திருப்பாற்கடலில் பாம்பின்மீது பள்ளிகொண்ட திருமாலின் அம்சமான இராமபிரானைப் பற்றி கவிச் சக்கரவர்த்தி கம்பர், "நாகனைத் துயிலிற் றீர்ந்தான்' எனச் சொல்கிறார். பல நற்குணங்கள் வாய்ந்த அவதார புருஷனை இராமபிரானின் அவதாரம் பற்றி திருமங்கையாழ்வார்-

"வையாமெல்லாம் உடன் வணங்க

வணங்கா மன்னனாய்த் தோன்றி

வெய்ய சீற்றங் கடியிலங்கை

Advertisment

குடி கொண்டோட வெஞ்சமத்துச் செய்த

வெம்போர் நம்பரனை'

என வியந்து பாடுகிறார். அப்பேற்பட்ட இராம பிரான் போரில் இராவணனை வென்றபிறகு அயோத்தி மாநகரில் அரசனாக முடிசூட்டிக்கொண்டு, இல்லற தர்மத்துடன் சீதாதேவியுடன் வாழ்க்கையை நடத்திக் கொண்டு நாட்டையும் திறம்பட நல்லாட்சி புரிந்து வந்தார்.

Advertisment

சீதாதேவி கருவுற்ற சமயத்தில் நாட்டுமக்களின் அபவாதத்தைப் போக்குவதற்காகவும், தன் மனைவி உத்தமி என்பதை நிரூபிக்கவேண்டியும் சீதாதேவியை மீண்டும் தனியாக காட்டில் வசிப்பதற்குரிய ஏற்பாடு களைச் செய்தார். காட்டில் வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் தங்கியிருந்த சீதாதேவிக்கு லவன், குசன் என்னும் இருபிள்ளைகள் பிறந்தனர்.

சென்னையைச் சுற்றியுள்ள சிவன் கோவில்களுக்கும் சீதாதேவி, லவன், குசன் வாழ்க்கைக்கும் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பது ஆச்சரியமான ஒன்றா கும். அதில் குறிப்பாக, சென்னை திருமங்கலம் அருள்மிகு திருமங்களாம்பிகை சமேத திருமங்கலீஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கும், திரேதாயுக காலமான இராமாயண காலத்திற் கும் இருந்த தொடர்பு வெளியுல கத்திற்குத் தெரியாமலேயே இருந்துள்ளது.

இராவணனுடன் போர் முடிந்தபிறகு இராமபிரான் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க இராமேஸ்வரத்தில் சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதேபோல் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமாவில் பார்வதிதேவி கேட்டுக் கொண்டதற்கிணங்க,

"ஸ்ரீ ராமராம ராமேதி ரமே

ராமே மனோரமே

சகஸ்ரநாம தத்துல்யம்

ஸ்ரீ ராம நாம வரானனே'

என்னும் சுலோகத்தை, இராமபிரானின் பெருமையை விளக்கும் வண்ணம் பரமசிவன் அருளிளார். இப்படி இராமபிரான் சிவ பெருமானின்மீது பக்தியை யும், சிவபெருமான் இராம பிரானிடம் அன்பையும் கொண்டிருந்தனர்.

காட்டில் சீதாதேவி தன் குழந்தைகளுடன் வால்மீகி ஆசிரமத்தில் தங்கியிருந்த சமயத்தில், வால்மீகி மகரிஷி குழந்தைகளுக்கு வில்வித்தைகளை இளம் வயதிலேயே கற்றுக்கொடுத்தார். இராமபிரான் அசுவமேத யாகத்தை நடத்த இருந்த சமயத்தில் யாக குதிரையை நாட்டின் பல பாகங்களுக்கு அனுப்பிவைத்தார்.

ss

அப்போது யாககுதிரை சீதாதேவி தங்கியிருந்த இடத்திற்கு அருகே வந்தபோது, அந்த குதிரையை லவனும் குசனும் அடக்கி தங்கள் இடத்தில் கட்டிவைத்தனர்.

அரசரின் குதிரையை மீட்க படைகள் வந்தன. முடியாமல் திரும்பிச் சென்றன. இலக்குவன் வந்தும் குழந்தைகளிடமிருந்து குதிரையை மீட்கமுடியாததால் ஆச்சரியப்பட்டு, கடைசியில் இராமபிரானே நேரில் வந்தார்.

