80-ஆவது சர்க்கம்
சுக்கிரனின் மகளைக் கைப்பற்றுதல்
குடத்தில் தோன்றிய மாமுனிவரான அகத்தியர், இராமனிடம் இவ்வாறு கூறிவிட்டு, இதுவரை சொல்லிவந்ததன் தொடர்ச்சியாக, வேறொரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.
"காகுத்தனே! தண்டன் என்ற அந்த மன்னன், புலன்களை அடக்கி, எதிர்ப்பு எதுவுமில்லாமல் அந்த இடத்தில் வெகு நீண்டகாலம் ஆட்சிபுரிந்துவந்தான். பின்னர், ஒருசமயம் மனங்க வரும் சித்திரை மாதத்தில் (வசந்த ருதுவில்)சுக்ராசார்யாருடைய அழகிய ஆசிரமத்திற்கு வந்தான், தண்டன்.
அங்கே, உலகில் எவ்விடத்திலும் இணையில்லாத தோற்றமுடையவளும் பேரழகியுமான பிருகுவின் புதல்வி காட்டுப் பகுதிகளில் உலாவிக் கொண்டி ருப்பதைக் கண்டான். தீயமதி படைத்த அவன், அவளைக் கண்டதுமே மன்மத பாணங்களால் பீடிக்கப்பட்டவனாய், அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்த அந்தக் கன்னிகையின் அருகில் சென்று கேட்டான்.
"அழகியவளே! நீ எங்கிருந்து வந்திருக் கிறாய்? யாருடைய புதல்வி? நங்காய்! மன்மதனால் பீடிக்கப்பட்டுள்ள நான் கேட்கிறேன். பதில் கூறு. காம மயக்கத்தால் அறிவு கலங்கியிருந்த அவன் இவ்வாறு கேட்டதும், பிருகு முனிவரின் புதல்வி மிகவும் விநயத்துடன் மன்னனைப் பார்த்துக் கூறினாள்.
'மன்னருள் மாணிக்கமே! நான், புண்ணியச் செயல்கள் புரியும் பிருகு புதல்வி; அரஜா என்று பெயர்; இந்த ஆசிரமத்தில் இருந்து கொண்டிருக்கிறேன்.
மன்னரே! என்னைப் பலாத்காரம் செய்ய முற்படாதீர்கள். தந்தையின் கட்டுப் பாட்டிலுள்ள கன்னிப் பெண், நான். பேரரசரே! என் தந்தை. உங்கள் ஆசார்யர்; மகாத்மாவான அவருடைய சீடர், தாங்கள்.
மாபெரும் தவசியான அவர் கோபம் கொண்டால், உங்களுக்குக் கெடுதியைச் செய்ய வல்லவர். (காமத்தை அடக்க முடியாத தாங்கள். என்னை அடைய விரும்பினால்,) அறநூல்கள் கூறும் நேர்வழியில் சென்று, தேசு படைத்த என் தந்தையிடம் சென்று, முறைப்படி என்னைக் கோருங்கள். வேறுவிதமாக முயன்றால் பயங் கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
என் தந்தை. தன் கோபாக்னியால் மூன்று உலகத் தையும் எரிக்கும் ஆற்றல் படைத்தவர். குறைவில்லாத அங்கங்களை உடையவரே! தாங்கள் என் தந்தையிடம் வேண்டிக்கொண்டால், அவர், என்னை உங்களுக்குக் (கன்னிகாதானம் செய்து) கொடுத்துவிடுவார்.'
இவ்வாறு, அரஜை கூறியதைக் கேட்டுக் காமவசப்பட்டிருந்த தண்டன், கைகளைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு வணக்கத்துடன் பதில் கூறினான்.
'அழகியே! என்னிடம் கருணை காட்டு, வீணாகக் காலத்தைக் கடத்தாதே. சுந்தரி! உனக்காக என் மனம் துடிதுடிக்கிறது.
