இறைவனைப் பணி வோர் இன்னல்களிலிருந்து மீள்வர் என்பது காலகால நம்பிக்கை. இதைப் பறைசாற்றும்விதமாக பண்டைய மன்னர் கள் ஆலயங்கள் எழுப்புவதைத் தம் அரசின் முதல் கடமையாகச் செய்தனர். அத்தகைய ஆலயங்கள் தம் ஆட்சியின் அடையாளமாக என்றென் றும் நிலைத்துநிற்க வேண்டுமென்பதற்காக அவ்வால யங்களை அற்புதமானதாகவும், அழகியல் அம்சங்கள் கொண்டதாகவும், கலைவேலைப்பாடுகள் மிக்கதாக வும் கட்டினர். அதற்காக பெரும்பொருள் செலவிட் டனர். அவர்கள் உருவாக்கிய ஆலயங்கள் இன்று நம்மைப் பண்படுத்தி வழிநடத்தும் அறச்சாலை களாக விளங்குவதுடன், நம் நாட்டின் ஆன்மிகப் பெருமையை உலகறியச் செய்யும் அடையாளங்களாக வும் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக சோழமன்னர் கள் உருவாக்கிய ஆலயங்கள் யாவும் உலகப்பெருமை கொண்டதாக உள்ளன. மன்னர்கள் உருவாக்கியது மட்டுமின்றி அவர்களது தாயார், தமக்கையார் என போட்டிப் போட்டுக்கொண்டு உருவாக்கிய கோவில் களால் தமிழ்நாடு கலைக்கோவிலாகத் திகழ்கின்றது.
இவற்றுள் தஞ்சை, திருவாரூர் மாவட்டங் களிலுள்ள கோவில்கள் போன்று, அரியலூர் மாவட்டக் கோவில்கள் ஒவ்வொன்றும் பழம்பெருமை வாய்ந்ததாகவும், சோழ மன்னர்களின் அன்றாட வாழ்வோடும், அரசு பரிபாலனத்தோடும் நேரடியாகத் தொடர்பு கொண்டவையாகவும் விளங்குகின்றன. இத்தகைய ஆலயங்களில் ஒன்றே திருக்களப்பூர் அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை திருக்கோடி வனத்தீசுவரர் ஆலயமாகும்.
ஊர்ச்சிறப்பு
இவ்வூர் முற்காலத்தில் "சோழர் குல சுந்தரி சதுர்வேதி மங்கலம்' என்னும் பெயரில், பிராமணர் களுக்கு பிரம்மதேயமாக வழங்கப் பட்ட ஊர் என்று கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இதுதவிர திருக் களப்பூர், திருக்கோடி, கோடிவனம் என்னும் பெயர்களாலும் குறிப்பிடப் பட்டுள்ளது. திருக்களப்பூர் என்பதி லுள்ள களப்பு என்னும் வார்த்தை, யுத்தத்திற்கு செல்வதற்குமுன்பு களப்பலி கொடுப்பதையும், யுத்தம் முடித்து வந்தபின்னர் பூஜை செய் வதையும் குறிக்கிறது. அதனடிப் படையில் பார்த்தால் இவ்வூர் யுத்தத்திற்கு புறப்படுமிடமாகவும், யுத்தம் முடித்துத் திரும்பிவந்து பூஜை செய்யுமிடமாகவும் இருந் திருக்கலாம். மேலும் திருக்கோடி, கோடிவனம் என்னும் பெயர்கள் இப்பகுதி அடர்ந்த வனமாக இருந் திருக்கலாம் என்பதை உணர்த்து கிறது.
தலச்சிறப்பு
அகத்திய முனிவர் பஞ்ச பூதங்களின் அம்சமாக நிறுவிய ஐந்து சிவாலயங்களில் ஒன்றாகவும், அப்பர் பெருமான் உழவாரப் பணிசெய்த திருத்தலமாகவும், நடராஜர் வழி பாடு சிறப்பாக நடைபெறுகின்ற தலமாகவும், சட்டநாதர் (மலை) சந்நிதியைக்கொண்ட தலமாகவும், சனிபகவான் தனிச் சந்நிதிகொண்டு குடும்ப சமேதராய் அருள்பாலிக் கும் தலமாகவும், வீணையில்லா சரஸ்வதிதேவி அருள்பாலிக்கும் தலமாக வும், சோழமன்னர்கள் காலத்தில் கட்டப் பட்ட கோவிலாகவும், பாண்டிய மன்னரால் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகவும் திகழ்கிறது.
