திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இன்று நாம் பேருந்து, மகிழ்வுந்து (கார்) போன்ற வாகனங்களில் சொகுசாக ஏழுமலைகளையும் விரைவில் கடந்து சென்று தரிசனம் செய்துவிட்டு வருகிறோம். சிலர் நேர்த்திக் கடனுக்காக மலைப்பாதையில் தற்போது ஏறிச்சென்று வருகிறார்கள். மலைப்பாதையில் நடப்பதற்கும், ஓய்வு எடுக்கவும் இன்று பல வசதிகளை தேவஸ்தானம் செய்து உள்ளது. எந்தவித வசதியும், பாதுகாப்பும் இல்லாத மலைப்பகுதியில் சுமார் 1,000 ஆண்டுகளுக்குமுன்பு தன் கால்கள் புனிதமலையில் படாமல் இருப்பதற்காக கால்முட்டி தேய தவழ்ந்தே ஏழுமலைகளையும் கடந்துசென்று திருவேங்கடமுடையானை தரிசனம் செய்து, அவனுக்கு தொண்டாற்றிய வர்தான் ஸ்ரீ இராமானுஜர். (1017-1137) ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரையில் பெரிதும் போற்றப்படும்.
இவரைப் பற்றி இராமானுஜ நூற்றந்தாதியில்,
"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்களெல்லாம்
அண்ணல் இராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணறு ஞானம் தலைக்கொண்டு நாரணற்க்காயினரே'' (41)
எம்பெருமான் திருமாலின் அவதாரத் தைக் காட்டிலும் மிகவும் போற்றக்கூடிய அவதாரம் அவரது அடியார் எம் பெருமானார் ஸ்ரீ இராமானுஜரின் திரு அவதாரம். 120 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்த இம்மகானை மனிதாபிமானம் மிக்க சமுதாயவாதி எனச் சொல்லலாம். திருக்குலத்தாரும் திருநாடு என்கிற வைகுண்டம் செல்ல உதவும் சரணாகதி தத்துவத்தை உபதேசித்தவர். இவரது அவதாரத்தைப் பற்றி திருவேங்கட மஹாத்மியத்தில் சிறப்பாகச் சொல்லப் பட்டுள்ளது.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் படி ஆதிசேஷனின் மறுஅவதாரம் எனப் போற்றப்படும் ஸ்ரீ இராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூரில் 1017-ஆம் ஆண்டு கேசவ கோமயாஜி, காந்திமதி என்கிற தம்பதியினருக்கு மகனாக சித்திரை மாதத்தில் பிறந்தார். இதனை
"திருமகள் கோன் அருள்புரியச் சீபெரும்புதூர் நகரில்
மருவுதிரு ஆசூரிப்பிள்ளை
திருமகனாகிப்
பொருவரிய காந்திமதி வயிற்றுதித்துப் பூதலத்தில்
பொருவரிய காந்திமதி வயிற்றுதித்துப் பூதலத்தில்
அருமறை சேர் சித்திரையில் ஆதிரையில்
அவதரித்தான்'' (269)
என ஸ்ரீ இராமானுஜ வைபவத்தில் பாடப்பட்டுள்ளது. முதலில் யாதவப் பிரகாசர் என்கிற குருவின்மூலம் வேதாந்த பாடங்களைக் கற்ற இவர் 32-ஆம் வயதில் காவியாடை உடுத்தி, திரிதண்டங்களை ஏந்தி துறவறத்தை உவந்து மேற்கொண்டார். அதன்பிறகு இவரை இராமானுசமுனி என்றும் அழைத்தனர். முதலியாண்டான், கூரத்தாழ்வான் போன்ற சீடர்களைப் பெற்ற ஸ்ரீஇராமானுஜர் பல வைணவ திருத்தலங்களுக்கு திக்விஜயம் சென்ற சமயத்தில் கலியுக வரதனின் திருமலைக்கு வருகைதந்தார்.
சங்க நூலான தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியரின் சமக்கால புலவரான பனம்பாரனாரின் உரை நூலில் அன்றைய தமிழகத்தின் எல்லையைப் பற்றி சொல்லும்போது,
"வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து...''