உன்னை அடைந்தபின், நான் வதம் செய்யப்பட்டாலோ, பயங்கரமான சாபம் கொடுக்கப்பட்டாலோகூட கவலைப்பட மாட்டேன்! பேரழகியே! மனம் கலங்கி உன்னையே நினைத்துக்கொண்டிருக்கும் உன்னுடைய பக்தனான என்னை ஏற்றுக்கொள்.'
இவ்வாறு கூறிவிட்டு, பலம் மிகுந்த அவன், நடுங்கிக்கொண்டிருந்த அவளைக் கைகளால் கட்டியணைத்து, விருப்பம்போல் அனுபவிக்கத் தொடங்கினான். மிக பயங்கர மான வெறுக்கத்தக்க இந்தக் காரியத்தைச் செய்துவிட்டு ஒப்பற்றதும், உத்தமமானதுமான மதுமத் என்னும் நகரை தண்டன் விரைவில் அடைந்தான்.
ஆசிரமத்தின் அருகில், மிகவும் அச்சத்துடன் அழுதுகொண்டு, தேவர்கள் போல் ஆற்றல்கொண்ட தந்தையை எதிர் பார்த்தவாறு மகள் அரஜை நின்று கொண்டிருந்தாள்.
81-ஆவது சர்க்கம்
சுக்ராசார்யார் கொடுத்த சாபம்
எல்லையற்ற தவப்பொலிவுடன் விளங்கும் சுக்ராசார்யாருக்கு, சிறிது நேரத்திற்குப் பின் அரஜை பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி கிடைத்தது. பசியால் வருந்திக்கொண்டிருந்த அவர், சீடர்கள் புடைசூழ ஆசிரமத்திற்குத் திரும்பிவந்தார்.
அவர், விடியற்காலை வேளையில், அருணோதயத்தின் செம்மையில். தன் ஒளி இழந்து நிற்கும் சந்திரனைப்போல் தூசி படிந்தவளாய், மனம் நொந்து நிற்கும் அரஜையைக் கண்டார். பசியோடிருந்த அவருக்கு மிகவும் கோபம் உண்டாயிற்று. மூன்று உலகங்களையும் எரித்து விடுபவர்போல், சீடர்களை அழைத்து கூறினார்.
"பாருங்கள்! கோபம் கொண்டுள்ள நான், முறை தவறி நடந்த தண்டனுக்கு நெருப்புக் சுவாலைபோல் எப்படிப்பட்ட கடுமையான கஷ்டத்தைக் கொடுக்கப் போகிறேன் என்பதைக் காணுங்கள்.
கெடுமதி கொண்ட இந்தத் தீயவனுக்கும் இவனுடைய பணியாளர்களுக்கும் அழிவுக் காலம் வந்துவிட்டது. அதனால்தான், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சுவாலையைக் கையால் தொட விரும்புகி றான். பயங்கரமான பாவத்தைச் செய்து விட்ட தீயமதி படைத்த தண்டன். அதன் பலனை அனுபவிக்கத்தான் போகிறான்.
பாவத்தைச் செய்துவிட்ட இந்த மன்னன், ஏவலாளர்கள்- படைகளுடன்கூட ஏழு இரவுகளுக்குள் அழிவை அடையப் போகிறான்.
கெடுமதி கொண்ட இந்த மன்னனின் நூறு யோஜனை நீளமும் நூறு யோஜனை அகலமும் கொண்ட ராஜ்ஜியத்தில், தேவராஜனான இந்திரன் புழுதிமாரி பெய்து அழிக்கப் போகிறான்.
இங்கேயுள்ள உயிர்ப் பிராணிகள் மற்றும் அசையாப் பொருட்கள் எல்லாமும் புழுதி மழையினால் மூடப்பட்டுவிடப் போகின்றன. தண்டனுடைய ராஜ்ஜியம் எதுவரை பரவியிருக்கிறதோ, அதனிடையிலுள்ள உயிர்ப்பிராணிகள், ஜடப்பொருட்கள் எல்லாம் புழுதியில் மூழ்கி கண்ணுக்குப் புலப்படாமல் போகப் போகின்றன.'
