92-ஆவது சர்க்கம் அசுவமேத யாகம்

மேற்கண்டவாறு முன்னேற்பாடு களுக்கான ஆணைகளைப் பிறப்பித்துவிட்டு, பரதனின் தமையனார் (இராமன்), நல்ல லட்சணங்கள் பொருந்திய கருநிறங்கொண்ட குதிரையை அவிழ்த்துவிட்டார்.

ரித்விக்குகள் (வேள்விக் கலை அறிந்தவர்கள்) உடன்வர, குதிரையைப் பாதுகாப்பதற்காக இலக்குவனை நியமித்தார். பிறகு, படைவீரர்கள் புடைசூழ தானே நைமிசாரண்யத்திற்குப் புறப் பட்டார்.

மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த வேள்விச்சாலையைப் பார்த்து, எல்லையில்லா ஆனந்தம் அடைந்த அவர், "ஆகா! என்ன அழகு!' என்று தன் வியப்பை வெளியிட்டார்.

Advertisment

நைமிசத்தில் இராமன் தங்கியிருந்தபோது, எல்லா அரசர்களும் காணிக்கைகள் கொண்டு வந்து சமர்ப்பித்தார்கள். இராமபிரான் அவைகளை ஏற்றுக்கொண்டு மறு மரியாதை செய்தார்.

பேரறிஞரான இராமன், வந்திருந்த போற்றுதலுக்குரிய மன்னர்களுக்கும் அவர் களுடைய பணியாளர்களுக்கும் சௌகரியமான இருப்பிடங்கள் (கூடாரங்கள்) அமைத்துத் தரும்படி கட்டளையிட்டார்.

முக்கியஸ்தர்களுடன் வந்திருந்தவர்களுக்குத் தேவையான உணவு, நீர், ஆடை முதலியவற்றை சத்ருக்னனும் பரதனும் உடனடி யாகக் கொடுத்தார்கள்.

Advertisment

சுக்ரீவனுடன் வந்திருந்த தூய மனமுடைய வானரர்கள் எல்லாரும் பணிவுடன்கூட விப்ரர்களுக்கு உணவு பரிமாறினார்கள்.

மாலை அணிந்த ஏராளமான அரக்கர்கள் புடைசூழ வந்திருந்த விபீஷணன், கடுமையான தவமியற் றும் முனிவர்களை வரவேற்று உபசரிக்கும் பணியைச் செய்தான்.

இவ்வாறு, தக்க முன்னேற்பாடு களுடன்கூட அசுவமேதம் நடந்து கொண்டிருந்தது. இலக்குவனுடைய பாதுகாப்புடன், பூமண்டலத்தைச் சுற்றி வரும்படி விடப்பட்ட குதிரை யின் யாத்திரையும் நல்லவிதமாக நிறைவடைந்தது. மன்னருள் வேங்கை போன்ற இராமபிரானுடைய வேள்வி மிக விமரிசையாக நடந்தது.

மகாத்மா இராமன் நடத்திய அந்த வேள்வியில், யாசகர்கள் மனம் நிறைவுபெறும் வரையில், எல்லாப் பொருள்களும் பல்வகை வெல்லப் பண்டங்களும் இனிப்பு வகைகளும் "கொடு கொடு' என்ற சொல்லே கேட்கப்பட்டது.

பொருள் யாசிப்போர், வாயைத் திறந்து "போதும், போதும்' என்று சொல்லாத வரையில், அரக்கர் களும் வானரர்களும் எல்லாப் பண்டங்களையும் அளித்துக் கொண்டே இருந்தார்கள் என்பதை எல்லாரும் பார்த்தார்கள்.

மனவளமும் உடல்வளமும் பெற்ற மக்கள் நிறைந்திருந்த இராமனின் அந்த மாவேள்வியில் அழுக்கடைந்தவரோ, பரிதாபமானவரோ, மனம் ஒடிந்துபோனவரோ காணப்படவேயில்லை. (எல்லாரும் அவ்வளவு கவனமாக உபசரிக்கப்பட் டார்கள்.) நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருந்த முனிவர்களுக்கு இவ்வளவு மகத்தான வேள்வியை, இதற்கு முன்னர் ஒரு போதும் கண்டதாக நினைவுக்கு வரவில்லை.

