வேகமாக செல்லக்கூடிய தூதர்கள், இராமனு டைய ஆணைப்படி, வழியில் எங்கும் தங்காமல் வெகுவிரைவாக மதுராபுரி நோக்கிச் சென்றார்கள்.
அவர்கள், இரவு- பகலாக மூன்று நாள்கள் பயணம்செய்து மதுரையை அடைந்தார்கள். சத்ருக்னனைச் சந்தித்து, அயோத்தியில் நிகழ்ந்த எல்லாவற்றையும் நடந்தவாறே விவரித்தார்கள்.
இராமனுடைய வாக்குறுதி, லட்சுமணனைத் துறத்தல், இரு குமாரர்களுக்கும் பட்டாபிஷேகம், குடிமக்கள் இராமனுடன் செல்லும் தீர்மானம் ஆகிய எல்லாவற்றையும் எடுத்துரைத்தார்கள்.
பேரறிஞரான இராமன், விந்தியமலை அடிவாரத்தில் குசாவதி என்னும் அழகான நகரத்தை நிர்மாணித்து, குசனின் தலைநகராக்கி னார். அதேபோல், சிராவஸ்தி என்னும் எழில் மிக்க நகரத்தை லவனின் தலைநகராக்கினார்.
தேர்வீரர்களான பரதனும் இராமனும், அயோத்தியைக் காலி செய்துவிட்டு, நகரமக்கள் அனைவரோடும்கூட தேவலோகம் செல்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள்.
இவ்வாறு, நிகழ்ந்த எல்லாவற்றையும் மகாத்மாவான சத்ருக்னனிடம் தெரிவித்துவிட்டு, "மன்னனே! விரைவாகப் புறப்படுங்கள்'' என்று தூண்டிவிட்டார்கள்.
தன்னுடைய பரம்பரைக்குப் பயங்கரமான அழிவு நேரவிருப்பதைக் கேட்டறிந்த சத்ருக்னன், எல்லா மக்களையும், காஞ்சனர் என்ற பெயருள்ள புரோகிதரையும் அழைப்பித்து, தூதர்களிடமிருந்து தான் கேட்ட எல்லா விவரங் களையும் கூறினான்.
மற்ற சகோதரர்களோடு, தானும் உடலைத் தியாகம் செய்யவிருப்பதையும் சொன்னான். பிறகு, தன் இரு குமாரர்களுக்கும் பட்டாபிஷேகம் செய்வித்தான்.
சுபாகு (என்ற மைந்தன்) மதுரை அரசைப் பெற்றான்; சத்ருகாதி (என்ற புதல்வன்) விதிசா என்ற பகுதியை அடைந்தான். மதுரையின் படை களை இரு பிரிவுகளாகப் பிரித்து, சத்ருக்னன் தன் இரு புதல்வர்களுக்கும் சமமாகக் கொடுத்தான். மேலும், பாகப்பிரிவினை செய்யக்கூடிய செல்வங் களைச் சமமாகப் பிரித்துக் கொடுத்தான். இவ்வாறாக, சுபாகுவை மதுரையிலும், சத்ருகாதியை விதிசா நாட்டிலும் சத்ருக்னன் நிலைநிறுத்தினான்.
அவ்வாறு ஆட்சியை உறுதிசெய்துவிட்டு. ஒரு தேரில் ஏறி, தன்னந்தனியனாக அயோத்திக்குச் சென்றான்.
அழிவற்ற முனிவர்களோடு வீற்றிருந்த ஒப்புயர்வில்லாத இராமன், மிகவுயர்ந்த பட்டாடை அணிந்து, தன் உள்ளொளியால் ஒளிவீசிக் கொண்டி ருப்பதையும் கண்டான்.
கலன்களைத் தன்வசத்தில் வைத்திருந்த அவன் இராமனை வணங்கிவிட்டு, கைகளைக் கூப்பிக்கொண்டான். அறம் அறிந்தவரான இராமனை நோக்கி, அறவழியில் சிந்தனை செலுத்தும் சத்ருக்னன் சொல்லலுற்றான்.
"ரகு குலத்தின் ஆனந்தக் களஞ்சியமே! என் இரண்டு புதல்வர்களுக்கும் பட்டாபிஷேகம் செய்வித்து, ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டேன். மன்னரே! தங்களுடன் கூடவே செல்வது என்ற முடிவுடன் நான் வந்திருக்கிறேன்.
