"பூமன் சிரங்கண்டி அந்தகன் கோயில் புரமதிகை
மாமன்பறியல் சலந்திரன் விற்குடி மாவழுவூர்
காமன்குறுக்கை யமன்கடவூர் இந்த காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே.'
சிவனின் பராக்கிரமங்களைக் குறிக்கும் கோவில்கள் எட்டாகும். அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும் இத்தலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றையும் சிறப்பையும் கொண்டவை. பிரம்மன் சிரம்கொய்த திருக்கண்டியூர், அந்தகாசுரனை வதம்செய்த திருக்கோவலூர், முப்புரம் எரித்த திருவதிகை, தக்கனின் யாகத்தைத் தகர்த்து சிரம்கொய்த திருப்பறியலூர், சலந்திரனை சக்கராயுதத்தால் தண்டித்த திருவிற்குடி, யானையின் தோலுரித்த திருவழுவூர், மன்மதனை எரித்த திருக்குறுக்கை, எமனை சம்ஹாரம் செய்த திருக்கடவூர் ஆகிய இத்தலங்களை-
"காவிரியின் கரைகண்டி வீரட்டானம்
கடவூர்வீ ரட்டானம் காமருசீர் அதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவைகூறி
நாவில் நவின்றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே'
என அப்பர் தனது அடைவுத் திருத் தாண்டகத்தில் இணைத்துப் பாடியுள்ளார். இவற்றுள் முதலாவது தலம் திருக்கண்டியூர் திருத்தலமாகும்.
பாடல்பெற்ற சிவாலயங்களில், காவிரித் தென்கரையின் 127 திருத்தலங்களில் இது 12-ஆவது திருத்தலம். சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தது; துரோணாச்சாரியார் மகப்பேறு வேண்டி வழிபட்டுப் பேறுபெற்றது; சதாதப முனிவருக்கு சிவன் திருக்கயிலாய காட்சியைக் காட்டியருளியது; சித்ரவஜன், தக்கன், பகீரதன் ஆகியோர் சிவனருள் பெற்றது; திருவையாறு சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலம்; சிவாலயங்கள் வேறெதிலும் இல்லாதவிதமாக பிரம்மா மிகப்பெரிய திருமேனியினராய் சரசுவதியுடன் இணைந்து அருள்பாலிக்கும் தலம் என்னும் பல சிறப்புக்களைக் கொண்டது. கண்டனபுரம், ஆதிவில்வ நாதம், திருமூர்த்தித்தலம், பிரம்மபுரி. ஆதிவில்வாரண்யம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இறைவன் பிரம்மசிரக் கண்டீசுவரர், வீரட்டேசர், பிரம்மநாதர் என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.
அம்பாள்- மங்களநாயகி. தலவிருட்சம்- வில்வம், தீர்த்தம்- குடமுருட்டி, நந்திதீர்த்தம், தஹதீர்த்தம் மற்றும் பிரம்மதீர்த்தம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ள விசயநிருபதுங்க விக்கிரமவர்ம பல்லவன் காலத்து கல்வெட்டைக் கூறலாம்.
அதன்பின்னர் வந்த சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இவ்வாலயத்தைப் புதுப்பித்ததுடன் பல்வேறு திருப்பணிகளையும் செய்துள் ளனர்.
கல்வெட்டுச் செய்திகள்
இவ்வாலயத்தில் விசய நிருபதுங்க விக்கிரமவர்மன், சோழ மன்னனான மதுரையைக்கொண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் இராசேந்திர சோழன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. இக் கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் திருவீரட் டானத்து மகாதேவர், திருக்கண்டியூருடைய மகாதேவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளன. இம்மன்னர் கள் இவ்வாலய இறைவனுக்கு நந்தா விளக்குகள் வழங்கி, அவை இடையறாது எர
"பூமன் சிரங்கண்டி அந்தகன் கோயில் புரமதிகை
மாமன்பறியல் சலந்திரன் விற்குடி மாவழுவூர்
காமன்குறுக்கை யமன்கடவூர் இந்த காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே.'
