57-ஆவது சர்க்கம்
பிராணிகளின் கண்ணிமைப்பில் நிமி இடம் பெறுதல் தெய்வீகமானதும் மிக வியப்பை ஏற்படுத்துவதுமான அந்த வரலாற்றைக் கேட்ட லட்சுமணன் மிகவும் மகிழ்ச்சி யடைந்து இராமனைப் பார்த்து, "காகுத்தரே, தேவர்களுக்கு நிகரான அந்தணரும் அரசரும் உடலை இழந்தபின் எப்படி மீண்டும் உடலைப் பெற்றார்கள்?'' என்று கேட்டான்.
தோல்வியே காணாத வீரத்தையுடைய இராமன், வசிஷ்டருடைய வரலாறைக் கூறத் தொடங்கினார்.
"ரகுகுலத் திலகமே, மகா உத்தமர்களான மித்திரனும் வருணனும் ஒரு கும்பத்தில் தங்கள் வீரியத்தை சொரிந்தனர். அதிலிருந்து ஒளிமிக்க இரு அந்தணர்கள் தோன்றினர். அவர்கள் முனிவர்களுள் மிகச் சிறந்தவர்களாக விளங்கினர். முதன்முதலாக அந்த குடத்திலிருந்து அகத்தியர் தோன்றினார்.
அவர் மித்திரனிடம், "நான் உங்களது மகனல்ல' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஊர்வசியிடம் ஏற்பட்ட காம மயக்கத்தால் மித்திரனிடமிருந்து வெளிப்பட்ட வீரியமானது முன்னதாகவே அந்தக் குடத்தில் இருந்தது. பின்னர் வருணனுடைய வீரியமும் அதில் கலந்தது. சிறிது காலத்திற்குப் பின்னர் மித்திரன், வருணனுடைய அந்த வீரியக் கலவையிலிருந்து வசிஷ்டர் தோன்றினார். அவர் இக்ஷவாகு குலத்தின் மதிக்கத்தக்க ராஜகுருவாக விளங்கினார்.
லட்சுமணா, அவர் அவ்வாறு தோன்றியவுடனேயே இக்ஷவாகு மன்னர் அவரிடம் சென்று, "எங்கள் குலத்தின் நல்வாழ்வுக்கு தாங்கள் ஆச்சாரியாராக விளங்கவேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். புதிய உடலைப்பெற்ற வசிஷ்டரின் தோற்றத் தைப்பற்றி இப்போது உனக்குக் கூறினேன். இனி நிமியினுடைய வரலாறைக் கூறுகிறேன்.
நிமி உடலி-ருந்து பிரிந்தவனாக ஆகிவிட்டதைக் கண்ட முனிவர்கள் அனைவரும், அந்த உடலுக்கு யாகதீட்சை செய்துவைத்தார்கள். அவர்கள் நகரமக்கள் மற்றும் பணியாளர்களின் உதவியுடன் அந்த உடலுக்கு ஆடை, மாலை சாற்றி, நறுமணம்பூசி காப்பாற்றிவந்தார்கள். காலப்போக்கில் வேள்வி நிறைவடைந்த தும் பிருகு முனிவர், நிமியினுடைய உயிர்நிலையைக் கருத்தில்கொண்டு, "மன்னனே, வேள்வி நல்லபடியாக நிறைவேறியதால் நான் உன்னிடம் மகிழ்வுடன் இருக்கிறேன். நீ விரும்பினால் உன்னை உயிர்ப்பித்து மீண்டும் கொண்டுவருவேன்' என்று கூறினார். அனைத்து தேவதைகளும் மனம் மகிழ்ந்து நிமியின் உயிர்க் கருவிடம், "ராஜரிஷியே, உன்னுடைய உயிருணர்வை எங்கே நிலைநாட்டலாமென்று கூறுங்கள்' என கேட்டார்கள்.