(சுக்ராசார்யார்) கோபத்தால் சிவந்த கண்களுடன் இவ்வாறு கூறிவிட்டு, ஆசிரமத்திலிருந்த மக்களைப் பார்த்து. 'தண்டனின் நாட்டுக்கு அப்பால் சென்றுவிடுங்கள்' என்று சொன்னார்.
சுக்ரரின் உத்தரவைக்கேட்ட ஆசிரம வாசிகள், அந்த நாட்டிலிருந்து புறப்பட்டு. அதன் எல்லைக்கு வெளியில் இருப்பிடம் அமைத்துக்கொண்டார்கள்.
ஆசிரமவாசிகளான முனிவர்களிடம் மேற்கண்டவாறு கூறிவிட்டு, அரஜையை நோக்கி, "தீயமதி படைத்தவளே! இறைவனைத் தியானித்துக்கொண்டு இங்கேயே இருப்பாயாக' என்றார்.
'ஒரு யோஜனை விஸ்தீரணம் கொண்ட அழகான ஏரி இங்கே இருக்கிறது.கவலைப் படாமல், இதன் நீரை அருந்திக்கொண்டு, நல்ல காலத்தை எதிர்பார்த்துக்கொண்டு நாட்களைக் கழித்து வா.
புழுதிமாரி பெய்கின்ற அந்த இரவில், உன் அருகில் இருக்கும் உயிர்ப்பிராணிகள் புழுதியினால் உயிர்துறக்க மாட்டா. அவை எப்போதும் உயிருடன் இருக்கும்.
பிரும்மரிஷியின் சொற்களைக் கேட்ட அரஜை, தந்தையார் பிருகு முனிவரை நோக்கி, மிகுந்த துக்கத்துடன். 'தாங்கள் கூறியபடியே ஆகட்டும்' என்றாள். இவ்வாறு அரஜை கூறக்கேட்ட பிருகு முனிவர் வேர் இடத்திற்குக் குடிபெயர்ந்தார்.
மன்னன் தண்டனுடைய அந்த நாடு, வேதோத்தமர் வாக்குப்படி, ஏவலாளர்- படைவீரர்களோடு, ஏழு நாட்களுக்குள் சாம்பலாயிற்று. (மண் மூடிப்போயிற்று.) மன்னனே விந்தியம்- சைவலம் ஆகிய மலைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் தண்டனுடைய நாடு இருந்தது. கிருதயுகத்தில் இவ்வாறு தருமம் தவறி நடந்ததால் பிரும்மரிஷியினால் சபிக்கப்பட்ட இந்த நாடு, அன்று முதற்கொண்டு "தண்டகாரண்யம்' என்று வழங்கப்படுகிறது.
இராகவா! தவம் செய்பவர்கள் இந்த இடத்திற்கு வந்து வசிக்கத் தொடங்கி னார்கள். அதனால், இந்த இடத்திற்கு "ஜனஸ்தானம்' என்ற பெயர் ஏற்பட்டது. ரகு நந்தனா! நீ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லிவிட்டேன்.
மாவீரனே! சந்த்யாகாலக் கடன்களை நிறைவேற்றுவதற்கான காலம் கடந்து கொண்டிருக்கிறது. இந்த மாமுனிவர்கள் எல்லாரும் நீராடிவிட்டு, கையில் நீர் நிறைந்த கும்பங்களை ஏந்திக்கொண்டு. சூரியனை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இராமனே! வேதவித்தகர்கள் ஒன்று கூடிக் கூறிய வேதமந்திரங்களைக் கேட்ட படியே, சூரியன் மேற்கு மலையில் மறைந்து விட்டான். நீயும் சென்று நீராடி, மாலைக் கடன்களை முடித்துவிட்டு வா.''
82-ஆவது சர்க்கம்
இராமன் அயோத்திக்குத் திரும்புதல்
முனிவருடைய கட்டளையை ஏற்று, மாலைக்கடன்களை நிறைவேற்றுவதற்காக புண்ணியமானதும் அப்சரப் பெண்டிர்கள் கூடியிருந்ததுமான ஏரிக்குச் சென்றார் இராமன்.
