"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.'
-திருவள்ளுவர்
மனிதர்களாகிய நம் அனைவர் மனதிற்குள்ளும், "நீண்டநாள் நாம் வாழவேண்டும்; உறவோடும் நட்போடும் உல்லாசமாகப் பொழுதுபோக்கி நூறாண்டு காலம் வாழ்ந்தால்தான் நிம்மதி' என்ற எண்ணம் பொதுவாக இருக்கிறது.
பிறந்தநாள் விழா, திருமண வைபவம், புதுமனைப் புகுவிழா போன்ற கொண்டாட்டங்களில் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிபெறும்பொழுதும் அவர்கள் "நூறாண்டு காலம் வளமும் நலமும் பெற்று வாழ்க' என்றுதான் வாழ்த்தி மகிழ்கிறார்கள்.
பேரன்- பேத்தி அமைந்த வயதானவர்களும் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திடவே எண்ணுகிறார்கள். பிறந்த வர்கள் அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டுமென்பதே பிரபஞ்ச உண்மை.
"மறைவுதான் இவ்வுலகின் மாறாத சத்தியம்' என்கின்ற னர் மகான்கள்.
மனிதன் மரணமடை யும்போது அவன் வாழ் நாளில் சம்பாதித்த பொருட்களோ, அன்புடன் பழகிய உறவுகளோ, ஆசையாய்க் கொஞ்சிய மழலைகளோ அவனுடன் வருவதில்லை. மூடிய கைவிரல்களோடு பிறந்த அவன், விரித்த கையோடு எல்லாவற்றையும் விட்டுவிட்டுதான் வெறுமையோடு விண்ணுலகம் செல்கிறான். ஆனால் அவன் அவசியம் ஒன்றை இவ்வுலகில் விட்டுவிட்டுச் செல்லவேண்டுமென்று வலியுறுத்துகிறார் வள்ளுவர். அவர் சொல்வது என்ன? வாழும்போது அவனுக்கு உலகம் தந்த நற்சான்றிதழ்! புவியோர் அவனுக்கு சூட்டிய புகழ்மாலை!
"மிக நல்லமனிதர் போய்விட்டாரே! அள்ளி அள்ளித் தந்த வள்ளல்-
அடங்கிவிட்டதே அவர் ஆவி! சாதித்த பெருமகனை சாவு விழுங்கிவிட்டதே என்று பலரும் கூறும்படி, நற்பெயரையும் புகழையும் எவர் உலகில் விட்டுவிட்டுச் செல்கிறாரோ அவரே வாழ்வாங்கு வாழ்ந்தவராக மதிக்கப்படுவார்; துதிக்கப்படுவார்.
மகத்தான மக்கள் பணியைத் தன் வாழ்வின் லட்சியமாக ஏற்றுக்கொண்டவர்களே என்றென்றும் இவ்வுலகில் சிரஞ்சீவியாக சிறக்க முடியும். "வல்லமை தாராயோ மாநிலம் பயனுறச் செய்வதற்கே' மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த மானுடதேகம் படைக்கப்பட்டது என்கிறது உபநிடதம். இவ்வுலகில் என்றென்றும் வாழ்வது புகழ் ஒன்றே என்கிறார்கள் சான்றோர்கள்!
ஒரு விஞ்ஞானியிடம் உதவியாளராகச் சேர விண்ணப்பித்தனர் பட்டதாரிகள். இளைஞர்களிடம் அறிவியல் ஆர்வம் அதிகரித்திருப்பதாக நம்பி நேர்முகத் தேர்வுக்கு அழைப்புவிடுத்தார் விஞ்ஞானி. v நேர்கானலில் பங்கேற்க வந்தவர்கள் அரைவட்டமாக அமர்ந்திருந்தனர். எதிரே அமர்ந்தார் விஞ்ஞானி. நடுவில் ஒரு கண்ணாடிக் குடுவையை வைத்தார். அதில் சாம்பல்நிற திரவம் தத்தளித்தபடி இருந்தது. குடுவையிலிருந்து ஆவி லேசாக வெளியேறிக்கொண்டிருந்தது.
"இந்த திரவம் எந்த பொருளையும் கரைத்துவிடும் ஆற்றல் கொண்டது'' என்றார் விஞ்ஞானி.
சற்றுமிரண்டு பின்வாங்கினர் இளைஞர்கள். எந்த பதிலும் சொல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தனர். தொடந்து விஞ்ஞானி, "இப்போது இந்த திரவத்தை உங்கள்மேல் தெளிக்கபோகிறேன். யார் கரையாமல் இருக்கிறாரோ அவரையே உதவியாளராக சேர்த்துக்கொள்வேன்'' என்றார்.
