"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.'
-திருவள்ளுவர்
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக்கொள்ளவேண்டும். உள்ளப் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகை யோரிடம் (இறைவன்) கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்; முக்திநிலையைத் தரும்.
விக்ரமாதித்தனிடம் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது. ஒரு ஊரில் திவாகரன் என்ற செல்வந்தனுக்கு கலா என்றொரு மகள் இருந்தாள். அவளுக்கு மாப்பிள்ளை தேடத் தொடங்கினார் திவாகரன். ஏதோவொரு காரணத்தினால் சரியான வரன் அமையாமல் தள்ளிக்கொண்டே போனது.
இதனால் தன் சகோதரனான கோபியின் உதவியை நாடினாள் கலாவின் தாய். கோபி புகழ்பெற்ற ஜோதிடரான கௌசிகனிடம் கலாவின் திருமண யோகத்தைக் குறித்துக் கேட்டான்.
கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்த கௌசிகன் அந்த ஜாதகம் சாட்சாத் சீதாதேவியின் ஜாதகத்தை ஒத்திருப்பதாகவும், அந்த சீதையைப் போலவே அவள் சிறிது காலம் துன்பம் அனுப்பவிப்பாள் என்றும், ஆனால் இறுதியில் எல்லாம் நன்மையாக முடியுமென்றும் கூறினார். மேலும் ஜெய்புரி என்ற ஊரிலுள்ள இராமர், சீதை கோவிலுக்குச் சென்று தரிசித்து, அங்கு தரப் படும் பிரசாதத்தை கலா தன் கையால் ஒரு உத்தமனுக்குத் தந்தால் அவள் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.
அதுபோல ஜெய்புரியிலுள்ள வீரபத்திரன் என்ற உத்தமனுக்கு பிரசாதம் வழங்கி, பரிகாரம் நிறைவேற்றப்பட்டது. தங்கள் மகன் வீரபத்திரனுக்கு திருமணம் செய்ய கலாவைப் பெண் கேட்டனர் வீரபத்திரனின் பெற்றோர். இருவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்த ஜோதிடர் கௌசிகன் திருமணம் செய்யலாம் என்று கூறினார்.
மறுநாள் அதிகாலை அருகிலுள்ள குளத்தில் நீராடச் சென்றார் கௌசிகன். அப்போது அங்கிருந்த மரத்திலிருந்து ஒரு பூதம் கௌசிகனை வழிமறித்து மிரட்டியது. இதைக்கண்டு சிறிதும் அஞ்சாத கௌசிகன், "நீ ஏதோவொரு சாபத்தின் காரணமாகவே இவ்வாறு பூதமாக அலைகிறாய். அந்த சாபம் நீங்குவதற்கான வழியை உனக்குக் கூறுகிறேன்'' என்று பூதத்திடம் கூறினார்.
"நீ ஒரு பழத்தைக் கையில் வைத்து ஒரு மந்திரத்தைக் கூறினால், அந்த பழம் சக்திபெறும். அப்படி சக்திபெற்ற பழத்தை குழந்தை பாக்கியமற்ற புண்ணியவதியான பெண்ணுக்குத் தந்தால் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும். அதற்கு சிறிதுகாலம் நீ பொறுத்திருக்க வேண்டும்'' என கூறினார்.
கலாலி வீரபத்திரன் திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் இல்லற வாழ்க்கைக்குப் பின்பும் குழந்தைப் பேறு கிட்டவில்லை. "இறைவழிபாடுகளில் குறையொன்றும் வைக்கவில்லையே! அப்படியிருந்தும் இன்னும் நமக்கு மகப்பேறு கிட்டவில்லையே'' என்று வீரபத்திரனிடம் புலம்பினாள் கலா. இச்சூழ்நிலையில் வீரபத்திரனின் பெற்றோர் அவர்களின் உறவுக்காரப் பெண்ணை வீரபத்திரனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய முயற்சித்தனர் அப்போது கௌசிகன், பூதத்திடம் முன் தான் கூறியதை நினைவூட்டி, கலாவுக்கு சக்தியூட்டப்பட்ட பழத்தைத் தருமாறு கூறினார். அதன்படியே அப்பழத்தைக் கொடுத்த பூதம், சாபவிமோசனம் கிடைத்து மறைந்தது. பழத்தை சாப்பிட்ட கலா இரண்டு மாதங்களில் கருத்தரித்து, பத்துமாதம் கழித்து ஒரு அழகிய ஆண் குழந்தைப் பெற்றெடுத் தாள்.
