காலம் யாருக்கும் கட்டுப்படக்கூடியது அல்ல; காலத்தை விட்டு விட்டால் அது மீண்டும் கைக்குக் கிடைக்காது. காலம் போனது போனது தான்.
இரவும் வரும் பகலும் வரும். இரண்டும் மாறிமாறி வரும். இருட்டில்கூட வழி தெரியும். கருப்புப் பூனை இருட்டில் வந்தால் அதுவும்கூட கண்ணுக்குத் தெரியும். ஒருபொழுதில் இன்பம் வரும், மறுபொழுதில் துன்பம் வரும். இன்பம் வரும்பொழுது மனிதன் "ஓஹோவென்று மகிழ்ச்சியோடு இருப்பான். துன்பம் வரும் பொழுது துடிதுடிப்பான். ஐயா அம்மாவென்று அலறுவான். இதெல்லாம் காலம் மனிதனிடம் விளையாடும் விளையாட்டு.
காலம் சிலசமயம் மனிதனை மட்டுமல்ல; உலகத்தையே புரட்டிப் போட்டிவிடுகிறது. "கொரோணா' காலத்தில் உலகமே விழி பிதுங்கி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தது. ஏன்? கடவுளின் கைகள்கூட கட்டிப் போட்டிப்பட்டிருந்தது. கடவுளே காலத்திற்குக் கட்டுப்பட்டிருந்தான்.
ஒருநாள் இருப்பதுபோல மறுநாள் இருப்பதில்லை. நடப்பது முன்பே நமக்குத் தெரிவதில்லை. நல்லது- கெட்டது இரண்டையும் காலம் முடிவுசெய்கிறது. காலமும் நேரமும் சரியாக இருந்தால் நடப்பதெல்லாம் நன்மையாக இருக்கும். காலம் நேரம் கெட்டுப்போனால் குட்டக் குட்டக் குனிவதைத்தவிர வேறு வழியில்லை.
மனிதன் பிறந்து வாழ்வது சிலகாலம். அதற்குள் அவனுக்கு ஏனோ ஆசை, ஆணவம், பொறாமை, அகம்பாவம் எல்லாம் வந்துவிடுகிறது. அதனால் அவன் வாழ்க்கையைக் காலம் கணித்து கனகச்சிதமாக அவனை சீர்படுத்திவிடுகிறது. காலம் சில நேரம் மனிதனை நல்லவனாக்கும்.
சில நேரம் பொல்லாதவனாக்கி படுகுழியில் தள்ளிவிடும். அப்போது அவன் சொல்வான் காலமும் நேரமும் சரியில்லை. அதனால்தான் அல்லல்படுகி றேன் என்பான். அந்த நேரத்தில் அவனைப் பார்த்து காலம் சிரிக்கும்; கொக்கரிக்கும். எந்தந்தக் கால நேரத்தில் என்னன்ன நடக்கும் என்பது நமக்கே தெரியாது.
நீரில்லா பாலைவனத்தில் நெல்வயலை எதிர்பார்க்கமுடியாது. பூவில்லாத மரத்தில் கனியைக் காணமுடியாது. அதுபோல எந்தந்த நேரத்தில் என்னன்ன காலகட்டத்தில் எதுஎது எப்படி எப்படி நடக்குமோ சொல்லமுடியாது. சிலசமயம் காலம் தென்றலைக்கூட கண நேரத்தில் புயலாக மாற்றிவிடும்.
இளமை- முதுமை இரண்டையுமே காலம்தான் நமக்குக் கொடுக்கிறது. அதனால் தான் இளமைக்காலம் முதுமைக்காலம் என்கிறோம். இளமைக்காலம் இனிதானது. முதுமைக்காலம் முடங்கிவிடக்கூடியது.
காலம் கனிந்துவந்தால் காதல் கைகூடும். அதுவே கனவாய் போனால் மனம் வாடும் காலம் சிலசமயம் இருவரையும் பிரித்துவிடும். அல்லது ஒன்று சேர்த்துவிடும். காலத்திற்கு இதுவும் தெரியும்; அதுவும் தெரியும். இரண்டும் நன்றாகவே தெரியும். இதெல்லாம் காலத்தின் திருவிளையாடல்.
எந்தந்த காலகட்டத்தில் என்னன்ன பூமி யில் விளையுமோ அந்தந்த காலகட்டத்தில் அவை தப்பாமல் விளையும். காலம் தப்பி ஒருநாளும் விளையாது. அந்தந்த "சீசனில்' அந்தந்தப் பொருள் "மார்கட்டிற்கு' வந்து விடும். இது காலத்தின் கட்டாயம்.