வீரரே! அதனால், வேறுவிதமாக ஆணையிட்டு என்னைத் தண்டித்து விடாதீர்கள். என் கோரிக்கையின் அங்கீகாரத்தையே எதிர்பார்க்கிறேன். தங்களைப் போன்றவர்கள் எப்போதும் பேரருள் செய்பவர்கள் அல்லவா?'' சத்ருக்னனுடைய உறுதியான தீர்மானத் தைப் புரிந்துகொண்ட இராமன், "அவ்வாறே ஆகுக'' என்று பதில் கூறினார்.
இவ்வாறு, அவர் சொல்லி முடித்ததும், இஷ்டம்போல் உருவம் எடுக்கக்கூடிய வானரர்கள், கரடிகள், அரக்கர்கள் முதலியோர் சுக்ரீவனை முன்னிட்டுக் கொண்டு ஏராளமாக வந்துசேர்ந்தார்கள்.
விண்ணுலகம் செல்வதற்கு ஆயத்தமாக நிற்கும் இராமபிரானைத் தரிசனம் செய்வதற் காக தேவகுமாரர்கள், முனிகுமாரர்கள், கந்தர் வர்களின் குமாரர்கள் அங்கு வந்திருந்தார்கள்.
இராமபிரானின் லீலை நிறைவடைந்து விட்டதை அறிந்துகொண்ட அவர்கள், அப்போது அங்கே கூடிநின்று இராமனை வணங்கினார்கள். எல்லா வானரர்களும் அரக் கர்களும் (பின்வருமாறு) கூறினார்கள்.
"மாமன்னரே! புருஷோத்தமரே! தங்களைப் பின்தொடர்ந்து செல்வது என்ற நிச்சயத்துடன் நாங்கள் வந்திருக் கிறோம். நாங்கள் இல்லாமல் தாங்கள் செல்வது என்று நிச்சயித்தால், யமதண்டத் தினால் தாக்கப்பட்டு தரையில் சாய்க்கப் பட்டவர்கள்போல் ஆவோம்.'' அவர்கள் இவ்வாறு கூறியதும். இராமன் சற்றே புன்னகைத்து, "உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்'' என்று கூறினார்.
இதனிடையில், மகாபலசாலியான சுக்ரீவன் இராமனை முறைப்படி வணங்கி, ஏதோ விண்ணப்பித்துக்கொள்ளத் துடித்தான்.
"பெருந்தகையாளரே! வீரனான அங்க
தனுக்குப் பட்டம் சூட்டிவிட்டேன். தங்க
ளுடனே செல்லும் உறுதியுடன் வந்திருக் கிறேன்.''
பிறருக்கு ஆனந்தம் அளிப்பவர்களில் மிகச்சிறந்தவரான இராமன், வானர மன்னனுடன் இருக்கும் நட்பை நினைவிற்கொண்டு, "சுக்ரீவனே! நண்பனே! கேள், நீ இல்லாமல், தேவலோகமோ அல்லது பரமபதமோ அல்லது வேறு உயர்ந்த இடத்திற்கோ போகவே மாட்டேன்!''
பெரும்புகழ்கொண்ட இராமன், அரக்கர் தலைவனான விபீஷணனை நோக்கிக் கூறினார். "விபீஷணா! உலகில் மக்கள் எதுவரை உயிர்வாழ்கிறார்களோ, அவ்வளவு காலம்வரை இலங்கையில் உடலுடன் இருக்கப் போகிறாய்.
உலகில் சூரியன்- சந்திரர்கள் இருக்கும் நாள்வரை, என் வரலாறு உலகில் நின்று நிலவும் காலம்வரை நீ இங்கு இருப்பாய். நான், நட்பு முறையில் இவையனைத்தையும் கூறியுள்ளேன். என்னுடைய ஆணைப்படியே நீ நடக்கவேண்டும்.
அறநெறி வழுவாமல் குடிமக்களைக் காப்பாற்று. பேரறிவாளனே! அரக்கர் மன்னனே! நான், மேலும் ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன்.
இஷ்வாகு மரபினரின் குலதேவதை யான பகவான் ஜெகன்நாதனை வழிபட்டு வருவாயாக. எல்லா தேவதைகளாலும் இந்திரனாலும்கூட, அவர் எப்போதும் ஆராதிக்கத்தக்கவர்.''
அரக்கத் தலைவர்களுக்கெல்லாம் மன்னனான விபீஷணன், இராமனுடைய ஆணையை ஏற்றுக்கொண்டான். இராமனு டைய ஆணையை மனதில் பதித்துக் கொண்டான்.