(சிறப்பும் பாயிரம்)
என எழுதியுள்ளார். அன்றைய காலத்தில் வேங்கடம் என்கிற திருப்பதி தமிழகத்தின் வடக்கே இருந்துள்ளது. திருப்பதி திருவேங்கட முடையானை போற்றி வைணவ நெறியின் அருளாளர்களான ஆழ்வார்கள் தமிழில் பாசுரங்களைப் பாடியுள்ளனர். இதைத்தான் பிள்ளைப் பெருமாளையங்கார் எழுதிய "திருவேங்கடமாலை' என்கிற வெண்பாவில், "ஆழ்வார்கள் செந்தமிழை யாதரித்த வேங்கடமென்'' எனச் சொல்லப் பட்டுள்ளது.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருவேங்கடமுடையானின் திருக் கோவிலுக்கு ஸ்ரீ இராமானுஜர் தன் சீடர்களுடன் முதலில் கீழ்த்திருப்பதிக்கு வருகைதந்தார். இவரது வருகை பற்றிய செய்தியை அறிந்த அப்பகுதியை ஆண்ட விட்டலதேவன் என்கிற சிற்றரசன் ஸ்ரீ இராமானுஜரை வணங்கி அவருக்கு குரு காணிக்கையாக இளமண்டியம் என்கிற பெயர்கொண்ட கிராமத்தை தானமாக வழங்கினார். தானமாகப் பெற்ற நிலத்தை அவ்வூரைச் சேர்ந்த ஏழைகளுக்கு சரிசமமாக பிரித்துக்கொடுத்துவிட்டு தன் பயணத்தை மேற்கொண்டார்.
திருமலையில் கொலுவீற்றிருக்கும் ஏழுமலையானின் திருவுடல்தான் ஏழுமலைகளும்! எனவே புனிதமான மலைகளை தனது முழங்காலால் தவிழ்ந்த வண்ணம் தரையில் கால் படாமல் சிரமப்பட்டு மலை ஏறினார். இவர் திருவேங்கடமுடையான்மீது வைத்திருந்த அபார பக்தியை என்னவென்று சொல்வது? இப்படி சிரமப்பட்டு திருமலைக்கு ஸ்ரீ இராமானுஜர் ஏறிவரும் செய்தியைக் கேட்டு பெரிய திருமலை நம்பி என்கிற வைணவ மகான் மிகவும் சந்தோஷப்பட்டார். தன் சீடரான ஸ்ரீ இராமானுஜரை (இளையாழ் வார்) சம்பிரதாய முறைப்படி எதிர்கொண்டு மரியாதையுடன் அழைக்க அவரே திருமலையிலிருந்து கீழே இறங்கிவந்தார். குருவே தன் சீடரை வரவேற்க வந்த செயலைக்கண்டு அனைவரும் ஆச்சரிப் பட்டனர்.
திருமலைக்கு எழுந்தருளிய ஸ்ரீ இராமா னுஜர் முதலில் புஷ்கரணியில் நீராடிவிட்டு ஸ்ரீ வராஹ பெருமாளை தரிசனம் செய்தபின்னர் திருக்கோவிலுக்கு சென்று திருவேங்கட பெருமாளை கண்குளிர தரிசனம் செய்தார். பின்னர் சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பூஜை விதிமுறைகளை மாற்றியமைத்தார். அவைதான் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீ இராமானுஜர் திருமலையில் திருவேங்கடமுடையானை தன் வாழ்நாளில் மூன்றுமுறை தரிசனம் செய்ததாக தெரிகிறது.
ஸ்ரீமந் நாராயணனே "பரம்பொருள்.' எனவே அவன்பால் பக்தி செலுத்த வேண்டும் என போதித்த ஸ்ரீ இராமானுஜரின் எண்ணப்படி புனித புரட்டாசி மாதத்தில் வைகுண்ட நாதனான திருவேங்கடமுடையானை திருமலைக்கு சென்று தரிசனம் செய்வோம்!