வந்திருப்பவர் தங்கள் தந்தை என அறியாமல் லவன், குசன் இருவரும் போரிடத் தயாரானார்கள். அந்த சமயத்தில் வால்மீகி மகரிஷி உண்மையைச் சொன்னவுடன், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில்தான் இன்று சென்னை கோயம்பேட்டில் அறம்வளர்த்த நாயகி உடனுறை குறுங் காலீஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவலிங்கமான குறுங்காலீஸ்வரர் வடக்கு (குபேரன் திசை) நோக்கி அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் குடி கொண்ட முருகபெருமானைப் பற்றி அருண கிரிநாதர்-

"கோசை நகர் வாழவரு மீசடியர்

நேசசரு வேசமுரு காவமரர் பெருமாளே'

எனப்பாடியுள்ளார். இன்றைய கோயம்பேடு அன்றைக்கு கோசைநகராக இருந்துள்ளது.

இக்கோவிலுக்கு அருகேயுள்ள வைகுண்டவாசப் பெருமாள் திருக் கோவில் இருக்கும் இடத்தில், முன்பு வால்மீகி மகரிஷி சிறிது காலம் தங்கி யிருந்தார் என சொல்லப்படுகிறது.

சீதாதேவி இக்காட்டில் தங்கியிருந்த சமயத்தில், சீதாதேவி மற்றும் குழந்தைகளை வனதுர்க்கை காவல்புரிந்து பாதுகாத்துவந்தாள். மூவரும் வழிபட்ட சிவலிங்கத்திற்கு இலவபுரீஸ்வரர் என்று பெயர். இந்த இடம் தற்சமயம் கோயம்பேட்டில் பெரிய சிவன் கோவிலான குறுங்காலீஸ்வரர் திருக்கோவிலுக்கு அருகே யுள்ள சௌந்திராம்பிகை உடனுறை இலவபுரீஸ்வரர் திருகோவில் ஆகும். இக்கோவிலில் வனதுர்க்கைக்கு சிறிய சந்நிதி உள்ளது.

இந்த வனதுர்க்கை பற்றி இக்கோவில் அர்ச்சகர் டி.எஸ். சர்வேஸ்வரன் குருக்கள் சொல்லும்போது, "இங்கு குடிகொண்டுள்ள வனதுர்க்கை மிகவும் சக்திவாய்ந்த தேவதை. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். இந்த வனதுர்க்கை சந்நிதி போன்று தமிழ்நாட்டில் வேதாரணியத்திலும், கோயமுத்தூரிலும், சதுராமங்கலத்திலும் அமைந்துள்ளன. இந்த நான்கு இடங்களில்தான் வனதுர்க்கை புராண காலத்துடன் தொடர்புள்ளவளாக விளங்குகிறாள்'' என்றார்.

யாக குதிரையை மீட்கவந்த இராம பிரானுடன் வந்த வானர சேனைகள் தங்கியிருந்த இடம்தான் இன்று சென்னை வானகரத்தில் இருக்கும் கற்பகாம்பாள் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் என்கிறார்கள். வானரங்கள் தங்கியிருந்ததால் இவ்விடம் வானகரம் என அழைக்கப்படுகிறது. அவற்றைத் தங்க வைத்துவிட்டு இராமபிரான் மட்டும் இன்றுள்ள கோயம்பேடு பகுதியில் அடர்ந்த காட்டில் வசித்த லவன், குசன் இருவரையும் எந்தவழியில் எப்படி போய் சந்திப்பதென்று குழம்பியிருந்தபோது, வழியில் சிவபெருமான் தோன்றி கோயம்பேடு பகுதிக்கு வழி காட்டினார். மார்க்கத்தை காட்டிய (வழி காட்டுதல்) சிவனுக்கு மார்க்க சகாயேஸ்வரர் (வழித்துணை நாதர்) என்னும் பெயர் ஏற்பட்டது. அந்த சிவபெருமானுக்கு வானகரத்தை அடுத்த மதுரவாயிலில் கோவில் அமைந்துள்ளது.

கருவுற்ற சீதாதேவி தனக்கு நல்லமுறையில் குழந்தை பிறக்கவேண்டுமென சிவபெருமானை நித்தம் பூஜை செய்த இடம்தான் இன்று திருமங்கலத்தில் அமைந் திருக்கும் திருமங்கலீஸ்வரர் திருக்கோவில். இராமாயண காலத்திலேயே சுயமாகத் தோன்றிய சிவலிங்கத்தை ஆதிமூலநாதர் என்னும் பெயரில் அழைக்கிறார்கள். இந்த சிவலிங்கத்தைப் பூஜித்ததன் பலனாக சீதாதேவி இரண்டு நன்மக்களைப் பெற்றெடுத்து இவ்விடத்திலேயே சிலகாலங்கள் வளர்த்தாள். மிகப்பழமையான இந்த மூர்த்தி யைத்தான் சீதாதேவி அன்று வழிபட்டாள் என்பதை அறியும்போது மெய்சிலிர்க் கிறது. தற்சமயம் இம்மூர்த்தியானது மரக் குகைக்கிடையே அமைந்துள்ளது ஒரு இயற்கையின் விசித்திரம்.

