77-ஆவது சர்க்கம் அகத்தியர் கூறிய சொர்க்கி வரலாறு
அகத்தியர் கூறுகிறார்: இராமா! முன்னொரு திரேதா யுகத்தில், நூறு யோசனை பரப்பளவுள்ள மிக விஸ்தாரமான காடாக இந்த இடம் விளங்கியது. அங்கே விலங்குகளுமில்லை; பறவைகளுமில்லை. கண்மணியே! உத்தமமான தவம்செய்வதற்கு ஏற்றதான ஓர் இடத்தைத் தேடிக்கொண்டு சுற்றிவருகையில், இந்தக் காட்டை அடைந்தேன்.
இந்தக் காட்டினுடைய அமைப்பே எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தது என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது! உண்ணத்தக்கவையும் சுவையுள்ளவையுமான கனிகளும் கிழங்குகளும் இருந்தன; பலவகையான, பல உருவம் கொண்ட மரங்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.
காட்டின் நடுப்பகுதியில், ஒவ்வொரு யோசனை நீள- அகலங்கொண்ட ஓர் ஏரி இருந்தது. அன்னம், காரண்டவம், சக்கரவாகம் முதலிய நீர்ப்பறவைகள் ஏரிக்கு அழகு சேர்த்தன.
அந்த ஏரி, மிகவும் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக இருந்தது. தாமரை, நீலோத்பலம் முதலிய மலர்கள் மண்டியிருந்தன. பாசி என்பது காணப்படவேயில்லை. ஏரியின் தண்ணீர் சுவையுடன் கூடி, மனத்திற்குத் திருப்தியளிப்பதாக இருந்தது.
தண்ணீர் மாசுமருவில்லாமல் தூயதாக இருந்தது; ஏரியில், கண்கவர் பறவைக் கூட்டங்கள் இருந்தன. அந்த ஏரியின் அருகில் அற்புதமான ஓர் ஆசிரமம் காணப்பட்டது. பழமையான, புண்ணியமான, தவப்பயனைத் தரவல்ல அந்த ஆசிரமத்தில் தவசி யாருமில்லை. காளை போன்றவனே! அந்த ஆசிரமத்தில், ஆனி மாதத்தில் ஓர் இரவு தங்கினேன். அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு, அந்த ஏரியை நோக்கிச் சென்றேன். அப்போது அங்கே திடமான உடலைக் கொண்டதும் அழுக்குப் படியாததுமான ஒரு சடலத்தைக் கண்டேன்.
பஞ்சபூதங்களின் (கொழுப்பு, சதை, எலும்பு முதலியவற்றின் ஒழுங்கான சேர்க்கையால் புஷ்டியான உடலுறுப்புக்களுடன், ஏரிவரை வியாபித்துக் கிடந்தது. மன்னனே! அந்த சடலம் மிகுந்த ஒளியுடன் ஏரிக்கரையில் காணப்பட்டது. அந்தச் சடலத்தைக் கண்டு, இது என்ன என்று யோசித்த வாறே ஏரியின் கரையில் இரண்டு நாழிகை நேரம் நின்றுகொண்டிருந்தேன்.
சிறுதுநேரம் சென்றபின், அற்புத மான தெய்விகக் காட்சியைக் கண்டேன். அன்னப் பறவைகளால் சுமக்கப்பட்ட மிகச்சிறந்த ஒரு விமானம் மனோவேகத்துடன் வந்து இறங்குவதைக் கண்டேன். அந்த விமானத்தில் தேவலோகவாசியான ஒருவர் வீற்றிருந்தார். ரகுநந்தனா! பொன் அணிகலன்கள் அணிந்த ஆயிரக்கணக்கான அப்சரப் பெண்டிர் அவருக்குச் சேவை செய்துகொண்டிருந் தார்கள்.