இவ்வாறு அனைத்து தேவதைகளும் கேட்க, நிமியினுடைய ஜீவன், "உத்தமர்களே, நான் அனைத்து பிராணிகளுடைய கண்ணிமைப்பில் இருக்க விரும்புகிறேன்' என்றது. "அவ்வாறே ஆகட்டும். எல்லா உயிர்ப் பிராணிகளின் கண்களிலும் வாயு வடிவமாக இயங்குவாய். மண்ணாளும் அரசரே, உங்கள் சேர்க்கையால், களைப் படைந்துபோகும் கண்கள் களைப்பைப் போக்கிக்கொள்வதற்காக அவ்வப்போது இமைகளால் கண்களை மூடிக்கொள்ளும்' என்றனர்.
இவ்வாறு கூறிவிட்டு அனைத்து தேவதைகளும் வந்தபடி திரும்பிச் சென்றனர்.
முனிவர்கள் நிமியின் உடலை, அது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து எடுத்துவந்தனர். அந்த உடலி-ருந்து இன்னொரு உடல் உயிர்ப்புடன் தோன்றவேண்டுமென்ற நோக்கத்துடன், அந்த உடலில் அரணிக்கட்டையை நிலைநிறுத்தி, புத்திர உற்பத்திக்குரிய ஹோம மந்திரங்களைக் கூறியவண்ணம் வேகமாகக் கடைந்தனர்.
இவ்வாறு அரணிக் கட்டையால் கடைந்தபோது அதிலிருந்து மகா தேஜஸ்வியான ஒருவர் தோன்றினார். கடைந்ததன் விளைவாக வெளிப்பட்டதால் மிதி என்றும், அதிசயமான முறையில் பிறந்ததால் ஜனகர் என்றும் பெயர்பெற்றார். உணர்வற்ற உடலி-ருந்து தோன்றியதால் விதேகர் என்றும் பெயர்பெற்றார். இவ்வாறு மகா தேஜஸ்வியான மிதி விதேக மன்னரான ஜனகருக்கு குல முதல்வர் ஆகிறார். அதனால் அந்த வம்சம் "மைதில வம்சம்' என்றழைக்கப்படுகிறது.
அரசர்களுள் சிறந்தவரான நிமியின் சாபத்தால் அந்தணரான வசிஷ்டருக்கும், அந்த அந்தணருடைய சாபத்தால் மன்னனுக்கும், மிகவும் வியப்பைத் தரும் வகையில் ஏற்பட்ட பிறப்பைப் பற்றி இப்போது விரிவாகக் கூறிவிட்டேன்.''
58-ஆவது சர்க்கம்
யயாதி பெற்ற சாபம்
இராமன் மேற்கண்ட வரலாறைச் சொல்லிமுடித்தவுடன் லட்சுமணன், ஆன்மப் பொலிவால் அழல்போல் விளங்கும் இராமனைப் பார்த்து, "மகா வலிமை படைத்த மன்னரே, விதேகருடைய பழமைவாய்ந்த சரித்திரம் அற்புதமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. அதுபோன்று வசிஷ்டர், நிமியினுடைய வரலாறும் பிரம்மிப்பை ஊட்டுகிறது. நிமி ஒரு க்ஷத்ரியர். மேலும் யாகதீட்சை ஏற்றுக்கொண்டவர்.
அரசகுலத்தைச் சேர்ந்த அவர் வசிஷ்டரிடம் நடந்துகொண்டமுறை சரியானதல்ல என நினைக்கிறேன்'' என்றான். (யாக தீட்சை ஏற்றவர் கோபம் கொள்ளக்கூடாது; மன்னன் மறையவரை இகழக்கூடாது என்பது விதி.) க்ஷத்திரிய மன்னர்களின் தலைசிறந்த வரும், பார்த்த அளவிலேயே பிறர் மனதில் களிப்பை உண்டாக்குவதில் முதன்மையானவரும், வீரம் பொருந்தியவருமான இராமன், அனைத்து அற நூல்களையும் கற்றறிந்த லட்சுமணன் கூறியதைக் கேட்டதும் தனது சகோதரனை நோக்கி, "வீரனே, எல்லா மக்களிடத்திலும் அவ்வாறான பொறுமை இருப்பதில்லை. யயாதி மன்னர் சத்துவ குணத்தை மேற்கொண்டு, பொறுக்கமுடியாத கோபத்தையும் அடக்கிக்கொண்டார். அந்த வரலாற்றை இப்போது உனக்குக் கூறுகிறேன்; கவனமாகக் கேள்.
