நம் முன்னோர்கள் யுகங்களை கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்காகப் பிரித்துள்ளனர்.
சுவேத வராக கல்பத்தில், வைவஸ்வத மன்வந்தரத்தில், இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில், திரேதாயுகத்தின் முடிவில் வால்மீகி முனிவர் வாழ்ந்துவந்தார்.
ஒருநாள் வால்மீகி முனிவரின் ஆசிரமத் திற்கு நாரதர் வந்தார். அவரை வரவேற்ற வால்மீகி, "ஒரே மனிதனிடத்தில் அனைத்து நற்குணங்களும் அமையப் பெறுமா? அவ்விதம் எல்லா நற்குணங்களும் பொருந்தியிருக்கும் மனிதர் எவரேனும் இருப்பின் கூறுங்கள்'' என வினவினார்.
இதனைக்கேட்ட நாரதர் மிக மகிழ்ந்து, "நீர் வினவியபடி அனைத்துவித தன்மை களும் அமையப்பெற்ற பரமபுருஷர் ஒருவர் உள்ளார். சூரிய குலத்தில், இட்சுவாகு எனும் மரபைச் சேர்ந்த இராமனே அவர். தர்மத்தை பூரணமாக அறிந்தவர். அவர் அயோத்தியை ஆட்சிசெய்து வருகிறார்'' எனக்கூறி, இராமரின் வரலாற்றை விரிவாகக் கூறினார். பின் விடைபெற்றுச் சென்றார்.
நாரதர் சென்றபின் வால்மீகி முனிவர், தன் மாணவர் பரத்வாஜரை அழைத்துக் கொண்டு தமசி என்னும் நதியில் நீராடச் சென்றார்.
வால்மீகி தன் மனதை ஒருமுகப்படுத்த, காட்டில் சற்று நேரம் நடந்தார். அந்தக் காட்டில் இரண்டு அன்றில் பறவைகள் ஆணும் பெண்ணுமாக விளையாடிக் கொண்டிருந்தன. அங்குவந்த ஒரு வேடன் ஆண் பறவையைத் தன் அம்பால் கொன்று விட்டான். இதைப்பார்த்த அந்தப் பெண் பறவை அலறித் துடித்தது.
இதனைக்கண்டு கோபமுற்ற வால்மீகி அந்த வேடனை சபித்துவிட்டார். சற்று நேரம் சென்றபின் முனிவருக்கு, "தவம் செய்யும் நானே கோபத்தின் வசப்பட்டு சாபம் கொடுத்துவிட்டேனே' என மிக வருந்தினார்.
பின் தான் சபித்த வார்த்தைகளை எண்ணியபடியே ஆற்றுக்கு வந்தார். அவர் அந்த சாபத்தை யோசித்தபோது, அது நான்கு பாதங்களை உடையதாகவும், ஒவ்வொரு பாதத்திலும் சம எண்ணிக்கையுள்ள எழுத்துகளை உடையதாகவும், இசையுடன் பாடத்தக்கதாகவும், பாடல் வடிவம் உடையதாகவும் இருந்தது. இதனை உணர்ந்த வால்மீகி, தனது மாணாக்கர் பரத்வாஜரிடம் கூற, அவரும் அதனை அழகாக பாடிக் காட்டினார். இந்த வார்த்தைகள் வால்மீகி முனிவரின் மனதிலும் புத்தியிலும் சுழன்று சுழன்று ஆக்கிரமித்தது.
இந்நேரத்தில், முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த பிரம்மதேவர், "மகரிஷியே, வீண் கவலை வேண்டாம். நீர் சபித்த வார்த்தைகள் பாடல் வடிவம் தாங்கி அமைவதற்கு நானே காரணம். நீர் இராமன் வரலாற்றை எழுதவேண்டுமென்ற எண்ணப்படி உன் நாவில் சரஸ்வதிதேவி நின்று அந்த சுலோகத்தைத் தோற்றுவித்தாள். எனவே நாரதர் கூறிய இராமர் வரலாற்றை இவ்வித சுலோகங்களால் விரிவாகப் பாடு. அது உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்'' எனக்கூறி பிரம்மதேவர் மறைந்தார்.
அதன்படி வால்மீகி, "மாநிஷாத' எனத் தொடங்கும் பாடலை அர்த்தம், பதம், சந்தம், எழுத்துப் பொருத்தம் ஆகியன உடைய சுலோகங்களாகப் பாடத் தொடங்கினார்.
ஒவ்வொரு மனிதனின் மூளையுள்ளும் ஓர் உயரிய மனிதப் பண்பு உறங்கிக்கிடக்கிறது. ஏதேனும் ஒரு நிகழ்வின்மூலம் அது விழித்துக்கொள்கிறது. அது விழித்தபின்னர் அந்த மனிதரால் ஒரு சரித்திரமே படைக்க முடிகிறது. ஒரு அன்றில் பறவையின் மரணமும், அதன் இணையின் பரிதவிப்பும், வேடனுக்கு இட்ட சாபமும் இணைந்து சுலோகங்களாக மாறி, இராமாயண காவியமே தோன்றியது.