ஆலயம் என்கின்ற அடைவுக்குள் அகப்படாத ஆலயமாகத் திகழும், அற்புதங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும், அழகுமுத்து அய்யனார் மற்றும் அழகர் சித்தர் ஆலயத்தின் அருளையும், ஆளுமையும், சற்றே வருடி பார்க்கலாம் வாருங்கள்.
ஆலயம் என்றாலே பலிபீடம், கொடிமரம், கோமுகம், புஷ்கரணி, கருவறை என்று எண்ணில் அடங்கா நீண்டதொரு பட்டியலை கடந்தே ஆகவேண்டும்.
அப்படி ஒன்றுமே இல்லாமல் அருளை மட்டும் உருவங்களின் சாட்சியாக அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும் அழகு முத்தையனார் கோவில் புதுச்சேரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தென்னம்பாக்கம் என்கின்ற இடத்தில் தன்னை நிலைநிறுத்தி நீக்கமற அருள்பாலித்துக் கொண்டு இருக்கின்றார்.
500 ஆண்டுகளுக்குமுன்பு அகத்தியரின் சீடரில் ஒருவரான அழகர் சித்தர் என்பவர் இங்கு அமைந்திருந்த வீரனார் மற்றும் அழகுமுத்து அய்யனார் கோவிலை பராமரித்து வந்துள்ளார்.
அந்தசமயம் சுற்றுவட்ட கிராம மக்களுக்கு ஏற்படுகின்ற இன்னலை வீரனார் மற்றும் அய்யனாரின் அருள்கொண்டு தீர்த்து வந்துள்ளார்.
யாரையாவது பாம்பு கடித்திருந்தால் அவர்களுக்கு மருந்து கொடுத்து கடித்த பாம்பை அய்யனார் கோவிலை நோக்கி வரவைக்கும் ஆற்றல்பெற்றவராக அமைந்திருந்தார் என்று சான்றுகள் கூறுகின்றன.
அதோடு தேள் கடி மற்றும் வேறு வேறு விஷக் கடிகளுக்கும் அழகர் சித்தரின் மூலம் நிவர்த்தி கிடைத்துள்ளது என்று கூறப்படுகின்றது.
மனிதர்களின் வாழ்வில் குறைகள் என்று கூறக்கூடிய திருமணம், குழந்தை செல்வம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்து பிரச்சினைகளுக் கும் அழகரின் அருள்வாக்கு பெரும் பலன் அளித்துள்ளது.
மனித வாழ்வில் பெரும் குறையாக எண்ணக்கூடிய குழந்தைச் செல்வம் நிராகரிக்கப்பட்ட தம்பதியி னருக்கு மண்ணாலான சிலையை பரிகாரமாக அமைக்கக் கூறி அவரின் திருவாய்மொழி மலர்ந்துள்ளது.
இந்த வாக்கினை சிரமேற் கொண்ட பக்தர்கள் தங்களின் வேண்டுதலை ஐயனிடம் பிராது சீட்டுகளாக சமர்ப்பிக்க அதே வருடத்தில் வேண்டிய எண்ணம் நிறைவேறி நிம்மதியின் வசம் ஈர்க்கப்பட்டனர்.
அதன் நீட்சியாக மண்ணாலான குழந்தை சிலைகளை கோவிலை சுற்றி அமைக்க முற்பட்டனர்.
இது குழந்தை வரத்திற்காக மட்டுமல்லாமல் திருமணம், வேலை வாய்ப்பு, வீடு கட்டுதல் போன்றவற்றிற்கும் எந்தத் துறையில் தான் பணிக்கு செல்ல வேண்டுமோ அந்த துறை சார்ந்த சிலைகளையும், திருமணம் என்றால் பெண் மாப்பிள்ளை சிலைகளையும், வேண்டுதல் நிறைவேறிய பிறகு அமைக்கும் வழக்கம் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது.
இங்கு செல்லும் அனைவருக்கும் நிச்சயமாக கேட்கும் வரம் கிடைக்கும் என்பதற்கு ஒரே சாட்சி அங்கே புதர்கள் இடையிலேயும், மரங்களின் அடியிலேயும் ஆலயங்களை சுற்றியும் லட்சக்கணக்கில் அமைந்துள்ள மண் பொம்மைகளே சாட்சி மேலும் அருள்பாலித்த அழகர் சித்தர் இறையின் வேண்டுதலுக்கு இணங்க அங்கேயே அமைந்துள்ள ஒரு கிணற்றில் ஜலசமாதி அடைந்து இன்றும் சூட்சமமாக அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார்.
அந்த கிணற்றின்மேல் அமைக்கப்பட்டுள்ள திருநீறு ஈரம் காயாமல் இருப்பது இதற்கு ஒரு சாட்சியாக மலர்ந்து காட்சியளிக்கின்றது.
இத்தனை வரங்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகு முத்து ஐயனார் பூரணி, பொற்கலை, வீரனார் என்ற கூட்டோடு மேற்கூரை இல்லாமல் அகன்ற விழியோடும், அளவில்லா அருளோடும், கம்பீரமாக வாலேந்தி வான் முட்ட அமர்ந்திருக்கும் காட்சியைக் காண கண்கள் கோடி போதாது.
கையில் ஏந்தி உள்ள வாலில் நம் வேண்டுதல் களை பிராது சீட்டுகளாக கட்டும்பொழுது நிச்சயம் அரிவாளின் கூர்மை பதம் பார்த்து நமக்கு வாழ்வளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் வருகின்ற முதல் ஞாயிறுயன்று அழகு முத்தையனாருக்கு 100 மேளங்கள் மற்றும் 100 நாதஸ்வரங்கள் அமைத்து திருமணம் நடத்தப்படுகின்றது.
இந்தத் திருமணத்தில் திருமணமாகாத நபர்கள் கலந்துகொண்டு அருள் பெறும்பொழுது அந்த வருடமே அவர்களுக்கு திருமணம் நடந்து முடியும் என்பது ஐதீகம்.
செவ்வாயின் காரகமான சிவப்பு வண்ணத்தில் ஆஜானுபாகுவாக அமர்ந்து அரிவாள் ஏந்தி செல்பவரை வரவேற்கும் இமைகளோடு இமை மூடாமல் காத்திருக்கும் அழகு முத்து ஐயனாரை வழிபட்டு தங்களின் குறைகளை நிவர்த்திசெய்து கொள்ளலாம்.
இலுப்பை மரத்திற்கு இடையே அருள் கொடுக்கவே காத்திருக்கும் அண்ணலை தரிசிக்கச் சென்றுவாருங்கள்.