கூட்டத்தில் இருந்தவர்கள், "இந்த வேலையே வேண்டாம்; ஆளை விடுங்கள்'' என ஓட்டமும் நடையுமாக வெளியேறினர்.
ஒருவன் மட்டும் தைரியமாக, "திரவத்தை என்மீது ஊற்றுங்கள். சோதனைக்குத் தயாராக இருக்கிறேன்...'' என்றான், அவனிடம், "பயமில்லையா?'' என்றார் விஞ்ஞானி.
"எல்லாவற்றையும் கரைத்துவிடும் திறன் இந்த திரவத்துக்கு உண்டுடென்றால், இந்த நேரம் கண்ணாக் குடுவையும் கரைந்திருக்குமே. நீங்கள் கூறியது உண்மையல்ல என அறிந்தேன். என் பயம் போய்விட்டது'' என்றான். அவனையே உதவியாளராக ஏற்றுகொண்டார் விஞ்ஞானி.
படிப்பில் முதலிடம் வகிப்பது முக்கியம்.
ஆனால் தனித்துவம் மிக்கவராக இருங்க வேண்டியது அதைவிட முக்கியம். அத்தகைய தனித்துவத்தையும், அழியாப் புகழையும் தந்து, வாழ்வில் அனைத்து நலன்களையும் நல்கி வளம் சேர்க்கவல்லதொரு உன்னதமான திருத்தலம்தான் திருவேட்டக்குடியில் எழுந்தருளியிருக்கும் திருமேனியழகர் திருக்கோவில்.
இறைவன்: திருமேனியழகர், சுந்தரேஸ்வரர்.
இறைவி: சௌந்தர நாயகி, சாந்த நாயகி.
புராணப்பெயர்: புன்னாகவனம்.
ஊர்: திருவேட்டக்குடி.
தலவிருட்சம்: புன்னை மரம்.
தீர்த்தம்: தேவதீர்த்தம்.
சோழநாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகவும், ஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பட்டதும், புதுவை மாநில அரசு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலும் செயல்படும் இவ்வாலயம் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகளோடு இன்னும் பல்லேது சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருவேட்டக்குடி சிவாலயம்.
"வண்டிரைக்கும் மலர்க்கொன்றை
விரிசடைமேல் வரிஅரவம்
கண்டிரைக்கும் பிறைச் சென்னிக்
காபாலி, கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுது இறைஞ்ச
துளங்கு ஒளிநீர்ச் சுடர்பவளம்
தெண் தீரைக்கள் கொணர்த்தெறியும்
திருவேட்டக் குடியாரே!'
-ஞானசம்பந்தர்
வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை, விரிந்த சடையின்மேல் அணிந்து, வரிகளையுடைய பாம்பைக் கண்டு அஞ்சி ஆரவரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவபெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை, தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க விளங்கும், கடலிலுள்ள சுடர்போன்ற செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக் குடி எனும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்த ருள்கிறார்.
தல வரலாறு மகாபாரதப் போரின்போது பாண்டவர்களும் கௌரவர்களும் நிகராகப் போரிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வேதவியாசர் அர்ஜுனனிடம், "சிவனை வணங்கி பாசுபதாஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனை வெற்றிகொள்ளலாம்'' என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் இத்தலத்திற்கு வந்து சிவனை வேண்டித் தவமிருந்தான். அவனது தவத்தைக் கலைப்பதற்காக முகாசுரனை அனுப்பினான் துரியோதனன். பன்றி வடிவில் வந்த அசுரன் அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க முயன்றான். அர்ஜுனன் அசுரனை அம்பால் வீழ்த்தினான்.
அப்போது ஒரு வேடன் தன் மனைவி, மகனுடன் அங்குவந்து, பன்றியைத் தான் வீழ்த்தியதாகக் கூறி எடுத்துச் செல்ல முயன்றார்.
அர்ஜுனர் அவரிடம் பன்றியைத்தர மறுத்தான். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவன், தானே வேடன் வடிவில் வந்ததை உணர்த்தி, பாசுபதாஸ்திரம் கொடுக்க முயன்றார்.
அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், "ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதி பெற்றவன்தானா?'' என்றாள். சிவன் அவளிடம் "அர்ஜுனன் "மஸ்ய ரேகை' பெற்றவன். எனவே அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்'' என்றார்.
அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளைக் காட்டினானாம் அதன்பின் அம்பாள் சம்பதிக்கவே சிவன் பாசுபதாஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனன் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருத்து அருளும்படி வேண்டவே, அவ்வாறே சிவன் இங்கு எழுந்தருளினார்.