சிவலிங்கத்தின் பிரம்ம பாகமும், விஷ்ணு பாகமும் தற்சமயம் பூமியில் புதைத்திருக்க, ருத்ர பாகம் மட்டுமே மேலே தெரியும் வண்ணம் உள்ளது. இராமாயண காலமான திரேதாயுகத்தில் இருந்த சிவலிங்க மூர்த்தியானது காலப்போக்கில் இயற்கைச் சூழல் மாற்றத்தால் பூமியில் புதைத்திருக்க வாய்ப்புண்டு. சுமார் 2,000 ஆண்டுகளுக்குமுன்பு இந்த மூர்த்தியின் மகிமையை ஒரு முனிவர் தனது தவ வலிமையால் உணர்ந்து, இப்பகுதியை ஆண்ட சிற்றரசனுக்குச் சொல்ல, முனிவரின் சொல்லுக்கு இணங்க சிறிய கோவிலைக் கட்டியுள்ளான். நெடுங்காலம்முன்பு இப்பகுதி பெருங்காடாக இருந்ததால் மக்கள் பல சிரமங்களுக்கிடையே வழிபட்டு வந்துள்ளனர். இயற்கை சீற்றத்தாலும், போதிய நிதி வசதி இல்லாததாலும், ஆட்சி மாற்றத்தாலும் சில ஆண்டுகளாக கோவில் சரியாகப் பராமரிக்க முடியாமல் சிதிலமடைந்துள்ளது.

சிவலிங்கத்தின் தொன்மையையும், மகிமையையும், தொன்றுதொட்டு செவிவழியாக கேட்ட செய்தியையும் அடிப்படையாகக்கொண்டு சில சான்று களுடன் இன்றைய கோவில் கமிட்டியி னர் பல சட்டப் போராட்டங்களுக்குப்பின்பு கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையும், தொன்மையான சிவலிங்கத்தையும் மீட்டுள்ளனர். அண்மையில் 2018-ஆம் ஆண்டு புதிய கோவிலை புதுப்பொலிவுடன் உருவாக்கி கும்பாபிஷேகத்தை நடத்தி யுள்ளனர். இன்றைக்கு இக்கோவில் இந்து சமய அறநிலையைத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது.

சிறிய குகைக்குள்ளே ஆதிமூலநாதர் வீற்றிருக்கிறார். லிங்கத்தைச் சுற்றி அரசமரம், வேப்பமரம், புங்க மரங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன. இதற்கு எதிரே பக்தர்கள் தியானம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் திருமங்கல நாதருக் கும், திருமங்களாம்பிகைக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

அஷ்டமங்கள தேவியர்கள் தினமும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். இதுபற்றி கோவில் குருக்கள் ஸ்ரீவத்ஸ சிவம் (அலைபேசி: 90030 97957) தெரிவிக்கையில், "சிவ அல்லது சிவம் என்றாலே மங்களம் என்று பொருள். சிவனுடன் அம்பாள் சக்தி இணையும்போது ஸர்வமங்களா என்னும் பெயரும் வருகிறது. இப்படி மங்களமாக விளங்கும் இந்த சிவனை அஷ்ட மங்கள தேவியர்களான ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமா, சுமூகி, காமமூகி, காமாவர்த்தினி, சுந்திரி ஆகியோர் அஷ்டமங்கள திரவியங்களைக்கொண்டு பூஜித்துவந்ததால் சிவனின் அருளால் அவர்கள் பல சித்திகளைப் பெற்றனர்.

இன்றும் அவர்கள் அதிகாலை வேளையில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் வருகைதந்து பூஜிப்பதாக ஐதீகம். மங்களகரமான திருமங்கலீஸ்வரர் பெயரால்தான் இந்தப் பகுதி திருமங்கலீஸ் வரம், திருமங்கலம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மகிமை அறிந்து தற்சமயம் பக்தர்கள் பெருமளவுக்கு வருகிறார்கள்'' என கூறினார்.

சீதாதேவிக்கு அன்றைக்கு அருளிய திருமங்கலீஸ்வரை நாமும் இன்று வழிபட்டு நம் வாழ்வில் மங்களம் (சுபம்) ஏற்பட வேண்டிக்கொள்வோம்.