"விக்ரமாதித்தா, கௌசிகன் நினைத் திருந்தால் எப்போதோ அந்த பூதத்திடம் பழத்தைப்பெற்று கலாலின் குறையைத் தீர்த்திருக்கலாம். அவளையும் பூதத்தையும் இவ்வளவு காலம் தவிக்கவிட்டது ஏன்?'' என்று கேட்டது வேதாளம்.
"கௌசிகன் ஒருவரின் விதியைக் கணிக்கும் ஜோதிடரே தவிர அவர்களின் விதியைத் தீர்மானிக்கும் கடவுளல்ல. கலாவின் ஜாதகப்படி அவளுக்கு மூன்றாண்டுகள் கழித்து குழந்தை பிறக்கும் என்பது விதி.
அதுபோலவே பூதத்திற்கும் மூன்றாண்டுகள் கழித்தே சாபவிமோசனம் கிடைக்கும் என்று கௌசிகன் கணித்திருந்தார்.
எனவே இருவரையும் தவிக்க விடுவதற்காக அல்ல; மாறாக இருவருக்குமே நன்மை ஏற்பட நன்கு ஆலோசித்து கௌசிகன் எடுத்தமுடிவு. இறைவன் சோதிப்பானேயன்றி எவரையும் கைவிடமாட்டான்'' என்று பதிலளித்தான் விக்ரமாதித்தன்.
விதி வலிமையின் தாக்கத்தை திதி வழிபாட்டால் குறைத்து, கலா வீரபத்ரன் வெற்றி கண்டதுபோல் விதி வலிமையின் தாக்கத்தைக் குறைத்து உயர்ந்ததொரு ஊக்கத்தைத் தரவல்லதொரு உன்னதமான திருத்தலம்தான் திலதர்ப்பணப்புரியில் எழுந்தருளியிருக்கும் திருமுக்தீஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: முக்தீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்.
இறைவி: சுவர்ணவல்லி அம்பாள், பொற்கொடியம்மை.
விநாயகர்: நரமுக ஆதிவிநாயகர், யானைமுக க்ஷேத்திர விநாயகர்.
ஊர்: திலதைப்பதி, செதலபதி.
விசேஷ மூர்த்தி: பிதுர்லிங்கங்கள், சூரிய சந்திரர்,
புராணப் பெயர்: திலதர்ப்பணப்புரி.
தீர்த்தம்: சூரிய புஷ்கரணி, சந்திர தீர்த்தம், அரசலாறு. .
தலவிருட்சம்: மந்தாரை மரம்.
ஆகமம்: சிவாகமம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பெருமையுடன், முன்னோர்கள் செய்த தோஷங்கள், பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் வகையில் திகழ்கின்ற தலம்- தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 58-ஆவது தலமாகவும், அருணகிரிநாதராலும் பாடப்பட்ட பெருமையுடன் திகழ்கின்ற தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் இன்னும் பல்வேறு சிறப்புக்களைப் பெற்றதொரு திருத்தலம்தான் செதலபதி முக்தீஸ்வரர் திருக்கோவில்.
"பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே அடிகளாரத் தொழுதேத்த நின்ற அவ்வழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
அடிகொள் சோலை மலர்மணம் கமழும் மதி முத்தமே.'