சிவனின் பராக்கிரமங்களைக் குறிக்கும் கோவில்கள் எட்டாகும். அட்டவீரட்டத் தலங்கள் எனப்படும் இத்தலங்கள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றையும் சிறப்பையும் கொண்டவை. பிரம்மன் சிரம்கொய்த திருக்கண்டியூர், அந்தகாசுரனை வதம்செய்த திருக்கோவலூர், முப்புரம் எரித்த திருவதிகை, தக்கனின் யாகத்தைத் தகர்த்து சிரம்கொய்த திருப்பறியலூர், சலந்திரனை சக்கராயுதத்தால் தண்டித்த திருவிற்குடி, யானையின் தோலுரித்த திருவழுவூர், மன்மதனை எரித்த திருக்குறுக்கை, எமனை சம்ஹாரம் செய்த திருக்கடவூர் ஆகிய இத்தலங்களை-
"காவிரியின் கரைகண்டி வீரட்டானம்
கடவூர்வீ ரட்டானம் காமருசீர் அதிகை
மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்
வியன்பறியல் வீரட்டம் விடையூர் திக்கிடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக் குடிவீரட் டானமிவைகூறி
நாவில் நவின்றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே'
என அப்பர் தனது அடைவுத் திருத் தாண்டகத்தில் இணைத்துப் பாடியுள்ளார். இவற்றுள் முதலாவது தலம் திருக்கண்டியூர் திருத்தலமாகும்.
பாடல்பெற்ற சிவாலயங்களில், காவிரித் தென்கரையின் 127 திருத்தலங்களில் இது 12-ஆவது திருத்தலம். சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்தது; துரோணாச்சாரியார் மகப்பேறு வேண்டி வழிபட்டுப் பேறுபெற்றது; சதாதப முனிவருக்கு சிவன் திருக்கயிலாய காட்சியைக் காட்டியருளியது; சித்ரவஜன், தக்கன், பகீரதன் ஆகியோர் சிவனருள் பெற்றது; திருவையாறு சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலம்; சிவாலயங்கள் வேறெதிலும் இல்லாதவிதமாக பிரம்மா மிகப்பெரிய திருமேனியினராய் சரசுவதியுடன் இணைந்து அருள்பாலிக்கும் தலம் என்னும் பல சிறப்புக்களைக் கொண்டது. கண்டனபுரம், ஆதிவில்வ நாதம், திருமூர்த்தித்தலம், பிரம்மபுரி. ஆதிவில்வாரண்யம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இறைவன் பிரம்மசிரக் கண்டீசுவரர், வீரட்டேசர், பிரம்மநாதர் என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.
அம்பாள்- மங்களநாயகி. தலவிருட்சம்- வில்வம், தீர்த்தம்- குடமுருட்டி, நந்திதீர்த்தம், தஹதீர்த்தம் மற்றும் பிரம்மதீர்த்தம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் பிற்காலப் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரமாக இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ள விசயநிருபதுங்க விக்கிரமவர்ம பல்லவன் காலத்து கல்வெட்டைக் கூறலாம்.
அதன்பின்னர் வந்த சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் இவ்வாலயத்தைப் புதுப்பித்ததுடன் பல்வேறு திருப்பணிகளையும் செய்துள் ளனர்.
கல்வெட்டுச் செய்திகள்
இவ்வாலயத்தில் விசய நிருபதுங்க விக்கிரமவர்மன், சோழ மன்னனான மதுரையைக்கொண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் இராசேந்திர சோழன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. இக் கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் திருவீரட் டானத்து மகாதேவர், திருக்கண்டியூருடைய மகாதேவர் என்று குறிப்பிடப் பட்டுள்ளன. இம்மன்னர் கள் இவ்வாலய இறைவனுக்கு நந்தா விளக்குகள் வழங்கி, அவை இடையறாது எரிய நிவந்தங்கள் அளித்த செய்தியும், திருப்புகை போடு வதற்காக குங்குலியம் (சாம்பிராணி) வாங்க நிவந்தங்கள் அளித்த செய்தியும் இடம் பெற்றுள்ளன.
தேவாரப் பாடல்பெற்ற இத்தலத்தைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் அருண கிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். திருக்கண்டியூர் வீரச்செயலை தேவாரத்தில் திருஞானசம்பந்தர் 29 இடங்களிலும், திருநாவுக்கரசர் 35 இடங்களிலும், சுந்தரர் ஐந்து இடங்களிலும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் நான்கு இடங்களிலும், திருக்கோவையில் இரண்டு இடங்களிலும் பாடியுள்ளார். ஒன்பதாம் திருமுறையில் இரண்டு இடங்களில் இச்செயல் பற்றிப் பேசப்படுகின்றது. இத்தனைப் பெருமைக்குரிய இத்தலத்தை பிரம்மன், துரோணாச்சாரியார், சதாதப முனிவர், சித்ரவஜன், தக்கன், பகீரதன் ஆகியோர் வழிபட்டுப் பேறுபெற்றுள்ளனர்.