காலத்தில் நல்லகாலம் கெட்டகாலம் என்று ஜோதிடம் கூறுகிறது. அதேபோல நேரத்தையும் கணிக்கிறது. எந்தக் காரியத் தைத் தொடங்கினாலும் நாம் நல்ல நேரம் காலம் பார்த்து எந்தக் காரியத்தையும் தொடங்குகிறோம்.
எந்தக் காலத்தில் எந்தந்த காரியத்தை தொடங்கி செய்துவிட வேண்டுமோ அந்தந்தக் காலத்திலேயே அதை செய்து முடித்துவிட வேண்டும். தள்ளிப்போட்டால் காலம் அதைக் கைகூடவிடாது.
எதையும் காலம் நேரம் அறிந்து அந்தச் செயலை செய்யவேண்டும். செய்யக்கூடிய காலகட்டத்தில் எதைச் செய்தாலும் வெற்றி நிச்சயமுண்டு. செய்யக்கூடாத காலநேரத்தில் செய்தால் தவறுதலாகப் போய் தாறுமாறாகப் போய்விடும்.
காலம் மிகவும் வலிமையானது; சிலசமயம் கொடுமையானது. நேற்று இருந்ததுபோல இன்று இருப்பதில்லை. நாளை எப்படியோ தெரியாது. ஒருகாலத்தில் நான் சோற்றுக்கே வழியில்லாமல் வாழ்ந்தேன். ஆனால் இந்தக் காலத்தில் நான் சொகுசாய் வாழ்கிறேன் என்பான். இதெல்லாம் காலம் செய்யும் மாற்றங்கள். காலம் சில சமயம் ஒருவனை உயர்த்திவிடும் அல்லது பாடாய்படுத்தி விடும்.
ஒருகாலத்தில் பணம் என்பது அணா, காலணா, அரையணா என்றிருந்தது.
அதை மனிதன் இப்போது பைசா என்று மாற்றிக்கொண்டான். அளவுகள் படி, ஆழாக்கு என்றிருந்தது. அதை ஒரு லிட்டர், அரைலிட்டர் என்று மாற்றிக்கொண்டான். தூரத்தை மைல், பர்லாங் என்றிருந்ததை ஒரு கிலோமீட்டர், அரை கிலோமீட்டர் தூரம் என்று மாற்றிக்கொண்டான். எடை, மனு, துலா என்றிருந்த நிறுத்தல் அளவை ஒரு கிலோ, அரைக்கிலோ, மில்லி என்று மாற்றிக்கொண்டான். அடி, கெஜம் என்று இருந்த அளவை ஒரு மீட்டர், அரைமீட்டர், மில்லிமீட்டர் என்று மாற்றிக்கொண்டான். இதையெல்லாம் மாற்றிக்கொண்ட மனிதன் 24 மணி நேரம் ஒருநாள் என்ற கால அளவை மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணம் காலத்தைக் கடவுள் தன் கையில் வைத்துக்கொண்டுள்ளான். காலத்தையும் நேரத்தையும் சூரியனும், பூமியும் ஒன்றுசேர்ந்து நிர்ணயம் செய்கின்றன.
இன்றைய விஞ்ஞானம் சூரியமண்டலம், செவ்வாய் கிரகம் என்று மேல் நோக்கிப் போகிறது. அங்கே செல்வோம். வாழ்க்கை நடத்துவோம் என்கிறது அந்த விஞ்ஞானம்.
ஆனால் அது முடியாது என்கிறது காலம். இதெல்லாம் வெறும் மாயை. இதன் உண்மை சொரூபத்தை காலம் வரும்போது கண் முன்னே "காலம்' காட்டிவிடும்.
அப்போது இந்த விஞ்ஞானம் பட்டுப் போய்விடும். போட்ட ஆட்டமெல்லாம் அடங்கிப்போய்விடும். காலம் இதை அப் படியே அடக்கிவிடும். காலத்தை மீறி எவனா லும் எந்தக் காரியத்தையும் செய்யமுடியாது.
காலம் காலமாக நமது கலாச்சாரம், பண்பாடு எல்லாம் வீர நடைபோட்டு வந்தது. ஆனால் இப்போது அது தள்ளாடுது. தடுமாறுது. என்ன செய்வதென்று தெரியாமல் "திரு திரு' வென்று விழிக்கின்றது. அந்தக்காலம் காலம்தான். அப்படிப்பட்ட பொன்னான காலம் இனி வருமா? பொறுத்திருந்து பார்ப்போம். வந்தால் வரட்டும். போனால் போகட்டும். எதற்கும் காலம் பதில் சொல்லும்.