எவருக்குத் தங்கம் தேவைப்பட்டதோ, அவர் தங்கத்தைப் பெற்றார்; அதுபோல, பொருளை விரும்பியவர் பொருளையும், இரத்தினங்களைப் பெற விரும்பியவர் இரத்தினங்களையும் பெற்றார்கள்.

வெள்ளி, (தளவரிசை, சுவர் களுக்குத் தேவையான) வண்ண மயமான கற்கள், ஆடைகள் முதலியன வழங்கப்படுவதற்காகக் குவியல்களாகக் குவிந்திருந்தன.

அங்கு வந்திருந்த தவச் செல்வர்கள், "இத்தகைய, பிரம் மாண்டமான வேள்வியை இந்திரன், குபேரன், யமன், வருணன் ஆகியோர்கூட நடத்தியதில்லை'' என்று பேசிக்கொண்டார்கள்.

எல்லா இடங்களிலும் வானரர்களும் அரக்கர்களும் நின்றுகொண்டு ஆடை, பொருள், உணவு கேட்டவர்களுக்கெல்லாம் கைநிறைய எடுத்து வழங்கிக் கொண்டி ருந்தார்கள்.

எல்லாச் சிறப்புக்களுடனும் விளங்கிய, அரசவேங்கை இராமன் நடத்திய வேள்வி ஓராண்டுக்கும் மேலாக வளர்ந்தது. (அவர், தொடர்ந்து வேள்வியை மீண்டும் மீண்டும் நடத்தினார்.)

93-ஆவது சர்க்கம் வால்மீகி ஆணை

மிகவும் கோலாகலமான முறையில் அந்த வேள்வி நடந்துகொண்டிருந்தபோது, தலைசிறந்த முனிவரான வால்மீகி தன் சீடர்களுடன் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

பேரழகுடன் விளங்கும் மண்டபத்தில் நடைபெறும் அற்புதத் காட்சியான வேள்வி யைப் பார்த்துவிட்டு. முனிவர்கள் தங்கு வதற்கு என்று தனிமையாக ஒதுக்கப்பட்டி ருந்த இடத்தில், அழகிய குடில்களை அமைத்துக்கொண்டார்.

வால்மீகியின் எழிலார்ந்த குடில்களுக்கு அருகில், உணவுப் பொருள்கள் மற்றும் கனி, கிழங்குகள் நிறைந்த பல வண்டிகள் நிறுத்தப்பட்டன.

மன்னர் இராமனாலும் மகாத்மாக்களான முனிவர்களாலும் நன்றாகக் கௌரவிக் கப்பட்ட தவச்செல்வரும் ஆத்மஞானியுமான வால்மீகி, அவ்விடத்தில் சுகமாகத் தங்கியிருந்தார்.

மனமகிழ்ச்சியுடனிருந்த அவர், தன் இரு சீடர்களையும் அழைத்து. "நீங்கள் இருவரும் ஒன்றிய மனத் துடன் இராமாயண காவியம் முழுவதையும் ஆங்காங்கே சென்று உள்ளக்களிப்புடன் பாடுங்கள்'' என்று கூறினார்.

"புனிதமான முனிவர்களின் குடில்களிலும், அந்தணர்கள் வசிக்கும் இடங்களிலும், சாலைகளிலும், அரச பாட்டைகளிலும், சிற்றரசர் இல்லங்களிலும், இராமனுடைய மாளிகை வாசற்புறக்கில் வேள்வி நடக்குமிடத்திலும், வேள்வி யாளர்கள் முன்னிலையிலும் கண்டிப்பாக (இராமகதை) பாடப்பட வேண்டும்.

மலைச்சிகரங்களில் உற்பத்தியான பற்பல வகையான சுவையுள்ள பழங்களை, அவ்வப் போது புசித்துக்கொண்டும் பாடிக் கொண்டும் (உற்சாகத்தோடு) இருங்கள்.'