தலவரலாறு
பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவரும், சப்தரிஷிகளில் ஒருவருமான அகத்தி யர், பொதிகை மலையில் தவம்செய்ததால் பொதிகை முனி என்றும், கும்பத்திலிருந்து (குடம்) பிறந்ததால் கும்பமுனி என்றும், அகத்தினுள்ளே தன்னைக் காணும் சக்திபெற்றவராதலால் அகத்தியர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் மொழியினை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இறைவனை நேரில் காணும் அருள்பெற்றவர்.
தாரகன் என்னும் அரக்கனை அழிப் பதற்காக பிறப்பிக்கப்பட்ட இவர், தன் பிறப்பின் நோக்கம் நிறைவேற்றப் பட்ட பின்னர் சித்த மருத்துவத்தின்பால் ஈடுபாடுகொண்டு சித்தவைத்திய சிகர மாகத் திகழ்ந்தார். அதனடிப்படையில் அகத்தியம் என்ற பெயரில் பல சித்தவைத்திய நூல்களை எழுதினார். இவர் சிவபூஜைக்காக தனது கமண்டலத்தில் அடைத்து எடுத்துவந்த கங்கைநீரை விநாயகப்பெருமான் கவிழ்த்து காவிரியாக ஓடச்செய்தார். இராமபிரானுக்கு சிவநாமத்தின் மேன்மையை எடுத்துச்சொன்னவர். சிவன்- பார்வதி திருமணத்தின்போது கயிலாயத்தில் பெருமளவு கூட்டம் கூடியதால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. இதை சமன்செய்யும் பணியை சிவன் அகத்தியரிடம் ஒப்படைத்தார். "திருமணத்தைப் பார்த்துவிட்டுப் புறப்படுகிறேன்' என அகத்தியர் கூற, "நீர் எம்மை எங்கிருந்தெல்லாம் வழிபடுகின்றீரோ அத்தலத்தில் யாம் உமக்கு எமது திருமணக் காட்சியைக் காட்டியருள்வோம்' என்று கூறி அனுப்பிவைத்தார்.
அதற்காக அகத்தியர் ஒவ்வொரு தலத்திலிருந்தும் சிவனை வழிபட்டதுடன், தலமில்லாத ஊர்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு சிவனின் திருமணக் காட்சியைப் பலமுறை காணும் பேறுபெற்றார். அப்படி அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கங்களில் ஐந்து சிவலிங்கங் கள் இப்பகுதியில் அருகருகேயுள்ள ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பட்டன. அவற்றுள் ஒன்றே திருக்கோடி வனத்தீசுவரர் என்கின்றனர்.
சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர், "தாண்டக வேந்தர்' என்று போற்றப்படுபவர். மருள் நீக்கியாராக இருந்த இவருக்கு சிவபெருமான் சூட்டிய பெயர் நாவுக்கர சர். "வாகீசர்' என்ற பெயருமுண்டு. இவரை "அப்பர்' என்றழைத்து அக மகிழ்ந்தவர் ஞானசம்பந்தர். இவர் "நமசிவாய' மந்திரத்தை நாவிலும், உழவாரக் கருவி யைக் கையிலும் கொண்டவர். திருஞானசம்பந்தர் கையில் பொற்றாளமும், அப்பர் கையில் உழவாரமும், சுந்தரர் கையில் செங்கோலும், மாணிக்கவாசகர் கையில் திருவாசகமும் அவரவர்களின் அடை யாளங்களாகும். இறைவனளித்த அந்த அடையாளத்தின்மூலம் அவர்கள் செயற்கரிய செயல்களைச் செய்தனர்.
சைவ சமயத்தைச் சார்ந்த அப்பர் பெருமான், சகோதரி திலகவதியாரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைத்து மனம் நொந்து, சிலகாலம் சமணம் சார்ந்து பல இன்னல்களுக்கு ஆளானார்.