அவனிடம் (விபீஷணனிடம்) மேற்கண்ட வாறு கூறிவிட்டு, (இராமன்) அனுமானை நோக்கி, "நீண்ட நெடுங்காலம் இவ்வுலகில் வாழவேண்டும் என்று நிச்சயம் செய்திருக்கி றாய். அந்தச் சொல்லை அழித்துவிடாதே.
என்னுடைய கதைகள் எவ்வளவு காலம்வரை உலகில் பேசப்படுகின்றனவோ, அவ்வளவு காலம் என் கட்டளையை நினைவிற் கொண்டு, மன நிறைவுடன் இன்பமாக இரு.
மகாத்மா இராமன் இவ்வாறு கூறியதும், மிகவும் மகிழ்ச்சியடைந்த அனுமான், பின்வருமாறு விண்ணபித்துக்கொண்டார்.
"புனிதமான தங்கள் கதை இவ்வுலகில் எதுவரை பேசப்படுகிறதோ, அதுவரை, தங்கள் கட்டளையை நினைவிற்கொண்டு மண்ணுலகிலிருந்து கொண்டிருப்பேன்.''
பின்னர், பிரம்மாவின் புதல்வரும் முதியவருமான ஜாம்பவான் மற்றும் மைந்தன்- த்விவிதனை நோக்கி, "நீங்கள் ஐவரும் (ஜாம்பவான், விபீஷணன், அனுமான், மைந்தன். த்விவிதன்) கலியுகம் தோன்றும் வரையில் இங்கே இருப்பீர்களாக'' என்று கூறினார் இராமன்.
அவர்களிடம் இவ்வாறு கூறிவிட்டு, அங்கு கூடியிருந்த கரடிகளையும் வானரர் களையும் பார்த்து. "நீங்கள் விரும்பியபடி என்னுடன் வரலாம்'' என்று காகுத்தர் கூறினார்.
109-ஆவது சர்க்கம் இராமன் திருநாட்டுக்குப் புறப்படுதல்
இரவு கழிந்து, பொழுது விடிந்ததும் விசாலமான மார்பினை உடையவரும் பெரும் கீர்த்தி பெற்றவரும், தாமரைக் கண்ணருமான இராமன், புரோகிதரிடம் (பின்வருமாறு) கூறினார். "கொழுந்துவிட்டெரியும் என்னுடைய அக்னிஹோத்ர குண்டம், வேதவித்தகர்களுடன் முன்னே செல்வதாக திருநாட்டுக்கு எழுந்தருளும் இந்த யாத்திரையில், வாஜபேய யாகத்தின்போது நிறுவப்பட்ட அழகான குடையும் உடன் வரவேண்டும்.''
அவர் இவ்வாறு கூறியவுடன் தவப்பொலிவுடன் விளங்கும் வசிஷ்டர், மகாபிரஸ்தான (நெடுந்தொலைவுப் பயணம்) காலத்தில் செய்யவேண்டிய வைதிகச் சடங்குகள் அனைத் தையும் முழுமையாகச் செய்துமுடித்தார்.
பின்னர் இராமன், சூட்சுமமான ஆடை அணிந்துகொண்டு, இரு கைகளிலும் குசம் என்ற தர்பத்தை ஏந்திக்கொண்டு, பரப்பிரும்ம விளக்கமான வேதமந்திரங்களை உச்சரித்துக்கொண்டு, சரயு நதிக்கரைக்குச் சென்றார்.
அந்தச் சமயம், வேத மந்திரங்களைத் தவிர வேறு எந்த ஒரு சொல்லையும் பேசவில்லை; பாதையில் நடந்துசெல்வது என்பதைத் தவிர வேறு ஒரு செயலையும் செய்யவில்லை. உலக சுகத்தைத் துறந்து, கதிரொளி வீசும் சூரியனைப்போல் பிரகாசித்துக்கொண்டு, தன் இருப்பிடத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.
இராமனுடைய வலதுபுறத்தில் கையில் தாமரைமலர் தாங்கிய ஸ்ரீதேவியும், இடது புறத்தில் பூதேவியும், முன்புறத்தில் அழிவு சக்தியும் சென்றார்கள்.
பலவகையான அம்புகள், விசாலமான விற்கள், மற்ற ஆயுதங்கள் எல்லாம் ஆண் உருவம் ஏற்று பகவானுடன் சென்றார்கள், (சென்றன).
