மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் சுவேதாரண் யேஸ்வரர் திருத்தலம் அமைந் துள்ளது. யுகம் பல கண்ட கோவில் இது. நவகிரகங்களில் ஒன்றான புதன் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
காசிக்கு சமமான தலங்களில் ஒன்று திருவெண்காடு. இத்தலத் திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதனை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங் கள் நீங்குமென்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தேவாரப் பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 11-ஆவது தலம்.
இத்தலத்து இறைவனுக்கு திருவெண்காடர், திருவெண் காட்டு தேவர், திருவெண்காரு டையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண் காட்டுப் பெருமான் ஆகிய பெயர்களும் உண்டு. இவரே இத்தலத்தின் நாயகர். லிங்க வடிவில் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.
பிரம்மனிடம்பெற்ற வரத்தால், மருத்துவன் என்னும் அசுரன் தேவர்களுக்குத் துன்பத்தை விளைவித் தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்துவந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்தும் போர்செய்தான். அசுரன் சிவனை நோக்கித் தவமிருந்து சூலாயுதம் பெற்று, ரிஷபதேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிஷபதேவர் சிவனிடம் முறையிட, சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோரமூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே அசுரன் சிவனிடம் சரணாகதிடைந்து வணங்கினான். சரணடைந்த அசுரனை அகோரமூர்த்தியின் காலடியிலும், காயம்பட்ட ரிஷபதேவரை சுவேதாரண்யேஸ்வர சுவாமியின் நிருத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம்.
நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது.
திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீருமென்பது ஐதீகம். காசியிலுள்ள விஷ்ணுபாதத்தை வழிபட்டால் ஏழு தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யாரொருவர் ருத்ர பாதத்தை முறைப்படி வழிபடுகிறார்களோ, அவர்களுக்கு காசியைவிட மூன்றுமடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
வித்யாகாரகன் எனப்படும் புதன் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர் போன்றும், தாயின் அரவணைப்போடும்கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும், அன்னையர் கோவிலுக்கு இடபாகத்தில் தன் கோவிலை அமைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் புதன், தன் அலிதோஷம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார் என்பது புராண வரலாறு. இவர் செய்த மாதவத்தின் பயனாகவே ரிக் வேதத்தின் ஐந்தா வது காண்டத்துக்கு அதிபதியானார். திருவெண்காடு நவகிரகத் தலங் களில் மிகவும் புகழும் சிறப்பும் பெறக் காரணமாக அமைந்தவர்.
புதன் தசை ஒவ்வொருவர் வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக்கும். எனவேதான் திருவெண்காட்டிலுள்ள புதன் சந்நிதானத் தில் 17 தீபங்களேற்றி வழிபடவேண்டும் என்கிறார்கள். 17 முறை சுற்றிவந்து வழிபடுவது மிகவும் நல்லது.
ஆலயங்களில் 28 வகையான ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு வகையான ஆகமம் கடைப்பிடிக்கப்படும். ஆனால் திருவெண்காடு தலத்தில் மூன்று வகை ஆகமங்கள் கடைப்பிடிக் கப்படுகின்றன.
பொதுவாக புதன் கிரகத்தை ஆணு மல்லாத, பெண்ணுமல்லாத அலி கிரக மென்று சொல்வார்கள். ஆனால் திருவெண் காட்டில் புதன் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்துவருகிறார்.
இத்தல புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட எட்டு வகையான அதிகாரங்கள் கைகூடும்.
திருவெண்காட்டிலுள்ள மூன்று குளத்திலும் நீராடி, பிள்ளையிடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தைப்பேறு கிடைக்கும்.
சுவாமி, அம்மன், புதன் மூவருக்கும் முறைப் படி பூஜை செய்தாலும் குழந்தை நிச்சயமுண்டு.
சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோரமூர்த்தியை இக்கோவிலில் மட்டுமே காணலாம். இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை "ஆதி சிதம்பரம்' என்பார்கள். திருவெண்காடு அகோரமூர்த்தியை குலதெய்வ மாக ஏற்று வழிபடுபவர்கள் நாகை மாவட்டத்தில் கணிசமாக உள்ளனர்.
ஆலயத்தின் தனிச்சிறப்புக்குரியவர் அகோர மூர்த்தி. இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர். இவரது வீரக்கோலம் இங்கு சிறப்பாக இருக்கிறது. சிவபெருமான் தன் பக்தர்கள் பொருட்டு 64 வித உருவங்களில் காட்சியளித்துவருகிறார். இது 43-ஆவது உருவமாகும். இறைவனின் வீரச்செறிவைக் காட்டும் கோலம். பெயரில் சற்று கடுமையிருந்தாலும் அருள்நிலையில் இந்த மூர்த்தியுள்ளார்.