ஒருமுறை கயிலாயத்தில் பார்வதிதேவி சிவபெருமானிடம் வாதத்தில் ஈடுபட்டாள் "உலகில் வாழும் உயிரிகளுக்கு ஆதாரமாக நீங்கள் மட்டும் எப்படி இருக்குமுடியும்? நானில்லாமல் உங்களால் தனித்தியங்க முடியாதே'' என்றாள். அன்னையின் பேச்சில் ஆணவம் இருந்ததையறிந்த ஈசன், அவளை பூலோகத்தில் மீனவப் பெண்ணாகப் பிறக் குப்படி செய்தார். அதன்படி அம்பாள் இத்தலத்தில் மீனவப் பெண்ணாகப் பிறந் தாள். குழந்தைப் பருவத்திலிருந்தே ஈசன்மீது பக்திக்கொண்டு இத்தலத்தில் தவமிருந்தாள். சிவபெருமானும் மீனவராக வந்து அம்பாளைத் திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இந்த ஆலயத்தில் நடைபெறும் மாசித் திருவிழாவின்போது சிவனை மீனவர்கள் இங்கிருந்து தங்கள் பகுதிக்கு அழைத்துச்சென்று "மாப்பிள்ளை அழைப்பு' கொடுக்கின்றனர்.
சிவபெருமான் மீனவராகவும். வேடனாக வும் இரண்டு வடிவங்களில் வந்து அருள்செய்த தலமாதலால் திருவேட்டக்குடி என்றானது.
சிறப்பம்சங்கள்
ப் வேடனாக வந்த தலமூர்த்தி, வேடுவச்சியாக வந்த அம்பாள் ஆகிய (வேடரூபர், வேடநாயகி) திருமேனிகள் சிறப் பானவை. வேடரூபர் கையில் வில்லேந்தி கம்பீரமாகக் காட்சிதந்து கூடல் நீராடுகிறார்.
இது "கடலாடு விழா' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ப் இத்தலத்தில் உமாதேவி மீனவர் குலத்தில் அவதரித்ததாகப் புராண வரலாறு கூறுவதால், கடலாடு விழாவை கடலோர ஊர்களில் வாழும் மீனவர்கள் ஏற்று நடத்துகிறார்கள். மாசி மகத்தில் இத்தல தேவதீர்த்தத்தில் நீராடுவது சிறப்பானதாக தலபுராணம் சொல்கிறது.
ப் இத்தலத்தில் முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம்செய்வது அபூர்வம்.
ப் கருத்து வேறுபாடுடன் பிரச்சினைகளால் பிரிந்திருக்கும் தம்பதிகள் இத்தல அம்மையப்பனை வணங்க, ஒரு மண்டல காலத்திற்குள் சேர்ந்து நலமுடன் வாழ்வர்.
ப் திருஞானசம்பந்தர் படகிலிருந்து இறங்க முயன்றபோது, கரையிலிருந்த மணல்கள் எல்லாம் விங்கமாக அவர் கண்களுக்குத் தெரிந்தது. எனவே அவர் கடலில் நின்றே இத்தல இறைவனைப் பற்றி பதிகம்பாடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ப் வடலூர் வள்ளல் பெருமான் தாம் பாடியருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "வற்கடத்தும் வாட்டக்குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும் வேட்டக்குடி மேவு வேலவனே' என்று போற்றியுள்ளார்.
ப் "இத்தல பைரவர் மிகுந்த வரப்ரசாதி. பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்றும், அடியார்கள் செய்த பாவங்களைப் போக்குபவர் என்றும் பொருளாகும். சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலை களையும் செய்கிறார். எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கேற்றி வழிபடும்பொழுது, நமக்கு காலத்தால் தீர்க்கமுடியாத எத்தகைய பிரச்சினையையும் அவர் தீர்த்துவைப்பார்'' என்கிறார் ஆலய அர்ச்சகர்.
"பைரவருக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமி. பௌர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம்.
காலபைரவர் பஞ்ச பூதங்களை யும் அடக்கியாள்வதால் இவருக்கு பஞ்சதீப எண்ணெய்யூற்றி, பஞ்சவிளக்குகளை கோவிலில் ஏற்றவேண்டும். அதாவது ஐந்து அகல் விளக்குகளை எடுத்து, அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய்யூற்றி தனித்தனியே தீபத்தை ஏற்றவேண்டும். அதன்பின்னர் பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லாவிதமான பிரச்சினைகளும் தீரும். மேலும் நேர்மறை எண்ணங்கள் பெருகி, குடும்பத்தில் இருக்கும் துஷ்டசக்திகள் அத்தனையும் நீங்கும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று வாழ்வை சுபிட்சமடையச் செய்யும்'' என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச்சகரான ரமேஷ் சிவாச்சாரியார்.