சிவபக்தையான திலகவதியாரின் வேண்டு கோளுக்கிணங்கி, சிவபெருமான் திருவருளால் அவர் மீண்டும் சைவ சமயம் சார்ந்தார். சமணர்களின் ஆதிக்கத்தால் பல சிவன் கோவில்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை யும், இறைவன் குடிகொண்ட ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய தன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்துவதற் காகவே, அப்பரடிகள் கோவில்களில் முளைத் திருந்த புல்பூண்டுகளைத் தம் கரங்களாலும், உழவாரம் என்னும் புல் செதுக்கும் கருவியைக்கொண்டும் தூய்மையாக்கும் திருப்பணியைத் தொடங்கிவைத்தார். அப்பர் பெருமான் திருப்பணி செய்த ஆலயங்களில் திருக்கோடி வனத்தீசுவரர் ஆலயமும் ஒன்று.
மேலைச் சிதம்பரம்
இவ்வாலயம் மேலைச் சிதம்பரம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஆதாரமாக, இவ்வாலயத்தின் ஐந்தாவது கல்வெட்டைக் கூறலாம். அனைத்து சிவாலயங்களிலும் நடராஜர் சந்நிதி இடம்பெற்றிருக்கும். அதை சபை என்று கூறுவது வழக்கம். ஆலயத்தின் மூலவர் மற்றும் அம்பாள் கருவறையைவிட நடராஜர் சபை சிறியதாகவே இருக்கும். ஆனால் இவ்வாலயத்தில் நடராஜர் சபை பிராகாரத்தில் பெரிய அளவில் அலங்கார வேலைப்பாட்டுடன் தனி மண்டபமாகக் கட்டப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலைப் பார்த்தும், அவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி உத்திரம், மற்றும் மார்கழி திருவாதிரை உற்சவங்களைப் பார்த்தும் ஈர்க்கப்பட்டு, இவ்வாலயத்தில் நடராஜர் சபையை உருவாக்கி வழிபாடு செய்து, உற்சவங்களை யும் நடத்தியிருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அகத்தியர் ஸ்தாபித்த ஐந்து கோயில்களில் இவ்வாலயத்தில் நடராஜர் வழிபாடு சிறப்பாக நடைபெற்ற காரணத்தால் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகவும், சிதம்பரத்திற்கு மேற்கு திசையில் இவ்வூர் அமைந்திருந்த காரணத்தால் மேலசிதம்பரம் என்ற பெயரும் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.
காலம் மற்றும் கட்டுமானம்
இவ்வாலயம் யாரால் எப்பொழுது கட்டப் பட்டது என்னும் சரியான விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் கோவில் அமைப்பு, கட்டுமானம், சிற்ப வேலைப் பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சோழ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்- அதாவது பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப் பட்டிருக்கலாம் என்கின்றனர் வரலாற்றாய் வாளர்கள்.
கல்வெட்டுச் செய்திகள்
திருகோடி வனத்தீசுவரர் ஆலயத்தில் ஐந்து கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலாவது கல்வெட்டில் இவ்வூரின் பெயர் சோழர்குல சுந்தரி சதுர்வேத மங்கலம் என்றும், பிராமணர்களுக்கு பிரம்மதேயமாக கொடுக்கப்பட்ட ஊர் என்றும், பிரம்ம தேயமாக கொடுக்கப் பட்ட சுமார் 550 வேலி நிலமும் தத்தூர் அல்லது தத்தேரி, காரைக்காடு ஆகிய இரண்டு கிராமங் களைச் சேர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வாலய இறைவனது பெயர் ருத்ர கோடி வனத்தீசுவர முடையார் என்றும், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இவ் வாலயத்தை பாண்டிய மன்னன் இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1391) திருப்பணி செய்துள்ள விவரமும் இடம் பெற்றுள்ளது. கல்வெட்டில் இடம்பெற் றுள்ள ருத்ரகோடி வனத்தீசுவரமுடையார் என்பதே கோடி வனத்தீசுவரர் என்று மருவி யிருக்கலாம்.
இரண்டாவது கல்வெட்டில் திருக்கோடி ஆண்டபிள்ளையாருக்கு- அதாவது இவ்வாலய முருகப்பெருமானுக்கு நில மானியம் அளிக்கப்பட்ட செய்தி இடம் பெற்றுள்ளது. இந்த நிலம் வீரநாராயண சதுர்வேதி மங்கலத்திலிருந்து (காட்டுமன்னார் கோவில்) பிரிந்த அகரம் சதுர்வேதி மங்கலத் தில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை யார் மானியமாக அளித்தார்- எவ்வளவு நிலம் என்னும் விவரங்கள் இடம்பெற வில்லை.