குழந்தைகளே! இங்குள்ள சுவைமிக்க கனி, கிழங்குகளைப் புசித்தீர்களேயானால், உங்களுக்கு ஒருபோதும் களைப்புத் தோன்றாது; குரல் இனிமையும் குன்றிப் போகாது. புவியாளும் வேந்தனான இராமன், உங்கள் பாட்டைக் கேட்பதற்கு விரும்பி அழைத்தால், முனிவர்கள் அமர்ந் திருக்கும் அந்த அரங்கத்தில் நீங்கள் தொடர்ந்து பாடலாம்.

முன்னர், பலவித சான்றுகளுடன், "இந்த இடத்தில் தொடங்கி, இந்த இடத்தில் நிறுத்த வேண்டும்' என்று பகுதிகளாகப் பிரித்து சொல்லிக்கொடுத்திருக்கிறேனே. அதன்படி, இனிமையான குரலால், நாள்தோறும் இருபது ஸர்க்கம் வீதம் பாடவேண்டும். பொருளுக்கு ஆசைப்பட்டு, மனம் பரிதவித்து எதையும் செய்யக்கூடாது. ஆசிரமத்தில் இருந்துகொண்டு, கனி, கிழங்குகளை உணவாகக்கொண்டு உயிர்வாழ்பவர்களுக் குச் செல்வத்தினால் என்ன பயன்? காகுத்த இராமன், "நீங்கள் யாருடைய புதல்வர்கள்?' என்று கேட்டால். (நேரிடை யாக அதற்குப் பதில் அளிக்காமல்.) "நாங்கள் வால்மீகியின் சீடர்கள்' என்று பதில் கூறுங்கள்.

இந்த வீணையில் ஏழு தந்திகள் உள்ளன.

rr

இவைகளிலிருந்து இனிமையான நாதம் உண்டாகும். தந்திகளில், முன்னர் கேட்டறி யாத ஆச்சரியமான ஸ்வரத்தை உண்டாக்கும் கட்டைகள் உள்ளன. நீங்கள் மனம் குழம் பாமல், உரிய முறையில் ஸ்வரக் கட்டைகளை அழுத்தி, இனிய ஒலியெழுப்பிப் பாடுங்கள்.

தொடக்கம் முதற்கொண்டு இந்தக் காவியத்தை நீங்கள் பாடவேண்டும், மன்னனுக்கு எவ்வித அவமரியாதையும் ஏற்பட்டுவிடக்கூடாது. தருமத்தின் நோக்கில் பார்த்தால், மன்னன் என்பவன் எல்லா உயிர்களுக்கும் தந்தை போன்றவன். ஆகவே, நீங்கள் இருவரும் உவகையுடனும் ஒன்றிய மனத்துடனும், நாளைக் காலையிலேயே, வீணையை இனிமையாக மீட்டிக்கொண்டு இராமாயண கானத்தைத் தொடங்குங்கள்.''

பெரும்புகழ் கொண்டவரும், பிரசேதஸ் மரபில் தோன்றியவருமான வால்மீகி, மேற் கண்டவாறு கூறிவிட்டு மௌனமானார்.

மிதிலை மன்னரின் குமாரியின் மைந்தர் களும், எதிரிகளை அடக்கவல்லவர்களுமான அவ்விருவரும், முனிவரின் ஆணையைக் கேட்டதும், "அவ்வாறே செய்கிறோம்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

சுக்ராச்சார்யாரின் நீதிநூலை நன்றாகக் சுற்றறிந்த அசுவினீ குமாரர்களைப்போல. அவ்விருவரும் முனிவர் கூறிய சொற்களை மனத்திலிருத்தி, துடிப்போடு அந்த இரவைக் கழித்தார்கள்.

94-ஆவது ஸர்க்கம் இராமாயண அரங்கேற்றம்

அந்த இரவு கழிந்து, பொழுது விடிந்தவுடன் அவ்விருவரும் நீராடிவிட்டு, சந்த்யாவந்தனம், ஔபாஸனம் முதலிய கர்மாக்களை முடித்துக்கொண்டு, முனிவர் (வால்மீகி) கூறியபடி, இராமகாதையைத் தொடக்கத்திலிருந்து இசைக்கத் தொடங்கி னார்கள்.