தலவரலாறு
சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்னும் ஐந்து திருமுகங்கள் இருப்பதுபோன்று, ஒரு காலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மாவும் ஐந்து தலைகள் கொண்டவராக இருந்தார். இதனால் அவரது தலைக்கனம் நாளுக்குநாள் கூடி, பார்ப்பவர்களிடமெல்லாம் சிவபெருமானுக்கு தான் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்று கர்வத்துடன் சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் ஐந்து முகத்துடன் அடிக்கடி கயிலாயத்திற்கும் சென்றார். இதனால் சில சமயங்களில் கயிலைக்கு வருவது சிவனா அல்லது பிரம்மாவா என பார்வதிதேவிக்கு குழப்பம் ஏற்பட்டது. ஒருசமயம் சிவபெருமானென நினைத்து பார்வதிதேவி பரபரப்புடன் எழுந்து வணங்குகையில், பிரம்மா ஆணவத்துடன் சிரித்தார்.
இதனால் சினமுற்ற பார்வதிதேவி இதுகுறித்து சிவபெருமானிடம் முறை யிட்டாள். பிரம்மாவின் செருக்கை அறிந்த சிவன் "அவர் தானே திருந்தட்டும்' என்று பொறுமை காத்தார்.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் மேரு மலையில் திருமாலிடம் பிரம்மா, தன்னை சிவபெருமானென நினைத்து பார்வதிதேவி எழுந்து மரியாதையுடன் வணங்கியதைக் கூறி, தேவியை கேலி செய்யலானார்.
அப்போது அங்கு குழுமியிருந்த தேவர்களும், முனிவர்களும் "பரப்பிரம்மம் யார்?' என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பிரம்மா, "ஆதிபராசக்தியின் அம்சமான பார்வதி தேவியே என்னைக்கண்டு எழுந்து வணங்கும்போது பரப்பிரம்மம் நானாகத்தானே இருக்கமுடியும்? மேலும் பரப்பிரம்மம் என்பதற்குள் என் பெயரான பிரம்மா இடம்பெற்றிருப்பதால் நானே பரப்பிரம்மம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?' என்று கேட்டார். பிரம்மனின் பதில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் திகைப்பை அளித்தது. "சிவபெருமானே பரம்பொருள்' என்று கூறுவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக பிரம்மா தன்னையே பரப்பிரம்மம் என்று கூறிக்கொண்டது ஏமாற்றத்தையளிக்க, திருமாலின் பதிலை அறிய அவர் பக்கம் திரும்பினர். திருமாலோ, "பிறப்பு இறப்பற்றவர்தானே பரம்பொருள்? இந்த பிரம்மன் எனது குமாரன். இவர் எப்படி பரம்பொருளாக முடியும்? என்னிடமிருந்து பிறந்ததால் இவர் பரம்பொருளாக இருக்கமுடியாது. பிறப்பு இறப்பற்ற நானே பரம்பொருள்' என்று தெரிவித்தார்.
இருவருமே பரம்பொருள் என்று தம்மைக் கூறிக்கொண்டு ஒருவரோடொருவர் வாதிட்டுக்கொள்வது முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் கவலையை அளித்தது. அதனால் வேதத்திடமும் பிரணவத்திடமும் சென்று அவர்கள் முறையிட்டனர். வேதமும், பிரணவமும் பிரம்மா, திருமால் இருவரும் இருக்குமிடத்திற்கு வந்து, "எல்லா உலகங்களுக்கும் சிவபெருமானே பரம்பொருளாக இருக்கமுடியும். நீங்கள் இருவரும் இப்படி பொருத்தமில்லாமல் பேசி விவாதித்துக் கொண்டிருக்கிறீர்களே?' என்று கேட்டன. அப்படியும் அவர்கள் இருவரும் தம் வாதத்தைத் தொடர, அவர்களுக்கு உண்மையை உணர்த்த விரும்பிய சிவன்,
அவர்கள் இருவருக்கும் நடுவிலே ஜோதி வடிவில் காட்சியளித்தார். அவர்களோ அதனை ஏதோ ஓர் சுடரென்று அலட்சியம் செய்தனர்.