அங்கு நீராடிவிட்டு, மாலைப் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு, மாபெரும் தவசியான அகத்தியருடைய ஆசிரமத்திற்குத் திரும்பிவந்தார்.
அங்கே அகத்தியர், பலவித சுவையுடைய கிழங்குகள். வேர்கள், உடல் நலிவையும் முதுமையையும் தடுத்து நிறுத்தும் மூலிகைகள் மற்றும் உணவு வகைகள் ஆகியவற்றை இராமனுக்குச் சமர்ப்பித்தார்.
அமுதத்திற்கொப்பான அந்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்த அவர், அங்கேயே அவ்விரவைக் கழித்தார்.
இராமன் விடியற்காலையில் கண் விழித்து, காலைக்கடன்களை உரிய காலத் தில் செய்து முடித்துவிட்டு. விடைபெற்றுக் கொள்வதற்காக முனிவரிடம் சென்றார்.
மாமுனிவர் அகத்தியரை வணங்கி, "என் பட்டணத்திற்குத் திரும்பிச் செல்வதற்குத் தங்கள் அனுமதியைக் கோருகிறேன்'' என்று சொன்னார்.
"தங்களைப் போன்ற மகாத்மாவைத் தரிசித்ததனால், நான் பெரும்பேறு பெற்றவனாகிவிட்டேன்; பேரருள் கிடைக்கப்பெற்றேன். என்னை நானே புனிதப்படுத்திக் கொள்வதற்காகத் தங்களைத் தரிசிப்பதற்கு மறுபடியும் வருவேன்.''
இவ்வாறு இராமன் கூறியதைக்கேட்ட, ஞானத்தை அடைவதற்கு அறத்தைக் கைக்கொண்டு நடப்பதையே சாதனமாகக்கொண்ட தவச்செல்வர் மிகவும் மகிழ்ச்சியுடன் பதில் கூறினார்.
"ரகுநந்தனா! நீ கூறிய மங்களமான சொற்கள் மிகவும் அற்புதமானவை. எல்லா உயிர்களையும் புனிதப்படுத்துபவன், நீயல்லவா? இராமா! உன்னைச் சிறிது நேரமே பார்த்தாலும் போதும், அவர்கள் பாவங்கள் நீங்கப்பெற்றவர்களாக தேவ லோகம் செல்கிறார்கள். அங்கே தேவதை களால் போற்றப்படுகிறார்கள்.
மண்ணுலகில், எந்தப் பிராணிகள் உன்னைக் குரூரமாகப் பார்க்கின்றனவோ. அவைகள் யமனால் தண்டிக்கப்பட்டு உடனே நரகத்தில் வீழ்த்தப்படுகிறார்கள்.
ரகுகுல திலகமே! உடல்கொண்ட எல்லாப் பிராணிகளையும் புனிதப்படுத்தும் மகாவல்லமை படைத்தவன், நீ. இராகவா! உலகில் உன்னைப் பற்றிப் பேசுபவர்கள்கூட, பிறவிப்பயனை அடைந்துவிடுகிறார்கள்.
நீ மனவுறுதியுடன் செல்வாயாக; கலங்க வேண்டாம். செல்லும் வழியில் உனக்கு எவ்விதக் கஷ்டமும் ஏற்படாது. அறநெறிகளின்படி ஆட்சி செலுத்துவாயாக. ஏனென்றால், இந்த உலகமே உன்னிடத் தில்தான் அடங்கியிருக்கிறது.''
முனிவர் இவ்வாறு கூறியதும், மன்னர், தன் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பிக் கொண்டு. சத்தியம் தவறாத முனிவரை மீண்டும் வணங்கினார்.
தலைசிறந்த முனிவரையும் மற்றும் அங்கிருந்த தவச்செல்வர்களையும் வணங்கிவிட்டு. பொன் அணிகளால் அலங் கரிக்கப்பட்ட புஷ்பகத்தில் சஞ்சல மில்லாத மனதுடன் ஏறிக்கொண்டார்.
