72-ஆவது சர்க்கம் சத்ருக்னன் இராமனை சந்தித்தல்
மானிடப் புலியான சத்ருகனன் படுக்கையில் படுத்திருந்தாலும், பல்பொருள் உடையதும், மிக உயர்ந்ததுமான இராம கீதத்தில் மனதை செலுத்தியிருந்ததால் உறக்கம் வரவில்லை. வீணையின் நாதத்தோடு சேர்ந்து இராமனுடைய வரலாறு இசைக்கப்படுவதைக் கேட்டு பரவச நிலையில் இருந்த சத்ருக்னனுக்கு இரவுப்பொழுது விரைவாகக் கழிந்தது.
இரவு கழிந்ததும் காலையில் செய்ய வேண்டிய வைதீகக் கடமைகளை உரிய முறையில் செய்துமுடித்துவிட்டு மாமுனிவரிடம் வந்து கைகளைக் கூப்பியவண்ணம், "அருளரசே, ரகு குளத்தின் ஆனந்தத்திற்குக் காரணமானவரும், ரகுகுலத் தோன்றலுமான இராமபிரானைத் தங்கள் அனுமதிபெற்று, தவசிகளை உடன் அழைத்துச்சென்று தரிசிக்க விரும்புகிறேன்'' என்றான்.
இவ்வாறு சத்ருக்னன் கூறியதைக்கேட்ட வால்மீகி முனிவர், அவனை அன்புடன் மார்புறத் தழுவி விடைகொடுத்தார். இரானை தரிசிக்கத் துடித்துக்கொண்டிருந்த அவன் தலை சிறந்த முனிவரை வணங்கிவிட்டு விடைபெற்று அழகான ஒரு தேரில் ஏறி விரைந்து அயோத்தியை அடைந்தான்.
அழகிய நகரத்தை அடைந்த சத்ருக்னன் பேரொளி பொருந்திய இராமபிரான் இருந்த மண்டபத்துக்குள் பிரவேசித்தான். முழு நிலவு போல தண்ணொளி வீசும் திருமுகம் படைத்த வரும், அமைச்சரவையில் நடு நாயகமாக வீற்றிருந்தவருமான இராமன், இந்திரலோகத்தில் வீற்றிருக்கும் இந்திரன்போல் விளங்கு வதைக் கண்டான். எல்லை காணமுடியாத தனது பேராற்றலினால் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் மாமன்னரை வணங்கிவிட்டு, சத்திய பராக்கிரமமுடைய இராமன் எதிரில் கைகளைக் கூப்பியவண்ணம், "புவியாளும் அரசர் பெருமானே, எவ்வாறு நான் நடந்துகொள்ள வேண்டுமென்று தாங்கள் ஆணையிட்டீர்களோ அவ்வாறே செய்து முடித்து விட்டேன். பாவியான லவணன் கொல்லப்பட்டுவிட்டான். மதுராபுரியும் வசப்படுத்திக் கொல்லப்பட்டது. மன்னரே, ரகு நந்தனரே, தங்களை தரிசிக்காமல் எப்படியோ ஒருவாறாக 12 ஆண்டுகள் கடந்து விட்டன. தங்கள் பிரிவாற்றாமையை இனியும் என்னால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எல்லைகாண இயலாத பராக்கிரமம் கொண்டவரே, கன்று தன் தாயைவிட்டு வெகுநேரம் பிரிந்திருக்க இயலாததைப்போல தங்களைப் பிரிந்து என்னால் வாழமுடியாது. எனக்கு அருள்புரிய வேண்டும்'' என்றான்.
இவ்வாறு கூறிய சத்ருக்னனை இராமன் மார்புறக் கட்டித்தழுவி, "வீரனே, கவலைப்படாதே. இவ்வாறு பேசுவது சத்திரியர்களுக்கு உகந்ததல்ல. ரகுகுல மாணிக் கமே, வெளிநாடுகளில் வசிப்பதற்கு சத்திரியர்கள் வருத்தப்படக்கூடாது.