நகுஷனுடைய மகன் யயாதி என்னும் அரசர். குடிமக்களின் நன்மையைக் காப்பவர். அவருக்கு இரண்டு மனைவிகள். அவர்களுக்கு நிகரான அழகுள்ளவர் இந்த பூவுலகில் எவருமே இல்லை. நாடாளும் முனிவர் போன்ற மன்னரின் ஒரு மனைவியின் பெயர் சர்மிஷ்டை. அவள் அரசரின் அன்புக்குப் பாத்திரமானவள்; அரச குலத்தைச் சேர்ந்தவள்; விருஷபர்வனின் மகள்.
யயாதியின் மற்றொரு மனைவியான தேவயானி சுக்கிராச்சாரியாரின் மகள்.
அவள் பேரழகிதான் என்றாலும் கணவனின் அன்புக்குரியவளாக இல்லை. அவர்கள் இருவருக்கும் அழகும் நற்குணங்களுமுடைய பிள்ளைகள் பிறந்தனர். புரு என்பவனை சர்மிஷ்டையும், யது என்பவனை தேவயானி யும் பெற்றெடுத்தனர்.
புரு தன் தாயின் காரணமாகவும், தனது நற்குணங்களாலும் அரசரின் அன்புக்குரியவனாக இருந்தான். அந்த அளவு அன்பை யது பெறாததால் துயரமடைந்து தனது தாயிடம், "அம்மா, அரிய செயல்களை எளிதில் செய்யக்கூடியவரும், தேவதைகளுக்கு நிகரானவருமான பிருகு முனிவருடைய குலத்தில் தோன்றியவர் நீங்கள்.
ஆனாலும் மனதை வாட்டும் துயரத்தையும், பொறுத்துக்கொள்ள முடியாத அவமானத் தையும் இங்கு சகித்துக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் நாம் இருவரும் ஒன்றாக நெருப்பில் விழுந்து மாய்ந்து விடுவோம் அந்த அரசகுலப் பெண்ணுடன் அரசர் நீண்டகாலம் இன்பத்தை அனுபவிக்கட்டும். இந்த துன்பங்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்க முடியுமானால் இப்படியே இருங்கள். ஆனால் என் உயிரைப் போக்கிக் கொள்ள அனுமதி தாருங்கள். நீங்கள் இங்கிருப்பதை சகித்துக்கொண்டிருங்கள். என்னால் இயலாது. நான் இறக்கப்போவது நிச்சயம்' என்றான்.
தன் மகன் யது கூறியதைக்கேட்ட தேவயானிக்கு மிகவும் கோபம் உண்டானது. உடனே தனது தந்தை சுக்கிராச்சாரியாரை மனதால் எண்ணினாள். அவர் தன் மகள் தன்னை நினைப்பதை உணர்ந்து மிக விரைவாக தேவயானி இருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார். தன் இயல்புகளையிழந்து, வாட்டத்துடன் உணர்விழந்தவள்போல் இருந்த தன் மகளைக் கண்டு, "குழந்தாய், எதனால் இவ்வாறு இருக்கிறாய்?' என்று அவர் கேட்டார்.
இவ்வாறு தன் தந்தை வற்புறுத்திக் கேட்டதும், தேவயானி மிகவும் சீற்றத் துடன், "முனிவர்களில் சிறந்தவரே! கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அல்லது ஆழம் காணமுடியாத நீர்ப் பிரவாகத்தில் நான் விழப்போகிறேன். அல்லது விஷத்தைக் குடிப்பேன். இனிமேலும் இழிவான வாழ்க்கையை இங்கு என்னால் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. நான் இங்கே வேதனைப் பட்டுக் கொண்டிருப்பதையும், அவமதிக் கப்படுவதையும் தாங்கள் அறியமாட்டீர்கள். மரத்தை சிதைப்பதால் அதிலுள்ள மலர்களும் இலைகளும் நாசமடைகின்றன. ஆட்சிசெய்யும் முனிவர்போன்ற யயாதி மன்னர் உங்களிடம் மதிப்பு வைக்காததால் என்னை அலட்சியப்படுத்துகிறார். எனக் குரிய கௌரவத்தைக் கொடுப்பதில்லை' என்றாள்.
