த்ருக்னன் பர்ணசாலைக்குள் நுழைந்த அன்றிரவே சீதை இரண்டு ஆண் குழந்தை களைப் பெற்றெடுத்தாள். நள்ளிரவு வேளை யில் முனி குமாரர்கள் வால்மீகி மகரிஷிடம் வந்து, சிரமமின்றி சீதைக்குப் பிரசவம் நடந்த நற்செய்தியைக் கூறினர்.

"ஐயனே, ராமச்சந்திர மூர்த்தியின் மனைவி இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். அந்த குழந்தைகளுக்கு தீய தேவதைகளின் பாதிப்பு நேராமலிருக்க தாங்கள் பாதுகாப்புச் சடங்குகளைச் செய்ய வேண்டும்" என்றனர். அதைக்கேட்ட முனிவர் சீதை இருந்த இடத்திற்குச் சென்றார். இரண்டு குழந்தைகளும் இளம் நிலவைப்போல குளிர்ந்த ஒளி வீசி, தேவ குமாரர்கள்போல திவ்ய ஒளி படைத்தவர்களாக விளங்குவதைக் கண்டார்.

மகிழ்ச்சியுடன் அவர், தீய சக்திகளிட மிருந்தும் அரக்கர்களிடமிருந்தும் துன்பம் நேராதபடி உரிய மந்திரங்களால் அந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு செய்தார். வால்மீகி முனிவர் தீய சக்திகளை அண்டா மல் தடுக்கும் சக்திவாய்ந்த குசம், லவம் என்னும் புற்களைக் கொண்டுவந்து, ஒரு கைப்பிடி அளவு குழந்தைகளின் பாதுகாப்புக் காகக் கொடுத்தார்.

"மூத்தவனாகப் பிறந்தவனுக்கு மந்திர சக்தியூட்டப்பட்ட குசங்களால் தடவிக் கொடுத்து சுத்தி கர்மாவும், பின்னர் இளைய வனுக்கு லவத்தினால் சுத்தி கர்மாவும் வயதில் மூத்த பெண்களால் செய்யப்பட வேண்டும். அவ்வாறு தூய்மை செம்விக்கப்படும் அவர்கள் அந்தந்த பெயரையே பெறுவார்கள். இரட்டையர்களான இவர்கள் என்னால் இடப்பட்ட பெயர்களால் பெரும் கீர்த்தியடை வார்கள்'' என்று வாழ்த்தினார் வால்மீகி.

Advertisment

பாவங்கள் நீங்கிய பரிசுத்தர்களான வயோதிக மாதரசிகள், முனிவரின் கரத்திலிருந்து குசம், லவத்தைப் பெற்றுக்கொண்டு, அவர் கூறிய வண்ணமே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு சடங்குகளைச் செய்தார்கள். உடல் ரட்சைக்கான சடங்குகளைச் செய்யும் போது இராமர், சீதையின் பெயர்களையும் கோத்திரத்தையும் உச்சரித்தார்கள்.

அந்த நள்ளிரவில் செவிக்கினிய சொற் களைக்கேட்டு சத்ருக்னன் குழந்தைப் பேறு நிகழ்ந்திருந்த குடிலுக்குச் சென்று சீதையைக் கண்டு, "தாயே, இது மிகவும் மகத்தான பேறு!'' என்று கூறினான். இவ்வாறு சத்ருக்னன் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்துக் கொண்டி ருக்கும்போதே மழைக்கால அந்த இரவு கழிந்தது.

எல்லையற்ற ஆற்றலுடைய அவன் பொழுது விடிந்ததும் காலை வேளைக்குரிய வைதீக சடங்குகளை முடித்துக்கொண்டு, முனிவரை வணங்கி விடைபெற்று மேற்கு நோக்கிப் பயணத்தைத் தொடங்கினான். வழியில் ஏழு இரவுகளைக் கழித்துவிட்டு யமுனைக் கரையை அடைந்து அங்கிருந்த முனிவர்களின் ஆசிரமத்திற்குச் சென்றான். சியவனர் முதலான முனிவர்களுடன் இனிய கதைகளைப் பேசிக்கொண்டு வசித்துவந்தான். இவ்வாறாக முனிவர்களுடன், ரகுகுல வீரனும் தசரதன் மைந்தனுமான சத்ருக்னன் நாட்களைக் கழித்துக்கொண்டிருந்தான்.