அரசர்குல அறநெறிப்படி மக்கள் பரிபாலிக்கப்பட வேண்டும் அல்லவா? வீரனே, அவ்வப்போது அயோத்திக்கு வந்து என்னை நீ சந்திக்கலாம். இப்போது உன் தலைநகருக்கு நீ செல்வாயாக. எனக் கும் என் உயிரைக் காட்டிலும் உன்மீது அதிக அன்புள்ளது. எனினும் நாட்டைப் பரி பாலிப்பது கட்டாயமாக செய்யவேண்டிய கடமை.
என் செல்வமே, ஏழு இரவுகள் இங்கே நீ தங்குவாயாக. அதன்பின்னர் பணியாளர், படை வீரர், வாகனங்களோடு மதுராபுரிக்குச் செல்வாயாக'' என்றார்.
அறநெறிக்கு இணக்கமாக இருந்ததோடு, ஒப்புக்கொள்ளத்தக்கதாகவும் இருந்த இராமனுடைய சொற்களைக் கேட்டு மெல்லிய குரலில், "அப்படியே'' என்று பதில் சொன்னான்.
சத்ருக்னன் ஏழு நாட்கள் அங்கு தங்கி விட்டு, பெரும் வில்லாளியான சத்ருக்னன் நகரத்திற்கு செல்வதற்கு ஆயத்தமான. மாட்சிமை பொருந்திய இராமனிடமும் பரத- லட்சுமணனிடமும் விடைபெற்றுக் கொண்டான். அவனை வழியனுப்புவதற் காக பாசம் மிகுந்த பரத- லட்சுமணர் கள் சிறிது தொலைவு அவனுடன் நடந்து சென்றனர். பின்னர் சத்ருக்னன் மிகப்பெரிய தேரில் ஏறி விரைவில் தன் தலைநகரை அடைந் தான்.
73-ஆவது சர்க்கம் அந்தணர் அரற்றுதல்
சத்ருக்னனை அவனுடைய நாட்டின் தலைநகருக்கு அனுப்பி வைத்த பின்னர், மற்ற சகோதரர்களான பரத- லட்சுமணர்களுடன் மகிழ்வு டன் வசிக்கத் தொடங்கினார் இராமன்.
சிலநாட்கள் கழிந்த பின்னர் அயோத்தி நகர்ப் புறத்தில் வசித்த ஓர் அந்தனர் இறந்து விட்ட தன் மகனின் சடலத்தை எடுத்துக் கொண்டு அரண் மனை நுழைவாயி லுக்கு வந்தார். பாசத் தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தும் பலவித மான சொற்களைக் கூறி அழுதவண்ணம் "குழந் தாய், என் செல்வமே'' என்று அரற்றினார்.
"ஐயகோ! கடந்த ஜென்மத்தில் நான் என்ன பாவம் செய்தேனோ- இப்போது இறந்து கிடக்கும் என் ஒரே மகனை கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ இன்னும் சிறு குழந்தை தான். யௌவனப் பருவத்தைக்கூட அடைய வில்லை. நீ பிறந்து ஐயாயிரம் நாட்களே ஆகின்றன. (14 வயதுகூட நிறையவில்லை.) என் கண்மணியே, என்னை துக்கத்தில் ஆழ்த்திவிட்டு இந்த பிஞ்சுவயதில் காலன் வசப்பட்டாயே! என் செல்வமே உன் பிரிவாகிய துக்கத்தைத் தாங்கமுடியாமல் நானும் உன் அன்னையும் இன்னும் சில நாட்களிலேயே உயிரை விட்டுவிடப் போகிறோம்.