மாசிமகத் திருவிழா இவ்வாலய விழாவாக இருப்பினும், சிவாலயத்திற்குரிய சங்கடஹரசதுர்த்தி, மாதப் பிறப்பு, தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் காலபூஜைகளுடன் சரிவர நடப்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் கிழக்குப்புறம் தேவதீர்த்தக் குளமும் அருகில் தலவிருட்சமான புன்னை மரமும் உள்ளது. சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்ற கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் ஒரு விசாலமான மண்டம்; அதில் செப்புக் கவசமிட்ட கொடிமரம். முன்னால் கொடிமர விநாயகர், பலபீடம், நந்திமண்டபம் உள்ளது. வெளிப்பிராகாரம் வலம்வரும்போது தென் மேற்குச் சுற்றில் சுந்தர விநாயகர் சந்நிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதியும் உள்ளன. வடவேற்குப் பிரகாரத்தில் புன்னைவன நாதர் சந்நிதி, மகாலட்சுமி சந்நிதி, சம்பந்தருக்கும் தனிச் சந்நிதி உள்ளது. கோஷ்ட தெய்வங்கள் தனிச் சந்நிதியில் அருள்கின்றன. காலபைரவர், பீஷணபைரவர் என்ற திருநாமத்தில் அருள்கிறார் கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்னும் சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன், ருத்ராட்ச பந்தலின்கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சியளிக்கிறார்.
அர்ஜுனன் கையில் சூலம், வில்லை வைத்துக்கொண்டு ருத்ராட்ச மாலை அணிந்தபடி உற்சவராக இருக்கிறான்.
அம்பாள் தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
சாந்தமான கோலத்தில் இருப்பதால் இவளை சாந்தநாயகி என்றும், வாழ்வை அழகுற வைப்பதால், சௌந்தரநாயகி என்றும் அழைக்கின்றனர். நவராத்திரி, ஆடிவெள்ளிக் காலங்களில் சிறப்பு அலங்காரத்துடன் அருள்புரிவாள்.
திருவேட்டக்குடி தலமானது, தேவாரப் பாடல்பெற்ற 274-ல் 112-ஆவது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 49-ஆவது தலமாகவும் சிறந்து விளங்குகிறது. இத்தலத்தின் கிழக்கே கண்ணுக்கெட்டும் தூரத்தில் கடற்கரை உள்ளது. தெற்கே திருத்தெளிச்சேரி, திருதர்மபுரம், தென்மேற்கே திருநள்ளாறு, திருச்சாத்தமங்கை; மேற்கே அம்பர்மாகாளம், அம்பர் பெருந்திருக்கோவில்; வடக்கே திருக்கடையூர் போன்ற தேவாரப்பதிகம்பெற்ற கோவில்களின் நடுவே அமைந்து பொலிவுடன் காட்சியளிக்கிறது திருவேட்டக்குடி சிவாலயம்.
"வம்பு வழக்கு, நீதிமன்றப் பிரச்சினைகளுக்கு பீஷண பைரவரிடமும்; நோய்வாய்ப்பட்டு பலநாள் அவஸ்தையில் உள்ளவர்கள் திருமேனி யழகரிடமும்; நல்லவரன் அமையவும், தம்பதி ஒற்றுமைக்கும் அம்மன் சாந்தநாயகியிடமும்; கெட்ட கனவுகள் வந்து தொந்தரவு செய்தால் வில்லேந்திய வேல்வனிடம்; சொல்லொணாத் துயரம் எலுவாயினும் சம்பந்தர் பாடியது போல் தேன்நிலவு மலர்சோலைத் திருவேட்டக்குடி யாரிடமும் முறையிடுங்கள். பகலவனைக் கண்ட பனிபோல் துன்பங்கள் மறைந்து வாழ்வில் ஒளிவீசத் தொடங்கும்'' என்கிறார் ஆலய அர்ச்சகரான ரமேஷ் சிவாச்சாரியார்.
பிரதோஷ நாளிலோ, சோமவாரத்திலோ, தேய்பிறை அஷ்டமியன்றோ அல்லது தமிழ் மாதப்பிறப்பன்றோ நம் கோரிக்கைகளை முன்வைப்போம். நம் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் திருவேட்டக்குடியார் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.
காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல்அலுவலர், அருள்மிகு திருமேனியழகர் திருக்கோவில், திருவேட்டக்குடி (அஞ்சல்), காரைக்கால் வட்டம், புதுவை மாநிலம். அஞ்சல் குறியீடு: 609 609. பூஜை விவரங்களுக்கு: என். ரமேஷ் குருக்கள், அலைபேசி: 95852 28088.
அமைவிடம்: புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்காலி-ருத்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பொறையார் செல்லும் வழியிலுள்ள வரிச்சகுடி என்ற ஊரிலிருந்து கிழக்கே செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் சென்றால் இத்தலத்தை அடையலாம். வரிக்குடியிலிருந்து ஆட்டோ வசதியுண்டு.
படங்கள்: போட்டோ கருணா