-திருஞானசம்பந்தர்
பித்ரு தர்ப்பணம் கொடுக்க இந்தியாவில் காசி, ராமேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணப்புரி (செதலபதி), கயா, அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமம் ஆகிய ஏழு தலங்கள் சிறந்த தலங்களாகக் கருதப்படுகின்றன. இதில் ஐந்தாமிடத்திலுள்ள தலமிது. இராமர் திலம் (எள்) வைத்து தர்ப்பணம் செய்த தலமென்பதால் திலதர்ப்பணப்புரி என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில் சிதலைப்பதி, செதலபதி என்று மருவியது.
இத்தகைய பெருமைவாய்ந்த தலம் எம்.எல்., ஆர்.எம்.எல். நாராயணன் செட்டியார் பரம்பரை அறங்காவலராக இருந்து, தற்போது அவர்கள் வழிமுறையில் வந்தவர்கள் நிர்வகித்து, நான்குகால பூஜைகள் செவ்வனே செய்துவருகின்றனர்.
மனித முகத்துடன் ஆதிவிநாயகர் தனிச்சந்நிதியில் தும்பிக்கை யில்லாமல் காட்சி தருகிறார். இவரை நரமுக ஆதிவிநாயகர் என்று வழிபடுகின்றனர். இந்த அபூர்வமான அமைப்பை வேறெங்கும் காணமுடியாது. அகத்தியர் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தூல, சூட்சும வடிவங்களில் நேரடியாக வழிபடும் பிள்ளையார் இவர். இவரை வழிபட்ட பின்னரே சிவத் தலத்திற்குச் செல்லவேண்டும்.
தலவரலாறு
இராவணன் சீதையைக் கடத்திச் சென்றபோது ஜடாயு என்னும் கருடராஜன் இராவணனைத் தடுக்க முயன்றார்.
ஜடாயுவைத் தன் வாளால் வீழ்த்திவிட்டுச் சென்றான் இராவணன். அப்போது அவ்வழியே வந்த இராமரிடம், சீதையை இராவணன் கடத்திச் சென்றதைக் கூறிய ஜடாயு இராமரின் மடியிலேயே உயிரைவிட்டார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்தார் இராமர். பதினான்கு ஆண்டுகளுக்குப்பின் வனவாசம் முடிந்து நாடு திரும்பி அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டார் இராமர். அவரது வனவாச காலத்தில் தந்தை தசரதர் இறந்துவிட்டதால் அதற்காக சிரார்த்தம் செய்ய இத்தலத்திற்கு வந்தார்.
அரசலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார். அப்போது தனக்கு உதவிசெய்வதற்காக உயிரைவிட்ட ஜடாயு விற்கு மரியாதை தரும்விதமாக எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தார். எனவே சிவன் முக்தீஸ்வரர் என்றும், தலம் திலதர்ப்பணப்புரி என்றும் பெயர் பெற்றது.
முன்னொரு காலத்தில் இந்த ஆலயமுள்ள இடத்திற்கருகில் ஹரி மற்றும் சிவ என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்ததாம். பார்வதியின் தந்தை தட்சன் செய்த யாகத்தில் அவமானமடைந்த பார்வதி தீயில் விழந்து தற்கொலை செய்துகொண்ட கதை அனைவரும் அறிந்ததே. அவள் செய்த காரியத்தினால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டிருந்தது. தெய்வமே என்றாலும் தீயில் விழுந்து மரணமடைந்தால் இறந்தவளுக்கு சமானம். அந்த பிறவியில் இறந்துவிட்ட அவளுக்கு யார் தர்ப்பணம் செய்வார்கள்? அந்த தோஷத்ûக் களைந்துகொள்ளாவிடில் மீண்டும் சிவபெருமானின் மனைவியாக எப்படி ஆவது? ஆகவேதான் அவள் பெற்ற ஆலோசûனைப் படி, மந்தார மரங்கள் சூழ்ந்திருந்த வனப் பகுதியை (தற்போது ஆலயமுள்ள இடம்) அடைந்தாள். முன்னொரு காலத்தில் அந்த ஹரிசிவா நதிக்கு அருகிலிருந்த வனப் பிரதேசத்தில் சிவபெருமான் பெரும் தவம் செய்துள்ளார். அப்போது அவர் முடியிலிருந்த கங்கையும் அவருக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்றெண்ணி, அங்கு அவர் தவம் முடியும்வரை அவருக்குக் காவலாக அமர்ந்திருந்தாள். அதனால்தான் அந்த பூமி- திலதர்ப்பணப்புரி, கங்கை நதி ஓடும் காசிக்கு இணையாக ஆயிற்று.