நான் ஒருமுறையாவது பொய் பேசியதாக நினைவில்லை. பிறருக்குத் தீங்கு செய்ததாகவும் நினைவில்லை. எந்தவொரு உயிர்ப் பிராணிக்கும் கெடுதல் செய்ததாக நினைவே இல்லை. என்னுடைய மகனான இந்த சிறுவன் எந்தவொரு பாவத்தின் காரணமாக பெற்றோருக்குச் செய்யவேண்டிய ஈமக்கடன்களைச் செய்யாமல் எமன் வீட்டிற்குப் போய்விட்டான்? இளமையிலேயே மரணம் என்ற காட்சியை இராமன் ஆட்சிபுரியும் நாட்டில் இதுவரை பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை. நிச்சயமாக இராமன் மிகப்பெரிய அநியாயம் செய்திருக்கிறான்.
அதனால்தான் அவன் நாட்டில் சிறுவர் மரணமடைவது என்னும் பாவச் செயல் தொடங்கியிருக் கிறது. மற்ற நாடு களில் வசிக்கும் சிறுவர்களுக்கு மரண பயமில்லை.
மன்னனே, காலன் வசப்பட்டுவிட்ட இந்தக் குழந்தையை உயிர்ப் பிப்பாயாக.. ஆதரவற் றோர்போல் இந்த அரண்மனை வாயிலிலேயே என் மனைவியுடன் உயிரை விடபோகிறேன். இராமா, பிரம்மஹத்தி தோஷம் உன்னை பற்றிக்கொள்ளப் போகிறது. சௌக்கியமாக இரு.
மகா பராக்கிரமசாலியே, உன்னுடைய நாட்டில் இத்தனை காலம் வசித்துக் கொண்டிருந்தோம். வேந்தனே நீயும் உன் சகோதரர்களும் நீண்டகாலம் வாழ்வீர்களாக. உன்னுடைய ஆட்சியின் கீழிருக்கும் எங்களுக்கு மகனின் மரணமென்னும் பெரும் துக்கம் திடீரென ஏற்பட்டுள்ளது. இப்போது நாங்களும் உயிரைவிடப் போகிறோம். உன் நாட்டில் எங்களுக்குத் தினையளவு சுகம்கூட கிடைக்கவில்லை. மகாத்மாக்களான இக்ஷவாகு வம்சத்தவர்களின் இந்த நாடு அனாதையாகப் போய்விட்டது.
இராமன் இந்த நாட்டுக்கு அரசனாகி விட்டான் அல்லவா? இனிமேல் நிச்சயமாக சிறுவர்கள் மரணமடையவே செய்வார்கள். மன்னன் முறைப்படி மக்களைப் பரிபாலிக் காமல் போனால், அந்த பாவத்தின் விளைவாக குடிமக்களுக்கு இத்தகைய ஆபத்துகள் ஏற்படத்தான் செய்யும். மன்னன் நெறி தவறினால் மக்கள் இளம் வயதிலேயே மரணமடைவார்கள். அல்லது நகரத்திலும் நகரத்தின் பிற பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் முறைதவறி பாவச் செயல்களில் ஈடுபடும்போது, அதைத் தடுத்துநிறுத்த அதிகாரப் பொறுப்புள்ளவர்கள் இல்லாமல் போனால் இள வயதிலேயே மரணமென்ற அச்சம் ஏற்படக்கூடும். இப்போது முதன்முறையாக ஒரு பாலகனுக்கு மரணம் நேர்ந்திருக்கிறது என்பதிலிருந்து நகரத்திலோ அல்லது நாட்டின் வேறு பகுதிகளிலோ அரசன் தவறு செய்திருக்கி றான் என்பது தெளிவாகிவிட்டது.''
அரச மாளிகையின் நுழைவாயிலில் நின்று இவ்வாறாக புலம்பியபடி பற்பல சொற்களால் தன் மன வேதனையை வெளிக்காட்டி தன் மகனை கட்டியணைத்து மார்புறத் தழுவிக் கொண்டார் அவர்.