அவள் கூறியதைக்கேட்ட சுக்கிராச்சாரி யார் கோபத்தில் மூழ்கியவராக, நகுஷனு டைய மகனான யயாதியைப் பார்த்து, "நீ தீய எண்ணம் கொண்டவன். அதனால் என்னை மதிக்கவில்லை. எனவே நீ மிகவும் வயோதிகத்தையடைந்து, உடல் தளர்ந்து நலிவடைவாய்' என்று சாபம் தந்துவிட்டு, மகளுக்கு சமாதானம் கூறிவிட்டு பின்னர் தன் இருப்பிடத்திற்குச் சென்றார்.
59-ஆவது சர்க்கம்
புருவுக்கு முடிசூட்டுதல்
சுக்கிராச்சாரியார் கோபத்துடன் சாபம் தந்ததைக்கேட்ட யயாதிக்கு மிகுந்த வருத்தம் உண்டானது. தனக்கு ஏற்பட்டுள்ள முதுமையைப் பிறருக்குக் கொடுத்து, அவருடைய இளமையைப் பெற்றுக்கொள்ளும் தனித்தன்மை வாய்ந்த சாபமென்பதால், தனது மகன் யதுவை அழைத்து, "செல்வமே, நீ தர்மம் அறிந்தவன். எனக்கு ஏற்பட்டுள்ள இந்த முதுமையை ஏற்று, உன் இளமையை எனக்குக் கொடு. புகழ் வாய்ந்தவனே, இன்னும் சிலகாலம் நான் சுகபோகங்களை அனுபவித்து, எனது விருப்பங்களைப் பூர்த்திசெய்து கொள்கிறேன். இதுவரை நான் அனுபவித்த புலனின்பங்களால் எனது ஆசை தீரவில்லை. என் விருப்பம்போல புலன் சார்ந்த இன்பங்களை நன்கு அனுபவித்துவிட்டு பின்னர் முதுமையை உன்னிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்' என்றார்.
இதைக்கேட்ட யது அரசரைப் பார்த்து, "உங்கள் அன்புக்குரிய மகன் புரு உங்கள் முதுமையை ஏற்கட்டுமே... அரசரே, தாங்கள் எனக்கு எந்த சுக சௌக்கியங்களையும் கொடுத்ததில்லை. எவரை அருகில் அமர்த்திக்கொண்டு உண்டு களிக்கிறீர்களோ அவர்கள்தான் உங்கள் முதுமையை ஏற்றுக்கொள்ளட்டுமே' என்றான்.
யதுவினுடைய இந்த பதிலைக் கேட்டபிறகு புருவை அழைத்த மன்னர், "எனக்கு வந்துள்ள இந்த முதுமையை என் நலன்பொருட்டு நீ ஏற்றுக்கொள்' என்று கேட்டார்.
அவரது சொற்களைக்கேட்ட புரு கைகளைக் கூப்பியவண்ணம், "என்ன பேறு பெற்றேன்! என்ன அருள் பெற்றேன்! என் தந்தையே, தங்கள் கட்டளைப்படி நடக்க சித்தமாக இருக்கிறேன்' என்று உவகையுடன் கூறினான்.
