வை அமரும் ஆன்றோர் மன்றத் திற்கு, ஊர் சபை பெரியோர்களின் வரவேற்போடு ஔவை அழைத்து வரப்பட்டு, வெண்கலிங் கம் போர்த்தப்பட்ட இருக்கையில் அமர்த்தப் பட்டாள். ஔவையைச் சுற்றிலும் மக்கள் அனைவரும் அமரும் வண்ணம் பிறை நிலவு வடிவத்தில் அம்மன்றம் அமைந்திருந்தது. ஔவைக்கு இருமருங்கி லும் நெய்ப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. மன்றத் தைச் சுற்றிலும் அவை ஒளிவீசின.

ஔவையை அணுகி, தங்களின் மனக்குறைபாடுகளுக்குத் தீர்வு காண மக்கள் ஆயத்தமாயிருந்தனர்.

அந்த மக்கள் மன்றத்தில் ஒரு மூதாட்டி கண்ணீர் மல்க ஔவைக்கு அருகில்வந்து, தன் குடும்பத்தில் ஏற்பட்ட இன்னல்களை எடுத்துரைத்தாள்.

நான் பக்கத்திலுள்ள மலையடி வாரத்தில் இருக்கும் சிற்றூரிலிருந்து வருகிறேன். சில மாதங்களுக்குமுன், எங்கள் ஊருக்குள் சிறுத்தைப் புலி ஒன்று இரவு நேரங்களில் அடிக்கடி மலையிலிருந்து இறங்கிவரும். நாங்கள் வளர்த்துவந்த மான் மற்றும் பசுக்களை அடித்து இழுத்துச்சென்று விடும். ஒருசமயம், இரவுவேளையில் இயற்கை உபாதை களைக் கழிக்கச்சென்ற சிறு பெண்ணை, அது அடித்துக்கொன்றுவிட்டது.

Advertisment

ss

அதன்மீதான அச்சம் நாளுக்கு நாள் எங்கள் ஊர்மக்களிடம் அதிகரித்து, இரவில் யாரும் எதற்காகவும் வீட்டைவிட்டு வெளியேவர இயலாமல் சிரமப்பட்டு வந்தனர். அந்தச் சமயம், இந்நாட்டு மன்னரின் அரண்மனையில் அகப்படைவீரனாகப் பணிபுரிந்துவந்த என் மகன், தன் மனைவி யோடு என்னைப் பார்க்க வந்திருந்தான். எங்கள் ஊர்மக்கள் அவனிடம், அந்த ஆள்கொல்லி சிறுத்தையைப்பற்றி கூறினர். சில போர்த்திறன் கள் என் மகனுக்குத் தெரிந்திருந்ததால், அன்றிரவு முயலின் ரத்தத்தை, தன் உடம்பில் தடவிக்கொண்டு, இரண்டு குறுவாள்களைத் தனது கைகளில் மறைத்தபடி, மலையிலிருந்து புலி இறங்கும் இடத்திற்குச் சென்று காத்திருந்தான். அருகில் யாரும் தீவெட்டிகளையோ, விளக்குகளையோ ஏற்றா மலிருந்து, தூரத்திலிருந்து தன்னைக் கவனித்துக்கொண்டிருக்குமாறு எங்களிடம் கூறியிருந்தான்.

அதன்படி நாங்கள், ஊருக்குள் எந்த வெளிச்சமும் குடிசைகளிலிருந்து வராதவாறு அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, நிலவொளியில் அவன் இருக்கும் இடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தோம். அப்போது இரவு இரண்டாம் சாமத்தில், அவனருகில் உயரமாக வளர்ந்திருந்த இலுப்பை மரத்திலிருந்து பெரிய சிறுத்தைப்புலி,

அவனுக்குப் பின்புறமாகப் பாய்ந்து அவனது பிடரியை கவ்வியது.

அவனுக்குப் பின்புறமாகப் பாய்ந்ததால், அவன் ஒரு கணம் நிலைகுலைந்து, பின்பு தன் பின்கழுத்தைக் கவ்விய சிறுத்தையை, தன் இருகைகளில் இருந்த குறுவாள்களால் பின்புறமாக, அதன் முகத்தில் சரமாரியாகக் குத்தினான். புலியின் இரண்டு கண்களிலும் குத்தியதால் சிறுத்தை தன் கடியைத் தளர்த்தியது.