அந்தணர் வடிவமேற்றுக்கொண்டு நான்கு வேதங்களும். எல்லாரையும் காப்பாற்றும் காயத்ரிதேவி, ஓங்காரம் வஷட்காரம் ஆகியவையும் இராமனுடன் சென்றன.
மகாத்மாக்களான முனிவர்கள், எல்லா வேதவித்தகர்கள், திறந்து வைக்கப்பட்ட வைகுண்ட வாசலைப் போன்ற இராமனுடன் சென்றார்கள்.
அந்தப்புரத்திலிருந்த பெண்மணிகள், வயோதிக மாதர்கள், இளம்பெண்கள், வேலைக்காரிகள், திருநங்கைகள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் இராமனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
சத்ருக்னனோடுகூட அந்தப்புரப் பெண்மணிகளுடன், இராமன் செல்லும் வழியில், தன் அக்னிஹோத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றான் பரதன்.
மகாமனஸ்விகளான அவர்கள் எல்லாரும் தத்தம் அக்னிஹோத்ரம், மனைவி- மைந்தர் கள் உடன்வர, பேரறிவாளரான இராமனைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
எல்லா அமைச்சர்களும், பணியாளர் களும் தத்தம் புதல்வர்கள், பசுக்கள், உறவினர்கள் மற்றும் தம்மைச் சார்ந்து இருப்பவர்களோடுகூட, மிக்க மகிழ்ச்சியுடன் இராமனுக்குப் பின்னால் சென்றார்கள்.
மனவளமும் உடல்வளமும் பெற்ற மனிதர்கள் நிறைந்த அக்கூட்டத்தில், இராமனுடைய இனிய குணங்களால் வசீகரிக்கப்பட்ட மற்றப் பிராணிகளும், அந்த நெடும்பயணத்தில் சேர்ந்துகொண்டன.
அந்தப் பயணத்தில் சென்றுகொண்டிருந்த ஆண்களும்- பெண்களும், பறவை- விலங்கு- வாகனங்களும் பாவங்கள் அற்றவர்களாக மனக்களிப்புடன் இராமனைப் பின் தொடர்ந்தார்கள்.
மகிழ்ச்சியும் தெம்புமுடைய எல்லா வானரர்களும் நீராடிவிட்டு, இயல்பான களிப்புமிக்க "கிலகில சப்தத்தை எழுப்பிக்கொண்டு இராமனையே நினைத் துக்கொண்டு சென்றார்கள். அந்தப் பயணத்தில் பங்கு கொண்டவர்களில் மனம் நொந்தவர்களோ, புண்பட்டவர்களோ ஒருவர்கூட இல்லை. எல்லாரும் அற்புதமான முறையில் குறைவில்லாத மகிழ்ச்சியை அடைந்து உடன் சென்றார்கள்.
புறநகர்ப் பகுதியிலிருந்து, இராமனுடைய நெடும்பயணத்தைக் காண வந்தவன், அவரைக் கண்டதும், அவனும் மகிழ்ச்சியோடு விண்ணுலகம் செல்வதற்காக, அவரைப் பின் தொடர்ந்தான். கரடி- வானர- அரக்கர்களும், நகரமக்களும் மிகவும் பக்தியோடுகூட, மனத்தை ஒருநிலைப்படுத்தி, இராம பிரபுவைப் பின்தொடர்ந்தார்கள்.
அயோத்தி நகரத்தில், கண்களுக்குப் புலப்படாமல் வசித்துக்கொண்டிருந்த பூதங்களும், வைகுண்டம் செல்லும் பேராவலுடன் இராமன் பின்னே சென்றன.
சராசரப் பிராணிகளில், எவையெவை இராமன் செல்வதைப் பார்த்தனவோ, அவைகளும் இராம யாத்திரையில் சேர்ந்து கொண்டன.
அப்போது அயோத்தியில், உயிர்மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு பிராணி எதுவுமில்லை. (உயிர் பெற்றிருந்த எல்லாப் பிராணிகளும் இராமனுடன் சென்று விட்டன.) விலங்கினங்களாக இருந்த பிராணி களும் இராமனிடம் பக்திகொண்டு அவருடன் சென்றுவிட்டன.
110-ஆவது சர்க்கம் இராமன் பரமபதம் எழுந்தருளல்
அயோத்தியிலிருந்து ஒன்றரை யோஜனை தூரம் மேற்கு நோக்கிச் சென்றதும், புனிதப்படுத்தும் நீர்ப்பெருக்கையுடைய சரயூ நதியைக் கண்டார் இராமன்.
