திரிநேத்ர கணேஷ் மந்திர்...

இந்த ஆலயம் ராஜஸ்தான் மாநிலத் தின் ராந்தம்பூர் என்ற ஊரில் இருக்கிறது.

இது ஒரு விநாயகர் ஆலயம். ராந்தம்பூரிலிருக்கும் கோட்டைக்குள் இது உள்ளது.

ஆரவல்லி மலைத் தொடருக்கும் விந்தியாச்சல் மலைத் தொடருக்கும் நடுவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

Advertisment

ஆலயம் இயற்கை அழகு நிறைந்திருக்கும் இடத்தில் உள்ளது.

ராந்தம்பூர் புகழ்பெற்ற புலிகள் சரணாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆலயத் தைத் தேடி லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

tt

Advertisment

திருமணம் நடக்காதவர்கள் தங்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெற வேண்டுமென வேண்டிக்கொள்வதற்காக இங்கு பெரிய அளவில் வருகிறார்கள்.

திருமணம் நிச்சயமான பிறகு அவர்கள் திருமண பத்திரிகையை எடுத்துக் கொண்டு வந்து விநாயகருக்கு முன்னால் வைத்து வழிபடுவார்கள். பலர் அஞ்சல்மூலம் அதை ஆலயத்திற்கு அனுப்புவார்கள்.

திருமணம் உரிய காலத்தில் நன்கு முடிந்த பிறகு, பகவான் கணேசருக்கு நன்றி கூறுவதற் காக ஆலயத்திற்கு வருவார்கள்.

இதுதவிர, வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கும் விடிவு தேடி இந்த விநாயகர் ஆலயத்திற்கு பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள்.

இந்த ஆலயத்தை ஹமீர்தேவ் சவ்ஹான் என்ற அரசர் கட்டியிருக்கிறார். ஆனால், இங்கிருக்கும் விநாயகர் சுயம்புவாக இதே இடத்தில் இருந்திருக்கிறார்.

இங்கிருக்கும் விநாயகருக்கு மூன்று கண்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட கோவில் உலகத்திலேயே இது ஒன்று தான். இந்த ஆலயம் மலையின் உச்சியில் இருக்கிறது.

இங்குள்ள விநாயகருக்கு ரித்தி, சித்தி என்ற இரு மனைவிகள் என்றும், சுப், லாப் என்ற இரு மகள்கள் என்றும் வரலாறு கூறுகிறது.

விக்ரமாதித்யர் என்ற அரசர் ஒவ்வொரு புதன்கிழமையும் மத்திய பிரதேசத்திலிருக்கும் உஜ்ஜெயினிலிருந்து இந்த ஆலயத்திற்கு தரிசனம் செய்வதற்காக வந்ததாக வரலாறு கூறுகிறது. அவரின் கனவில் தோன்றிய விநாயகர் இதேபோன்ற இரண்டு ஆலயங்களை உருவாக்கும்படி கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அந்த மன்னர் இரு ஆலயங்களை உருவாக்கினார்.

அந்த ஆலயங்களில் ஒன்று குஜராத்திலுள்ள சித்பூரில் இருக்கிறது. இன்னொரு ஆலயம் மத்திய பிரதேசத்திலுள்ள சிஹூர் என்ற இடத்தில் இருக்கிறது.

இந்த திரிநேத்ர கணேஷ் மந்திர் சவாய்மாதவ்பூர் என்ற ஊரிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. 1579 அடி உயரத்தில் இந்த ஆலயம் அமைந் திருக்கிறது.

மலையைச்சுற்றி பாதை யாத்திரை செல்லவேண்டுமென வேண்டிக் கொண்டவர்கள். 7 கிலோமீட்டர் தூரம் நடக்கவேண்டும். அப்படி இல்லாமல் நேரடியாக ஆலயத்திற்குச் செல்லவேண்டு மெனில், படிகளில் நடந்து செல்லவேண்டும். அரை மணி நேரத்தில் ஆலயத்தை அடைந்து விடலாம்.

tt

இந்த ஆலயத்தைப் பற்றிய ஒரு கதை இது...

அரசர் ஹமீர்தேவ் சவ்ஹானுக்கும், டில்லி அரசரான அலாவுதீன் கில்ஜிக்கு மிடையே 1299-1301 ஆகிய வருடங்களுக்கு மத்தியில் கடுமையான போர் நடந்திருக்கிறது. கில்ஜி கிட்டத்தட்ட கோட்டையை நெருங்கி விட்டார். 9 மாதங்கள் போர் நடந்திருக் கிறது.

சவ்ஹானிடமிருந்த போர் கருவிகள் குறைந்துகொண்டே வந்திருக்கின்றன.

அதற்காக கவலைப்பட்ட சவ்ஹான், பகவான் விநாயகரை வழிபட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து போரில் சவ்ஹானுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இலங்கைக்கு போருக்குச் செல்வதற்கு முன்னால், இராமர் இங்குவந்து விநாயகரை வழிபட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. இந்த விநாயகரைப் பற்றி இன்னொரு கதையும் இருக்கிறது.

துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெற்றபோது, இந்த விநாயகரை அழைக்க மறந்து விட்டார்கள். விநாயகர் தன் படைகளான எலிகளிடம் பூமியில் ஏராளமான குழிகளை உண்டாக்குமாறு கூறியிருக்கிறார்.

அந்த குழிகளின் காரணமாக கிருஷ்ணரின் ரதத்தால் சாலையில் பயணிக்க முடியவில்லை. அது குழியில் மாட்டிக் கொண்டது.

விநாயகரை திருமணத்திற்கு அழைக் காததே காரணம் என்பதை பகவான் கிருஷ்ணர் தெரிந்துகொள்கிறார்.

அதைத் தொடர்ந்து கிருஷ்ணர் நேரில்சென்று பகவான் விநாயகரை அழைக்க, விநாயகர் திருமணத்திற்கு வந்து சிறப்பிக்கிறார்.

அந்த காலத்திலிருந்து யார் திருமணம் செய்தாலும், விநாயகரை அழைப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கின்றனர். சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்லவேண்டுமா? ஜெய்ப்பூருக்குச் செல்லும் வழியில் சவாய்மாதவ்பூரில் நீங்கள் இறங்கிக் கொள்ளவேண்டும்.

பயண நேரம் 34 மணி நேரம். பயண தூரம் 2052 கிலோமீட்டர். அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.

அருகிலிருக்கும் விமான நிலையம் ஜெய்ப்பூர். அங்கிருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் சவாய்மாதவ்பூர் இருக்கிறது.

ஒருமுறை "திரிநேத்ர கணேஷ் மந்திர்' ஆலயத்திற்குச் சென்று பகவான் விநாயகரை வழிபட்டு பயன் பெறலாமே?