74-ஆவது சர்க்கம் நாரதர் வந்தார்
அந்த அந்தணரின் துயரமும் கவலையும் பரிதவிக்கும் நிரம்பிய புலம்பலை இராமன் கேட்டார். அவர் துக்கத்தினால் துடித்துப் போனார். அமைச்சர்களையும், வசிஷ்ட வாம தேவர்களையும், சகோதரர்களையும் ஊர் பிரமுகர்களையும் அழைப்பித்தார். வசிஷ்டருடன் எட்டு வேத வித்தகர்கள் வந்தனர்.
தேவர்போல் ஒளிவீசும் மன்னரை நோக்கி 'வாழ்க' என்று வாழ்த்தினர்.
மார்க்கண்டேயர், மௌத்கல்யர், வாமதேவர், காசிபர், காத்யாயனர், ஜாபாலி, கௌதமர் மற்றும் நாரதர் ஆகிய எண்மர் வந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் ஆசனத்தில் அமர்த்தப் பட்டனர். வந்திருந்த அந்த முனிவர்களை கைகூப்பி வணங்கிய இராமன் தானும் ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அமைச்சர்களையும் பிரமுகர்களையும் உரிய முறையில் வரவேற்றார். அறிவாற்றல்மிக்க அவர்கள் அனைவரும் தத்தம் இருக்கையில் அமர்ந்துகொண்டதும் இராமன் எல்லாவற்றையும் விவரமாக எடுத்துரைத்து, "ஓர் அந்தணர் அரச மாளிகையின் நுழைவாயிலில் புலம்பியபடி நிற்கிறார்'' என்று கூறினார்.
மிகவும் பரிதவிப்புடன் மன்னர் இவ்வாறு கூறியதைக்கேட்ட நாரதர், முனிவர்கள் முன்னிலையில் தெளிவாக பதிலுரைத்தார்.. "பார்வேந்தே, உரிய காலத்திற்கு முன்னதாகவே இந்த சிறுவனுக்கு ஏன் மரணம் ஏற்பட்டது என்பதைக் கூறுகிறேன். ரகு நந்தனா, அதைக் கேட்டபின் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதன்படி செய்யுங்கள்.
முன்னர் கிருத யுகத்தில் அந்தணர்கள் மட்டுமே தபஸ்விகளாக இருந்தனர். அந்தணர் அல்லாதார் எவ்வித தவமும் செய்வதில்லை. அந்த யுகம் தவம் செய்பவர்களின் ஆன்ம ஒளியால் பிரகாசித்துக்கொண்டிருந்தது. வேத வித்தகர்கள் மதிக்கப்பட்டனர்.
அந்தக் காலத்தில் அறநெறி அறியாதவர்கள் எவருமில்லை. அதனால் அந்த யுகத்தில் வாழ்ந்த மக்கள் இளம்வயது மரணமில்லாமல், முக்காலமும் அறிந்தவர்களாக இருந்தனர்.
அதன் பின்னர் உடல்வலிமை கொண்டவர் களான சத்திரியர்களுக்கு பெருமை சேர்க்கும் திரேத யுகம் வந்தது. அந்த யுகத்தில் முன் யுகத்தைபோல் தவம்செய்யும் சீரிய நோக்கு டன்கூடிய சத்திரியர்கள் தோன்றினார்கள். இந்த யுகத்தில் மக்களில் மகாத்மா என்று கருதப்பட்டவர்களைக் காட்டிலும் அதற்கு முன்யுகத்தில் இருந்தவர்கள் தவத்திலும் பராக்கிரமத்திலும் சிறந்து விளங்கினார்கள். எனவே இரண்டு யுகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது முதலாவது யுகத்தில் அந்தணர்கள் மதிப்பு மிக்கவர்களாகவும், சத்திரியர்கள் சற்று கீழ்நிலையிலும் இருந் தாலும், இரண்டாவது யுகத்தில் சத்திரியர்கள் மேல்நிலைக்கு உயர்ந்து அந்தணர்களுக்கு நிகராக விளங்கினார்கள் அந்த சமயத்தில் அறநூல் ஆசிரியர்கள், அந்தணர், சத்திரியர்களிடையே ஏற்றத்தாழ்வு அல்லது தனிச்சிறப்பு எதனையும் காணாததால், எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சமுதாயத்தை நான்கு வர்ணங்களாகப் பாகுபாடு செய்து உறுதிப்படுத்தினார்கள். கிருத யுகத்தில். தர்மம் மட்டுமே பிரதானமாக இருந்துவந்தது. ஆனால் இப்போது அந்த தர்மத்தின் ஒரு பாதம் மண்ணுலகில் பதிந்துள்ளது மக்களின் மனதில் மாசுபடியத் தொடங்கிவிட்டதால் அவர்களுடைய சான்றாண்மை மெல்ல மெல்ல குறைய தொடங்கும்.