புருவினுடைய பதிலைக்கேட்டு மிகவும் மகிழ்ந்த யயாதி தனது முதுமையை அவனுக்கு மாற்றிக் கொடுத்தார். உடனே வாலிபப் பருவம் எய்திய யயாதி ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்தார். பல்லாயிரம் ஆண்டுகள் உலகத்தைப் பரிபாலித்தார். நீண்டகாலம் கடந்தபின்னர் யயாதி மன்னர் புருவைப் பார்த்து, "மகனே, உன்னிடம் அடகுப் பொருளாக வைக்கப்பட்டுள்ள என் வயோதிகத்தை என்னிடம் திரும்பக் கொடுத்துவிடு. என் கண்மணியே, எனது முதுமை அடகுப் பொருளாகத்தான் உன்னிடம் மாற்றிக் கொடுக்கப்பட்டது. அதை இப்போது நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். நீ வருந்தவேண்டாம். என் சொற்படி நீ நடந்ததால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகுந்த மனநிறைவோடு உன்னை இந்த நாட்டின் மன்னனாக முடிசூட்டப் போகிறேன்' என்றார்.
தன் மகன் புருவிடம் இவ்வாறு கூறிவிட்டு யயாதி, தேவயானியின் மகனான யதுவை நோக்கி கோபத்துடன், "யதுவே, எவராலும் வெல்லமுடியாத மகனைப்பெற விரும்பிய நான் அரக்கனான உன்னைப் பெற்றேன். நீ எனது ஆணையை எதிர்த்து நடந்தாய். எனவே உன் சந்ததியினருக்கு அரச உரிமை கிடைக்காமல் போகட்டும். நான் உனது தந்தை; உனது குரு. அவ்வாறிருந்தும் என் சொற்களை நீ மதிக்கவில்லை என்பதால், கொடுங்கோலர்களான அரக்கர்களையும் பூதங்களையும் மகன்களாகப் பெறுவாய். தீய அறிவுடைய உன்னிடம் தோன்றுபவர்கள் சந்திர வம்ச பரம்பரையினராகக் கருதப்பட மாட்டார்கள். உன் சந்ததியும் உன்னைப் போலவே பணிவில்லாதவர்களாகவே இருப்பார்கள்' என்றார்.
ராஜரிஷியான யயாதி, யதுவிடம் இவ்வாறு கூறிவிட்டு புருவுக்கு பட்டம் சூட்டிவிட்டு வானப்பிரஸ்த ஆசிரமத்தை மேற்கொண்டார். (காட்டில் வாழத் தொடங்கினார்.) நீண்ட காலத்திற்குப் பின்னர், வினைப் பயன்களையெல்லாம் அனுபவித்துத் தீர்த்தபிறகு யயாதி தேவலோகம் சென்றார்.
பெரும் புகழ்கொண்ட புரு அறம்தவறாது அரசு செலுத்தினார். காசி நாட்டின் தலைநகரான பிரதிஷ்டானபுரியிலிருந்து அவர் நாட்டை நிர்வகித்தார். அரச பரம்பரையிலிருந்து வெளியேற்றப்பட்ட யது நகரங்களிலும் உட்புகமுடியாத கிரௌஞ்ச வனத்திலும் ஆயிரங்கணக்கான பிசாசுகளைத் தோற்றுவித்தான்.
யயாதி மன்னர், சுக்கிராச்சாரியாரால் கொடுக்கப்பட்ட சாபத்தை க்ஷத்திரிய குல அறநெறிகளுக்கிணங்க பொறுமையுடன் ஏற்று அனுபவித்துத் தீர்த்தார். ஆனால் நிமி மன்னர் வசிஷ்டரின் சாபத்தைப் பொறுத்துக் கொள்ளவில்லை. லட்சுமணா, எல்லா விஷயங்களையும் கூறிவிட்டேன். அறச்செயல்களை அனுஷ்டிக்கும் மேன்மக்கள் சென்ற வழியிலேயே நாம் செல்கிறோம். அதனால் நிருக மன்னனுக்கு ஏற்பட்டதைப்போன்ற பாவம் நமக்கு ஏற்படாது.''
இராமபிரான் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் இரவு கழிந்து வானத்தில் ஓரிரு நட்சத்திரங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. கீழ்திசையில் செவ்வண்ணம் படரத் தொடங்கியது.
அந்தக் காட்சி, மலர்களின் செந்நிறக் குழம்பில் தோய்ந்த அருணன் என்னும் செவ்வண்ண ஆடையால் ஆகாயம் தன் உடலை மறைத்துக்கொள்வதுபோல இருந்தது.