மூன்றாவது கல்வெட்டில் உடையார் பாளையத்தை ஆட்சிசெய்த பாளையக் காரரான நல்லநாயக காலாட்க தோழ உடையார், கோடிவனசுவாமி ஆலய நித்யபூஜை கைங்கர்யத்திற்காக (கி.பி. 1620) திருக்களப்பூர் முழுவதையும் சாசனம் செய்து வைத்த செய்தி இடம்பெற்றுள்ளது. நான் காவது கல்வெட்டில் அடுத்த பாளையக்கார ராக பொறுப்பேற்ற ரங்கப்ப காலாட்க தோழ உடையார் அதைப் புதுப்பிக்க உத்தரவிட்ட செய்தி (கி.பி. 1644) இடம்பெற்றுள்ளது. ஐந்தாவது கல்வெட்டில் முத்துவிஜய ரங்கப்ப காலாட்க தோழ உடையார், நடராஜர் சந்நிதிக்கு ஊர்மக்களுடன் சேர்ந்து மரத்தாலான அலங்காரக் கதவு உபயமாக அளித்த செய்தி (கி.பி 1675) இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் மேலைச் சிதம்பரம் சபை வாசல் கதவு உபயம் என்று பொறிக் கப்பட்டுள்ளது.
விழாக்கள் மற்றும் உற்சவங்கள்
சிவாலயங்களுக்கேயுரிய வழக்கமான உற்சவங்கள் தவிர நடராஜர் வழிபாடு சிறப்புற்று விளங்கிய இவ்வாலயத்தில் ஆனி உத்திரத் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரை தரிசனமும் சிறப்பு விழாவாக நடத்தப்பெறுகின்றன. இதைக் காண பக்தர்கள் பெருமளவில் ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். இதைத்தவிர பெருந் திருவிழாக்கள் ஏதும் நடத்தப்பெறுவதில்லை. ஆலயத்திற்கு 300 ஏக்கருக்குமேல் மன்னர்கள் நிவந்தங்களாக அளித்த நிலங்கள் இருந்தும், அதிலிருந்து கோவிலுக்கு வரவேண்டிய வருமானம் வராததால் தினசரி ஒருகால பூஜை மட்டுமே நடத்தப்பெறுகிறது. தற்போது தமிழக அரசின் இந்தசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ளது.
ஆலய அமைப்பு
இரண்டு பிராகாரங்களுடன் ராஜகோபுர மின்றி- ஆனால் அதற்குரிய கல்ஹாரத்துடன், சிவசக்தி சிலாரூபத்துடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. முழுக்க முழுக்க வெள்ளைக் கருங்கற்களால் கட்டப் பட்டுள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் பலிபீடமும் அதனையொட்டி நந்தி மண்டபமும், இவற்றின் இடதுபுறத்தில் ஆலய கிணறும் அமைந்துள்ளது. இருபுறமும் விநாயகப் பெருமான் அருள்பாலிக் கும் வாயிலைத்தாண்டி உள்ளே செல்ல, வெளிமண்டபத்தின் தென்பகுதியில் ராஜராஜசோழன் மற்றுமொரு சோழன் சிலைகளும், மூன்று விநாயகர் சிலைகளும், வீணையில்லாத சரஸ்வதிதேவி சிலையும், ஒரு அம்பாள் சிலையும் இடம்பெற்றுள்ளன.
வடபகுதியில் குடமுழுக்கின்போது புதிதாக ஸ்தாபிக்கக் கொண்டுவரப்பட்டு, ஸ்தாபிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்ட அம்பாள் மற்றும் வள்ளி, தெய்வானை உடனுறை ஆறுமுகக்கடவுளின் சிலைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்துள்ள அம்பாள் மண்டபத்தில் சிவகாமியம்மை தென்முகம் நோக்கி அலங்கார ரூபிணியாக நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறாள். பொதுவாக கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம், அன்பு, தடையில்லா தாம்பத்தியம் இருத்தல் வேண்டும். இதை நல்குபவளே இந்த அன்னை.
