"நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.'
-திருவள்ளுவர்
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக்கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
அரண்மனையில் வைக்க தத்ரூபமான சேவல் ஓவியம் வாங்க நினைத்தார் மன்னர். அந்த தகவல் காட்டுத்தீபோல் பரவியது. ஓவியர்கள் அங்கு கூடினர். அவர்கள் வரைந்த ஓவியத்தைப் பார்த்தார் மன்னர். எதுவும் திருப்தி ஏற்படுத்தவில்லை.
நட்புறவில் இருக்கும் நாட்டு ஓவியர்களுக்கும் சேவல் ஓவியம் வேண்டி அறிவிப்பாக ஓலை அனுப்பினார் மன்னர். குறிப்பிட்ட நாளன்று வரைந்த ஓவியங்களை மன்னர் பார்வைக்கு வைத்தனர் அங்குள்ள ஓவியர்கள்.
அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்தார் மன்னர்.
அதற்காக சிறுவயதில் தனக்கு ஓவியம் கற்பித்த ஆசிரியரை நீதிபதியாக நியமித்து அறிவித்தார் மன்னர்.
அனைத்து ஓவியங்களையும் பார்த்தார் ஓவிய ஆசிரியர்.
அவரிடம், "சிறந்த ஓவியத்தை தேர்வுசெய்துவிட்டீரா...' என கேட்டார் மன்னர்.
எதுவும் தகுதியானது இல்லை. வேண்டுமென்றால் இந்த அறையில் சேவல்களை விடுவோம். தன் இனத்தைப் பார்த்ததும் அவற்றுக்கு சண்டை போடத் தோன்றும். எந்த ஓவியத்தைப் பார்த்து சண்டையிடுகிறதோ அதுவே மிகச்சிறந்தது என முடிவு செய்வோம். ஓவியர் கூறிய ஆலோசனையை ஏற்றார் மன்னர்.
ஓவிய அறையில் நிறைய சேவல்களை விட ஏற்பாடு செய்யப்பட்டது. சண்டை போடாமல், எந்த உணர்வையும் காட்டாமல் ஒவ்வொன்றாய் வெளியேறின சேவல்கள்.
"குருவே... சண்டை போடத் தூண்டும் சேவல் ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது...' ஓவிய ஆசிரியரிடம் மன்னர் கேட்டார். "உங்கள் சித்தம். எனக்கு ஆறுமாதகால அவகாசம் தேவை மன்னா...' வேண்டுகோளை ஏற்று சம்மதம் தெரிவித்தார் மன்னர்.
ஆறு மாதத்திற்குப்பின் அதே அறையில் அனைத்து ஓவியர்களும் கூடினர். ஓவிய ஆசிரியர் கையில் ஓவியம் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மன்னரிடம் "சிறிது நேரம் பொறுத்திருக்க வேண்டுகிறேன். அரண்மனையில் அரைமணி நேரத்தில் நீங்கள் விரும்பிய ஓவியத்தை வரைகிறேன் அதற்கு உபகரணங்கள் தேவை' என்றார் ஓவிய ஆசிரியர்.
உபகரணங்கள் வழங்கப்பட்டன. மற்ற ஓவியங்களுடன் தான் வரைந்ததையும் வைத்தார் ஓவிய ஆசிரியர். மீண்டும் அறைக் குள் சேவல்கள் அனுப்பப்பட்டன.
ஓவிய ஆசிரியர் வரைந்த ஓவியத்தைக் கண்டதும் தடுமாறியபடி சண்டைக்குச் சென்றது ஒரு சேவல். போட்டியில் வெற்றி அடைந்தார் ஓவிய ஆசிரியர். "குருவே தாங்கள் ஆறு மாதமாக ஓவியம் வரையாமல் கடைசி தருணத்தில் அரைமணி நேரத்தில் வரைந்தது ஏன்....' என்றார் மன்னர்.
"நீங்கள் வழங்கிய கால அவகாசத்தில் சேவல்கள் எப்படி நடக்கிறதோ, தூங்குகிறதோ, உணவு உண்கிறதோ அதுபோன்றே நானும் செயல்பட்டேன். இடைப்பட்ட காலத்தில் அவற்றுடன் ஒன்றிப் போய்விட்டேன். பின் நிதானமாக சேவல் ஓவியத்தை வரைந்தேன்' என்றார் ஓவிய ஆசிரியர்.