மூலவரைப்போலவே உற்சவரும் உள்ளார். நடப்பவர் எப்படி இடது காலை முன்வைத்து வலது காலைப் பெயர்த்து அடியெடுத்துவைக்க முனைவாரோ, அதேபோல் பெருமான் தன் நடையழகைக் காட்டும்விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
அட்டவீரட்டத் தலங்களில் இத்தலம் சேராவிட்டாலும் சிவ பெருமானின் வீரச்செயல் நிகழ்ந்த தலமிது. இந்த அகோரமூர்த்தியை திருவெண்காடு தலத்தைத் தவிர்த்து வேறெங்கும் கண்டுவிடமுடியாது.
திருவெண்காடு தலத்தில் ஹோமம் செய்தால் பில்லி, சூனியம், திருஷ்டிகள் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
அகோரமூர்த்தியை வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கும். சகோதரர் களுக்கிடையே ஏற்படும் மனக் கசப்பும், கருத்து வேறுபாடுகளும் விலகும்.
இத்தலத்து புராணப்படி மருத்துவன் எனும் அசுரனை எதிர்த்துப் போரிடச் சென்ற நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறுள்ளது.
அந்த நந்தியை சிவபெருமானுக்கு எதிரே காணலாம். அந்த நந்தியின் உடம்பில் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தப்பட்ட துளைகள் உள்ளன. நந்திக்கு அபிஷேகம் நடக்கும்போது அதைப் பார்க்கமுடியும். இந்த நந்திக்குதான் பிரதோஷ வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
திருவெண்காடு தலம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சந்நிதிகளைப் பொறுமையாகப் பார்த்துவந்தால் ஆலய வழிபாட்டுக்கான ஆத்ம திருப்தியைப் பெறலாம்.
திருவெண்காடு தலத்தில் புதனை வழிபட வருபவர்களில் சிலர் நேரிடையாக புதன் சந்நிதிக்கே சென்றுவிடுகிறார்கள். இது தவறு. முதலில் சுவாமியையும், பிறகு அம்பாளையும் வழிபட்டபிறகே இறுதியில் புதன் சந்நிதிக்குச் சென்று பரிகார பூஜைகளை மேற்கொள்ளவேண்டும்.
இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவி அம்பாள். திருவெண்காடரின் சக்தி வடிவமிவள். மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கித் தவமிருந்து அவரைத் தன் கணவனாகப் பெற்றாள்.
பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள். நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு), வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணிசெய்வதைக் காணலாம். கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்க்கரம் திருவடிகளின் பெருமையைப் பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம்போல உயரலாம் என்பதாகும். பெருமைவாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவுமொன்று.
இத்தலத்தில் முறைப்படி பூஜைகள் செய்ய விரும்புபவர்கள் விநாயகர், மூலவர், அகோர மூர்த்தி, அம்பாள் மற்றும் புதன் ஆகிய ஐந்து பேருக்கும் தவறாமல் தனித்தனியாக அர்ச்சனை செய்யவேண்டும்.
இத்தலத்திலுள்ள காளியின் சிலை பயங்கரமான முக வடிவமைப்புடன் உள்ளது. ஆனால் இந்த காளி சாந்தமானவள். பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தவறாது தருபவள்.
சுவேத வனத்தில் எழுந்தருளிய மாசக்தியாதலால் "சுவேத காளி' என்று அழைக்கப்படுகிறாள். எட்டு கரங்கள், பாசம், சக்கரம், வாள், உடுக்கை, கேடயம், கபாலம் ஆகிய படைக்கலங்களைத் தாங்கியுள்ளாள். காட்சியில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்வுக்கேற்ப வலக்காலைப் பீடத்தின்மீது உயர்த்தி வைத்துக்கொண்டு, இடக்காலைத் தொங்க விட்டிருக்கிறாள். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள்புரிகிறாள்.
காளி சந்நிதியின்முன்பு மிகப்பெரிய பலிபீடம் உள்ளது. இந்த பலிபீடம் மிகமிக சக்திவாய்ந்தது. எனவே இந்த பலி பீடத்தை பக்தர்கள் தொடாமல் வணங்க வேண்டும்.
துர்க்கையின் உருவைக் கண்ட மாத்திரத்தில் மேற்கொண்டு அடிவைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும்கூட அழகியவளாக இருப்பாளா என்ற ஆச்சர்யம் வரும்.