அமரர்கள், இந்திரன் புறப்பட்டுச் செல்லும்போது ஆசி கூறுவதைப்போல, இந்திரன் நிகர் இராமன் புறப்பட்டுச் சென்றபோது, முனிவர் கூட்டங்கள் எல்லாப் புறங் களிலிருந்தும் ஆசி கூறினார்கள்.
பொன் வேலைப்பாடுகள் நிறைந்த புஷ்பகம் ஆகாயத்தில் சென்றபோது. அதில் அமர்ந்திருந்த இராமன், மாரிக்கால மேகங்களிடையே காணப்படும் முழு நிலவைப்போல் காணப்பட்டார்!
ஆங்காங்கே வரவேற்கப்பட்டுப் பாராட்டப்பெற்ற இராமன், நண்பகல் கடந்த வேளையில் அயோத்தியை அடைந்து அரண்மனையின் உள்கட்டில் இறங்கினார்.
பின்னர், மனம்போல் செல்லக்கூடிய அழகிய புஷ்பகத்தைத் தன் இடத்திற்கும் போவதற்கு விடைகொடுத்து. "சென்று வா. உனக்கு நல்லதே உண்டாகட்டும்'' என்று மொழிந்தார்.
அந்த இடைகழியின் உள்ளேயிருந்த காவற்காரனை நோக்கி, "மாவீரர்களான பரத- லட்சுமணர்களிடம் சென்று, நான் திரும்பி வந்துவிட்டதைக் கூறு. உடனே வந்து என்னைப் பார்க்கும்படி சொல்வாயாக'' என்று ஆணையிட்டார்.
83-ஆவது சர்க்கம்
ராஜசூயம் செய்யலாமே!
அரிய செயல்களையும் எளிதாகச் செய்துமுடிக்கும் இராமன் கூறியதைக் கேட்ட வாயிற்காப்போன், பரத- லட்சுமணர்களை அழைத்துக்கொண்டு வந்து, இராமனிடம் (அவர்கள் வருகையைத்) தெரிவித்தான். பாசம்மிகுந்த பரத- லட்சுமணர்களைக் கண்டதும், அவர்களை மார்புறக் கட்டித் தழுவிய இராமன், பின்வருமாறு கூறினார்.
"அந்த அந்தணருக்குக் கொடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுவிட்டது. (அவருடைய மகன் உயிர் பெற்றுவிட்டான்.) ரகுகுல மாணிக்கங்களே! அரச தருமத்தின் எல்லைக்கோடாகக் கருதப்படும் ராஜசூய வேள்வியை நடத்த விரும்புகிறேன்.
ராஜசூய வேள்வி, எப்போதும் குறையாத அழிவில்லாத நற்பயனை அளிக்கவல்லது என்று நான் கருதுகிறேன். அந்த வேள்வி, தருமத்தைச் செழிக்கச் செய்வது: எல்லாப் பாவங்களையும் போக்க வல்லது.
என் உயிராகவே விளங்கும் உங்களுடன் கூட மிக உயர்ந்ததான ராஜசூய யாகத்தைச் செய்ய விரும்புகிறேன். ஏனென்றால், அரச தருமம் அதில்தான் நிலைகொண்டிருக்கிறது.
எதிரிகளை மாய்க்கும் மித்ரன், முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட அக்னியில் நன்றாக அவிகளைச் சொரிந்து, ராஜசூயம் செய்து, வருணன் என்ற பதவியைப் பெற்றார்.
அறம் அறிந்த தேவதை சோமன், முறைப்படி ராஜசூய யாகம்செய்து, எல்லா உலகங்களிலும் பெரும் புகழையும், நிலையான கௌரவத்தையும் பெற்றார்.