சிலர் இனிய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்; வேறு சிலர், மிருதங்கம் போன்ற தாளவாத்தியங்களை முழக்கிக் கொண்டிருந்தார்கள்; மற்றும் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள்; சிலர் விளையாட்டுத்தனமாகச் சிரித்துப் பே
77-ஆவது சர்க்கம் அகத்தியர் கூறிய சொர்க்கி வரலாறு
அகத்தியர் கூறுகிறார்: இராமா! முன்னொரு திரேதா யுகத்தில், நூறு யோசனை பரப்பளவுள்ள மிக விஸ்தாரமான காடாக இந்த இடம் விளங்கியது. அங்கே விலங்குகளுமில்லை; பறவைகளுமில்லை. கண்மணியே! உத்தமமான தவம்செய்வதற்கு ஏற்றதான ஓர் இடத்தைத் தேடிக்கொண்டு சுற்றிவருகையில், இந்தக் காட்டை அடைந்தேன்.
இந்தக் காட்டினுடைய அமைப்பே எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்தது என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது! உண்ணத்தக்கவையும் சுவையுள்ளவையுமான கனிகளும் கிழங்குகளும் இருந்தன; பலவகையான, பல உருவம் கொண்ட மரங்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.
காட்டின் நடுப்பகுதியில், ஒவ்வொரு யோசனை நீள- அகலங்கொண்ட ஓர் ஏரி இருந்தது. அன்னம், காரண்டவம், சக்கரவாகம் முதலிய நீர்ப்பறவைகள் ஏரிக்கு அழகு சேர்த்தன.
அந்த ஏரி, மிகவும் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக இருந்தது. தாமரை, நீலோத்பலம் முதலிய மலர்கள் மண்டியிருந்தன. பாசி என்பது காணப்படவேயில்லை. ஏரியின் தண்ணீர் சுவையுடன் கூடி, மனத்திற்குத் திருப்தியளிப்பதாக இருந்தது.
தண்ணீர் மாசுமருவில்லாமல் தூயதாக இருந்தது; ஏரியில், கண்கவர் பறவைக் கூட்டங்கள் இருந்தன. அந்த ஏரியின் அருகில் அற்புதமான ஓர் ஆசிரமம் காணப்பட்டது. பழமையான, புண்ணியமான, தவப்பயனைத் தரவல்ல அந்த ஆசிரமத்தில் தவசி யாருமில்லை. காளை போன்றவனே! அந்த ஆசிரமத்தில், ஆனி மாதத்தில் ஓர் இரவு தங்கினேன். அதிகாலையில் எழுந்து, காலைக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு, அந்த ஏரியை நோக்கிச் சென்றேன். அப்போது அங்கே திடமான உடலைக் கொண்டதும் அழுக்குப் படியாததுமான ஒரு சடலத்தைக் கண்டேன்.
பஞ்சபூதங்களின் (கொழுப்பு, சதை, எலும்பு முதலியவற்றின் ஒழுங்கான சேர்க்கையால் புஷ்டியான உடலுறுப்புக்களுடன், ஏரிவரை வியாபித்துக் கிடந்தது. மன்னனே! அந்த சடலம் மிகுந்த ஒளியுடன் ஏரிக்கரையில் காணப்பட்டது. அந்தச் சடலத்தைக் கண்டு, இது என்ன என்று யோசித்த வாறே ஏரியின் கரையில் இரண்டு நாழிகை நேரம் நின்றுகொண்டிருந்தேன்.
சிறுதுநேரம் சென்றபின், அற்புத மான தெய்விகக் காட்சியைக் கண்டேன். அன்னப் பறவைகளால் சுமக்கப்பட்ட மிகச்சிறந்த ஒரு விமானம் மனோவேகத்துடன் வந்து இறங்குவதைக் கண்டேன். அந்த விமானத்தில் தேவலோகவாசியான ஒருவர் வீற்றிருந்தார். ரகுநந்தனா! பொன் அணிகலன்கள் அணிந்த ஆயிரக்கணக்கான அப்சரப் பெண்டிர் அவருக்குச் சேவை செய்துகொண்டிருந் தார்கள்.
சிலர் இனிய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள்; வேறு சிலர், மிருதங்கம் போன்ற தாளவாத்தியங்களை முழக்கிக் கொண்டிருந்தார்கள்; மற்றும் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள்; சிலர் விளையாட்டுத்தனமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தாமரைமலர் போன்ற கண்கள் படைத்த அந்த சுவர்க்கவாசிக்கு, சில அப்சரப் பெண்டிர் நிலாக்கதிர் போன்று ஒளிவீசுவதும், தங்கத்தாலான கைப்பிடியுடையதுமான சாமரங்களை வீசிக்கொண்டிருந்தார்கள்.