பாடகர்களுடைய ஆசிரியரால் முன்னால் கற்பிக்கப்பட்ட அந்தக் காவியத்தை, இராமபிரான் செவிகளால் கேட்டார். இதற்குமுன் கேட்டறியாத அபூர்வ காவியம், இசைச் சிறப்புக்களுடன் ஆக்கப் பட்டிருந்ததை உணர்ந்தார்.

துரிதம், மத்யமம், சவுக்கம் என்ற காலப் பிரமாணங்களுக்கு ஏற்ப, தந்தி ஒலியுடன் இழைந்து வரும் சிறுவர்களின் இனிய கானத் தைக்கேட்ட இராகவன், அதில் மிகவும் அக்கறை காட்டினார்.

ஆண்பு- நிகர் மன்னர். வேள்விச் சடங்குகளில் இடைவேளை கிடைக்கும் போது. சிற்றரசர்கள், வேத அறிஞர்கள், பௌராணிகர்கள், இலக்கண வல்லுநர்கள், மூத்த இருபிறப்பாளர்கள், ஸ்வரங்களின் இலட்சணமறிந்தவர்கள், கந்தர்வக்கலை அறிந்தவர்கள், ஆர்வமுள்ள குடிமக்கள், வெவ்வேறு பனுவல் வகைகளை அறிந்தவர் கள், ஸ்வரங்களின் துரித, மத்யமம், சவுக்க கால அளவுகளைக் கண்டறிந்தவர்கள். சோதிடக் கலை வல்லுநர்கள், சடங்குகளின் செயல்முறைகளைக் கற்றுத்தேர்ந்தவர்கள், காவிய அமைப்பு அறிந்தவர்கள், பல்மொழி வித்தகர்கள், எண்ணங்களையும் மெய்ப்பாடுகளையும் உணர்த்த வல்லவர்கள். எல்லா புறநகர் மக்கள், தர்க்க சாஸ்திர நிபுணர் கள், காரண- காரியங்களை அலசி ஆராய் பவர்கள், பா இனங்கள், புராணங்கள் அறிந்த வேதவிற்பன்னர்களான இருபிறப்பாளர்கள், ரதபந்தம் (தேரில் கொடி முதல் சக்கரம் வரை படிப்படியாக வர்ணிக்கும்முறை) போன்ற சித்திரப்பாக்களை எழுதக் கூடியவர்கள். வாழ்க்கை நெறிமுறைகளைக் கூறும் நூல்களைக் சுற்றறிந்தவர்கள், இசை, நாட்டியக் கலைஞர்கள், பல்கலை வித்தகர்கள், உபநிடதங்களின் ஆழமான பொருளை எடுத்துரைக்க வல்லவர்கள் ஆகிய எல்லாரையும் ஓர் இடத்தில் கூட்டி, பாடகர்கள் இருவரையும் ஆசனத்தில் அமர வைத்தார். இராகவன்.

எல்லா முனிவர்களும், பேராற்றல் பொருந்திய மன்னர்களும், அவ்விரு பாடகர்களையும் மன்னர் இராமனையும் கண்களால் பருகி விடுபவர்கள்போல் பார்த்து, எல்லாரையும் நோட்டம்விட்டு, ஒருவருக்கொருவர் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்.

"இருவரும், இராமனுடைய தோற்றத்தையே கொண்டி ருக்கிறார்கள். பிம்பத்திலிருந்து பிரதிபிம்பம் தோன்று வதைப்போல. இருவரும் சடா மகுடம் இல்லாமலும் மரவுரி தரிக்காமலும் இருந்தால், இராம னுக்கும் இந்தப் பாடகர்களுக்கு மிடையே எந்த வேற்றுமையையும் நாம் காண்கிலோம்.''

மக்கள், கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி யைக் கொடுக்கும்படி, இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே, முனிவரின் சீடர்களான அவ்விருவரும் பாடத் தொடங்கினார்கள்.

