தமிழ்நாட்டில் அத்வைதத்தை வளர்த்ததில் தனிப்பெருமை கொண்டவர்- வெகுஜன வேதாந்தம் பரப்பியவரில் முதன்மைப் பங்குவகித்தவர் தத்துவராயர் ஆவார். ஏனெனில், அத்வைதத்தினை வடமொழியின் துணைக்கொண்டு ஓதியுணர வேண்டுமேயொழிய, நாட்டு மொழிகளின்மூலம் உணரலாகாது என்ற கொள்கை இருந்தது. தத்துவராயர் வருகைக்குப்பின்பு, தமிழ்நாட்டில் ஒரு உயர்குடி வர்க்கத்தில் மட்டுமே இருந்த அத்வைதத்தினை பெரும்பாலான சாதாரண மக்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தவர் தத்துவராயர்.
பிறப்பும் ஞானமும்
சுமார் 720 ஆண்டுக்குமுன், தமிழ்நாட்டின் தொண்டைநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, மலைநாடு, துளுவநாடு என்பவற்றுள் ஒன்றாகிய மகதநாடு (அ) நடுநாட்டில் வீரைமா நகரில், தமிழ் மக்கள் செய்த தவப்பயனாக வைதிக சைவ பிராமண வருணத்தில் அவதரித்தார்.
தாய்மாமன், மருமகன் என்கிற உறவைக் கொண்டவர்கள் சொரூபானந் தர் மற்றும் தத்துவராயர். அவ்விருவரும் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்கள். மிகச்சிறந்த பிரம்மச்சாரி களாக இருந்து வேதாந்த சாஸ்திரம் யாவையும் படித்து, ஐயம்திரிபற அவற்றின் பொருளை ஆராய்ந்து தத்துவப் பரிசீலனை செய்துவந்தார்கள்.
சொரூபமாக இருந்து தத்துவத்தை வழிநடத்தியதால் சொரூபானந்தர் என்றும், தத்துவ விசாரம் செய்து வழிநடத்தியதால் தத்துவராயர் என்றும் காரணப் பெயர்களாக வழங்கலாயிற்று.
இவர்கள் தக்க குருவைத் தேடிச் சென்று, யாருக்கு முதலில் தக்க குரு வாய்க்கிறதோ, அந்த குருவிடத்தில் கற்ற வித்தையை மற்றவருக்கு ஆசிரியராக இருந்து கற்றுக்கொடுக்கலாம் என தீர்மானித்து இருவரும் இரு திசைகளாகப் பிரிந்துசென்றனர்.
தென்திசையை நோக்கி சொரூபானந்தரும், வடதிசையை நோக்கி தத்துவராயரும் சென்று பல மலை, நதி மற்றும் புராதான இடங்களில் அலைந்தனர்.
சொரூபானந்தர் காவேரி நதிதீரத்தில் திருச்சி, சமயபுரம் கடந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில், திருப்பைஞ்ஞீலி- திருவெள்ளறைக்கு நடுவில் கோவர்த்தனம் அருகே சென்றபோது, தனது உடம்பு முழுவதும் வியர்க்க வும், நா தழுதழுக்கவும், கண்களில் நீர் பெருகவும் கண்டு, தக்க குரு இந்த இடத்தில் இருப்பதாக உணர்ந்துகொண்டார்.
சொரூபானந்தர் ஊர்க்காரர்களிடத்தில், "இந்த ஊரில் பெரியவர் யாரும் இருக்கிறாரா' என்று விசாரிக்க, அவர் கள், "நாணல் புதர்க் காட்டில் பெரியவர் ஒருவர் இருக்கிறார்.
அவரது பெயர் சிவப்பிரகாச சுவாமி, திருவாரூரைச் சேர்ந்தவர்' என்று கூறினர். சொரூபானந் தர் அப்பெரியவரைக் கண்டு வணங்க, "உன் வருகைக்காகவே காத்தி ருக்கிறேன்' என்று சொல்லி, சொரூபானந் தருக்கு அனுக்கிரகம் வழங்கி சீடராக சேர்த்துக்கொண்டார்.
வடக்கு நோக்கிச் சென்ற தத்துவராயர் பலமொழி, பலதேசம், பல இஸ்லாமிய சூபி மார்க்கங்கள் உட்பட கண்டும், தக்க குரு கிடைக்காமல் மறுபடியும் தென்னாடு நோக்கி தனது மாமன் சொரூபானந்தரைக் காணத் திரும்பிவிட்டார். குரு அனுக்கிரகம் அடைந்துவிட்ட சொரூபானந்தர் கற்ற வித்தையைத் தத்துவராயருக்கு சொல்லிக் கொடுக்க சம்மதித்தார்.
இலக்கிய வாழ்க்கை
சொல்லிக் கொடுக்க சொரூபானந்தர் சம்மதித்தாலும், தத்துவராயருக்கு சில பக்குவம் அடையும்வரை பொறுமைகாக்க வேண்டினார். அதற்கு சில பரிசோதனைகளையும் நடத்தினார்.
இதையறியாத தத்துவராயர் மனவேதனையடைந்து, தாரைதாரையாய் கண்ணிர் பெருகி, தனது குருமீதும், குருவினுடைய குருமீதும் உருகியுருகி துதிப்பாடல்களாக சிவப்பிரகாச வெண்பா, திருத்தாலாட்டு, பிள்ளைத் திருநாமம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலிப்பா, சிலேடையுலா, கலிமடல், அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப் பரணி போன்ற சிற்றிலக்கிய வடிவில் பிரபந்தங்களைப் பாடிக் குவித்தார்.