எந்தச் செயலிலும் முழு ஈடுபாடு அவசியம் என்பதை உணர்ந்தார் மன்னர்.
குழந்தைகளுக்கு அடிப்படை உறவுகளை அறிமுகம் செய்யும்போது "மாதா, பிதா, குரு, தெய்வம்' என்று வரிசைப்படுத்தி அறிமுகப்படுத்துவது மரபு. இதில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் உறவுகளுக்கும், குழந்தைக்கும் இந்த பந்தமுண்டு. இறுதியில் இருக்கும் தெய்வத்திற்கு படைத்தவன் என்ற பந்தமுண்டு.
ஆனால் எந்தவித பந்தமும் இல்லாமல் சம்பந்தப்பட்டு, குழந்தையை இறைவனிடம் சம்பந்தப்படுத்துவதுதான் குருவின் கருணை. "கு' என்றால் இருள். "ரு' என்றால் நீக்குபவர். இருளை நீக்கி அருளைப்பெற ஆற்றுப்படுத்துபவர்தான் குருநாதர். தாயின் இடத்தை தகுந்த தந்தையால் நிறைவு செய்யமுடியும். தாய் மற்றும் தந்தையாகிய இருவரின் இடத்தையும் சரியான குருநாதரால் சமன் செய்யமுடியும்.
குருவைப் பற்றிக்கொண்டால் போதும். கட்டாயமாகத் திருவருள் கிடைத்தே தீரும். 63 நாயன்மார்களில் அப்பூதியடிகள் என்பவர் சிவபெருமானை வழிபடவில்லை. சிவபெருமானை வழிபட்ட திருநாவுக்கரசரைத்தான் வழிபட்டார்.
அவரைப் பொறுத்தவரை "நமசிவாய' என்பதைவிட "நாவுக்கரசு' என்பது அவருக்கு பஞ்சாட்சரம்.
காட்டுவழியில் நடக்க முற்படும்போது, அதற்குமுன்பே ஒருவர் அவ்வழியில் நடந்திருந்தால் கல்லோ முள்ளோ குத்தி கால்வலி ஏற்படாமல் எந்த சிரமமுமின்றி சேரவேண்டிய இடத்துக்கு போய்ச்சேரலாம். காரணம் அவரின் தடம் பதித்த வழி சற்று சௌகரியமாக இருக்கும்.
அதுபோல் இறைவழிபாட்டில் நாமே ஒரு வழியில் சென்றால் இலக்கை அடைவது சற்றுக் கடினம்தான். காரணம் வழியில் பல துன்பங்கள் இருக்கலாம். ஏன், நாம் தேர்ந்தெடுத்த வழி தவறாகக் கூட இருக்கலாம். அதுவே குருவாக வந்து ஒருவர் கூட இருந்து வழி காட்டினால் திருவருள் பெறுவதில் எந்தத் தடங்கலும் இருக்காது.
அடர்காட்டுக்குள் கிடைக்கும் வெளிச்சத்தைப் போன்றது ஆண்டவன் வழிபாட்டில் ஆசானின் வழிகாட்டல். அவர் காட்டும் ஒளி நம் அறியாமை இருட்டைப் போக்கவல்லது. குருவருளால் திருவருள் கிடைத்தே தீரும் என்பது ஆன்றோர் வாக்கு.
எந்தச் செயலிலும் முழு ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதை உணர்ந்த மன்னரைப்போல், அப்பூதியடிகளைப்போல் நால்வர் காட்டிய வழியில் வாழ்க்கைப் பயணத்தை இறைவழிபாட்டுடன் தொடர்ந்து பயணித்தால் குருவருளுடன் திருவருள் கிட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றதொரு உன்னதமான திருத்தலம் தான் தென் குரங்காடுதுறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்.
இறைவன்: ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்.
இறைவி: அருள்மிகு பவளக்கொடி அம்மன்.
புராணப் பெயர்: தென்குரங்காடுதுறை.
ஊர்: ஆடுதுறை.
தலவிருட்சம்: பவளமல்லி.
தீர்த்தம்: சகாய தீர்த்தம், சூரிய தீர்த்தம்.