சரயூ நதியில் எல்லாப் பக்கங்களிலும் நீர்ச்சுழல்கள் காணப்பட்டன. நாலா திசைகளிலும் சுற்றிப் பார்த்துவிட்டு. ஒரு நல்ல இடத்தைப் பார்த்து (தேர்வு செய்து), எல்லா மக்களோடும் இராமன் அவ்விடம் வந்துசேர்ந்தார்.
அதே நேரத்தில், அனைத்து உலகப் பிதா மகரான பிரம்மதேவர், எல்லா தேவர் களாலும் மகாத்மாக்களான முனிவர்களாலும் புடைசூழப்பட்டவராக, சுவர்க்கம் செல்வதற்கு ஏற்ற இடமாக, எந்த இடத்தை இராமன் தீர்மானித்திருந்தாரோ, அந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார்.
தெய்விகமான நூறு கோடி விமானங் களால் நிரப்பப்பட்ட ஆகாயம், திவ்வியமான ஒளியினால் சூழப்பட்டு, கண்குளிர் பிரகாசத் தைத் தந்தது.
புண்ணிய கர்மாக்களைச் செய்து தேவலோகவாசிகளான மேலோர்கள். இயல்பான தம் உள்ளொளியினால் அந்த இடத்தை (வானத்தை)ப் பிரகாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். புனிதமான காற்று, நறுமணத்துடன்கூட வந்து சௌக்கியமாக உடலைத் தழுவிக்கொண்டு சென்றது.
தேவர்கள் குவியல் குவியலாக மலர்மாரி பொழிந்தார்கள்; கந்தர்வர்களும் அப்சரசு களும் கூடி நின்று நூற்றுக்கணக்கான இசைக் கருவிகளை மீட்டினார்கள்.
சரயூ நதியின் நீரில், இராமன் தன் இரு பாதங்களையும் வைத்தார்.
அப்போது, ஆகாயத்திலிருந்து பிரம்மா புகன்றார். "விஷ்ணு பகவானே வருக! தங்கள் வரவு நல்வாவாகுக. இராகவனே! நாங்கள் செய்த பெரும் பேற்றினால், தங்களை மீண்டும் அடைந்திருக்கிறோம்! தேவர்களுக்கு நிகராக ஒளிவீசும் தங்கள் சகோதரர்களுடன், தங்களுடையதேயான மூலத்திருவுடலை ஏற்றுக்கொள்ளுங்கள். பெருந்தோளரே! உங்கள் மூல வடிவத்தில், எந்த உடலைப்பெற விரும்புகிறீர்களோ, அந்த உடலில் பிரவேசிப்பீர்களாக.
(தாங்கள்) பேரொளி வீசும் விஷ்ணுவின் வடிவத்தை அல்லது தொடக்கம் காண முடியாத ஆகாய வடிவத்தை ஏற்கலாம். உலகத் தின் புகலிடம், தாங்களே. தங்களுடைய தொன்மையான சக்தியை யோகமாயா வடிவிலளான அகலமான கண்களையுடைய சீதாதேவியைத் தவிர, தங்களை யாரொரு வரும் அறியமாட்டார்கள். ஏனென்றால், தாங்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்டவர்; பேருருவம் பெற்றவர்; அழிவில்லாதவர்; எல்லாவற்றையும் உள்ளடக்கியவர். ஒளிமிக்க எந்த வடிவத்தை ஏற்க விரும்பு கிறீர்களோ, அந்த உடலுக்குள் தாங்களே புகுந்துகொள்ளுங்கள்.'' பேரறிவாளரான இராமன், பிரம்மாவின் சொற்களைக் கேட்டதும் ஒரு தீர்மானத் திற்கு வந்து, ஒளிமிக்க தன் சரீரத்துடனும் சகோதரர்களுடனும் மகாவிஷ்ணுவின் உடலில் புகுந்தார். உடனே, தேவர்கள், விஷ்ணுமயமான உலகநாயகரைப் பூசிக்கத் தொடங்கினார்கள்.