இவ்வளவுக்குப் பிறகும் குருவின் அனுக் கிரகம் கிடைக்காத விரக்தியில், பாடுதுறை யில் திருவடி மாலையைப் பாடிக்கொண்டே இறக் கப்போகும் வேளையில் சொரூபானந்தருக்கு மற்ற சீடர்கள்மூலம் தத்துவராயர் குறித்தான தகவல் போய்ச்சேர்ந்தது. சொருபானந்தர் தத்துவ ராயரை வந்து சந்திக்கும் படி கூறியனுப்பினார்.
தத்துவராயர், "என்னை வரச்சொல்லி கட்டளை யிட்டாரே' என்ற பேரானந்தத்தில் போற்றி மாலை, புகழ்ச்சி மாலை, திருவருட்கழன் மாலை முதலானவற்றைப் படித்துக் கொண்டே குருவை வந்தடைந்தார்.
"இதுவரை படித்துவந்த துதிமாலைகள் அனைத்தும் சாஸ்திரம் மிகவும் கற்றவர்களுக்கும், உனக்குமே உதவுமேயன்றி சாதாரண மக்களுக்கு உதவாது. உலகுக்கு உதவும்வகையில் பாடுக' என குரு வேண்டினார். மோகவதை பரணியில் ஒரு படலமாக சசிவண்ண போதம் பாடி குருவிடம் சமர்ப்பித்தார். அதைக்கண்டு குரு மகிழ்ந்தார். இந்த சசிவண்ண போதம் நூலே தமிழ்நாட்டில் வேதாந்தம் கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அடிப்படையாகக் கற்கும் நூலாகும்.
தத்துவராயர் 18 மரபுவகை சிற்றிலக்கியங் களில் பாடியவர். பாடுதுறையில் 138 தலைப்பு களில் 1,140 பாடல்கள் அருளியவர். இப்பாடல்களில் அன்றைய தமிழ்நாட்டு நாட்டுப்புற விளையாட்டுகள், இசைக் கருவிகள், கூத்து வகைகள், சாதிப் பெயரில் பாடல் வகைகள், இலக்கிய வகைகள் ஆகிய அனைத்தையும் பொதுமக்களின் மரபிலிருந்தும், வாய்மொழி வழக்காறுகளிலிருந்தும் பாடல் வடிவமாக வேதாந்தத்தைக் கொண்டுசென்றவர் தத்துவராயர். சங்கீர்த் தன முறையில் நாமசங்கீர்த்தனம், சிவசிவ, சரணம் சரணம், நமோநம போன்ற ஈற்றடிச் சொல் வருமாறு அமைந்த இவரது சில பாடல்கள் இசைத்தன்மையில் பஜனை மரபு தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தன.
வள்ளலார் பார்வையில் தத்துவராயர்
தத்துவராயர் "சுத்த தேக ஸித்தி' எனும் சித்து முறையைக் கைக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், இராமலிங்க வள்ளல் பெருமான் தத்துவராயரைத் தமது ஞான குருவாக ஏற்று, அவரிடத்தில் சூட்சுமமாகப் பல வித்தைகளை- குறிப்பாக ஒளிதேகம் பெறும் வித்தையை அறிந்ததாக நம்பப்படுகிறது.
வள்ளலாரும் தனது "திருவருட்பாவில்' "சைவ சமயத்தைப் பின்பற்றும் மகான்கள் யாரும் இதுவரை துரியாதீதம் என்பதை அறவே அடையவில்லை' என்பதை எடுத்தியம்புகிறார். எனினும் துரியம்வரை ஒருவாறு அடைந்துவிட்ட தத்துவராயரை வள்ளலார் "மகான்' என்று போற்றுகிறார். மேலும் வள்ளலார் தனது திருவருட்பா உரைநடை பகுதியில் "மனித தேகத்தில் வாழ்ந்த கடவுள் தத்துவராயர்' என்று குறிப்பிட்டுள்ளார். சுத்த தேக ஸித்தி என அழைக்கபடும் ஒளி வடிவில் மறைந்த மகான்கள் இருவரில் ஒருவர் தத்துவராயர்; மற்றொருவர் வள்ளலார்.
வள்ளலார் அகவலில் குரு யார் என்பதை சுட்டிக் காட்டுகின்றார். "மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதி' (அகவல்) என்று கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கதாகும்.
தத்துவராயரின் ஜீவசமாதி
விருத்தாசலத்திற்கும் சிதம்பரத்திற்கும் இடையில் சேத்தியாதோப்பு கூட்டு சாலை அருகேயுள்ள எறும்பூதூர் அருகே காட்டுக்குள் தத்துவராயர் சமாதிக் கோவில் சிதிலமடைந்து, கள்ளிப் புதருக்குள் மறைந் திருந்தது. முதன்முதலில் ஜீவசமாதியைக் கண்டறிந்து 1895 வாக்கில் கோவில் எழுப்ப முயற்சியெடுத்தவர் சிதம்பரம் கோவிலூர் மடாதிபதி பொன்னம்பலம் சுவாமிகள்.
முக்கிய விழா
தத்துவராயர் ஆடி மாதம் சதய நட்சத்திரத் தன்று எறும்பூர் என்ற இடத்தில் சமாதியடைந் தார். எறும்பூர் தத்துவராயர் கோவிலில் ஒவ்வொரு ஆடி சதயத்தன்றும் அவருக்கு குருபூஜை நடைபெறுகிறது.