குன்றுகள் யாவும் குமரனின் குடில்கள்தான்..! அன்பர் உள்ளங்களில் உயர்ந்து விலங்குவதுபோல மலைகள்மீது உயர்ந்து குடிகொண்டு உய்விக்கின்றான் தனது உத்தமத் தொண்டர்களை....!

அப்படி அடியார்களுக்கு அருள் வழங்கும் அதி உன்னதத் திருத்தலமாகத் திகழ்கிறது நட்சத்திரக்கோவில் எனப்படும் நட்சத்திரக்குன்று.

சுயம்பு லிங்கங்களைப் பல்வேறு திருத்தலங்களில் தரிசித்திருக்கலாம். ஏன்? வேலூர் சேண்பாக்கத்தில் சுயம்பு கணபதியைக்கூட பார்த்திருப்போம். சுயம்பு முருகனை எங்கேனும் கண்டதுண்டா? அதுவும் மலைமீது? அப்படி சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியம் இந்த நட்சத்திரகிரியில் நாம் பெறலாம்.

தென்கயிலாயம் என்று போற்றப்படும் பர்வத மலையில் போதன், போதவான், புத்திராண்டன், புருகூதன், பாண்டரங்கன், சோமன், வாமன் ஆகிய ஏழு தவசிகள் தவம் புரிந்து கொண்டி ருந்தனர். அப் போது வாழைக் காட்டின் நடுவே வாழைப்பந்தல் அமைத்து, சிவ லிங்கம் பிடித்து அம்பிகை, நீர்வேண்டி கணபதியையும், கந்தனையும் அனுப்பினாள்.

Advertisment

அதில் கணபதி காகமாய் காமமாய் சென்று ஜமதக்னி முனிவரின் கமண்டலத்தை கவிழ்த்து, (காவிரியை உற்பத்தி செய்ததுபோல்) கமண்டல நதியை உற்பத்தி செய்தார். கந்தனோ பர்வதமலைமீது தனது சக்திவேலை ஏவினார். சீறிப்பாய்ந்த வேல், தவசிகள் ஏழ்வரின் உடலைக் குத்திக் கிழித்தது. செந்நீராக பெருக்கெடுத்தது நதி. அதுவே சேய் (செய்யாறு) நதியானது.

கந்தனின் புனிதமிகு வேல் குத்தியக் காரணத்தால் ஏழ்வரும் முத்தி பெற்றனர். அவர்கள் ஏழ்வரும் அந்தணராதலால் அவர்களைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாய் சூழ்ந்தது குமரனை. இதனால் அன்னை பார்வதியின் ஆலோசனைப் படி சேயாற்றின் வடகரையில் (காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், தென்மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை) ஏழு கரை கண்டங்களையும், தென்கரையில் (மண்டகொளத்தூர், கரைபூண்டி, தென்பள்ளிபட்டு, பழங்கோவில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவன்பட்டு) ஏழு கயிலாயங் களையும் உருவாக்கி சிவலிங்க வழிபாடு செய்து விமோசனம் அடைந்தார்.

அப்போது தேவர்கள் வந்து வழிபடும் தேவனாம் பட்டு தேவகிரியிலும், நட்சத்திரங்கள் வந்து வழிபடும் நட்சத்திரகிரியிலும் முருகன் இளைப்பாறினார். அதோடு தனது அன்பர்களுக்கு அருள்வழங்கும் தலமாகுவும் ஆக்கிக்கொண்டார்.

Advertisment

நட்சத்திர கிரியில் கந்தன் குடிகொண்ட ஸ்வாரசிய மான வரலாற்றினைத் தெரிந்துக்கொள்வோமா?

முன்னொரு சமயம் இப்பகுதியில் இரண்டு சிவாச்சாரியார்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் ஆடி கிருத்திகை நாளில் திருத்தணிகை சென்று, ஸ்ரீ சுப்ரமணியரை வழிபட்டுவந்தனர். ஒரு வருடம் அவர்களால் ஆடி கிருத்திகையன்று தணிகைமலை செல்ல இயலவில்லை. இதனால் இருவரும் மிகுந்த மனவருத்தம் அடைந்தனர். இவர்களின் கனவில் தோன்றிய குமரன், "நான் நட்சத்திரகிரி என்னும் குன்றின் நடுமலையில் சுயம்பு வடிவாய் எழுந்துள்ளேன். சூரியன்- சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும், நித்தமும் என்னை பூஜிக்கும். நட்சத்திரக்குன்றின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திர புஷ்கரணி சுனையிலிருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்தடையுங்கள்'' எனக் கூறி மறைந்தார்.

ss

திடுக்கிட்டு கண் விழித்த சிவாச்சாரியார்கள், விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில் சுனையை அடைந்து, ஒளி பொருந்திய நாகமொன்று நாகம் வழிகாட்டிட, குன்றின் நடுவில் ஓரிடத்தில் சென்று மறைந்தது. அங்கே சப்பாத்திகள்ளி செடிகளுக்கு இடையே சுயம்பு லிங்க வடிவாய் முருகன் காட்சியளித்தார்.