அடுத்துள்ள மகாமண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் இடம்பெற்றுள்ளன. இடதுபுறத்தில் விநாயகப்பெருமான் அருள் பாலிக்கிறார். அடுத்து அர்த்த மண்டபமும் அதையடுத்து கருவறையும் உள்ளது. கருவறையிலிருந்து சிவலிங்க ரூபமாய் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் திருக்கோடி வனத்தீசுவரர். இவரின் சந்நிதிக் கதவில் துளைகள் விடப்பட்டுள்ளன. சந்நிதி மூடியிருக்கும்போது அந்த துளைகளின் அருகில் இருந்தாலே உஷ்ணக்காற்று நம் முகம்மீது படுகிறது. அதாவது இறைவனின் சக்தி நம்மை ஆட்கொள்கிறது.
மூலவரை வழிபட்டு வெளியேவர பிராகாரத்தில் சட்டநாதர் தனிச் சந்நிதி யிலமர்ந்து அருள்பாலிக்கிறார். கருவறை தேவகோட்டத்தில் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபுறத்தில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். துர்க்கைக்கு நேரெதிரில் சண்டிகேசுவரர் தனிச் சந்நிதியும், இதையொட்டி நடராஜர் சபையும் அமைந்துள் ளது. ஆலய தென்மேற்குப் பகுதியில் விநாயகப் பெருமானும், அவருக்கு அடுத்ததாக சுப்பிரமணியரும், அதனையடுத்து வள்ளி, தெய்வானை உடனுறை ஆறுமுகப்பெருமானும் தனித்தனி சந்நிதிகளில் இடம்பெற்றுள்ளனர்.
ஆலயத்தின் வடமேற்கு மூலையில் மாந்தன், மாந்தியுடன் ஜேஷ்டாதேவியும், அருகில் தலவிருட்சமான வில்வமரமும் இடம்பெற்றுள்ளன. இரண்டு சுப்பிரமணியர் சந்நிதிக்கு இடைபட்ட பகுதியில், சுற்றுச்சுவரில் புருஷாமிருகம் சிவனை வழிபடுவது போன்ற சிற்பம் இடம்பெற்றள்ளது.
ஆலய வடகிழக்கில் தற்காலம் கட்டப் பட்ட அய்யப்பன் சந்நிதியும், எதிரில் நவகிரகங்களும், காலபைரவர் மற்றும் சூரியனும் இடம்பெற்றுள்ளனர். நவகிரகங்களுக்கு எதிரில் ஆலயச் சுவற்றையொட்டி சனியின் தனிச் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் தனியாக இருந்து அருள்பாலிப்பது சில ஆலயங்களில் மட்டுமே காணமுடியும் அபூர்வ காட்சியாகும். அப்படிப்பட்டவரிடம் நம் வேண்டுதல்கள் எதை வைத்தாலும் அது உடனடியாக நிறைவேறும். குடும்பப் பிரச்சினை சார்ந்த தீர்வுகாண, செல்வம் பெருக, நோய்களிலிருந்து நிவாரணம் பெற இவரைப் பிரார்த்தித்தால் அனைத்தும் நிறைவேறும். மற்றபடி பிரம்மா, லிங்கோத்பவர், மகாலட்சுமி, போன்ற சிவாலய மூர்த்தங்கள் இவ்வாலயத்தில் இடம்பெறவில்லை.
நடராஜர் சபையின் கதவில் மேலைச் சிதம்பரம் என்று பொறிக்கப்பட்டள்ளது. ஆலயத்தின் எதிரில் சற்றுதூரம் தள்ளி ஆலய தீர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அமைவிடம்: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டத்தில், காடுவெட்டி- ஆண்டிமடம் சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. விக்கிரவாண்டி- கும்ப கோணம் தேசிய நெடுஞ்சாலையில், காடு வெட்டியிலிருந்து மேற்கே எட்டு கிலோமீட்டர் தூரத்திலும், ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் நெடுஞ்சாலையில், ஆண்டிமடத்திலிருந்து கிழக்கே 11 கிலோமீட்டர் தூரத்திலும் திருக் களப்பூர் அமைந்துள்ளது. சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் காடுவெட்டியிலிருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையங்கள் விருத்தாசலம் மற்றும் சிதம்பரம்.