ஆண்டுகள் வருவதுண்டு; போவதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமை வதுண்டு. சென்ற ஆண்டு சிறப்பாய் இருந்தேன்.
அதுபோலவே இந்த ஆண்டும் அமைய வேண்டுமென்று நினைப்பவர்களுமுண்டு. சென்ற ஆண்டு பட்டதே போதுமடா சாமி...
இந்த ஆண்டாவது நிம்மதியாய் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுமுண்டு. ஒவ்வொரு வருடமும் வந்ததுபோலவே போய் விடுகிறது. இரவு விடிந்தால் பகல். பகல் முடிந்தால் இரவு. இப்படி ஒவ்வொரு நாளும் ஒருவாரமாகி, நான்கு வாரம் போனால் ஒரு மாதம், 12 மாதங்கள் போனால் ஒரு வருடம் என்று நாட்கள் நகர்ந்துகொண்டே செல்கின்றன. அதுவும் வேகமாகச் செல்கின்றன.
தமிழ்நாட்டில் பிறப்பதற்கு தவம் செய்திருக்கவேண்டும். தமிழன் என்று சொன்னாலே தனிப்பெருமையுண்டு. காரணம் எந்த மொழிக்கும் கடவுள் என்று இல்லை. ஆனால் தமிழ்மொழிக்கு மட்டும் "முருகன்'' என்ற கடவுள் மும்மூர்த்திகளாலும், முத்தேவிகளாலும் போற்றப்படுகின் றார். வேதத்திற்கு அர்த்தம் சொன்னவன் முருகன். "தமிழ்' என்றாலே தமிழ்மொழிமீது அளவற்ற அன்பு வைத்திருப்பவன் முருகன்.
ஞானம், வைராக்கியம் வலிமை, புகழ் செல்வம், தெய்வீக சக்தி என்று ஆறுமுகங் களைக் கொண்டவன் ஆறுமுகன் முருகன் தேவர்குலத்திற்கு தேவன் என்றால் தமிழர் குலத்திற்குத் தலைவன். தமிழை வளர்த்தவன்.
அருணகிரிநாதர் என்ற முருக பக்தரின் நாவால் வேலால் எழுதி "திருப்புகழ்' என்ற அற்புதமான தமிழ்ப் பாடல்களைப் பாடவைத்தவன் தமிழ் முருகன். நக்கீரன் என்ற பாண்டிய நாட்டுப்புலவன் பாடிய "திருமுருகாற்றுப்படை', குமர குருபரர் இயற்றிய "கலிவெண்பா' "பிள்ளைத்தமிழ்', பாம்பன் ஸ்வாமிகள் இயற்றிய "சண்முகக் கவசம்', தேவராய ஸ்வாமிகள் இயற்றிய "கந்த சஷ்டி கவசம்' போன்றவை முருகப் பெருமானைத் தமிழால் அர்ச்சிகப்பட்ட பாடலாகும். தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகள் நம் தமிழ் நாட்டிலேதான் அமைந்துள்ளன. அவை எல்லாம் திருமுகனின் புகழைப் பாடுகின்றன.
தமிழ் வருடப் பிறப்பன்று அதிகாலையிலே அந்த வீட்டிலுள்ள சுமங்கலிப் பெண்மணி படுக்கையைவிட்டு எழுந்து, காலைக் கடன்களை முடித்து, நீராடி, நெத்தியில் குங்குமிட்டு, புத்தாடை உடுத்தி, தலையில் பூச்சூடி, வள்ளி தெய்வாணையுடன்கூடிய முருகன் படத்தின்முன்பு குத்துவிளக்கேற்றி, முருகன் படத்திற்கு பூமாலை சூடி, சிவந்த மலர்களால் அர்ச்சித்து, பஞ்சாமிர்தத்தை நேவித்தம் செய்து, கற்பூர ஆர்த்தி காட்டி பூஜையை முடித்துக்கொள்ளவேண்டும்.
அப்போது வீட்டிலுள்ள அனைவரும் நீராடி, புத்தாடையுடுத்தி, நெற்றிக்கு திருநீறுபூசி பூஜையில் கலந்துகொள்ளவேண்டும். பிறகு அனைவரும் வீட்டிலுள்ள முதிய தம்பதியர்களை வணங்கி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறவேண்டும். அன்று மாலை வீட்டின் அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும்.