மானுடம் கடந்த இசைவெள்ளம் இனிமையாக அங்கே பாயத் தொடங்கியது. இசை ஆர்வம் உள்ள ரசிகர்கள் எவ்வளவு கேட்டும், "போதும்' என்ற மனநிறைவை அடையவில்லை.

(அவ்விருவரும்) நாரதரால் கூறப்பட்ட முதல் ஸர்க்கத்திலிருந்து இருபதாவது ஸர்க்கம் வரையில் பாடினார்கள்.

பிற்பகல் வந்ததும், சகோதர பாசமுடைய இராமன், இருபது ஸர்க்கங்களைக் கேட்டுவிட்டு, "பரதா! மகத்தான பெருமைக் குரிய இவ்விருவருக்கும், பதினெட்டாயிரம் பொற்காசுகள் உடனே கொடு, மேலும், அவர்கள் என்ன கேட்டாலும் கொடுப் பாயாக'' என்று உத்தரவிட்டார்.

பரதன், அவ்விரு சிறுவர்களுக்கும் தனித் தனியே பொற்காசுகள் வழங்கினார். ஆனால், குசலி லவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

வியப்படைந்த அவ்விருவரும். "காட்டில் கிடைக்கும் கனி, கிழங்குகளைப் புசித்துக்கொண்டு வாழும் நாங்கள் தங்கம், வெள்ளியை வைத்துக்கொண்டு என்ன செய்வோம்?'' என்று கூறினார்கள்.

அவர்கள் இருவரும் இவ்வாறு பேசியதைக் கேட்ட மக்கள் எல்லாரும், இராமனும்கூட மனம் பூரித்து வியப்படைந்தார்கள்.

அந்தக் காவியம் எங்கிருந்து கிடைத்தது என்றறிய விருப்பம் கொண்ட இராமன், முனிவரின் சீடர்களும் மகாதேஜஸ்விகளுமான அவர்களைப் பார்த்துக்கேட்டார்.

"இந்த மகாகாவியத்தில் பாடல் கள் எண்ணிக்கை எவ்வளவு? இதை எழுதிய பெருமகனார் எங்கே இருக்கிறார்? இந்த மாபெரும் இலக்கியத்தை எழுதிய முனிவர் யார்? இப்போது எங்கே இருக்கிறார்?''

முனிவரின் சீடர்களான அவ்விருவரும், மேற்கண்டவாறு கேள்விகள் கேட்ட இராமனைப் பார்த்து, "தங்களுடைய வரலாறு முழுவதையும் எடுத்துக்கூறும் இந்த மகாகாவியத்தை எழுதியவர் பகவான் வால்மீகி. தற்சமயம், இந்த வேள்வியைப் பார்ப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்'' என்றார்கள்.

"மாபெரும் தவசியான அவரால் இயற்றப் பட்ட, இந்தக் காவியத்தில் இருபத்து நான்காயிரம் சுலோகங்கள் உள்ளன. நூறு உபகதைகளும் இருக்கின்றன.

மன்னரே! தொடக்கத்திலிருந்து ஐநூறு ஸர்க்கங்களும் ஆறு காண்டங்களும், பின்னர் உத்தர காண்டமும் மகாத்மா வால்மீகியால் எழுதப்பட்டன.

எங்கள் ஆசார்யரான முனிவரால், தங்கள் வரலாறு முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் காவியத்தில் தங்கள் வாழ்க்கையின் இறுதி வரையிலான செய்திகள் கொடுக்கப் பட்டுள்ளன.

மாவீரரே! மன்னரே! இதைக் கேட்பதற்கு விருப்பம் இருக்குமேயானால், வேள்விச் சடங்குகளுக்கிடையே இடைவேளையில், தங்கள் சகோதரர்களுடன்கூட சுகமாக வீற்றிருந்து கேளுங்கள்.''

"அப்படியே செய்யலாம்'' என்று கூறி, அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பி னார். அவ்விருவரும் மனம் களித்தவர்களாக முனிவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள்.