Advertisment

67-ஆவது சர்க்கம்மாந்தாதா மன்னன் வதம்

ஒருநாள் இரவுவேளையில், பிருகு முனிவரின் மகனான சியவனரைப் பார்த்து சத்ருக்னன், "மறைநெறியாளரே, லவணனு டைய ஆற்றல் எவ்வளவு? அவனிடமுள்ள சூலத்தினால் இதுவரை எத்தனைப் பேர் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்? சக்திவாய்ந்த அந்த சூலாயுதத்துடன் எவ்வளவு பேர் துவந்த யுத்தம் புரிந்திருக்கிறார்கள்?'' என்று கேட்டான்.

அதைக்கேட்டதும் சியவன முனிவர், "ரகுநந்தனா, லவணாசுரனின் செயல்கள் கணக்கில் அடங்காதவை. எனினும் இக்ஷவாகு குலத்தில் தோன்றிய ஒரு மன்னன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியைக் கூறுகிறேன்; கேள்.

அயோத்தியில் பேராற்றல் பொருந்திய யுவநாச்வன் என்னும் மன்னன் இருந்தான். அவனுடைய மகனும் மூவுலகிலும் புகழ் பெற்றவனுமான மாந்தாதா என்னும் மாவீரன் ஆட்சி செய்துகொண்டிருந்தாள். மண்ணுலகையே ஆண்டுவந்த அவன் தேவலோகத்தை வெல்லும் பொருட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டான். தேவ லோகத்தை வெற்றிகொள்வதற்காக மாந்தாதா செய்துவரும் ஏற்பாடுகளைக் கண்டு மகா வீரர்களான தேவர்களுக்கும் இந்திரனுக்கும் மிகவும் அச்சம் உண்டாயிற்று.

"இந்திரனுடைய சிம்மாசனத்தில் பாதியையும், அவனுடைய ராஜ்ஜியத்தில் பாதியையும் வென்று தேவர்களை என் துதி பாட வைப்பேன்' என்று சூளுரைத்துவிட்டு தேவலோகத்திற்குச் சென்றான். அவனுடைய தீய எண்ணத்தைப் புரிந்துகொண்ட இந்திரன் மாந்தாதாவிடம் சமாதானம் பேசினான். "உத்தமரே, பூமண்டலம் முழுவதற்கும்கூட நீ மன்னனாக ஆட்சிபுரியவில்லை. அப்படி இருக் கும்போது தேவலோகத்தை ஆளவிரும்புவது எப்படிப் பொருந்தும்? வீரனே, மண்ணுலகம் முழுவதையும் உன் ஆட்சியின்கீழ் கொண்டுவந்த பிறகு ஏவலாளர், படை, வாகனங்களுடன் வந்து தேவலோகத்தை ஆட்சிபுரிவாய்' என்றான்.

இந்திரன் இவ்வாறு கூறியவுடன் மாந்தாதா, "தேவேந்திரனே, என் உலகில் என்னுடைய ஆணை மதிக்கப்படாத இடத்தைக் கூறுவாய்' என்றான்.

ஆயிரம் கண்கள்கொண்ட இந்திரன், "மதுவினுடைய மகனான லவணன் என்பவன் வாழ்ந்துகொண்டிருக்கும் மது வனத்தில் உன் ஆணை செல்லுபடியாகவில்லை' என்றான்.

கேட்கப் பொறுக்கமுடியாத பயங்கரமான இந்த செய்தியை இந்திரன் சொல்லக்கேட்ட மாந்தாதா மனம் புண்பட்டு தலைகுனிந்து எதுவும் பேச முடியாமல் நின்றான். வெட்கத் தினால் தலை குனிந்தபடியே இந்திரனிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் பூலகிற்கு வந்துசேர்ந்தான்.