இராமர் தனது தந்தைக்கு சிரார்த்தங்கள் செய்தாலும் அவர் மனதில் அமைதி ஏற்படவில்லை. இராமேஸ்வரத்திற்குச் சென்று அங்கும் தனது தந்தைக்கு தர்ப்பணம் செய்தார். அதைச் செய்தும் அவர் மனக் குழப்பம் முழுவதுமாகத் தீரவில்லை. மனதில் அமைதியில்லை. அதற்குக் காரணம், அவர் தர்ப்பணம் செய்த அனைத்து இடங்களிலும் பிடித்துவைத்த பிண்டத்தை எந்தப் பறவையும் சாப்பிடவில்லை. அப்படியென்றால் தசரதரின் ஆவி அவற்றைப் பெற்றுக்கொள்ளவில்லையா என்ற சந்தேகம் எழுந்தது. பிரம்மஹத்தி தோஷமும் பின்தொடர்வதுபோல மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆகவே அவர் வசிஷ்டரிடம் அதுகுறித்துக் கேட்டார்.
வசிஷ்டர் நாரதமுனிவரிடம் கேட்டபோது, தனக்கு கங்கைதேவி கூறிய தகவலை நாரதமுனிவர் அவரிடம் கூறினார்.
தற்போதைய திலதர்ப்பண பூமியில் சிவபெருமான் தவத்தில் இருந்தபோது, கங்கை அங்கு ஓடிக்கொண்டிருந்த சிறு நதியில் அமர்ந்திருந்ததாகவும், அப்போது அந்த வனப் பிரதேசத்தில் இருந்த வர்கள் தமது இறந்துபோனவம்சத்தினருக்கு தான் அமர்ந்திருந்த நதியில் குளித்துவிட்டு தர்ப்பணம் செய்தபோது, அவர்கள் பிடித்து வைத்த பிண்டங்களை இறந்து போனவர்களின் ஆவிகள் நேரிலே பெற்றுச்சென்றனஎனவும், சற்றுதூரத்தில் அந்தராத்மியாக அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த பிரம்மா வும் எதையோ குறித்துக்கொண்டிருந்ததைக் கண்டதாகவும் கூறினாளாம்.
அதைக்கேட்டு அதிசயித்த நாரதர் சிவபெருமானிடம் நேரிலேசென்று, அந்த அதிசயத்துக்கான காரணம் குறித்துக் கேட்டபோது, "நான் தவமிருந்த அந்த இடத்தில் எமதர்மராஜனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஆகவேதான் அனைத்து காலத்திலும் நேரம் காலமின்றி எந்த ஒருவரும் தமது குடும்பத்தில் மரணமடைந்தவருக்கு பித்ரு காரியங்களைச் செய்யலாம். சம்பந்தப்பட்ட ஆவிகளை எமதூதர்கள் அங்கு அனுப்பிவைக்கவேண்டுமென்பது என்னுடைய கட்டளையாக இருந்தது.