ஸாத்யர்கள், மருத்கணங்கள், இந்திரன், அக்னியை முன்னிட்டுக்கொண்டு வந்த தேவர்கள், தேவலோக முனிவர்கள், கந்தர்வர் கள், அப்சரசுகள், கருடன், நாகர்கள், யக்ஷர்கள், தைத்யர்கள், தானவர்கள், அரக்கர்கள் ஆகியோர்களும் பகவானைத் துதிக்க ஆரம்பித்தார்கள். பகவான், தன் சொந்த இடத்திற்குத் திரும்பி வந்துவிட்டதால், எல்லாரும் தங்கள் விருப்பம் கைகூடிவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி யில் ஆழ்ந்தார்கள். தேவலோகத்தின் துன்பங் கள் நீங்கியதால், "ஆகா! நல்லபடி ஆயிற்று!'' என்று ஆரவாரித்தார்கள்.
பின்னர், விஷ்ணு வடிவமாகவே ஆகிவிட்டி ருந்த இராமன், "என்னுடன் வந்திருக்கும் எல்லா மக்களுக்கும் நல்ல உலகங்களை அளிப்பீர்களாக'' என்றார்.
"நல்ல உள்ளம் படைத்த இவர்கள் எல்லாரும் என் பக்தர்கள்; என்னிடம் உள்ள சிநேகத்தினால் என்னைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள், என் பொருட்டு தங்கள் சக- சௌக்கியங்களைத் தியாகம் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். என் அருளுக் குப் பாத்திரமானவர்கள்.''
விஷ்ணுவின் சொற்களைக் கேட்ட, உலக குருவான பிரம்மா, "இவர்கள் எல்லாரும் "சாந்தானிகம்' என்ற புண்ணிய உலகத்தை அடையப் போகிறார்கள்'' என்றார்.
விலங்கு வடிவம் கொண்டிருப்பவர்கள், தங்களையே பக்தியுடன் நினைத்துக்கொண்டு உயிர் விடுவார்களேயானால், அவர்களும் சாந்தானிகம் அடைவார்கள். சாந்தானிகம் என்ற விண்ணுலகம், பிரம்மலோகத்திற்கு உரியதான சிறப்பு இயல்புகளைப் பெற்றது; பிரம்மலோகத்திற்கு அருகில் இருப்பது.
வானரர்களும் கரடிகளும் எந்தெந்த தேவர்களிடமிருந்து (அம்சமாகத்) தோன்றி னார்களோ, அந்தந்த தேவவடிவத்தில் புகுந்துகொண்டார்கள்.
அவர்கள் அவ்வாறு புகுந்துகொண்டதும், சுக்ரீவன் சூரியமண்டலம் சென்றடைந்தான். இவ்வாறே, மற்ற வானரர்களும் தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தத்தம் தந்தையின் வடிவத்தை அடைந்தார்கள்.
பிரம்மா, "எல்லாப் பிராணிகளும் சாந்தானிகம் சென்றடைவார்கள்'' என்று சொன்னவுடன், சரயூ நதியின் சோப்ரதாரம் என்னும் நீராடும் துறையில் கூடியிருந்த எல்லா மக்களும், பேரானந்தக் கண்ணீர் வடித்து ஆற்றில் மூழ்கத் தொடங்கினார்கள்.
எந்தப் பிராணி உள்ளம் மகிழ நீரோட் டத்தில் தலைமூழ்கியதோ, அது மானுட உடலைத் துறந்து, தேவலோகத்திலிருந்து வந்திருந்த விமானத்தில் ஏறிக்கொண்டது.
விலங்குப் பிறவி எடுத்திருந்த நூற்றுக் கணக்கான உயிர்கள், சரயூ நதியில் மூழ்கிய தும் ஒளிமிகுந்த சரீரங்களைப் பெற்று விண்ணுலகம் சென்றார்கள். திவ்வியமான உடல்களைப் பெற்ற அவர்கள். தேவர் களைப்போல் இளமையும் ஒளியும் பெற்று தேவர்கள் ஆனார்கள்.
அசையும் பொருள்களும், அசையாப் பொருள்களும் சரயூ நதியின் புனித நீரில் நனைந்து, (திவ்விய சரீரம் பெற்று) தேவலோகத்தை அடைந்தார்கள்.
அப்போது, (தற்செயலாக) அங்கு வந்து சேர்ந்த கரடி- வானர- அரக்கர்களும், சரயூ நீரோட்டத்தில் குதித்து, சுவர்க்க லோகத்திற்குள் புகுந்தார்கள்.
பின்னர், அங்கு வந்திருந்த எல்லாருக்கும் சாந்தானிகப் புண்ணிய உலகில் இடம் கொடுத்துவிட்டு, உலக குரு பிரம்மா, பெரு மகிழ்ச்சியுடனிருந்த தேவர்களுடன் மேலுலகம் சென்றார்.