நிலைகுலைந்த சிறுத்தை, தன் முன்னங்கால்களால் பலங்கொண்டமட்டும் தாக்கி யது. அதன் தாக்குதல்களிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, அதனுடைய பின்னங்கால்களைத் தேடிப்பிடித்தான். தன் முழுபலத்தையும் பயன்படுத்தி, புலியைத்தூக்கி அருகிலிருந்த பாறையின்மீது அடித்து, அதன் முகத்தைச் சிதைத்தான்.

இருவரிடமிருந்து வெளிப்பட்ட அகோரமான ஓசைகள் காடுகளில் எதிரொலித் தன. நடுயாம நேரத்தில் அச்சம் தரக்கூடிய அவ்வோசைகள் சிறிது சிறிதாகக் குறைந்தன. ஊரிலிருந்த அனைவரும் அவன் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச்சென்றோம். நாங்கள் தீவெட்டிகளைக் கொளுத்தி வெளிச்சத்தில் பார்த்தபோது, என் மகனும் சிறுத்தையும் துவண்டு கிடந்தனர்.

ss

Advertisment

சிறு முனங்கல்கள் மட்டுமே அவர்களிடமிருந்து வந்தன. அவனுடைய பிடரியிலிருந்து ரத்தம் பீறிட்டு வடிந்துகொண்டிருந்தது. சிறுத்தையின் தலை சிதறி, கோரமாக தனது முன்னங்கால்களை மட்டும் அசைத்துக்கொண்டிருந்தது.

இதனைப் பார்த்த அவனது இளம் மனைவியும் எனது மருமகளுமானவள் பீறிட்டுக் கதறி மயங்கி விழுந்தாள். என் மகனைத்தூக்கி எனது மடியில் சாய்த்தபோது, அவனுடைய உயிர் ஊர்மக்கள் பார்வையிலேயே பிரிந்தது. அந்த நாள்முதல், எனது மருமகள் பித்தம் பிடித்தவளாய் அவளது அடிவயிறை மட்டும் காட்டிக்காட்டிச் சிரிக்கின்றாள். அது என்னவென்றே எனக்கு இதுநாள்வரை புரியவில்லை.

அவளைத் தாங்கள் பார்த்து, அவளது சித்தம் தெளிவிக்கவும், அவளது சைகைக்கான பொருள் என்னவென்று அறிந்துகொள்ளவும், தாங்கள் எனக்கு உதவிடவேண்டும் என மூதாட்டி ஔவையிடம் வேண்டினாள்.

உங்கள் மருமகள் எங்கே? என மூதாட்டியிடம் ஔவை கேட்டபோது, மூதாட்டிக்குப் பின்னே முக்காடிட்டு ஒரு இளம்பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளின் கையைப்பற்றி ஔவையின் அருகில் இழுத்துக்கொணர்ந்தாள் அம்மூதாட்டி.

ஔவை அவளது வலது கையைப்பிடித்தபடி, தன்னருகே அன்புப் புன்னகையோடு அழைத்தாள். ஔவையைக்கண்ட மாத்திரத்தில் அப்பெண் மயங்கி ஔவைமீது சாய்ந்தாள். ஔவை அவளைத் தன்மடியில் சாய்த்து, குளிர்ந்த நீர் கொண்டுவரும் படி கேட்டு வாங்கி, அவளது முகத்தில் தெளித்து, அவளுடைய வலக்கையைப் பிடித்து நோய் நாடியைப் பார்த்தாள்.

அவள் நோய் நாடியை ஆராய்ந்ததில் ஒரு உண்மை யைக் கண்டறிந்தாள்.

ஔவை அம்மூதாட்டியை மட்டும் அருகில் அழைத்து, "உனது மருமகள் இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளாள்' என அவ்வுண்மையைக் காதில் கூறினாள். அம்மூதாட்டியானவள் "ஐயோ! நான் என்ன செய்வேன்? கணவனில்லாமல் குழந்தைப்பேறு பெற்றவள் எனில் ஊர் உலகம் என்ன சொல்லுமோ? எதைப் பேசுமோ?' எனத் தன் இரு கைகளையும் தலையிலடித்துக்கொண்டு கதறினாள். அப்போது ஔவை, ஊர் சபையோரையும் மக்கள் அனைவரையும் அழைத்து, தான் கூறுவதை கவனிக்குமாறு வேண்டிக்கொண்டாள்.

ss

"சபையோரே, ஊராரே!