இடைச்செருகல் சர்க்கம்- 1
இராமனிடம் விண்ணப்பம் செய்யவந்த நாய் தெளிந்த ஓர் அதிகாலை வேளையில், காலை நேரத்திற்குரிய வைதீகக் கடமைகளை முடித்துக்கொண்டு, வேத வித்தகர்களான அந்தணர்களும், அரச புரோகிதரான வசிஷ்டரும், காசிப முனிவரும் புடைசூழ, அரசு அலுவல்களைக் கவனிக்கும்பொருட்டு வழக்காடு மன்றத்திற்கு வந்தார் இராமன். அங்கு மக்களின் முறையீடுகளைக்கேட்டு நீதிவழங்குவதற்காகப் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார்.
அந்த மன்றத்தில் நாட்டு நடப்புகளை அறிந்த அமைச்சர்கள், அறநூல் களை செம்மையாகக் கற்றறிந்த விற்பன்னர் கள், நீதிநூல் வல்லுநர்கள், சிற்றரசர்கள் மற்றும் சபையோர்கள் குழுமியிருந்தனர்.
இந்திரன், எமன், வருணனுடைய சபையைப்போல, அரிய செயல்களையும் எளிதாக செய்துமுடிக்கும் ராஜ சிம்மமான இராமனுடைய அந்த மன்றம் சிறப்புடன் விளங்கியது.
இராமன், நற்பண்புகளை வெளிப்படுத்தும் லட்சணங்களைக்கொண்ட லட்சுமணனைப் பார்த்து, "லட்சுமணா, நீ வெளியே சென்று கோரிக்கைகளோடு வந்திருப்பவர்களை வரிசையாக உள்ளே அனுப்பு'' என்றார். அதைக்கேட்டு லட்சுமணன் வாயிலுக்கு வந்து, "மன்னரை சந்தித்து கோரிக்கைகளை வைக்க விரும்புபவர்கள் வரலாம்'' என்று கூவி அழைத்தான். "எனக்கு அரசரிடம் ஒரு விண்ணப்பம் இருக்கிறது' என்று கூறி எவருமே முன்வரவில்லை.
இராமனின் ஆட்சியில் எவருக்கும் உடல்நோயோ மனத் துன்பமோ தோன்ற வில்லை. விளைநிலத்தில் செழுமையான தானியங்களும், மரம், செடிகளும் மண்டியிருந்தன. அக்காலத்தில் ஒரு சிறுவனோ, வாலிபனோ, நடுவயதுடைய வனோகூட மரணமடையவில்லை. (முதிர்ந்த வயதில் இயற்கையான மரணமடைந்தார்களே தவிர, அற்பாயுளில் எவரும் இறக்கவில்லை என்பது கருத்து.) அறநெறிப்படியே ஆட்சி செய்யப் பட்டதால் மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்தது. இராமன் அரசு செலுத்திய காலத்தில் அரசிடம் விண்ணப்பம் வைக்க எவரும் வந்ததில்லை. லட்சுமணன் நீதிமன்றத்திற்குள் வந்து இராமனை நோக்கி கைகூப்பி, "முறையீடு செய்ய எவரும் வரவில்லை'' என்று கூறினான். மகிழ்ச்சியடைந்த இராமன் லட்சுமணனிடம், "மீண்டும் நீ வெளியே சென்று விண்ணப்பம் கொடுக்க யாரேனும் வந்திருக்கிறார்களா என்று நன்றாகத் தேடிப்பார்'' என்றார்.
சிறந்த அறநெறிகளின்படி ஆட்சி செய்யப்பட்டுவந்ததால் அதர்மத்திற்கு அங்கு இடமே இல்லை. நெறி தவறினால் அரச தண்டனை கிடைக்கும் என்னும் அச்சத்தால், மக்கள் ஒருவருக்கொருவர் தர்ம நெறிப்படியே பழகினர்.