தமிழ் வருடப் பிறப்பன்று, தமிழ் முருகனைத்தான் வழிபடவேண்டும்.
அதோடுமட்டுமில்லாமல், தமிழ்வளர்த்த சான்றோர்களையும் நினைத்துப்பார்த்து வழிபடவேண்டும். திரு. உ.வே. சாமிநாத ஐயர், திருவள்ளுவர், கம்பர், ஔவையார், பாரதியார் போன்ற தமிழ் புலவர்கள், தமிழ் பேராசிரியர், ஆராய்ச்சியாளர்களையும் வணங்கி ஆசிபெறவேண்டும். தேவராம் பாடிய அப்பர், சுந்தரர் போன்ற அடியார்கள், திருமால் அடியார்களான ஆழ்வார்கள் பாடிய பாடலைப் பாடவேண்டும். இதுதவிர இன்னுமுள்ள தமிழ் கவிகளையும் நினைவு கூர்ந்து வழிபட்டு அவர்களின் ஆசியைப் பெறவேண்டும்.
பஞ்சாங்கப் படலம்
இந்த வருடம் "குரோதிவருடம்' என்ற தமிழ்ப்பெயரிலே சித்திரை மாதம் 1-ஆம் தேதி, அதாவது 14-4-24. அன்று அதிகாலை யிலேயே பிறக்கிறது. இந்த வருடத்திற்கு ராஜாவாக செவ்வாயும், மந்திரி, சேனாபதி யாக சனியும், தான்யாதிபதியாக சந்திரனும் விளங்குகின்றனர். மழையைப் பொருத்தவரை 10 பாகம் கடலிலும், 6 பாகம் மலைகளிலும், 4 பாகம் பூமியிலும் பொழிய வாய்ப்புள்ளது. இயற்கை சீற்றங்களும் இருக்கும்.
தமிழ் வருடப்பிறப்பன்று மாலையில் ஏதாவது ஒரு கோவிலில் அல்லது பொதுஇடங்களில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடவேண்டும். ஊர் தலைவரோ அல்லது அந்த ஊர் பெரியமனிதரோ அந்த ஆண்டுக்குரிய பஞ்சாகத்தைப் படிக்கவேண்டும். அதேக் கோவிலாக இருந்தால் அந்தக் கோவில் குருக்களோ அல்லது அர்ச்சகரோ பஞ்சாங்கதைப் படிக்க வேண்டும். பொதுவாக பஞ்சாங்கத்தில் நாள், திதி, வாரம், நட்சத்திரம், ராசி, மாதம், யோகம், சாரம், திசை போன்ற விவரங்களும், இறைவனடியார்கள், ஆழ்வார்கள் அவதாரம், அவ்வப்போது வரும் விசேஷ பண்டிகைகள், உற்சவங்கள், திருமணப் பொருத்தங்கள், காலங்கள், கிரணங்கள் என்று வகைவகையாகப் பிரித்து சொல்லப்பட்டிருக்கும். இவைகளை யெல்லாம் படித்து அனைத்து விவரங் களையும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதே.
"பஞ்சாங்கப்படனம்' என்று கூறுவார்கள். இதை ஒவ்வொரு வருடமும் சித்திரை வருஷப்பிறப்பன்று வாசித்து சொல்ல வேண்டும். முதலாவதாக பஞ்சாங்கம் வாங்கியவுடன் அதில் அவரவர்கள் பெற்றோர் களின் திதியை எப்போது என்று குறித்துக் கொள்ளவேண்டும்.
அறுபது படிக்கட்டுகளைக்கொண்ட "சுவாமி மலை' தலம், அறுபது தமிழ் ஆண்டுகளைக் குறிக்கிறது.
பன்னிரண்டு படிக்கட்டுக்களைக் கொண்ட 'திருக்காவலூர்' கோவில் 12 மாதங்களைக் குறிக்கிறது.
365 படிக்கட்டுகளைக்கொண்ட திருத் தணிதலம் ஒருவருடத்தின் 365 நாட்களைக் குறிக்கிறது.
-எனவே தமிழ்வருடம் என்பது முழுக்க முழுக்க முருகனிடமே உள்ளது என்பதால் தமிழ் வருடப் பிறப்பன்று முருகனை வழிபடுவோம்.