மாவட்டம்: தஞ்சாவூர்.
சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இவ்வாலயம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 94-ஆவது தலமாகவும், காவிரி தென்கரை ஸ்தலங்களில் 31-ஆவது தலமாகவும் சிறந்து விளங்குகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகளோடு இன்னும் பல்வேறு சிறப்பம்சங் களைப் பெற்றதொரு திருத்தலம்தான் ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக் கோவில்.
"நற்றவஞ் செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி யாவருள் செய்தநல்
கொற்ற வன்குரங் காடு துறைதொழப்
பற்றுந் தீவினை யாயின பாறுமே.'
-அப்பர்
காவிரித்தாய் வளமாக்கும் திருவூர்கள் நிறைந்த சோழ தேசத்தில் இரண்டு குரங்காடுதுறைகள் உண்டு. ஒன்று திருவையாற்றிற்கு அருகிலுள்ள வடகுரங்காடுதுறை, மற்றொன்று ஆடுதுறை எனப் படும் தென்குரங்காடுதுறை. திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் இத்தலம்மீது பாடி யருளியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தலமுருகன்மீது திருப்புகழ் பாமாலை ஒன்றை சூட்டியுள்ளார். சுக்ரீவன், ஹரதத்தர், அனுமன், அகத்தியர் உள்ளிட்ட இன்னும் பலர் வழிபட்டுப் பேறுபெற்ற ஸ்தலம்.
தல வரலாறு
இராமாயண காலத்தில் கிஷ்கிந்தை நாட்டை ஆட்சி செய்தவன் வானர அரசனான வாலி. அவனது சகோதரன் சுக்ரீவன். வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாலியைக் கண்டு அச்சமடைந்த அசுரன் புதர்கள் நிறைந்த ஆழமான இருண்ட குகைக்குள் சென்று ஒளிந்துகொண்டான். இதனால் தம்பி சுக்ரீவனை குகைக்கு வெளியே காவல் இருக்கச் செய்துவிட்டு, மற்ற வானரர்களுடன் குகைக்குள் சென்றான் வாலி.
ஆனால் ஒரு வருடம் முடிந்த பின்னரும் வாலியைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை. குகைக்குள் சென்ற வானரங்கள் அனைவரும் வந்துவிட்டநிலையில் வாலி மட்டும் வரவில்லை. மேலும் அவ்வப்போது அபயக்குரல் கேட்பதும் ரத்தம் வெளிவருவதுமாக இருந்ததால் வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுக்ரீவன் கருதினான்.
பின்னர் தன் சகோதரனைக் கொன்றவன் வெளியே வரக்கூடாது என்பதற்காக குகையின் வாசலை ஒரு பெரும்பாறையால் மூடிவிட்டு கிஷ்கிந்தைக்குத் திரும்பினான். அரசவை அமைச்சர்கள், சுக்ரீவனை அரியணையில் அமர்த்தி பட்டாபிஷேகம் செய்துவைத்தனர்.
சுகரீவனும் நீதிநெறிப்படி அரசாட்சி செய்துவந்தான். சில மாதங்கள் கழித்து, அனைவரும் வியக்கும்வகையில் வாலி உயிருடன் வந்து நின்றான். அவன் அசுரனைக் கொன்றுவிட்டு திரும்பியபோது குகை மூடியிருப்பது கண்டு அதிர்ந்தான்.
கிஷ்கிந்தை வந்தபோது சுக்ரீவன்
அரசாட்சியில் இருப்பதைப் பார்த்ததும் வாலிக்கு கடும் கோபம் உண்டானது. குகைவாசலை மூடிவிட்டு ராஜ்ஜியத்தைக் கைப்பற்றியதாக சுக்ரீவன்மீது குற்றம் சாட்டி, அவனை நாட்டைவிட்டே வெளியேற்றி னான் தன் தவறான அனுமானத்தால் அண்ணனுக்குத் தீங்கு இழைத்து விட்டதாகக் கருதிய சுக்ரீவன் அதற்கு பிராயச்சித்தம் தேடினான். மிகவும் வல்லமை படைத்தவன் ஆயிற்றே அந்த வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் (அதாவது தனது அண்ணனால்) தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க ஆடுதுறை அரவச்சடை அந்தணன் ஆகிய அரனை அடைக்கலம், புகுந்து நின்று தன்னைக் காப்பாற்றியருளுமாறு வேண்டிக்கொண்டான். அப்போது சிவபிரான் சுக்ரீவனை அன்னப் பறவையாகவும், அவன் தேவியை பாரிஜாத மரமாகவும் (பவள மல்லிகை மரம்) வேற்றுருக்கொள்ளச் செய்து காப்பாற்றியருளினான்.
சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தைப் போக்கியருளி அவனுக்குச் சகாயம் செய்தமையால் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் எனவும், துன்பத்தில் துணைவர் எனவும் வழங்கப்படுகின்றார்.
அம்மையின் திருநாமம் பிரபாள வல்லி என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ப் முன்னொரு சமயம் திருக்கயிலை மலையில் கல்லும் கரைந்து உருகும்படி இசை பாடிக்கொண்டிருந்தார் அனுமார். அவ்வழியே வந்த நாரதர் அந்த இசையைக் கேட்டு மெய்மறந்து அங்கே அமர்ந்திருந்தார். பிறகு அவர் புறப்படும்போது கீழே வைத்திருந்த மஹதி எனும் வீணைமீது பனி மூடியதால் எடுக்க இயலாமல் புதைந்திருந்தது. அதுகண்ட நாரதர் வெகுண்டு அனுமானை நோக்கி "உன் இசையை நீ மறப்பாயாக' என்று சபித்தார். பின்னர் மனம் வருந்திய அனுமன் தன்னுடன் மன்னவன் சுக்ரீவன் வழிபட்ட இத்தென் குரங்காடு துறைக்கு வந்து ஆபத்சகாயேஸ்வரரை மனமுருகி வழிபட்டார். மறந்துபோன இசை ஞானத்தை மீண்டும் பெற்று களிப்படைந்தார்.
ப் ஹரதத்தர் என்பவர் கஞ்சனூரில் அவதரித்த வைணவ பக்தர். இவர் இளம் பருவம் முதற்கொண்டே சிவபக்தி மிக்கவராகக் கஞ்சனூரில் உள்ள சிவாலயத் தில் எழுந்தருளியிருக்கும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டுச் சிவஞானம் கைவரப் பெற்றவர். பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலிமீது ஏறி நின்று சிவபரத்துவத்தைத் தாபித் தவர். இவர் நாள்தோறும் கஞ்சனூர், திருக்கோடிக்கா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, திருமங்கலக் குடி, திருமாத்துறை, ஆடுதுறை ஆகிய ஏழு சிவத்தலங் களை தரிசித்த பின்னரே உணவு உட்கொள்ளும் நியமம் உடையவர். ஒருநாள் வழக்கம்போல ஆடுதுறையை வழிபட்டு மீளும்போது மழைபெய்தது. இருளும் அடர்ந்தது. வழி தெரியாமல் திகைத்து நின்றார். ஆபத் சகாயேஸ்வரர் வயோதிக அந்தண வடிவங்கொண்டு, கோல் தாங்கிய கையினராய் அவருக்கு வழித்துணையாகச் சென்று அவரது இல்லத்தில் அவரைவிட்டு வந்ததாக தலபுராணம் சொல்கிறது.
ப் திருமங்கலக்குடியில் வைணவப் பெண் ஒருத்தி வாழ்ந்துவந்தாள். அவள் ஆபத்சகாயர்மீது அளவு கடந்த பக்திகொண்டு வழிபடுவது வழக்கம். ஒருநாள் நிறைமாத கர்ப்பிணியாகிய அவள் ஆடுதுறை அரனை தரிசிக்க வந்தாள். தரிசித்துத் திரும்புபோது காவிரியில் வெள்ளம் பெருகியது. ஓடக்காரனும் இல்லை. ஊர் செல்ல இயலாமல் உடல் நோக இத்தலத்தை வந்தடைந்தாள். ஆபத்சகாயேஸ்வரரை மனமுருகி வேண்டினாள்.