அந்த ஆவிகள் நேரில் வந்து பிண்டங்களைப் பெற்றுக்கொண்டு மனம் திருப்தியடைந்து, எமனின் பிடியிலிருந்து விடுதலையாகி என்னிடம் வந்து சிவலோகப் பிராப்தி அடைந்தன. அவர்களைப் படைத்த பிரம்மனும் அவர்களது தோஷங்களைத் தமது குறிப்பிலிருந்து நீக்கிக்கொண்டபடி அமர்ந்திருந்தார். ஏனெனில் அவர்களுக்கு அடுத்த பிறவி தரும்போது அதற்கேற்ப அவர்களுக்கு விதியை ஏற்படுத்தவேண்டுமல்லவா? மேலும் எனது மனைவியான பார்வதியும் தனது இறந்த ஆவிக்கு ஏற்பட்ட தோஷத்தைக் களையவும் தனக்குத்தானே தர்ப்பணம் செய்துகொண்டு மீண்டும் என்னையடைய அங்குவந்தாள். அதனால்தான் அந்த பூமிக்கு அத்தனை மகத்துவம்'' என்று கூறினாராம்.
வசிஷ்டர்மூலம் இதைக்கேட்ட இராமர், வருடத்தின் அனைத்து தினங்களிலும் தர்ப்பணம் செய்யக்கூடிய பூமிக்குச் சென்று தன் தந்தைக்கு மட்டுமல்லாது ஜடாயுவுக்கும் தர்ப்பணம் செய்து பிண்டங்களைப் பிடித்துவைத்தார். என்ன அதிசயம்! அந்த பிண்டங்கள் அப்படியே சிவலிங்கங்களாக மாறிவிட்டன. அப்போது அவர்முன் தோன்றிய தசரதர் தான் அந்த பிண்டங்களைப் பெற்றுக்கொண்டு மனநிம்மதியுடன் செல்வதாகக் கூறி இராமரை ஆசிர்வதித்தார்.
ஜடாயுவும் இராமர்முன் தோன்றி தானும் மகிழ்ச்சியுடன் பிண்டங்களைப் பெற்றுக் கொண்டதாகக் கூறியது. அதைக்கண்டு பிரமித்துப்போன இராமரும் அந்த சிவலிங்கங்களை வழிபட்டார். அதன்பின் கூத்தனூர் ஆலயமுள்ள இடத்தில் அந்தர் யாமியாக இருந்த பிரம்மாவையும் வணங்கியபின், அயோத்திக்குத் திரும்பிச் சென்றார். அவர் மனதில் பூரண அமைதி ஏற்பட்டது.
ஆதி விநாயகர் வரலாறு
முன்னர் கூறியதுபோல் தனது தற்கொலைக்கான தோஷத்தைப் போக்கிக்கொள்ள பார்வதி இங்குவந்தாள். அங்கு வந்தவள் ஒரு மந்தார மரத்தைத் தன் கையால் நட்டபின், அந்த ஆற்றில் தினமும் குளித்துவிட்டு அந்த மரத்தின் அருகில் அமர்ந்துகொண்டு சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்துவிட்டு தவத்தில் இருந்தாள்.
(அப்போது அங்கே கோவில் கிடையாது).
அந்த நேரத்தில் தான் குளிக்கச் சென்றபோது ஒரு மஞ்சள் உருண்டையை காவலுக்கு வைத்துவிட்டு, "யாராக இருந்தாலும் தான் குளிக்கும்போது அவர்களை அங்கு அனுமதிக்கக்கூடாது' என உத்தரவு பிறப்பித்துவிட்டு செல்வாளாம். அந்த உருண்டை அவளுடைய மகனான விநாயகராக மாறி காவலில் நிற்பது வழக்கமாகும். அப்போது விநாயகருக்கு மனிதமுகமே இருந்தது.
ஒருநாள் எப்போதும்போல் அவள் மஞ்சள் உருண்டையை வைத்துவிட்டு குளிக்கச் சென் றாள். அப்போது பார்வதி அந்த வனத்தில் தவம் செய்துகொண்டிருப்பதை அறிந்துகொண்ட சிவபெருமான் அங்குவந்தார். தந்தையே ஆனா லும் சரி; எவரையும் விடக்கூடாது என பார்வதி கூறி இருந்ததால் அவரையும் தடுத்து நிறுத்தினார் விநாயகர். அதைகண்டு கோபமுற்ற சிவன் அவர் தலையை வெட்டிச் சாய்த்தார். அது வடக்குப் புறமாக விழுந்தது. பிள்ளையார் கீழே விழுந்துவிட்டார். உடனே பிள்ளையாருக்கு யானைத்தலை பொருத்தப்பட அவர் உயிர் பெற்றார்.