ரகுநந்தனா! பின்னர் அவர், மேருமலையிலிருந்து இறங்கி வரும் சூரியனைப்போல் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்து, என்னைப் பார்த்ததும் விமானத்திலிருந்து இறங்கி, அந்தச் சடலத்தை உண்ணத் தொடங்கினார்.
சடலத்தின் செழிப்பான மாமிசத்தை வேண்டியது மட்டும் உண்ட பின்னர், ஏரியில் இறங்கி முகம், கை- கால்களைச் சுத்தம் செய்துகொண்டார்.
ரகுகுல மாணிக்கமே! தன்னை நன்றாகத் தூய்மைப்படுத்திக்கொண்ட பின்னர், உயர்ந்ததான அந்த விமானத்தில் ஏறத் தொடங்கினார்.
புருஷோத்தமனே! தேவர்களைப்போல் ஒளிவீசும் அவர் விமானத்தில் ஏறுவதைப் பார்த்து, அவரிடம், "தேவர்போல் ஒளிவீசும் தாங்கள் யார்? (தேவதை போன்ற தெய்விகத் தோற்றம் கொண்டிருந்தாலும்) இழிவான ஆகாரத்தைப் புசிக்கிறீர்களே?' சான்றோரே! தாங்கள் ஏன் ஒரு சவத்தை உண்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லவேண்டும். வெறுக்கத்தக்க இப்படிப்பட்ட உணவை உட்கொள்வது தேவதைகளுக்கு உகந்ததுதானா?
சான்றோரே! உங்கள் செயல் மிகவும் திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறேன். சவத்தின் உடல் தங்களுக்குரிய உணவல்ல என்று நான் கருதுகிறேன்' என்றேன்.
மன்னனே! உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலால், இனிமையாக நான் பேசியதைக் கேட்ட தேவலோகவாசி, எல்லா விவரங்களையும் என்னிடம் தெரிவித்தார்.''
78-ஆவது சர்க்கம் ஆபரணம் எவ்வாறு கிடைத்தது?
"இராமா! இவ்வாறு நான் கூறியதைக் கேட்டதும், தேவலோகவாசியான அவர், கைகளைக் கூப்பிக்கொண்டு கூறத் தொடங்கினார். "பிராமணோத்தமரே! கடந்து செல்லமுடியாத சுக-துக்கங்களின் காரணத்தைச் சொல்கிறேன். கேளுங்கள். இந்த நிகழ்ச்சி முன்னர் எப்போதோ நடந்தது.
முன்னோரு காலத்தில், என்னுடைய புகழ்பெற்ற தகப்பனார் விதர்பம் என்னும் நாட்டின் மன்னனாக இருந்தார். சுதேவன் என்பது அவருடைய பெயர். மூன்று உலகங்களிலும் பெயர் பெற்ற பராக்கிரமம் உடையவர். வேதவித்தகரே! அவருடைய இரு மனைவியரிடமிருந்தும் இரண்டு பிள்ளைகள் தோன்றினார்கள். நான் மூத்த மைந்தன; சுவேதன் என்று பெயர். இளையவன் பெயர் சுரதன்.
எங்களுடைய தந்தையார் விண்ணுலகம் சென்றதும், நகர மக்கள் எனக்கு முடிசூட்டினார்கள். நான், பொறுப்புடன் அறம் தவறாமல் ஆட்சிபுரிந்து வந்தேன். நல்விரதங்களை அனுஷ்டிப்பவரே! அறநெறி வழுவாமல் மக்களைக் காப்பாற்றிக்கொண்டு ஆட்சிசெய்து வருகையில், ஓராயிரம் ஆண்டுகள் கழிந்தன.
அந்தணோத்தமரே! ஒருசமயம் ஏதோ ஒரு காரணத்தால், என்னுடைய ஆயுளின் முடிவு நாள் தெரியவந்தது. அந்த நாளை நினைவில் வைத்துக்கொண்டு, நான் காட்டை நோக்கிச் சென்றேன்.