அப்பெருமான் "தாயும் நீயே, தந்தையும் நீயே' என வரும் திருஞானசம்பந்தரின் வாக்குப்படி தாயாகத் தோன்றி உதவியருளி னார். சுகப்பிரசவமாயிற்று. பின்னர் திருமங்கலக்குடிக்கு சென்று அவர் பெற்றோரிடம் சுகப்பிரசவச் செய்தியைச் சொல்லி, "தாயும் சேயும் நலம், சென்று அழைத்துவாருங்கள்' என்றார். "தாங்கள் எந்த ஊரினர்?' என்று வினவ "மருத்துவக்குடி' என்று சொல்லி இருப்பிடம் மீண்டார்.
ப் சிவத்தலங்கள் பலவற்றை தரிசித்துக்கொண்டு வரும்போது அகத்தியர் இத்தலத்தை வந்தடைந்தார். சுவர்ண பைரவர் திருஉருவத்தை பிரதிஷ்டைசெய்து வழிபட்டுப் பல வரங்களைப்பெற்று மகிழ்ந்தார். சொர்ணபைரவரை வழிபட நினைத்த காரியம் எளிதில் கைகூடும். தீராத நோய்கள் தீரும். தனம் தானியம் பெருகி புகழ் உண்டாகும்.
ப் ஸ்ரீ நடராஜப் பெருமான் தில்லைப் பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடியருளினார். அந்த நடனத்தை கோடானுகோடி தேவர்கள் கண்ணுற்று மகிழ்ந்தனர். ஆனால் அகத்தியரும் சில முனிவர்களும் இந்நடனத்தைக் காணாது வருந்தினர். அதோடு பல தலங்களை வழிபட்டு தென்குரங்காடுதுறை வந்த அகத்தியர் இத்தல இறைவனிடம் வேண்டினார்.
அவர் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த பெருமான் ஆனந்த நடனத்தை இத்தலத்திலேயே ஆடியருளினார். இதனால் இப்பகுதிக்கு "நடராஜபுரம்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இறைவன் ஆனந்த நடனம் ஆடியதன் அடையாளமாக கோவில் தெற்குப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் அகத்தியர் நடராஜர் திருவுருவப் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன.
ப் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 5, 6, 7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நதிக்கு எதிரிலுள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமிமீது படுகின்றன.
ப் பாண்டிய மன்னர்கள் மாறன் சடையன், 8-ஆம் நூற்றாண்டில் சடாவர்மன், திருப்பணி செய்துள்ளதாக வேள்விக்குடி சாசனம் சொல்கிறது. சோழர்காலத்தில் உத்தமசோழன் (கி.பி. 970-86), முதலாம் இராசராசன் முதற்குலோத்துங்கள், வீர ராசேந்திரன் ஆகியோர் திருப்பணி மேற்கொண்டதாக வும், கண்டராதித்தர் தேவியார் செம்பியன் மாதேவியார் இக்கோவிலை கற்கோவிலாக ஆக்கினார். சுக்ரீவன் வழிபடுவதற்கு முன் இறைவன் திருக்குரங்காடுதுறை மகாதேவர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளார். இக் கோவிலுக்கு கி.பி. 994-ல் 8 மாநிலம் இறையிலியாக கொடுத்துள்ளார். முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் நந்தாவிளக்குக்காகத் தானம் செய்யப்பட்டுள்ளது.
"சுங்கம் தவிர்த்த சோழப் பேராறு' என்று அரசன் பெயரில் ஓர் ஆற்றுக்கு பெயரிடப் பெற்றது. தற்போது "வீரசோழன் ஆறு.' முதலாம் இராசராசன் காலத்தில் தென்கரை திரைமூர் நாட்டு திருத்தென் குரங்காடுதுறை எனவும்; திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் "பூபால குலவல்லி வளநாட்டுத் திரைமூர் நாட்டுத் திருக்குரங்காடுதுறை எனவும் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இவ்வூருக்கு அண்மையில் உள்ள மருத்துவக்குடி என்னும் ஊரின் பெயரும் கல்வெட்டில் உள்ளது. இம்மருத்துவக்குடியே திருஇடைக்குளம் என்னும் தேவார வைப்புத்தலமாகும். இச்செய்தி 21-ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்தை சார்ந்தது.v ப் சூரியனைப் பார்த்தபடி மற்ற எட்டு கிரகங்கள் வக்ரகதியில் லாமல் அபூர்வ அமைப்பில் அமைந்துள்ளதால் இத்தலத்தில் தந்தை-மகன் உறவில் பிரச்சினை இருந்தால் சூரியன், சனி பகவானுக்கு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடுகள் மேற் கொண்டால் தந்தை- மகன் உறவு பலப்படும் மற்றும் தொழில், பொருளாதாரம் மேம்படும் என்றும், பௌர்ணமியில் அகத்திய ருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறை வேறும் என்றும் ஆலய அர்ச்சகர் ஹரதத்த குருக்கள் கூறுகிறார்.