சிவபெருமான் பிள்ளையாரைக் கட்டி யனைத்துக்கொண்டு, இனிவரும் காலங்களில் அந்த இடத்தில் மட்டுமே ஆதிவிநாயகர் என்ற பெயரில் மனிதத்தலையுடன் காட்சிதந்து அருள்புரிவார் என்றும்; மற்ற இடங்களில் அவர் யானைத்தலையுடனே இருப்பார் என்றும்; பார்வதி தன்னை வேண்டி தோஷத்தைக் களைந்துகொண்ட அந்த இடத்தில் தர்ப்பணம் செய்தால் காசிக்குச் சென்றதற்கு சமானமாக இருக்குமெனவும்; தான் முக்திதரும் முக்தீஸ்வரராக பார்வதியுடன் காட்சிதந்து கொண்டிருப்பேன் எனவும்; அங்கு வருபவர்கள் ஆதிவிநாயகரையும் வணங்கிச்சென்றால் மட்டுமே முக்தி அவர்களுக்குக் கிட்டுமென்றும் கூறி, அதே இடத்தில் பார்வதி, தேவியின் தோஷத்தை நீக்கிவிட்டு அவளையும் தன்னுடன் அழைத்துச்சென்றார். இப்படியாகத்தான் அங்கு ஆதி விநாயகர் என்ற பெயருடன் மனிதமுகம் கொண்டு அருட்காட்சி தருகிறார்.
சிறப்பம்சங்கள்
* மகாவிஷ்ணு, இராமராக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர் உள்ள இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிராகாரத்தில் நவகிரக சந்நிதிக்கு அருகில் வடக்கு நோக்கியபடி அமர்ந்த கோலத்திலும் மூன்றுவிதமாகக் காட்சிதருவதை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
* இராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்துப் பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. இந்த லிங்கங்களையும், தர்ப்பணம் செய்த இராமர் வலதுகாலை மண்டியிட்டு, வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி காட்சிதருகிறார். இத்தகைய தரிசனத்தைக் காண்பது அபூர்வம்.
* மகாபாரதத்தில், குருக்ஷேத்திர யுத்தத்திற்குமுன்பு, தானே வெற்றிபெற வேண்டுமென்ற நோக்கத்தில் துரியோதனன் சகாதேவனிடம் ஜோதிடம் கேட்கச் சென்றான். "நான் போரில் வெற்றிபெற எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்' என தனது எதிரியான சகாதேவனிடமே கேட்டான். சகாதேவன் உண்மையின் பிறப்பிடம். கேட்பது எதிரியாக இருந்தாலும் சரியான தகவலைச் சொல்ல எண்ணி, "பூரண அமாவாசையன்று களபலி கொடுத்துப் போரைத் தொடங்கினால் வெற்றி உறுதி' என துரியோதனனிடம் சொன்னான்.
துரியோதனனும் அதேநாளில் களபலி கொடுக்கத் தயாரானான்.
அப்போது கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார். இதைப்பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக ஓடி வந்தனர். "நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேரும்நாள்தான் அமாவாசை. நாளைதான் நாங்கள் சேரும்நாள். ஆனால் நீங்கள் இன்றே தர்ப்பணம் செய்கிறீர்கள். இது சரியாகுமா?' என் கேட்டனர். கிருஷ்ணர், "இப்போதுகூட நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள். எனவே இன்றுதான் அமாவாசை. என சமயோசிதமாக பதில் சொல்லிவிட்டார். துரியோதனன், சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான். ஆனால் அன்று அமாவாசை இல்லாமல் போனது. இதனால் வெற்றி பாண்டவர்களுக்குக் கிடைத்தது. முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். சூரியனும் சந்திரனும் சந்திக்கும் நாளே அமாவாசை. இருவரும் இணைந்திருப்பதால் இக்கோவிலில் தினமும் அமாவாசை. இதனை நித்திய அமாவாசை என்பர்.