ஆகவே, இன்றைய தினம் நீங்கள் இருவரும் இங்கேயே என்னுடன் உட்கார்ந்துக்கொண்டு. எந்த மாதிரியான சடங்கு, நம் மக்களுக்கும் விண்ணுலகில் நமக்கும் நன்மை பயக்கும் என்பதைச் சிதறவிடாத மனத்துடன் சிந்தித்து ஆலோசனை கூறுங்கள்.''
பேச்சில் வல்லவனான பரதன் இராமபிரானுடைய இந்தச் சொற்களைக் கேட்டு, கைகளைக் கூப்பிக்கொண்டு வணக்கத்துடன் கூறினான்.
"மாட்சிமை மிக்கவரே! தங்களிடமே உயர்நெறியான தருமம் நிலைகொண்டுள்ளது. பெருந்தோளரே! இந்தப் புவிமண்டலம் தங்களையே ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. எல்லையில்லா ஆற்றல்கொண்டவரே! தங்களிடமே புகழ் நிலைத்து நிற்கிறது.
தேவதைகள், பிரஜாபதி பிரும்மாவை மகாத்மாவாகவும் அனைத்துலகத் தலைவராகவும் ஏற்றுக்கௌரவிப்பதைப்போலவே, நாங்களும் மற்ற சிற்றரசர்களும், தங்களையே மகாபுருஷராகவும் அனைத்து லகத் தலைவராகவும் கருதுகிறோம்.
மன்னரே! மக்கள் தங்களைத் தத்தம் தந்தையைப்போலவே எண்ணி அன்பு செலுத்துகிறார்கள். மகாபலம் பொருந்திய வேந்தரே! இந்த உலகத்திற்கும் உயிர்களுக்கும் தாங்களே அடைக்கலமாக விளங்குகிறீர்கள்.
உலகில், ராஜசூயம் செய்வதால் அரச பரம்பரைகள் அழிந்துப் போகின்றன என்பது கண்கூடாகத் தெரிகிறது. (எதிர்த்துவரும் மன்னர்களுடன் போரிட்டு வெற்றிபெற்றால்தான் ராஜசூயம் செய்யமுடியும். போர் என்றால், அழிவு தவிர்க்க முடியாததாகிவிடும்.) வேந்தே!
அப்படியிருக்கும்போது, இந்த வேள்வியைச் செய்யவேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு எப்படித் தோன்றிற்று?
உலகிலுள்ள ஆண்மை படைத்த ஆண்கள் அனைவருக்கும் கோபம் ஏற்பட்டு, அந்த வேள்வி காரணமாக அழிவு ஏற்படுகிறது.
ஆண்புலியே! எல்லா நற்குணங்களும் பொருந்திய மகாபராக்கிரமசாலியே! தங்கள் ஆதிக்கத்திலுள்ள இந்த உலகைத் தாங்களே கொன்றுவிடக்கூடாது.''
பரதனுடைய அமுதமயமான சொற்களைக்கேட்ட, பொய்யாகாத பராக்கிரமமுடைய இராமன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.
(இராமன்) கைகேயியின் புதல்வனைப் பார்த்து, "மாசற்றவனே! உன்னுடைய தெளிவான பேச்சினால் நான் மனம் நெகிழ்ந்துள்ளேன்; மகிழ்ச்சி அடைந் துள்ளேன்! ஆண்சிங்கமே! கருணை நிரம்பியதும் அறத்தின் பாற்பட்டதுமான உன் பேச்சு, உலகத்தையே காப்பாற்றக் கூடியது.
அறம் அறிந்தவனே! உன்னுடைய அறிவுபூர்வமான வாதத்தைக்கேட்ட பின்னர், ராஜசூயம் செய்யவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து, நான் என் மனதைத் திருப்பிக்கொள்கிறேன்.
பேரறிவு படைத்தவனே! புத்திமான்கள் உலகத்திற்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்யக்கூடாது. இலக்குவனுக்கு மூத்தவனே! நலம்தரும் அறிவுரையென்றால், பாலகர்களிடமிருந்தும் ஏற்கத்தக்கதே. நியாயமான உன் சொற்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.''
(தொடரும்)