"அரசுப் பணியாளர்கள், என்னால் எய்யப்பட்ட அம்பைப்போல குறிதவறாமல் மக்களைக் காப்பாற்றுகிறார்கள். என்றாலும் லட்சுமணா, நீயும் விழிப்புடன் இருந்து மக்களை பரிபாலிக்கவேண்டும்'' என்று இராமன் கூறியவுடன், லட்சுமணன் அரச மாளிகையிலிருந்து வெளியே வந்தான்.
வாயிலின் எதிரே ஒரு நாய் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். அந்த நாய் லட்சுமணனை நோக்கியவாறு தொடர்ந்து அழுதது. மாவீரனான லட்சுமணன் நாயைப் பார்த்து, "நல்விலங்கே, உனக்கு என்ன காரியம் நடக்கவேண்டும் என்பதை அஞ்சாமல் கூறு'' என்றான்.
அவனது சொற்களைக் கேட்ட நாய், "எல்லா உயிர்களுக்கும் அடைக்கல மளிப்பவரும், எந்த காரியத்தையும் எளிதில் முடிப்பவரும், ஆபத்து நேரத்தில் தஞ்சமளிப்பவருமான இராம பிரானிடம்தான் எனக்கு ஆகவேண்டிய காரியத்தைக் கூறுவேன்'' என்றது.
நாய் கூறியதைக்கேட்ட லட்சுமணன் இதை இராமனிடம் தெரிவிப்பதற்காக மன்றத்துக்குள் நுழைந்தான். நிகழ்ந்ததை இராமனிடம் கூறிவிட்டு அரச மாளிகையிலிருந்து மீண்டும் வெளியேவந்து, "நீ உள்ளே சென்று என்ன கூறவிரும்புகிறாயோ அதை மன்னரிடமே தெரிவிக்கலாம்'' என்றான்.
லட்சுமணனின் சொற்களைக்கேட்ட அந்த நாய், "லட்சுமணரே, ஆலயங்கள், அரச மாளிகைகள், வேத உத்தமர்களின் வாழ்விடங்களில் அக்னி, இந்திரன், சூரியன், வாயு முதலிய தேவதைகள் இருந்துகொண்டிருக்கின்றன. அதனால் இழிந்த பிறவிகளான நாங்கள் அந்த இடங்களுக்குள் போகக்கூடாது. நாங்கள் இந்த அரச மாளிகைக்குள் நுழைய மாட்டோம். ஏனென்றால் அறக்கடவுளே உருவெடுத்து வந்தவர் போன்றவர் மன்னர்.
சத்தியமே பேசுபவர்; போர்க்கலையில் வல்லவர்; எல்லா உயிர்ப் பிராணிகளின் நலனிலும் அக்கறையுடையவர் இராமபிரான். ஆட்சியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அறுவகை தந்திரங்களையும் அறிந்தவர்.
எல்லாருக்கும் நீதி வழங்குபவர். அனைத் தும் அறிந்தவர். அனைவராலும் அணுகத் தக்கவர். அவரேதான் சந்திரன், மிருத்யு, எமன், குபேரன், அக்னி, இந்திரன், சூரியன், வருணன்.
சுமித்திரையின் மகனே, மக்களைக் காக்கும் மன்னர் இராமனிடம் சென்று சொல்லுங்கள். அவருடைய அனுமதியின்றி இந்த மாளிகைக்குள் நுழைய நான் விரும்பவில்லை'' என்றது.
அறிவாளியான லட்சுமணன் அந்த நாயிடம் ஏற்பட்ட இரக்கத்தால், மண்டபத்துக்குள் சென்று இராமனிடம், "கௌசல்யை மைந்தரே, தங்கள் ஆணைப்படி நான் வெளியே சென்று மனுதாரர்களை அழைத்தேன். தங்களிடம் கோரிக்கை வைக்க ஒரு நாய் மட்டுமே வந்து காத்துக்கொண்டிருக்கிறது'' என்றான்.
அவனது சொற்களைக்கேட்ட இராமன், "என்னிடம் ஒரு விண்ணப்பத்தை முன்வைத்துக் காத்திருக்கும் அதை உள்ளே அனுப்பு'' என்றார்.
(தொடரும்)