111-ஆவது சர்க்கம் இராமாயண மகிமை
(குச- லவர்கள் கூறுகிறார்கள்.) பிரம்மா வினால் அங்கீகரிக்கப்பட்ட, இராமாயணம் என்று புகழ்பெற்ற உத்தமமான இந்த மகா காவியம், உத்தர காண்டத்தின் இந்த நிறைவுப் பகுதிவரை, மாமுனிவர் வால்மீகியால் எழுதப் பட்டது.
இதுவரை சொன்னபடி, பகவான் ஸ்ரீராமன், மூலவடிவான விஷ்ணு ஸ்வரூபத்தை ஏற்று ஸ்ரீவைகுண்டத்தில் நிலையாக இருந்துவருகிறார். சராசரங்கள் நிறைந்த மூன்று உலகங்களும் அவரால் வியாபிக்கப்பட்டுள்ளன.
எப்போதும் தேவலோகத்தில், தேவலி கந்தர்வ- ஸித்த- மாமுனிவர்கள் மகிழ்ச்சி யுடன் இராமாயணத்தைக் கேட்டுக் கொண்டி ருக்கிறார்கள்.
இந்த மகாகாவியம். ஆயுளையும் செல்வச் செழிப்பையும் வளர்ப்பது; பாவங்களை அழிப்பது, வேதங்களுக்கு நிகரான இக் காவியத்தை, முன்னோர் குறித்து நடத்தும் சிராத்தச் சடங்குகளில் படிக்கச் செய்து, (பிதிரர்களைக்) கேட்பிக்கவேண்டும்.
இந்தத் தொடர்நிலை நூலின் பாடல் களில், ஒரு செய்யுளின் கால் பகுதியைப் படிப்பவன்கூட எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்; புதல்வன் இல்லாத வன் புதல்வனைப் பெறுகிறான்; பொருள் இல்லாதவன் பொருளை அடைகிறான்.
நாள்தோறும் பாவங்களைச் செய்து வருபவன், இராமாயணத்தில் ஒரேயொரு சுலோகத்தை மட்டும் படித்தால்கூட பாவத்திலிருந்து விடுபடுகிறான்.
இராமாயணத்தைச் சொற்பொழிவாற்றும் பண்டிதருக்கு, ஆடை- பசு- பொன் முதலியவற்றைக் கொடுக்கவேண்டும். கதை சொல்லுபவர் மகிழ்ச்சி அடைந்தால், எல்லா தேவதைகளும் திருப்தி அடைகிறார்கள்.
இந்த மகாகாவியமான இராமாயணத்தைத் தினந்தோறும் படிப்பவர், இவ்வுலகில் புதல்வர்- பேரன்களோடு நல்வாழ்வு வாழ்ந்து, பின்னர், மேலுலகம் சென்றதும் அங்கேயும் பெருமைப்படுத்தப்படுகிறார்.
எவனொருவள் நாள்தோறும் முற்பகல், நண்பகல், பிற்பகல் அல்லது மாலை வேளையில், ஒருநிலைப்பட்ட மனத்துடன் படிக்கிறானோ, அவனை எந்த ஒரு துக்கமும் எந்தக் காலத்திலும் அண்டுவதில்லை (இராமன் பரமபதத்திற்கு எழுந்தருளிய பின்) அழகிய பட்டணமான அயோத்தி, நீண்ட நெடுங்காலத்திற்கு சூன்யமாக இருக்கும். பின்னர் ஒருசமயம், ரிஷபன் என்பவரை மன்னனாகப் பெற்றதும் மக்கள் வந்து கூடுவார்கள்.
பிரசேதஸின் புதல்வரான வால்மீகி முனிவர், அசுவமேத யாகத்தின் நிறைவுக்குப் பிறகு நடந்த கதையையும் உத்தர காண்டத் தில் சேர்த்து, இந்த மகாகாவியத்தை (இராமாயணத்தை)ப் படைத்துள்ளார். பிரம்மதேவரும், இந்தக் காவியத்தில் கூறப் பட்டுள்ள செய்திகள் உண்மையானவை என்பதை ஏற்று அங்கீகரித்திருக்கிறார்.
இந்தக் காவியத்தின் ஒரு ஸர்க்கத்தை யாவது செவியாரக் கேட்கும் மனிதர், அவ்விதம் கேட்பதினாலேயே ஆயிரம் அசுவமேதம், பத்தாயிரம் வாஜபேயம் செய்த புண்ணி யத்தை அடைகிறார்.