இதைக் கேள்வியுற்ற ஊர்மக்கள் ஒன்றுகூடி, சுயம்பு சுப்பிரமணியரை வணங்கினர். பின்னர், வள்ளி - தெய்வானை உடனான முருகன் உருவச்சிலை ஸ்தாபிக்கப்பட்டு, ஆலயமும் எழுப்பப் பட்டது. அற்புதப் பூஜைகளும் நடத்தப் பட்டது.

சேயாற்றின் கரையோரமாக சிறு குன்றின்மீது குறைகளையெல்லாம் களையும் குமரன் இனிதே வீற்றருளுகின்றார்.

சுமார் 227 படிகளில் ஏறி, முதலில் ஸ்ரீ சித்தி விநாயகரை வணங்குகின்றோம்.

தானா வாயிலின்மேல் மூன்று நிலை இராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இடப்புறம் மேற்கே வள்ளி- தெய்வானையுடனான சுப்பிரமணியர் உற்சவர் சிலையும், வலப்புறம் ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் சன்னிதிகள் உள்ளன. கிழக்குப்புறம் பலிபீடம், மயில் வாகனம், கொடிமரம் காணப்படுகின்றன. மகா மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை அமைப்பில் கந்தன் சந்நிதி அமைந்துள்ளன.

கருவறையுள் ஜோதிமயமாய் வள்ளி மற்றும் தெய்வானையுடன் கந்தன் உருவாய் எழுந்தருள, கீழே சுயம்புவாய் லிங்க வடிவில் பூமியிலிருந்து தானாக எழுந்து பேரொளி வீசுகின்றார். நாகம் இங்கே தலைக்குப் பின்னே படமெடுத்து நிற்பதைக் காண மெய்சிலிர்க்கின்றது. இந்த முருகனை நாகம் அடையாளம் காட்டியதன் நினைவாக நித்தமும் நாகபாசம் பொருத்தப்படுகின்றது.

திருவாசியும், கிரீட குண்டலங்களும் கந்தனை அலங்கரிக்க....கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது இந்த சுயம்பு சுப்பிரமணியர் தரிசனம். வேண்டியதை யெல்லாம் தருவான் அந்த வேலவன். 27 நட்சத்திரங்களும், கார்த்திகைப் பெண்களும் அனுதினமும் இங்கு ஆறுமுகனைப் பூஜிப்பதாக ஐதீகம்!

மலைக்கோவிலின் வெளியே மலேசிய பத்துமலை முருகனை நினைவுகூறும் விதத்தில் கம்பீரமாய் திகழ்கின்றான் கந்தன் தங்க நிறத்தில்..!

மலையிலிருந்து காணும் அற்புதமான இயற்கை எழில் காட்சி மனதைத் தூய்மைப் படுத்தி, சுத்திகரிக்கின்றது. வீசும் தென்றலோ விவேகம் அளிக்கின்றது. மலைக்கு வாகனங்கள்மூலம் செல்ல பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் தீர்த்த சுனையும், அனுமன், கணபதி, நவகிரகங்கள் மற்றும் இடும்பன் சந்நிதிகளும் அமைந்துள்ளன.

இந்த நட்சத்திரக்குன்றுமீது வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் நான்கு பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளார்.

mm

மேலும் இந்த முருகன்மீது ஸ்ரீ சிவ சுப்பிரமணிய மாலை, நட்சத்திரக் குன்ற வழிநடைப்பதம், உடுமலைப் பாமாலை (உடு = நட்சத்திரம்) நட்சத்திரக்குன்று அருள்மிகு சிவசுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் போன்ற எண்ணற்ற பாமாலைகள் புலவர் பலரால் இயற்றப் பட்டுள்ளது.

சித்திரை வருடப்பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடி கிருத்திகை பெருவிழா, கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை தீபம், தை கார்த்திகை, பங்குனி உத்தர பிரம்மோற்சவம் (அதில் ஏழாம் நாள் திருத்தேர்), வைகாசி விசாகம், மாத கிருத்திகைகள் என விழாக்கள் பற்பல. சஷ்டியில் முருகப்பெருமான் எலத்தூர் சென்று, அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கிவந்து, நட்சத்திரக் கோவிலில் சூரசம்ஹாரம் செய்வார். அதன்பின் சேயாற்றங்கரையில் அமைந்துள்ள குருவிமலை கிராமத்திற்கு சென்று, அங்கே ஆற்றில் தீர்த்தவாரி நடக்கும். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

கிருத்திகைகளில் தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும்.

பாலாபிஷேகம் செய்து, சிவந்த வெட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து, வழிபடு வோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகி, நல்லருள் கிட்டும்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகாவில் அமைந் துள்ளது இத்தலம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் பேருந்து சாலையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நட்சத்திரக்குன்று எனப்படும் நட்சத்திரக் கோவில்.