தாங்கமுடியாத பொறாமையால் இதயத்தை நிரப்பிக்கொண்டு, பணியாளர் கள், படைகள், வாகனங்களுடன் மதுவின் புதல் வனைத் தோற்கடிப்பதற்காக வந்துசேர்ந்தான்.

மாவீரனான அவன் லவணனுடன் போர்செய்ய விரும்பி அவனிடம் ஒரு தூதுவனை அனுப்பிவைத்தான். மதுவின் மகனிடம் சென்று கூறத்தகாத பல வார்த்தை களை அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே, லவணன் அந்தத் தூதனை விழுங்கிவிட்டான்.

வெகுநேரமாகியும் தூதன் திரும்பி வராததால் மாந்தாதா மிகவும் கோபம் கொண்டான். அதனால் அங்குசென்று அரக் கன்மேல் அம்புமழை பொழிந்து அவனைத் துன்புறுத்தினான்.

அப்போது அரக்கன் சற்றே நகைத்து, சக்திவாய்ந்த சிவபெருமான் தந்த சூலத்தைக் கையில் ஏந்தினான். அளவிடமுடியாத ஆற்றல்கொண்ட அந்த ஆயுதத்தை, உடன் வந்தவர்களோடு மாந்தாதாவைக் கொள்வதற்காக வீசினான். பேரொளியுடன் சென்ற அந்த சூலம் பணியாளர்கள், படை வீரர்கள், வாகனங்கள் உட்பட மாந்தா தாவைவையும் பொசுக்கிவிட்டு லவணனு டைய கையை மீண்டும் வந்தடைந்தது. மாபெரும் வீரனான அந்த அரசன் அனைத்து டனும் அனைவரோடும் அழித்தொழிக்கப் பட்டான்.

அந்த சூலம் பலம் வாய்ந்தது. மிகவும் உயர்ந்தது. நாளை காலையில் லவணனை நீ வதைக்கப் போகிறாய் என்பது நிச்சயம். அவன் கையில் சூலாயுதம் இல்லாத தருணத்தில் நீ அவனைத் தாக்கினால் வெற்றியடைவாய் என்பதில் ஐயமில்லை. நீ இந்த செயலைச் செய்துமுடித்தால் அனைத்து உலகங்களுக்கும் நன்மையுண்டாகும். தீயவ னான லவணனைப் பற்றி அனைத்தையும் சொல்லிவிட்டேன்.

பேராண்மை மிக்கவனே, லவணனிட முள்ள சூலத்தில் ஆற்றல் மிகவும் பயங்கர மானது. உவமையில்லாதது. அதன் சக்தியால் மாந்தாதா மாண்டுபோனான் என்பதைப் புரிந்துகொள். அந்த நிலை உனக்கு ஏற்படக் கூடாது. நாளை காலையில் புலால் உணவை சேகரிப்பதற்காக கையில் சூலமில்லாமல் அவன் வெளியே வருவான். அப்போது அவனை நீ கொல்லப் போகிறாய் என்பதில் ஐயமில்லை. உனக்கே வெற்றி உண்டாகும்'' என்றார்.

68-ஆவது சர்க்கம்லவணன்- சத்ருக்னன் வாக்குவாதம்

முனிவருடன் சத்ருக்னன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோதே, சடுதியில் இரவுப்பொழுது கழிந்தது. நிர்மலமான வைகறைப் பொழுது விடிந்தது.

உண்பதற்கான உணவை சேகரிப்பதற்காக அந்த காலை நேரத்தில் அரக்கனான லவணன் நகரத்திலிருந்து வெளியே வந்தான். இதனிடையில் யமுனை நதியைக் கடந்த சத்ருக்னன் கையில் வில்லுடன் நகர வாயிலில் நின்றுகொண்டான். கொடுஞ்செயல் புரியும் அந்த அரக்கன் பல்லாயிரக்கணக்கான உயிர்ப் பிராணிகளைக் கொன்று, அவற்றை சுமந்த வண்ணம் நண்பகல் வேளையில் திரும்ப வந்துகொண்டிருந்தான்.