திருஞான சம்பந்தர் இத்தலத்தின் வட எல்லைக்கு வந்தபோது, அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும் தோன்றின. எனவே இத்தலத்தில் காலை வைக்க அஞ்சி, "அம்மா' என்றழைத்தார். இவரது குரலைக்கேட்ட பெரியநாயகி இவரைத் தன் இடுப்பில் தூக்கிக்கொண்டு கோவிலுக்குள் வந்தாள். சம்பந்தரை இடுப்பில் தாங்கிய வடிவில் பெரியநாயகியின் சிலை அம்மன் கோவிலின் பிராகாரத்தில் உள்ளது.
இதனால் அம்மன் "பிள்ளையிடுக்கி அம்மன்' ஆனாள்.
இத்தலத்திலுள்ள அகோரமூர்த்தி சந்நிதி மண்டபத்தில் தர வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
நடராஜர் சந்நிதி சிதம்பரம் தலத்தில் இருப்பதுபோன்றே வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. சிதம்பரத்தைப்போல நடராஜருக்கருகில் பெருமாளுக்கு தனிச் சந்நிதி உண்டு.
இந்திரன், ஐராவதம், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். பட்டினத்தார் சிவதீட்சை பெற்றதும், மெய்கண்டார் அவதரித்ததும் இங்குதான்.
இங்குள்ள நடராஜரை "ஆடல்வல்லான்' என்று கல்வெட்டு கூறுகிறது. ஸ்படிக லிங்கமும், ரகசியமும் இங்கும் உள்ளது. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
பட்டினத்தார் இத்தலத்தில் வர, திருவெண்காட்டுநாதரே அவருக்கு குருநாதராக இருந்து சிவதீட்சை தந்த தலம். இத்திருவிழா, இத்தலத்தில் இப்போதும் நடைபெறுகிறது. பட்டினத்தாருக்கு திருவெண்காடர் என்ற பெயர்பெற காரணமாக இருந்த கோவிலிது.
இத்தலத்தில் வழிபடுவோருக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பார் என நம்புகின் றனர்.
திருவெண்காடு தலத்தில் சுற்றுப் பிராகாரங்கள் பெரிதாக உள்ளன. ஆங்காங்கே மரங்கள் இருப்பதால் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதியுள்ளது.
சுற்றுலா வருபவர்கள் மற்றும் புதன்கிழமைகளில் வருபவர்கள் ஆலய மண்டபத்தில் தங்குவதற்கு வசதியுள்ளது. பக்தர்களுக்காக புதன்கிழமை மட்டும் மதியம் கூடுதலாக சில மணிநேரம் பூஜை நீடிக்கிறது. எனவே பூஜை நேரத்தைக் கணக்கிட்டு சுற்றுப்பயணத்தை அமைப்பது நல்லது!
நவகிரகங்களில் புதன் பகவான் கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றைத் தர வல்லவர். இவருக்கு இத்தலத்தில் தனிச் சந்நிதி உள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் சந்நிதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ளன.
ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திர பாக்கியம் கிடைக்காது. அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும். இப்படி குறைபாடு உள்ளவர்கள் இங்குவந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷநிவர்த்தி பெறலாம். இசைக்கு அதிபதியான புதனை இசைக் கலைஞர்களும், திரைப்படக் கலைஞர்களும் வழிபட்டுப் பயன்பெறுகின்றனர். நவகிரகங்களில் இது புதன் சிவபெருமானை பூஜித்துப் பேறுபெற்ற தலம்.
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் எல்லாமே மூன்று. காசியில் உள்ள 64 ஸ்நானக் கட்டடங்களுக்கு இணையான மணிகர்ணிகை ஆறு இங்குள்ளது.
இத்தலத்திலுள்ள அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களில் வளர்பிறை புதன் கிழமைகளில், புதன் ஹோரையில், தலைக்கு பச்சைப் பயறு வைத்து முழுகி, புதனை தரிசனம் செய்யவேண்டும்.
அதன்பின், சந்திர தீர்த்தமருகில் ஆலமர விருட்சத்தின் அடியில் ருத்ரபாதம் உள்ளது. இவ்விடத்தில் சிவபெருமானின் திருவடிகள் வரையப்பட்டுள்ளன. அங்கு வழிபடவேண்டும்.
இங்கு முன்னோர்க்கு திதி, தர்ப்பணம் செய்தால் அந்தக் குடும்பத்தினருக்கு நல்ல பலன்கள் கிடைக்குமென்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வழிபடுவோர் சகல செல்வங்களும் பெறுவார்கள் என்பதை பக்தர்கள் நம்புவதால், பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இக்கோவிலுக்கு குவிந்தவண்ணம் உள்ளனர்.