அப்போது, யாரும் உள்ளே நுழைய முடியாத- விலங்குகள், பறவைகள் இல்லாத இந்தக் காட்டுப்பகுதிக்கு வந்து சேர்ந்தேன். அழகான ஏரிக்கு அருகில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு தவம் செய்யத்தொடங்கினேன்.
சகோதரன் சுரதனை நாட்டின் மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்வித்து விட்டு, இந்த ஏரிக்கரைக்கு வந்து நீண்டகாலம் தவம் புரிந்தேன்.
இந்த மாபெரும் காட்டில், மூவாயிரம் ஆண்டுகள் செயற்கரிய தவம் செய்தேன். அதனால், எப்பாடுபட்டும் அடையமுடியாத பிரம்மலோகத்தைப் பெற்றேன்.
அந்தணோத்தமரே! பிரம்மலோகத்தை அடைந்த என்னை பசியும் தாகமும் வறுத்து எடுத்தன. கருணைமிக்க முனிவரே! பசி- தாகத்தினால் புலன்கள் கலங்கி துன்பப்பட்ட நான், மூவுலகத் தலைவரான பிரம்மாவை அணுகிக் கேட்டேன்.
"பகவானே! இந்தப் பிரம்மலோகத்தில் பசி- தாகம் ஏற்படாது என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய, எந்தக் கர்மாவின் பயனால் பசி- தாகம் என்னைத் தாக்குகிறது? பிதாமகரே! எனக்கு என்ன உணவு என்பதைத் தயவுசெய்து கூறுங்கள்.'
இதைக்கேட்டதும், பிரம்மா, "சுதேவன் மைந்தனே! மண்ணுலகில் உன்னுடைய உடலின் சுவையான மாமிசத்தையே எந்நாளும் புசிப்பாயாக.
சுவேதனே! உத்தமமான தவத்தைச் செய்து, உன் உடலின் செழுமையைப் பெருக்கிக் கொண்டாய், பேரறிஞனே! தண்ணீர் ஊற்றாமல் எந்தச் செடியும் தானாக வளர்வதில்லை. (தவம் செய்தால் மட்டும் போதாது; அது நல்ல பலனைத் தருவதற்கு தானம் என்ற தண்ணீரையும் ஊற்றவேண்டும்.)
அமைதி நிலவும் வனத்தில் இருந்த உனக்கு, சிறிதளவும் திருப்தி ஏற்படவில்லை. மன்னனே! முன்னர் ஒரு சமயம், பிச்சை கேட்டுக்கொண்டு வந்த வறிஞருக்கு, நீ பிச்சை இடவில்லை. இந்திரன்போல் ஒளிவீசபவனே! நீ, ஏழைகளுக்குகோ, தெய்வங்களுக்கோ, முன்னோர்களுக்கோ அன்னம் அளித்ததேயில்லை; தவம் செய்வதிலேயே மூழ்கியிருந்தாய்.
குழந்தாய்! அதனால், பிரம்மலோகம் வந்தாலும் பசி- தாகங்கள் உன்னைத் தாக்குகின்றன. புஷ்டியான உணவுகளால் செழிப்பாக வளர்ந்திருந்த அமுதச்சாறு நிறைந்த உன் சரீரத்தையே புசித்து, திருப்தியடைவாய்.
சுவேதனே! மிகவுயர்ந்த முனிவரான அகத்தியர் அந்தக் காட்டுக்கு எப்போது வருவாரோ, அப்போது இந்தத் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவாய்.
செல்வனே! அவர் (அகத்தியர்) தேவர்களையும் துன்பக்கடலிலிருந்து கடத்துவிக்கும் ஆற்றலுடையவர். வெறும் பசி- தாகத்தினால் துன்பப்படும் உன்னை விடுவிக்க அவரால் முடியாதா என்ன?' என்றார்.
அந்தணோத்தமரே! தேவர்களுக்கெல்லாம் தலைவரான பிரம்மாவின் உறுதியான சொற்களைக் கேட்ட நான், என்னுடைய உடலான வெறுக்கத்தக்க உணவைப் புசித்து வருகிறேன்.
பிரம்மரிஷியே! நான் மிக நீண்டகாலமாக இதனை உண்டு வருகிறேன். ஆனால், இது (சடலம்) குறைவடைவதில்லை; எனக்குத் திருப்தியும் ஏற்படுகிறது.