ஆபத்து வரும்போதும், ஆற்றாமை ஏற்படும் சமயத்திலும் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவது உலக உயிர்களின் இயல்பு. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இராமாயண காலத்திலிருந்து இன்றுவரை எத்தனையோ விதமான ஆபத்துக்களில் இருந்து... அதாவது வாலியால் துரத்தப்பட்ட சுக்ரீவனுக்கு ஈசனின் அருளோடு ஸ்ரீராமரின் அருள் கிடைத்துதான் இழந்த செல்லவங்களைப் பெற்றாரே அதைச் சொல்வதா... ஹரதத்தருக்கு கோல் தாங்கிய கையோடு வழித்துணையாய் உதவினாரோ அதைச்சொல்வதா... திருமங்கலக்குடியைச் சார்ந்த பக்தைக்கு இத்தல அம்மன் பவளக்கொடி மருத்துவச்சியாக சென்று சுகப்பிரசவம் பார்த்து நலம் உண்டாக்கினாளே.... அதைச் சொல்வதா... அகத்தியருக் கும் முனிவர் கட்கும் ஆனந்த நடனம் ஆடினாரே திருவாதிரை நட்சத்திரத்தன்று அதைச் சொல்வதா... தேய்பிறை அஷ்டமியன்று சொர்ணபைரவரிடம் விண்ணப்பம் வைத்தால் எதிரி பயம், மன அழுத்தமில்லாமல் லட்சுமி கடாட்சம் கிடைக்கிறதே... அதைச் சொல்வதா, அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமான் மிதமிஞ்சிய தைரியத்தை கொடுக்கிறாரே அதைச் சொல்வதா "நீக்கம் இலா நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற தென் குரங்காடுதுறைச் செம்மலே' என்று விண்ணப்பக் கலிவெண்பாவில் வள்ளல் பெருமானும், இத்தல இறைவனை தனது பதிகத்தால் பாடி தொழுபவர்கள் வானவர்களோடு உறையும் சிறப்பைப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தரும், இத்தல இறைவனை தொழுதால் பற்றுகின்ற தீவினைகள் யாவும் கெட்டுவிடும் என்று தனது பதிகத்தில் திருநாவுக்கரசரும் இத்தல மகிமையை பாடியுள்ளார்களே... அதைச் சொல்வதா... நட்சத்திரக் கோவில்களில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு பரிகாரத் தலமாகவும் விளங்குகிறதே அதைச் சொல்வதா... பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இத்தலத்திற்கு வருகை தரமுடியும் என்று தலபுராணம் சொல்கிறதே... அத்தகைய ஆடுதுறை திருத்தலத்திற்கு பிறக்கின்ற ஆங்கிலப் புத்தாண்டின் 2025 முதல் மாதத்திலே வருகை தாருங்கள். ஆபத்திலிருந்து காப்பாற்றி அருளைத் தந்தருளும் சுயம்புமூர்த்தியாய் எழுந்தருளி ஆபத்சகாயேஸ்வரர் ஆண்டு முழுவதும் நற்பலன் தருவதோடு வாழ்நாள் வளம் பெறச் செய்வார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய தலைமை அர்ச்சகர் ராஜவேல் சிவாச்சார்யார்.
திருக்கோவில் அமைப்பு
நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப் பெற்று நீர்வளம், நிலவளமிக்க ஆடுதுறையில் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தின் முன்புறம் சகாய தீர்த்தக்குளம், சூரிய தீர்த்தக் குளம் காணப்படுகிறது. இரண்டு பிராகாரங்களுடன் முதலில் துவார கணபதி, நந்தி, பலிபீடம், கொடிமரம் என்று வரிசை. பின்னர் வெளிப்புற மண்டபம் உள்ளது.