இனிமையான இசையைக் கேட்டு மகிழ்ந்த இராமன், முனிவர்களும் சிற்றரசர்களும் புடைசூழ வேள்விச்சாலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இவ்வாறு, அந்த முதல் நாளன்று, பல ஸர்க்கங்களைச் செவிக்கினிய ஒலியுடனும் சொற்கட்டுக்களுடனும் நிறைந்து, தாளம்- லயம் இழைய, வீணையின் ஒலியுடன் கலந்து வெளிப்போந்த காவிய இசையை, இராமன் கேட்டு மகிழ்ந்தார்.

95-ஆவது சர்க்கம்

வால்மீகியிடம் தூதர் வருகை இவ்வாறு இராமபிரான், முனிவர்கள், மன்னர்கள், வானரர்களோடுகூட, அநேக நாட்கள்வரை உத்தமமான இராமாயண இசைப்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இசையாக வழங்கப்பட்ட அந்த வரலாற்றிலிருந்து குசலி லவர்கள், சீதையின் புதல்வர்கள் என்பதை அறிந்துக் கொண்டு. இராமன் அந்த அவையில் (பின்வருமாறு) கூறினார்.

நல்லொழுக்கமுடைய தூதர்களை அழைத்து, தன்னுடைய அறிவினால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்துவிட்டு, "தூதர் களே! பகவான் வால்மீகி இருக்குமிடம் சென்று, நான் சொல்லப்போகும் செய்தி யைக் கூறுங்கள்'' என்றார்.

"சீதை தூய நடத்தையுடையவள்; எவ்விதப் பாவமும் செய்யாதவள் என்றால், மாமுனிவராகிய தங்கள் அனுமதியைப்பெற்று, இங்கு வந்து மக்கள் கூடியிருக்கும் இந்த சபையில், தன் தூய்மையை நிரூபிக்கட்டும்.

(சீதை) இங்கே வந்து தன் தூய்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கிறாளா? என்பது குறித்த, முனிவருடைய மற்றும் சீதையினுடைய எண்ணத்தை உடனே எனக் குத் தெரிவியுங்கள்.

ஜனகன் புதல்வியான சீதை, நாளைக் காலை இந்த சபா மண்டபத்திற்கு வந்து, அவள்மீதும் என்மீதும் சுமத்தப்பட்டுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும்.''

புதுமையான இந்த உரையை இராமனி டமிருந்து கேட்ட தூதர்கள் வேள்விச் சாலையிலிருந்து புறப்பட்டு, முனிவர் இருந்த இடத்திற்குச் சென்றார்கள்.

எல்லையற்ற ஒளியுடன் பிரகாசிக்கும் மகாத்மா வால்மீகியை வணங்கிவிட்டு, இராமன் கூறியனுப்பிய செய்தியை, இனிய மென்சொற்களால் விண்ணப்பித்துக் கொண்டார்கள்.

அவர்கள் சொற்களிலிருந்து இராமனு டைய மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட வால்மீகி, பின்வருமாறு கூறினார்.

"இராமன் எப்படிச் சொல்கிறாரோ. அப்படியே ஆகட்டும். அவர் சொல்லியபடியே சீதை செய்வாள். ஏனென்றால், பெண்களுக்குக் கணவர்தானே கண்கண்ட தெய்வம்?'' மாவீரர்களான இராம தூதர்கள் அனைவரும் முனிவர் கூறியதைக் கேட்ட பின்னர், உடனே திரும்பிவந்து, முனிவர் கூறியதைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

மகாத்மா வால்மீகி கூறியனுப்பியதைக் கேட்ட இராமன் மனமகிழ்ந்து, அங்கு கூடி யிருந்த முனிவர்களையும் அரசர்களையும் பார்த்துக் கூறினார்-

"வணக்கத்திற்குரிய முனிவர்களாகிய நீங்கள் தத்தம் சீடர்களுடனும், அரசர்கள் தத்தம் பரிவாரங்களுடனும் வாருங்கள். அத்துடன், சீதையின் சபதத்தைக் கேட்க விரும்பும் மற்றவர்களும் இங்கே வந்து கூடுவார்களாக.''