சத்திய (கிருத) யுக மக்களால், ராஜச குணத்தை வளர்க்கக்கூடிய புலனின்ப நுகர்ச்சிக்கான எந்த பொருட்கள் வெறும் கழிவுப் பொருட்கள் என்று ஒதுக்கப்பட்டனவோ, அவை அசத்தியம் என்னும் பெயரைப் பெற்று மண்ணுலகில் ஒரு பாதத்தை ஊன்றி இருக்கின்றன.
இவ்வாறாக அதர்மமானது அசத்தியம் என்ற ஒருபாதத்தைப் பதித்து, இந்த யுகத்தில் மக்களின் ஆயுளை எல்லைப்படுத்திவிட்டது. அதனால் அதர்மத்தின் பொய் என்ற பாதம் பூவுலகில் பதிந்துவிட்டபடியால் சான்றோர் கள் சத்தியத்தையும் அறநெறியையும் கடைப் பிடிக்க உறுதிபூண்டு நற்கருமங்களையே செய்து வருகிறார்கள். திரேதயுகத்தில் அந்தணர்களும் சத்திரியர்களும் தவம்செய்து வருகிறார்கள். மற்றவர்கள் இவர்களுக்கு சேவைசெய்து வருகிறார்கள். வணிக, வேளாண் வர்ணத்தவர் களுக்கு மற்ற இரு வர்ணத்தைச் சேர்ந்த மக்களுக்கு சேவைசெய்வது என்பது சுதர்மமாக வந்தமைந்தது. குறிப்பாக மற்ற மூன்று வர்ணத்த வர்களுக்கும் வாழ்க்கையில் இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் சிறப்பு பணியை பெற்றார்கள் வேளாளர்கள்.
மாட்சிமைமிக்க மன்னரே, இதனடையில் திரேத யுகம் முடிவடையும் காலம் நெருங்கி வரும்போது வணிக- வேளாளர்களை அதர்மத் தின் ஒரு பகுதியான பொய் வசப்படுத்திக் கொள்கிறது. அதன்விளைவாக முதல் இரு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார் கள். பின்னர் அதர்மம் தன்னுடைய இரண்டாவது பாதத்தை மண்ணுலகில் பதிக்கி றது. அதனால் அந்த யுகத்திற்கு துவாபரம் (இரண்டாவது பாதம்) என்னும் பெயர் உண்டா யிற்று. ஆண்மை காளையே, துவாபரம் என்று பெயர்பெற்ற அந்த யுகத்தில் அதர்மத்தின் இரண்டு பாதங்களும் நிலை பெற்றுவிட்டதால் அறநெறி பிறழ்தல், பொய் ஆகிய இரண்டும் பெருகத் தொடங்குகின்றன. துவாபர யுகத்தில் வைசியர்களும் தவம்செய்யும் உரிமையைப் பெறுகிறார்கள். இவ்விதம் மூன்று யுகங்களில் வரிசைக்கிரமமாக முதல் மூன்று வர்ணத்த வர்களும் தவம்செய்யும் அதிகாரத்தை அடை கிறார்கள்.