உட்புறம் தெற்கு பார்த்தபடி சிரித்தவண்ணம் நின்ற நிலையில் பவளக்கொடியம்மன் சந்நதி உள்ளது. மீண்டும் மகாமண்டபம் வந்து நேராக நடக்க இடைமண்டபம் வருகின்றது. வாயிலின் மேல்மாடத்தில் சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாகவும், அவன் துணைவியை பாரிஜாதம் எனும் பவள மல்லிகை மரமாகவும் உருமாற்றிய தலவரலாறு சுதை வடிவில் காட்சியளிக்கிறது.
அடுத்ததாக அர்த்தமண்டபம், மூலஸ்தானம், மூலஸ்தானத்தில் அற்புதலிங்கத் திருமேனி கொண்டு சுயம்புமூர்த்தியாய் ஆபத்சகாயேஸ் வரர் அருட்காட்சியளிக்கிறார். சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. தேவ கோஷ்டத்தில் நடராஜர். சிவகாமி சிலாரூபம் உள்ளது. கருவறை அருகில் தெற்கு நோக்கி நடராஜர் சிவகாமி பஞ்சலோக சிலை உள்ளது. உள் பிராகாரம் நால்வர் சந்நதி உள்ளது.
கர்ப்பக்கிரகத்தின் தெற்கு சுவரில் அகத்தி யர், நடராஜர், தட்சிணாமூர்த்தி காரைக் காலம்மையார், விநாயகர் திருஉருவங்களை புடைச் சிற்பங்களாக காணலாம். கோவி லைக் கற்கோவிலாக அமைத்த கண்டராகத் தியர் மனைவி செம்பி யன் மாதேவியார் சிவபிரானை வழிபடும் புடைச் சிற்பத்தை காணலாம்.
மேற்கு மண்டபத்து திருமாலைப் பத்தியில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், கஜலட்சுமி, பண்டைய வரலாற்று பவளக் கொடியுடன் ஆபத் சகாயர், சுக்ரீவனை தரிசிக்கலாம். கருவறை பின்கோஷ்டத்தில் சோதிவடிவாக அண்ணாமலை, திருமால், பிரமன் புடைச் சிற்பம் காணலாம். வடக்கு நோக்கி பிரம்மா மற்றும் எட்டு திருக்கரங்களுடன் காட்சி நல்கும் துர்க்கையை தரிசிக்கலாம். அருகில் கங்காவிசர்சன மூர்த்தியும், சொர்ண பைரவரையும் தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் தனிச் சந்நதி உள்ளது. உள் பிராகாரத்தில் தீர்த்தக்கிணறு உள்ளது.
சூரியன், சனீஸ்வரர், பாணலிங்கம், ஹரதத்தர் ஆகிய திருஉருவங்கள் அமைந்துள்ளன. அருகில் சூரியனைப் பார்த்தபடி அனைத்து கிரகங்கள் சிறப்பான அமைப்பில் உள்ளன. வெளிபிராகாரத்தில் தலவிருட்சம் பவளமல்லிகை மரம் மற்றும் வில்வமரம் உள்ளது.
நடை திறப்பு: காலை 6.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
திருவிழா: மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் தைப்பூசம் மற்றும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி காலங்களில் சிறப்பு ஹோமம். சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், அ/மி ஆபத்சகாயேஸ்வரர் திருக் கோவில், தென்குரங்காடுதுறை ஆடுதுறை (அஞ்சல்) திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர்- 612 101.
பூஜை விவரங்களுக்கு: டி. சரவணகுமார்- 83004 09188, கோவில் கணக்கர், ஆர். ஜெயக்குமார்- 94883 80499, மெய் காவலர் சி. பாலகுரு- 96007 65915. டி.ராஜவேல் சிவாச்சார்யார்- 96262 78648, ஹரதத்த குருக்கள்- 96294 78766.
அமைவிடம்: தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட ஆடுதுறை என்னும் தலம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலை யிலிருந்து இரண்டு நிமிடம் நடைபயணம் சென்றால் ஆலயத்தை அடையலாம். பேருந்து வசதி நிறைய உள்ளது.
படங்கள்: போட்டோ கருணா