இராமனுடைய சொற்களைக் கேட்ட முனிவர்கள், "அதுவே சரி' என்று ஒரு மனதாக இசைவுக்குரல் கொடுத்தார்கள்.

மகாத்மாக்களான அரசர்கள் இராமனைப் புகழ்ந்து, "மனிதருள் மாணிக்கமே! இவ்வுலகில், இவ்வளவு கம்பீரமாகப் பேசுவதற்குத் தங்களைத் தவிர வேறு எவராலும் முடியாது'' என்றார்கள்.

இவ்வாறு, மறுநாள் சீதை சபதம் செய்வாள் என்பதை உறுதியாக அறிவித்துவிட்டு, எதிரிகளை அடக்கும் இராமன், அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்.

சிங்கம் போன்ற வலிமைமிக்க இராமன், மறுநாள் சீதை சபதம் செய்வாள் என்பதை நிச்சயப்படுத்தி, மகான்களான முனிவர்களையும் அரசர்களையும் அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்.

96-ஆவது ஸர்க்கம் வால்மீகியின் சாட்சியம்

அந்த இரவு கழிந்துபொழுது புலர்ந்ததும், வேள்விச் சாலைக்கு வந்த மன்னர் இராகவன் எல்லா முனிவர்களையும் அழைப்பித்தார்.

வசிஷ்டர், வாமதேவர், ஜாபா-, காசியபர், நெடுங்காலம் தவம் செய்த விசுவாமித்திரர், பெருந்தவசியான துர்வாசர், புலஸ்தியர், சக்தி, பார்கவர், வாமனர், நீண்டகாலம் வாழும் மார்க்கண்டேயர், பெரும் புகழ்கொண்ட மௌத்கல்யர், கர்கர், சியவனர், அறம் அறிந்த சதாநந்தர், தவஒளி வீசும் பரத்வாஜர், ஒளிமிக்க அக்னிபுத்திரர், நாரதர், பர்வதர், புகழ்பெற்ற கௌதமர், காத்யாயனர், சுயக்ஞர், தவத்தின் பொக்கிஷம் போன்ற அகஸ்தியர் இவர்களும், கட்டுப்பாட்டுடன் விரதங் களைக் கைக்கொள்ளும் மற்றும் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கூடியிருந்த அனைவரும், மாவீரம் கொண்ட அரக்கர்கள் மற்றும் பெரும் பலசாலிகளான வானரர்கள் அனைவரும் மகாத்மா இராமன் அழைப்புக்கிணங்கி ஒன்றுகூடினார்கள்.

அரச, வேளாள, வணிக மரபினர் ஆயிரக்கணக்கானோரும், பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த ஆசார நியமங்களைப் பின்பற்றும் அந்தணர்களும், ஞான, கர்ம, யோக நிஷ்டர்கள் மற்றும் பலரும். சீதை சபதம் கூறுவதைக் காண்பதற்காக, அங்கே வந்து கூடினார்கள்.

அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோரும் கல்லாகச் சமைந்து, மலைபோல் அசையாமல் வீற்றிருந்தார்கள். இதை (அனைவரும் கூடிவிட்டார்கள் என்பதை)க் கேட்டதும், மாமுனிவர் சீதையோடுகூட விரைவாக அவ்விடம் வந்து சேர்ந்தார்.

அந்த முனிவருக்கு (வால்மீகிக்கு)ப் பின்னால் கீழ்நோக்கித் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு, கைகளைக் கூப்பியவண்ணம், கண்களில் நீர்சோர வந்து கொண்டிருந்தாள், (சீதை). அவள் மனத்தில் இராமனையே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

வால்மீகியின் பின்னால் வந்து கொண்டிருந்த சீதை, பிரம்மாவைப் பின்தொடர்ந்து வரும் வேதத்தைப்போல் விளங்கினாள். அவளைக் கண்டதும், "ஆகா! என்ன பேறு பெற்றாள்!'' என்று எல்லோரும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

(தொடரும்)