* துர்க்கை எட்டுக் கரங்களுடன், மகஷாசுரனை மிதித்தவண்ணம் சிம்ம வாகனத் துடன் அருள்கிறாள்.
* நவகிரக சந்நிதியில் சூரியபகவான் மட்டும் உயர்ந்த பீடத்தில் உள்ளார்.
* நற்சோதி என்ற மன்னன் தன் தந்தைக்கு பிதுர்காரியங்கள் செய்யவேண்டி வந்தது. "எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன்' என்று ஊர் ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன். கடைசியில் திலதைப்பதி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தைக் கைநீட்டி வாங்கிக்கொண்டார்களாம். இக்கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்தநாளில் வேண்டுமானா லும் செய்துகொள்ளலாம்.
* இத்தல தட்சிணாமூர்த்தி காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கமும் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்ய வித்தியாசமாகக் காட்சிதருகிறார்.
* இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சிதருகிறார்.
* சுமார் ஐந்தடி ஆழமுள்ள ஹோம குண்டத்தில் சங்கடஹர சதுர்த்தியன்று சிறப்பு யாகம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அகத்தியர் மாதந்தோறும் தூல, சூட்சும வடிவுகளில் நேரடியாக வழிபடும் (மனிதமுக) பிள்ளையார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இத்தல அம்பிகை சுவர்ணவல்லி. சுவர்ணம் என்றால் தங்கம். தங்கநகை வீட்டில் சேரவேண்டுமென்று நினைப்ப வர்கள், தங்கநகைத் தொழில் செய்பவர்கள் அம்பிகைக்கு அபிஷேக அர்ச்சனை செய்தால் வெற்றிகிட்டுவதோடு மன அமைதி ஏற்படும்.
*ஒவ்வொரு அமாவாசையன்றும் திதி, தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள்.
"நம்மைச் சார்ந்தவர்கள் எவரேனும் விபத்தில் மரணமடைந்தவரா; தற்கொலை செய்துள்ளாரா; பிறரால் கொலை செய்யப்பட்டவரா; நோய்வாய்பட்டு இறந்த வராலி இதுபோன்ற அகால மரணத்தை சந்தித்து மன அழுத்தத்துடன் வாழ்பவர்கள் கவலைப்படவேண்டாம். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்திரவாஹினியாகலி கங்கைக்கு நிகரான அரசலாற்றில் நீராடி ஆதி விநாயகர், முக்தீஸ்வரர், சுவர்ணவல்லியம்பாள், பித்ருலிங்கங்களை முறைப்படி வழிபாடுகள் மேற்கொண்டால் மன அழுத்தமில்லாமல் முக்திநிலையையும் பெறலாம்'' என்று ஆத்மார்த்தமாகக் கூறுகிறார் தலைமை அர்ச்சகரான சுவாமிநாத சிவாச்சார்யார்.
காலை 6.30 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு: பரம்பரை அறங்காவலர், முக்தீஸ்வரர் திருக்கோவில், பூந்தோட்டம் (அஞ்சல்) திலதைப்பதி- 609 503. நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். சுவாமிநாத சிவாச்சாரியார், அலைபேசி: 94427 14055, 94423 90299.
அமைவிடம்: மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி பூந்தோட்டம் இறங்கி, அங்கிருந்து ஆட்டோமூலம் கூத்தனூர் சரஸ்வதி கோவிலைக் கடந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள திலதைப்பதியை அடையலாம். (பூந்தோட்டத்திலிருந்து பேருந்துகள் கிடையாது.)
படங்கள்: போட்டோ கருணா