அவர்கள் புரிந்துகொள்வதற்காக சிவசக்தி சமேதராய் அந்தச் சுடரிலே காட்சியளித்தார். அதனைக்கண்ட திருமால் ஐயம் தீர்ந்தவராய், "சிவபெருமானே பரப்பிரம்மம்' என்பதை உணர்ந்து அவர் தாள்பணிந்தார். ஆனால் பிரம்மாவோ, "என்னைப்போலவே ஐந்து தலைகள் கொண்டிருக்கும் சிவபெருமான் என்னைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர்? ஆகவே நான்தான் பரம்பொருள்' என்று மார்தட்டினார்.
இது ஒருபுறமிருக்க, தான் படைத்த பெண்ணொருத்தியை அடையும் ஆர்வம் பிரம்மனுக்குள் இருந்தது. இதுபுரிந்த அப்பெண் ஓடிச்சென்று பார்வதிதேவியிடம் முறையிட்டாள். இதனால் கோபத்திற்குள்ளான தேவி, இச்செய்தியை சிவபெருமான் காதுகளில் போட, ஏற்கெனவே பிரம்மன்மீது கோபத்திலிருந்த சிவன் தன் அம்சமாக பைரவரைத் தோன்றச் செய்து, தலைக்கனத்துடன் ஆடும் பிரம்மனின் நடுசிரத்தைக் கொய்துவிடுமாறு பணித்தார். பைரவரும் தனது இடக்கை விரல் நகத்தால் பிரம்மனின் நடுசிரத்தைக் கிள்ளியெறிய, பிரம்மன் ஒரு தலையை இழந்து நான்கு தலைகளுடன் நான்முகனானார்.
பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் பைரவ தோற்றத்திலிருந்த சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. கையில் கபாலத்துடன் பல இடங்களுக்குச் சென்று பிச்சையேற்று வழிபாடு செய்தவர், காசிக்குச் சென்றுவிட்டு கடைசியாக திருக்கண்டியூர் திருத்தலத்திற்கு வந்து கமலத் தீரத்தத்தில் நீராடி அருகிலிருந்த பெருமாளை தரிசனம் செய்தார். ஹரனுக்கு ஏற்பட்ட இன்னலைப் பார்த்துவிட்டு ஹரி சும்மா இருப்பாரா? சிவனது பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கினார். அதனால் அவர் ஸ்ரீஹரசாப விமோசனப் பெருமாள் என்ற பெயரும் பெற்றார். (கண்டியூர் சிவாலயத்திற்கு எதிரில் இந்த பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.) சிவனுக்கு விமோசனமளித்த ஹரியை, சிரத்தை இழந்த பிரம்மாவும் வந்து வழிபட்டார். பின்னர் தன் குற்றத்தைப் பொறுத்தருளுமாறு வேண்டி, மீண்டும் சிவனைப் பணிந்தார். தன்னுடைய ஆணவத்தை அடக்குவதற்காக கிள்ளியெறிந்த தன்னுடைய ஐந்தாவது தலையைத் தராவிட்டாலும் பரவாயில்லை; படைக்கும் தொழிலை மீண்டும் தருமாறு கோரி, தன் மனைவி சரஸ்வதியுடன் வந்து தன் சிரம் கொய்யப்பட்ட இத்தலத்தில் சிவனைப் பணிந்தார். பிரம்மனின் வேண்டுதலை ஏற்ற சிவன் அவரது ஐம்முகங்களின் அழகினை சதுர்முகங்களில் (நான்கு முகங்களில்) அருளச் செய்ததுடன் படைக்கும் ஆற்றலையும் மீண்டும் தந்தருளினார்.
