தனிக் கோவில் கள் உள்ளன. வள்ளி பிறந்து வளர்ந்தது, திருமணம் புரிந்துகொண்டது இந்த இடமே என்று கூறுவார்கள். போகர், கல்யாணகிரி சுவாமிகள் இங்குவந்து தங்கியுள்ளனர்.
இந்தியாவில் பல கோவில்களில் கொள்ளையடித்த போர்த்துக்கீசியர்களின் விளையாட்டு இங்கு 1642-ல் பலிக்கவில்லை. வந்தவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட, கோவிலைச் சூறையாடும் எண்ணத்தை மறந்தனர்.
தேவசேனை கோவிலில் மட்டும் அந்தண குருக்களால் ஆராதனைகள் நடக்கின்றன. கல்யாணகிரி சுவாமிகள் சமாதி உள்ளது. அருணகிரியார் கதிர்காமக் கந்தனை 13 பாடல்களால் பாடியுள்ளார். "கிருபை சித்தமும் ஞானபோதமும் அழைத்துத் தரவேண்டும் ஒருநாளே- கதிர்காமம் மேவிய பெருமாளே' என்று பாடியுள்ளார்.
வேளிமலை முருகன்
வள்ளிக்கும் கந்தனுக்கும் வேள்வி (திருமணம்) நடந்த இடம் வேள்விமலை. இதுவே வேளி மலையாயிற்று என்பர். வேளி என்றால் மலையாளத்தில் திருமணமென்று பொருள். இது நாகர்கோவிலி-ருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. முருகன் எட்டடி, ஆறங்குல உயரத்திலும், முருகனின் இடப்பக்கமாக வள்ளி ஆறடி எட்டங்குல உயரத்திலும் என, மிக உயர்ந்த விக்ரக வடிவங்கள் உள்ளன. வள்ளி பிறந்தது, வளர்ந்தது, கந்தன் வேங்கை மரமானது, திருமணம் நடந்தது அனைத்தும் இங்கேதான் என்பர். வேங்கை மரத்துக்குத் தனிச் சந்நிதி உள்ளது. பூஜைகள் நடக்கின்றன. வினோத மாக, தட்சன் ஆட்டுத் தலையுடன் இருப்ப தைக் கோவிலில் காணலாம். கோவிலினருகே அரை கிலோமீட்டர் தொலைவில் வள்ளி குகை உள்ளது. விநாயகருக்கும் கோவிலுண்டு. தினைப்புனம், வள்ளிச்சோலை, கிழவன் சோலை, நீர் குடித்த சுனை என்பனவும் உள்ளன.
இவ்வாலயம் சுமார் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பர். வள்ளி, தெய்வானை, விநாயகர், சாஸ்தா, காசி விஸ்வ நாதர், சண்முகர், ஆறுமுக நாயினார் ஆகியோரும்
விளங்குகிறார்கள். உற்சவரின் பெயர் மண விடைக்குமாரர். இவர் வள்ளிதேவியுடன் நவராத்திரி சமயம் திருவனந்தபுரத்துக்கும், மார்கழி திருவிழாவில் சுசீந்திரத்திற்கும் ஏகுவார்.
வேளிமலையில் வசிப்பவர்கள் வள்ளி தேவியின் குடும்பப் பரம்பரையே என்பர். முருக பக்தர்கள் உவந்து ஆனந்தம் பெறவேண்டிய தலம் வேளிமலை. வள்ளி, தேவசேனை மணாளனை வணங்கி மனம் மகிழ்வோம்.