மக்கள் தலைவனே, மூன்று யுகங்களும் மூன்று வர்ண மக்களின் ஆதரவில் தவமென் னும் அறநெறி நிலைத்து நிற்கும். ஆனால் இந்த மூன்று யுகங்களிலும் தவம் என்பதைக் கைக்கொள்ளும் உரிமையை வேளாளர்கள் அடையவில்லை. தாழ்ந்த குலத்தில் பிறந்த மனிதர்களும் கடுமையான தவநெறியை மேற்கொள்ளும் கலியுகம் வந்ததும், வேளாண் குடியில் தோன்றுபவர்களும் தவநெறியில் ஈடுபடுவார்கள். மன்னரே, துவாபர யுகத்தில் வேளாண் மக்களுக்கு தவநெறி அறநெறியாக விதிக்கப்படவில்லை. உன்னுடைய நாட்டின் எல்லைக்குள் யாரோ ஒரு கெடுமதி படைத்த வேளாண் கடும் தவமியற்றி வருகிறான். அதனால்தான் சிறு பாலகனுக்கு மரணம் ஏற்பட்டிருக்கிறது. அறநெறி வழுவிய செயலை செய்கிறவன் அல்லது தான் செய்யக்கூடாத செயல்களை செய்கிறவன் எந்த நாட்டில் வாழ்கிறானோ, அந்த நாட்டில் மன்னனு டைய செல்வச் செழுமை, பெருமை அழிந்து போகின்றன. அந்த மண்ணின் மன்னன் விரைவில் நரகத்தில் வீழ்கிறான் என்பதில் ஐயமில்லை. எந்த மன்னன் அறநெறி பிறழாது மக்களைப் பரிபாலித்து வருகிறானோ அவன் குடிமக்க ளின் வேதாத்யணம், தவம், மற்றும் நற்செயல் களின் பயனில் ஆறில் ஒரு பங்கைப் பெறுகிறான்.
குடிமக்களின் புண்ணியத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெறுகிற மன்னன் அவர்களைக் காப்பாற்ற வேண்டாமா? ஆண் வேங்கையே, உன் ராஜ்ஜியத்தில் செய்யக்கூடாத செயல் எங்கே செய்யப்படுகிறது. என்பதைத் தேடிக் கண்டுபிடி. அவனுக்குரிய தண்டனை வழங்கினால் உன் நாட்டில் அறம் பெருகும். மக்கள் நீண்டகாலம் வாழ்வார்கள். இறந்த பாலகனும் மீண்டும் உயிர்பெறுவான்.
75-ஆவது சர்க்கம் ஒருமை இல்லாதவன் செய்த தவம்
நாரதர் கூறிய அமுதமொழிகளைக் கேட்ட இராமன் மிகவும் மகிழ்ந்து, அருகிலிருந்த லட்சுமணனைப் பார்த்து, "செல்வமே, விரைந்துசென்று நல் விரதங்களைக் கடைப் பிடிக்கும் அந்தணருக்கு ஆறுதல் கூறு. அத்து டன் மிகவும் மணமுள்ள எண்ணெய்கள் நிறைந்த கொப்பரையில், சிறுவனின் உடலுக்கு எவ்வித நலிவும் ஏற்படாத வகையில் அமிழ்த்தி வைக்கும்படி ஏற்பாடு செய். நற்கர்மங்களைச் செய்யும் இந்த சிறுவனின் உடல் கரைந்து போகாமலும், பின்னப்படாமலும் பாதுகாக்கப் படும் விதமான ஏற்பாடுகளைச் செய்'' என்ற இராமன், "புஷ்பக விமானமே, உடனே வா' என்று மனதுக்குள் நினைத்தார்.