துரோணர் தமக்கு மகப்பேறில்லாத குறையைப்போக்க இத்தலத்து இறைவனைத் தும்பை மலரால் அர்ச்சனைசெய்து மகப்பேறு எய்தினார். சதாதாபர் என்ற முனிவர் சிறந்த சிவபக்தர். நாள்தோறும் பல சிவாலயங்களுக்குச் சென்று வணங்குவதையும், பிரதோஷ காலத்தில் திருக்காளத்தி சென்று காளத்திநாதரை வழிபடுவதையும் வழக்க மாகக் கொண்டிருந்தார். முனிவர் ஒரு சனிப்பிரதோஷ நாளில் திருக்கண்டியூர் வந்தபோது மழைபிடித்துக் கொண்டதால் திருக்காளத்தி செல்லமுடியாமல் தடையேற் பட்டது. அதனால் வருத்த முற்று தீமூட்டி தம்முயிரைவிடத் துணிந்தார். அதைப்பார்த்த சிவன் கயிலாயத்திலிருந்த வில்வமரத்தை அங்கு தோன்றச் செய்து துணைவியாருடன் காளத்திநாதராக காட்சியருளி, நெருப்பில் விழுந்து உயிர்விடத்துணிந்த சதாதபரைக் காப்பாற் றினார்.
தக்கன் சிவபெருமானை அவமதித்த குற்றம் தீரவும், பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டுவரவும் இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேறுபெற்றார்கள். சித்ரவஜன் என்ற கந்தர்வன் தன் மனைவி குணவதி யுடன் ஒரு சோலைக்குச் சென்றான். அதன் அழகு அவர்களை ஈர்க்க, தங்களை மறந்து மகிழ்ந்திருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியே வந்த தேவலர் என்ற முனிவர் கண்ணில் இக்காட்சிபட, வெகுண்டெழுந்த முனிவர் கோபமுற்று சபித்தார். இதனால் சித்ரவஜன் அசுரனானான். குணவதி பலாச மரமானாள். இருவரும் சாபவிமோசனம் அருளுமாறு வேண்ட, அகத்தியரின் சீடர் சதாதாப முனிவர் இங்கு வரும்போது சாபம் நீங்கும் என்றார். அதுபோலவே சதாதாப முனிவர் ஒரு சனிப்பிரதோஷ நாளன்று காளத்திநாதரை தரிசிக்கச் சென்றார்.
பேய்மழை பிடித்துக்கொள்ளவே பலாச மரத்தடியில் தங்கினார். அதனால் அவ்வுருவிலிருந்த குணவதி மீண்டும் பெண்வடிவம் பெற்றாள். அவள்மூலம் அவளது கதையைக் கேட்ட முனிவர் தன் கமண்டலத்திலிருந்த தண்ணீரை எடுத்து தெளித்ததும் சித்ரவஜன் கந்தர்வனானான்.
ஆலய அமைப்பு
குடமுருட்டி ஆற்றின் கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். இதன் ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக்கொண்டுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் இடப்புறம் தண்டபாணி மண்டபம் மற்றும் வௌவால் நெத்தி மண்டபம் அமைந்துள்ளது. இதில் சப்தஸ்தான கண்ணாடிப் பல்லக்கு வைக்கப்பட்டுள்ளது. வலப்புறத் தில் அன்னதான மண்டபம் இடம்பெற்றுள்ளது. வாயிலுக்கு நேரெதிரில் கவசமிட்ட கொடிமரம், நந்தி மற்றும் பலிபீடம் அமைந்துள்ளது. தொடர்ந்து கொடிமர விநாயகர் காட்சி தருகிறார். வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அம்பாள் மங்களாம்பிகை நின்ற திருக்கோலத்து டனும், அபய வரதத்துடன்கூடிய நான்கு திருக்கரங்களுடனும், பெயருக்கேற்ப மங்களப் பொலிவுடன் அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நிதிக்கு எதிரில் ஆலயத்தின் வலப்புறத் தில் தல விருட்சமான வில்வத்தையும், அதனடியில் வீற்றிருக்கும் ராஜகணபதியையும் தரிசிக்கலாம்.
இரண்டாவது கோபுரமான அணுக்கன் திருவாயிலின் மேல் அம்மையப்பர் திருக்கயிலாயத்தில் அமர்ந்து காட்சிதர, பிரம்மா, சரசுவதி இருவரும் வணங்கி நிற்பதுபோன்ற சுதைவடிவம் இடம்பெற்றுள்ளது. உட்பிராகார மகாமண்டபத்தில் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் வள்ளி, தெய்வயானையுடன்கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி கிழக்கு நோக்கியவாறும், மகாமண்டபத்தின் வடபகுதியில் பிட்சாடனர் தென்முகம் நோக்கியும், மண்டபத்தின் மத்தியில் நந்தியெம்பெருமான் கருவறையை நோக்கிய வாறும் அருள்பாலிக்கின்றனர்.