இவ்வாறு, துன்பத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் என்னைத் துன்பத்திலிருந்து விடுவிப்பீர்களாக. அந்தணரான அகத்தியரைத் தவிர வேறு எவரும் எனக்குப் புகலிடமில்லை. சான்றோரே! கஷ்டத்திலிருந்து என்னை விடுவிப்பதற்காக, இந்த ஆபரணத்தைத் தானமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். தங்களுக்கு நலமே உண்டாகட்டும். என்னிடம் தாங்கள் இரக்கம் காட்டவேண்டும்.
இந்த ஆபரணம் மற்றும் தங்கம், செல்வம், ஆடை, உணவுப்பொருட்கள். பல அணிகலன்கள் ஆகியவற்றையும் தங்களுக்குத் தருகிறேன்.
மாமுனிவரே! தாங்கள் விரும்பும் மற்ற பொருட்களையும் போக வஸ்துக்களையும் தருகிறேன். பகவானே! இந்தக் கஷ்டத்திலிருந்து என்னை விடுவிக்கத் தாங்கள் திருவுள்ளம் பற்றவேண்டும்' என்றார்.
சுவர்க்கவாசியின் துயரம் நிறைந்த சொற்களைக் கேட்ட நான், அவரைத் துன்பத்திலிருந்து விடுவிப்பதற்காக உத்தமமான இந்த ஆபரணத்தைப் பெற்றுக்கொண்டேன்.
மங்களமான அந்த ஆபரணத்தை தானமாக நான் பெற்றுக்கொண்ட விநாடியிலேயே, அந்த ராஜரிஷியின் முந்தைய மனிதவுடல் மறைந்து விட்டது.
சடலம் மறைந்துபோனவுடன் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருப்தியடைந்து, உவகை பொங்க, சுகமாக விண்ணுலகத்திற்கு ஏகினார்.
காகுத்தனே! இந்திரனுக்கு நிகரான மன்னன். சுவேதன் பசி- தாகத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக, கவின்மிகு தோற்றமுடைய இந்த ஆபரணத்தை, எனக்கு தானமாகக் கொடுத்தார்.''
79-ஆவது சர்க்கம்
மன்னன் தண்டனின் ஆட்சி முற்றிலும் புதுமையானதும் பிரம்மிக்க வைப்பதுமான அகத்தியருடைய சொற்களைக் கேட்டவுடன், அவரிடம் இராமனுக்கு இருந்த மதிப்பு பெருகியது. அத்துடன், மேலும் கேட்கவேண்டுமென்ற ஆவலும் உண்டாயிற்று. அதனால். மறுபடியும் அவரைக் கேட்கத்தொடங்கி னார்.
"ஐயனே, விதர்ப நாட்டு மன்னன் சுவேதன் தவம்செய்த பயங்கரமான காடு, விலங்குகளும் பறவைகளும் இல்லாத இடமாக எவ்வாறு ஆயிற்று?
மனித நடமாட்டமேயில்லாத அந்தக் காட்டில் மன்னர் ஏன் தவம்செய்ய முடிவு செய்தார்? உண்மையைத் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்.''
இராமனுடைய ஆவல் மிகுந்த சொற்களைக்கேட்ட தபோபலம் மிக்க மாமுனிவர், பதில் சொல்லத் தொடங்கினார்.
"இராமா! முன்னர் ஒரு கிருத யுகத்தில் செங்கோல் தாங்கிய மன்னர் மனு, இம்மண்ணுலகில் ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு. அந்தப் பரம்பரைக்கே பெருமையைச் சேர்க்கும் இக்ஷ்வாகு என்பவன் புதல்வனாகப் பிறந்தான்.
மூத்த புதல்வனும் வெற்றிகொள்ள முடியாதவனுமான அவனை, பூமண்டலத்தின் அரசனாக முடிசூட்டி. "உலகத்தில் அரச பரம்பரையினரை உண்டாக்குவாயாக' என்று சொன்னார்.