இராமனுடைய எண்ணத்தை அறிந்து கொண்ட புஷ்பக விமானத்தின் அதிதேவதை பொன் அணிகலன்கள் பூண்டு வெகுவிரைவில் அவரிடம் வந்து சேர்ந்தது, "மன்னரே, அடியேன் வந்திருக்கிறேன். தோள் வலிமை மிக்கவரே, தங்கள் ஆணைப்படி நடக்கும் பணியாளன் வந்திருக்கிறேன்'' என்று தலைவணங்கிக் கூறியது. புஷ்பகத்தின் இனிய சொற்களைக் கேட்ட மாமன்னர், மகா முனிவர்களை வணங்கி விடைபெற்று விமானத்தில் ஏறிக் கொண்டார். லட்சுமணனிடமும் பரதனிடமும் நகர பாதுகாவல் ஒப்படைத்துவிட்டு வில், அம்பறாத்தூணி கத்தி முதலியவற்றை எடுத்துக்கொண்டு இங்குமங்கும் தேடிக்கொண்டு மேற்கு திசை நோக்கிச் சென்றார்.
பின்னர் இமயமலை சூழ்ந்து நிற்கும் வடதிசைக்குச் சென் றார். அவ்விரு திசைகளிலும் நெறிதவறிய செயல் எதுவும் காணப்படவில்லை. கிழக்கு திசையை ஆராயத் தொடங்கி னார். புஷ்பக விமானத்தில் அமர்ந்துகொண்டு குற்றவாளி யைத் தேடிக்கொண்டிருந்த மன்னர், அங்கும் அறம்தவறிய செயல் எதுவும் செய்யப்பட வில்லை; அந்தப் பகுதி முழுவதும் கண்ணாடி போல் மாசற்று விளங்குவதைக் கண்டார். முனிவரைப்போன்று தெள்ளிய மதிபடைத்த மன்னராகிய இராமன் அடுத்து தெற்கு திசைக்குச் சென்றார். அங்கு விந்திய மலைக் கருகில் இருந்த சைவல மலையின் வடக்கில் மிகப்பெரிய ஒரு நீர் நிலையைக் கண்டார். அந்த ஏரியின் கரையில் தொங்கிக்கொண்டு மிகக் கடுமையான தவத்தை செய்துவரும் ஒரு தவசியைப் பார்த்தார் இராமன்.
மிக உயர்வான தவத்தை செய்துவரும் அவர் அருகில் சென்று, "கடுமையான நியமங்களை அனுஷ்டிப்பவரே, தாங்கள் பெரும் பாக்கியசாலி. தவ முதிர்ச்சி பெற்றவரே, கொள்கையில் தளராத உறுதிபெற்றவரே, தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்னும் வேட்கையால் கேட்கிறேன். தாங்கள் எந்த இனத்தில் பிறந்தவர்? நான் தசரத குமாரன் இராமன். தாங்கள் எந்த பயனை அடைய விரும்புகிறீர்கள்? தவம்செய்து இஷ்ட தேவதையை மகிழ்வித்து எந்த வரத்தை அடைய விரும்புகிறீர்கள்? தேவலோகமா அல்லது வேறொரு பயனையா? பிறரால் செய்யமுடியாத மிகக் கடுமையான இவ்வித தவத்தைச் செய்து தாங்கள் அடைய விரும்பும் பயன் எதுவோ? தவசியே தாங்கள் எந்த உயர் பயனை அடையும் நோக்கத்துடன் இந்த தவத்தில் ஈடுபடுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
தாங்கள் அந்தணர் என்றால் என் வணக்கம். அல்லது வெற்றிகொள்ள முடியாத சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர் அல்லது மூன்றா வது வர்ணமான வணிகர் இனத்தையோ, வேளாண் இனத்தையோ சேர்ந்தவரா? உண்மையைக் கூறுங்கள்'' என்றார்.
இவ்வாறு மாமன்னர் கேட்க,, தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த தவசி தன் இனத்தையும் தவத்தின் நோக்கத்தையும் அவரிடம் தெரிவித்தார்.
(தொடரும்)