அர்த்தமண்டபத்தின் இடப்புறத்தில் நவகிரகங்கள் இடம்பெற்றுள்ளனர். இடைநாழியில் நந்தியும், நுழைவாயிலின் இருபுறமும் முருகப் பெருமானும் எழுந்தருளியுள்ளார். இது ஒரு அபூர்வப் படைப்பாகும்.
இவர்களைத்தாண்டி கருவறையில் பிரம்மனின் சிரம்கொய்த திருக்கண்டீசுரர் சுயம்புலிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் திருக்காட்சி தருகிறார். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. இறைவன் சந்நிதிக்கு அருகில் வடபகுதியில் நான்முகன் கிழக்குநோக்கி பெரிய திருவுருவத்துடனும், அவரது தேவி சரசுவதி அழகிய சிறிய திருவுருவத்துடனும் காட்சியளிக்கின்றனர்.
பிரம்மனின் நாற்கரங்களில் ஒன்றில் தாமரையும், மற்றொன்றில் உருத்திராட்ச மாலையும் இடம்பெற்றிருப்பது அவரது தவக்கோலத்தை காட்டுகின்றது. பிரம்மனின் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் இடப்புறம், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாகச் சிறிய சிலா ரூபமாகவுள்ளது.
கருவறைக் கோட்டத்தில் கோஷ்ட மூர்த்தங்களான விஷ்ணுதுர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன. பிராகாரத் தில் சண்டிகேசுவரருக்கு தனிச் சந்நிதியும், திருமாளப்பத்தி மண்டபத்தில் வடகிழக்கில் தெற்குநோக்கி பிரம்மனின் சிரம்கொய்த பைரவர், தொடர்ந்து ஏழு விநாயகர்கள் (வெவ்வேறு வகை மூர்த்தங்கள்), சூரியன்,
அமர்ந்த கோலத்தில் அர்த்தநாரீசுவரர், சந்திரன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இவற்றில் அர்த்தநாரீசுவரர் திருவுருவம் அற்புதமான கலையம்சம் கொண்டது.
இதர ஆலயங்களிலுள்ளதுபோல நின்ற கோலத்தில் இல்லாமல், ரிஷபத்தின் மேல் ஒரு கையை ஊன்றி அமர்ந்த கோலத்தில் காட்சியளிப்பது விசேஷமாகும். ஆண்பாதியில் காலைத் தொங்கவிட்டுக்கொண்டு ஒரு கரத்தில் மழு ஏந்தியவாறும், பெண் கோலத்தில் புடவை அணிந்து காலைக் குத்திட்டு அமர்ந்து அதன்மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றி தலையை சாய்த்தவாறும் காட்சிகொடுக்கும்விதம் அற்புதமான ஒன்றாகும்.
இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் இருந்துவரும் இவ்வாலயத் தில் தினசரி நான்குகால பூஜைகள் நடை பெறுகிறது.
தினசரி காலை 7.00 மணியிலிருந்து பகல் 12.00 வரையிலும்; மாலை 4.00 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலயத்தில் வழக்கமான உற்சவங்கள் தவிர சித்திரைமாதம் சப்தஸ்தான விழாவும், வைகாசி பிரம்மோற்சவமும், ஐப்பசி அன்னாபிஷேகமும், மார்கழி ஆருத்ரா தரிசனமும் பெருவிழாக்களாகும். இவ்வாலய நவகிரக மண்டபத்தில் இடம்பெற்றுள்ள சூரியன் தன் இரு மனைவிகளுடன் காட்சியருள்வது எத்தனை சிறப்போ,
அதுபோல வருடந்தோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் மாலை 5.45 மணிமுதல் 6.15 மணி வரை சூரியன் தன் பொன்னொ ளியை வீரட்டேஸ்வரர் திருமேனியின்மீது பொழிந்து சூரியபூஜை செய்வதும் சிறப்பான விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டத்தில், தஞ்சாவூர்லி திருவையாறு சாலையில், தஞ்சையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், திருவையாறிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை, சேலம், பெரம்பலூர், அரியலூர், ஜெயங் கொண்டம், தஞ்சை, திருச்சி ஆகிய ஊர்களிலிருந்து இவ்வாலயத்திற்கு நேரடி பேருந்து வசதியுள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் தஞ்சை மற்றும் அரியலூர்.