எவனொருவன் இவ்வுலகில் இராமாய ணத்தைக் கேட்கிறானோ, அவன், பிரயாகை முதலான புண்ணியத் தலங்கள், கங்கை முதலான புனித ஆறுகள், தவசிகள் வாழும் நைமிசாரண்யம் முதலான வனங்கள், குருக்ஷேத்திரம் முதலான புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவந்தால் கிடைக்கும் அளப்பரிய புண்ணியத்தைப் பெறுகிறான்!
குருசேக்ஷத்திரத்தில், சூரிய கிரகண காலத்தில் ஒரு குவியல் தங்கம் தானம் செய்பவன் அடையும் மகாபுண்ணியமும், நாள்தோறும் இராமாயணத்தைக் கேட்பவன் அடையும் புண்ணியமும் சமமானவை. இராமபிரானுடைய இந்தக் கதையை, மிகுந்த பக்தி- விசுவாசத்தோடு கேட்பவன், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணுலோகத்தை அடைகிறான்.
பண்டையக் காலத்தில், வால்மீகியினால் இயற்றப்பட்ட வேதத்திற்கு இணையான, தொன்மையான இந்தக் காவியத்தை, எவன் எப்போதும் பக்தியுடன் கேட்கிறானோ, அவன் விஷ்ணுசாரூப்பத்தை அடைகிறான்.
அவனுக்கு மனைவி- மக்கள், செல்வம், குலம் முதலியன வளர்ச்சியடைகின்றன. இது சத்தியமான வார்த்தை என்று உணர்ந்து, புலன்களை வசப்படுத்தி இதனைக் கேட்க வேண்டும். உத்தமமான இந்த இராமாயணம், காயத்ரி வடிவமானது. (மகா மந்திர சக்தி உடையது.) இதில், ஒரு சுலோகத்தின் கால்பகுதியை படிப்பவன்கூட, புதல்வன் இல்லாதவன் புதல்வனை அடைவான்; செல்வம் இல்லாத வன் செல்வத்தைப் பெறுவான்; எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுவான்.
எவனொருவன், மாசற்றவனாய் பக்தி யோடுகூட நாள்தோறும் இராமபிரானுடைய வரலாற்றைப் படிக்கிறானோ அல்லது கேட்கிறானோ, அவன் நீண்ட ஆயுளைப் பெறுவான்.
தன்னுடைய ஆன்மிக மேன்மையை விரும்புகிறவன், எப்போதும் இராமனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும். தினந்தோறும், அந்தணர்களுக்கு இந்தக் கதையை சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்.
ரகுநாதனுடைய சரிதத்தை முழுமையாகப் படிப்பவன், மரணமடைந்த பிறகு விஷ்ணுலோகத்தை அடைகிறான் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை!
அப்படிப்பட்டவனுடைய தந்தை, பாட்டனார், கொள்ளுப் பாட்டனார், அவருடைய தந்தை, அந்தத் தந்தையின் தந்தையும்கூட (முன், ஐந்து தலைமுறையினர் கூட) விஷ்ணுலோகத்தை அடைகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இராமனுடைய இந்த சரித்திரம், தரும- அர்த்த- காம- மோக்ஷம் என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் கொடுக்கக்கூடியது. ஆகையால், மனமொன்றி நாள்தோறும் இந்த மகாகாவியத்தைக் கேட்கவேண்டும்.
இராமாயண காவியத்தில், ஒரு சுலோகத் தின் கால்பகுதி அல்லது ஒரு பதத்தையாவது பக்தியுடன் செவிமடுப்பவன் பிரம்மலோகம் செல்கிறான். அங்கே அவரால் போற்றப் படுகிறான்.
தொன்மையான இந்தப் புண்ணியக் கதையை எல்லாரும் பக்தி விசுவாசத்துடன் படிப்பார்களாக! எல்லாருக்கும் நலமே ஏற்படுவதாகுக! பகவான் விஷ்ணுவே! தாங்கள் வாழ்க! வெல்க! நின்புகழ் ஓங்குக! ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உத்தர காண்டத்தில் நூற்றுப்பதினோராவது சர்க்கம் முற்றிற்று.
உத்தர காண்டம் முற்றிற்று.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் நிறைவடைந்தது.
நன்றே விளைக.
"இராமன் திருவடி எண்ணுக மனமே!''
(முற்றும்)