கையில் வில்லுடன் நகரத்தின் நுழை வாயிலில் சத்ருக்னன் நிற்பதைக் கண்டான் லவணன். அவனைப் பார்த்து, "இந்த ஆயுதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?'' என்று ஏளனமாகக் கேட்டான்.

rr

"மானிடப் பதரே, படைக்கலங்கள் தாங்கி எதிர்த்துவந்த ஆயிரங்கணக்கானவர்களை கோபம்கொண்டு நான் வாயில் விழுங்கியிருக்கிறேன். நீயும் மரணத்தைத் தழுவ விரும்புகிறாய்போலும். ஆண் கோழையே, இப்போது நான் கொண்டு வந்திருக்கும் உணவே எனக்குப் போதும். நீயாக வந்து என் வாயில் விழுந்திருக்கிறாய். உன்னை என்ன செய்வது?'' இடையிடையே சிரித்தவண்ணம் லவணன் பேசியதைக் கேட்டவுடன் எல்லையில்லா கோபத்தால் சத்ருக்னன் கண்களிலிருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டன. கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கும்போது அவன் உடலில் எல்லா பகுதிகளிலிருந்தும் ஒளிக் கதிர்கள் வீசத் தொடங்கின. அவன் அரக் கனைப் பார்த்து, "மதிகெட்டவனே, உன்னுடன் துவந்த யுத்தம் செய்ய விரும்பு கிறேன். நான் தசரதனின் மகன். பேரறிவாள ரான இராமபிரானின் சகோதரன். என் பெயர் சத்ருக்னன். எப்போதும் எதிரிகளை அழிப்பவன். உன்னைக் கொல்லும்பொருட்டு இங்கு வந்திருக்கிறேன். உன்னுடன் போர் புரிய விரும்பி அழைக்கும் என்னுடன் போர் புரிய வருவாய். அனைத்து உயிர்ப் பிராணி களுக்கும் பகைவனான நீ என் கண்களில் பட்ட பின்னர் உயிருடன் செல்லப் போவதில்லை'' என்றான்.

இவ்வாறு அவன் பேசிக் கொண்டிருக் கும்போதே பரிகாசமான நகைப்பு தோன்ற, "கெடுமதி படைத்தவனே, என் அதிர்ஷ்டம் நீ என்னிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாய்'' என்று பதில் சொன்னான்.

"என்னுடைய தாயாரின் சகோதரி மகன் அரக்க மன்னனும் என் சகோதரனு மான இராவணன். அறிவற்றவனே, ஒரு பெண் ணுக்காக இராவணன் கொல்லப்பட்டான்.

அத்துடன் இராவணனுடைய குலம் முழுவதும் அழிக்கப்பட்டது. எங்களை எவ்வளவு அவமதித்திருக்கிறீர்கள்? அப்படி இருந்தும் உங்கள் விஷயத்தில் பொறுமையைக் கடைப்பிடித்து பழி வாங்காமல் இருந்தேன். முன்னர் என்னை எதிர்த்துவந்த மானிடப் பதர்கள் வெறும் புல்லுக்கு சமமாக நசுக்கப்பட்டார்கள்.

எதிர்காலத்தில் வருபவர்களையும் கொன்றொழிப்பேன். ஏன்- இப்போது நிகழ்காலத்தில் வந்திருக்கும் உன்னையும் கொல்லத்தான் போகிறேன். என்னுடன் போர்புரிய விரும்பும் உன்னுடனும் போர்செய்யத்தான் போகிறேன். சிறிதுநேரம் பொறுத்துக்கொள் நான் எனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு வருகிறேன். உன்னைக் கொல்வதற்கு எத்தகைய ஆயுதம் தேவையோ அதை எடுத்துக்கொண்டு வருகிறேன்'' என்றான் லவணன்.