அமைதியாக நான் கூறவிருக்கும் செய்தியைச் செவிமடுங்கள். இவ்விளம்பெண், அவள் கணவன் இருக்கும்போது உருவான கருவானது, இரண்டுமாத காலமாக உள்ளது. இவள் கணவனோ, ஊர்மக்களின் உயிர்காக்க சிறுத்தைப் புலியைக் கொன்று, தன் உயிர் நீத்த தியாகியாயிருக்கின்றான். அவனது மனைவியின் வயிற்றிலிருக்கும் உயிர், உங்கள் அனைவரையும் காத்த தெய்வத்தின் மறுவடிவாக வரப்போகிறது. ஆதலால், வீரச்செயல் புரிந்து உயிர்நீத்த இவ்வீரனுக்கு புலிக்குத்தி நடுகல் வைத்து, அதனடியில் ஒரு கும்பா நிறைய நீர் நிரப்பி, அதன்மீது ஊர் உலகறிய இரண்டு செங்காந்தல் மலர்களையோ, இரண்டு அல்லி அல்லது செவ்வரளி மலர் களையோ மிதக்கவிட்டு, ஊரை வலம்வந்து நடுகல்லுக்குக் கீழேவைத்து வழிபடுங்கள்.

இதன்மூலம், அவனது மனைவி இருமாத கர்ப்பவதியான, மதிபேதகமான பத்தினியாக இருக்கிறாள். இப்பத்தினியை யாரொருவரும் எவ்வித வீண்பழியும் சொல்லி கதைகட்டி விடாதீர்கள். அவள் நம் குலதெய்வம் என நாடறியக் கூறி, அவள் மகவைப் பெற்றெடுக்கும் வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதேபோல், வருங்காலங்களில் மனைவி ஒருமாத கர்ப்பிணியாக இருக்கின்றபோது அவளது கணவன் இறந்துவிட்டால், கணவனின் தாயானவள், தனது மருமகள் ஒரு மாத கர்பிணியாக இருக்கிறாள், அவள் அடுத்த 9 மாதங்கள் கழித்து குழந்தை பெறும்போது அவளை யாதொரு வீண்பழியும் சுமத்திவிடாதீர்கள் என்ற பொருள்பட, இறந்த மகனின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச்செல்வதற்குமுன், அவனது காலடியில் ஒரு கும்பா நிறைய நீரெடுத்து, அதில் ஒரு அரளிப்பூ இட்டு வழிபடச்செய்து குறிப்பால் உணர்த்துங்கள்.

இருமாத கர்ப்பிணியாக இருந்தால் இரண்டு பூக்களையும், மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தால் மூன்று பூக்களையும் வைத்து வணங்கி, உறவினர்கள் அனைவரையும் சுற்றிவரச்செய்து, அம்மலர்களோடு இருக்கும் நீர்தனை அவனது பாதத்தில் ஊற்றி வணங்கி இறுதி மரியாதை செய்யுங்கள். இது தமிழர் பண்பாடாக இருக்கட்டும். "பாடு அறப் பட்டது பண்பாடு' என்று ஆன்றோர் கூறியபடி, ஒரு வீண் குற்றம் ஆவதைத் தடுத்து, ஒருவளது உன்னதத்தன்மையை வெளிப்படச்செய்யும் செயலே பண்பாடு எனக் கொள்க!' என அவ்வூர் பெருஞ்சபையோர் அறிய உரக்கக் கூறினாள் ஔவை. அதனைக் கேட்ட அனைவரும் அக்கருத்தே உண்மையென உள்வாங்கிக் கொண்டனர். இன்றளவும் தமிழகத்தில் இப்பண்பாட்டு நிகழ்வு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

வரும் இதழில் அடுத்த பண்பாட்டினை ஆய்ந்தறிவோம்!