"அவ்வாறே செய்கிறேன்' என்று தந்தைக்கு வாக்களித்தார், மைந்தன். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த மனு, மகனை நோக்கிக் கூறினார்-
"நல்லிதயம் கொண்டவனே! நான் உன் சொற்களைக்கேட்டு மிகவும் மகிழ்கிறேன். அரச பரம்பரையை நீ உண்டாக்குவாய் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. துஷ்டர்களுக்குரிய தண்டனை கொடுத்து, மக்களைப் பரிபாலிக்கவேண்டும்.
ஆனால், குற்றம் செய்யாதவனுக்குத் தண்டனை கொடுக்கக்கூடாது.
குற்றம் செய்த மனிதர்களுக்கு சட்டப்படி கொடுக்கும் தண்டனை, தண்டனை கொடுக்கும் மன்னனை தேவலோகத்திற்கு அழைத்துச்செல்கிறது. அதனால். தோள்வலிமிக்க மைந்தனே! தண்டனை கொடுப்பதில் நீ கவனமாக இருக்கவேண்டும். உண்மையான குற்றவாளிக்கு, அவன் செய்த குற்றத்திற்கேற்ப தண்டனையை அளிப்பதன்மூலம், உலகில் தருமத்தைச் செய்ததாகிற புண்ணியம் கிடைக்கிறது.'
இவ்வாறாக மன்னன் மனு. பல அறிவுரைகளைப் புதல்வனுக்குக் கூறிவிட்டு, சமாதி நிலையை அடைந்து மகிழ்ச்சியுடன் விண்ணுலகம் சென்றார் சநாதனமான பிரம்மலோகத்தை அடைந்தார். அவர் பிரம்மலோகம் சென்றடைந்ததும், பேரொளி வீசும் இக்ஷ்வாகு, "எவ்வாறு நான் புதல்வர்களைப் 'பிறப்பிப்பேன்?' என்ற கவலையில் மூழ்கினார்.
அப்போது, வேள்வி, தானம், தவம் என்பதான பலவகையான கர்மாக்கள் மூலம், தேவகுமாரர்கள்போல் ஒளிவீசும் நூறு புதல்வர்களை உற்பத்தி செய்தார், மனுவின் மைந்தர் இக்ஷ்வாகு.
குழந்தாய் (இராமா!), அவர்களில் கடைசியாகத் தோன்றிய புத்திரன் அறிவில்லாதவனாகவும் கல்வி கற்காதவனாகவும் இருந்ததால், தன் மூத்தவர்களுக்குப் பணிவிடை செய்யாத வனாக இருந்தான். "அறிவில்லாத இந்தப் பையனின் உடலில் தடியடி விழப்போகிறது' என்று உணர்ந்துகொண்ட தந்தை, தண்டம் என்றே அவனுக்குப் பெயர் வைத்தார்.
எதிரிகளை அடக்கும் இராகவா!
அந்தப் புதல்வனுக்குரிய பொருத்தமான இடத்தைக் காணாத தந்தை, விந்திய- சைவல மலைகளுக்கிடையேயான பிரதேசத்திற்கு மன்னனாக்கினார். தண்டன் மன்னனாக ஆனவுடன், மலையடிவாரத்தில், ஈடிணையில்லாத உத்தமமான நகரம் ஒன்றைத் தான் வசிப்பதற்காக அமைத்துக்கொண்டான்.
ஐயனே! அந்தப் பட்டணத்திற்கு மதுமத் என்று பெயரிட்டான். விரத அனுஷ்டானமுடைய சுக்ராசாரியாரைத் தன்னுடைய புரோகிதராக இருக்கும்படி வேண்டிக் கொண்டான்.
இவ்வாறு, மகிழ்ச்சியும் ஆற்றலும் மிக்க தேவலோகவாசிகளைப் போன்ற குடிமக்களால் நிறைந்த அந்த நகரத்தில், புரோகிதரின் வழிகாட்டுதலின்படி ஆட்சிபுரிந்து வந்தான். மன்னன் தண்டன்.
பெருமைக்குரிய மன்னரின் மைந்தனான அவன், தேவலோகத்தில் பிருஹஸ்பதியின் ஆலோசனைக்கிணங்க அரசு செலுத்தும் இந்திரனைப்போல், சுக்ராசாரியாரின் ஆலோசனையைக் கேட்டு. நல்லாட்சி புரிந்துவந்தான்."
(தொடரும்)