"நான் இங்கே நிற்கும்போது நீ உயிருடன் எங்கு செல்வாய்?'' என்று சத்ருக்னன் கேட்டான். மேலும் அவன், "எதிர்பாராதவிதமாக கண்ணில் தென்பட்டு விட்ட எதிரியை அறிவாளியான வீரன் விட்டுவிட மாட்டான். மனத் தடுமாற்றமடைந்து எதிரியைப் போகவிடும் அறிவு குறைந்த கோழை, தானே அழிந்து போகிறான்.

எனவே இந்த உலகை நன்றாகப் பார்த்துக்கொள். மூன்று உலகங்களுக்கும் இராமனுக்கும் பகைவனும் பாவியுமான உன்னைக் கூர்மையான அம்புகளால் தாக்கி எமன் வீட்டுக்கு அனுப்பப் போகிறேன்'' என்றான்.

69-ஆவது சர்க்கம்லவணன் அழிந்தான்

மாவீரனான சத்ருக்னனுடைய சொற்களைக்கேட்ட அரக்கன் எல்லையில்லா கோபம்கொண்டு "இரு... கொஞ்சம் பொறு'' என்று சொன்னான். கைகளை முறுக்கிக்கொண்டும் பற்களை நறநறவென கடித்துக்கொண்டும் சத்ருக் னனை போருக்கு அழைத்தான் லவணன்.

காண சகிக்காத தோற்றம்கொண்ட அரக்கன் போருக்கு அழைப்பதைக் கேட்டு, தேவ விரோதிகளை அழிப்பவனான சத்ருக்னன், "மற்ற எதிர்ப்பாளர்கள் உன்னால் தோற்கடிக்கப்பட்ட அந்த காலத்தில் சத்ருக்னன் பிறந்திருக்கவில்லை. அதனால் இப்போது என் பாணங்களால் தாக்கப்பட்டு எமன் வீட்டுக்குச் செல்லும் வழியில் செல்வாய். மாயாவியே, இராமபிரானால் இராவணன் வதம்செய்யப்பட்டதைக் கண்டு தேவதைகள் மகிழ்ச்சிடைந்தார்கள். இப்போது உன்னை நான் கொல்லப் போவதை பேரறிஞர்களான மறையாளர்களும் முனிவர்களும் கண்ணால் காணப் போகிறார்கள். அரக்கப்பதரே, என் பாணங்களால் சுட்டெரிக்கப்பட்டு நீ வீழ்ந்ததும், இந்த நகரத்திற்கும் நகர்ப்புற கிராமங்களுக்கும் நன்மையே நடக்கப் போகிறது. இப்போது என் கையிலிருந்து விடுபடப்போகும் வஜ்ராயுதம்போல் பேரொளி படைத்த அம்பு, சூரிய கதிர்கள் எவ்வளவு எளிதாக தாமரைக்குள் செல்லுமோ அவ்வளவு எளிதாக உன் மார்பில் புகுந்துவிடப் போகிறது'' என்றான்.

இவ்வாறு சத்ருக்னன் கூறி முடித்தவுடன், கோபத்தால் கொந்தளித்துக் கொண்டிருந்த லவணன் ஒரு மாபெரும் மரத்தைப் பிடுங்கி சத்ருக்னனின் மார்பை நோக்கி வீசினான். ஆனால் அவன் அதைத் துண்டுத்துண்டாக்கி விட்டான்.

பலம்மிகுந்த லவணன் தன்னுடைய செயல் பயனற்றுப் போனதைக்கண்டு ஏராளமான மரங்களைப் பிடுங்கி மீண்டும் சத்ருக்னன்மீது வீசியெறிந்தான். ஆற்றல் மிக்க சத்ருக்னன் ஏராளமான மரங்கள் தன்னைநோக்கி வருவதைக் கண்டு, வளைந்த கணுக்களையுடைய அம்புகளை மூன்று மூன்றாகவும் நான்கு நான்காகவும் செலுத்தி எல்லா மரங்களையும் வெட்டி வீழ்த்தி னான். பின்னர் அரக்கனுடைய மார்பின்மேல் அம்புமழை பொழிந்தான். ஆனால் அந்த அரக்கன் சிறிதளவுகூட துன்பத்தை அடைய வில்லை.

(தொடரும்)