தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகப் பெரு மானிடம் தாங்கள் எழுதிய "திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத் தின் 658 பாடல்களையும் சொல்லச் சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.எழுதிக்கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சந்நிதி முன்பு வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்த பெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.
ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் ""மாணிக்க வாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்'' எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்தது.
மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்க வாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்த வற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள். ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் "" ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டது தான்"" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.
தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச் சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர். மாணிக்கவாசகர், மந்த காசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக்காட்டி "இப்பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள்" என்றார்.
அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்துவிட்டார். ஆக, ஆனி- மகம் மாணிக்க வாசகரின் குருபூசை நாள் ஆகும்.
சிறப்பு- 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.
சிறப்பு- 2 சிவபுராணத்தின் முதல் ஆறு வரிகள் வாழ்க என முடியும்.
சிறப்பு- 3 அதை அடுத்த ஐந்து வரிகள் வெல்க என முடியும்.
சிறப்பு- 4 அடுத்த எட்டு வரிகள் போற்றி என முடியும். இவ்வாறு 6, 5, 8 என அமைந்திருப் பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.
சிவபுராணத்தின் 32-ஆவது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும். திருவாசகத்தின் 18-ஆவது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
ரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
காஞ்சி மகாபெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.
பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.
அவர்களுக்கு வரிசையாக ஆறு குழந்தைகள் பிறந்தன.
""புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்'' என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-06/siva.jpg)