53-ஆவது சர்க்கம் நிருகன் சாபம் பெற்றது
யுக்திப்பூர்வமாக லட்சுமணன் கூறிய சொற்களைக் கேட்ட இராமன் மகிழ்ச்சியடைந்து, "அன்பனே, அறிவுடையவனே, இக்காலத்தில் உன்னைப் போன்ற ஒரு சகோதரன் கிடைப்பது மிகவும் அரிதானது. என் எண்ணங்களுக்கேற்ப நீ நடந்துகொள்கிறாய். நற்குணங்கள் பொருந்தியவனே, இப்போது என் மனதிலுள்ள எண்ணங்களைச் சொல்லப் போகிறேன். அதன்படி செய்வாயாக.
லட்சுமணா, கடந்த நான்கு நாட்களாக அரசருக்கான கடமைகளை நான் செய்யவில்லை. இது என் உயிர்நிலையை பிளக்கக்கூடியதாக உள்ளது. குடிமக்கள், புரோகிதர், அமைச்சர்களோடு, முறையீடு செய்யவிரும்பும் ஆண்களையும் பெண்களையும் அழைப்பாய். ஒவ்வொரு நாளும் மக்களுடைய குறைகளைக்கேட்டு உரிய நடவடிக்கை எடுக்காத மன்னன், பயங்கரமானதும் காற்று புகாததுமான நஜ்ரகத்தில் வீழ்வான் என்பதில் ஐயமில்லை.
முன்னோரு காலத்தில் நிருகன் என்னும் பெயர்கொண்ட புகழ்வாய்ந்த மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் அந்தணர்களிடம் பக்திகொண்டவன். சத்தியம் தவறாதவன். நல்ல நடவடிக்கையுடையவன். அவனொரு சமயம் புஷ்கரம் தலத்திற்குச் சென்று, கன்றோடு கூடியவையும், தங்கத்தால் அலங் கரிக்கப்பட்டவையுமான ஒரு கோடி பசுக்களை வேத வித்தகர்களுக்கு தானம் செய்தான்.
மிகவும் ஏழையான அந்தணர் ஒருவர்- வயலில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிவந்து வாழ்க்கை நடத்துபவர். தினமும் அக்னி ஹோத்திரம் செய்பவர். அவருடைய பசுவானது தனது கன்றுடன் அரசன் தானம் செய்துகொண்டிருந்த இடத்திற்கு வந்தது. அது வேறொருவருக்கு சொந்தமான பசு என்பதை அறியாத மன்னன், அதையும் முறைப்படி தானம் செய்து கொடுத்துவிட்டான்.
பசு இல்லாததால் பசியினால் வருந்திய அந்தணர் தன் பசுவை பல இடங்களில் ஆண்டுக்கணக்கில் தேடியலைந்தும் அவரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒருநாள் அவ்வாறு தேடிச் செல்லும் போது கனகலம் என்னும் ஊரில் ஒரு அந்தணரின் வீட்டில் தன் பசுவும் கன்றும் இருப்பதைப் பார்த்தார். பசு கொழுகொழு வென்று இருந்தது. கன்று வளர்ச்சியடைந்தி ருந்தது. அப்போது அந்த அந்தணர் அந்தப் பசுவுக்கு தான் வைத்த "சபலா' என்னும் பெயரை உரத்துக்கூவி "வா வா' என்றழைத்ததை அது கேட்டது. பசியினால் வருந்திக் கொண்டிருக்கும் அந்த அந்தணருடைய பரிச்சயமான குரலைக் கேட்டதும் அந்த பசு அவரைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கியது. அந்தப் பசுவை வளர்த்துவந்த அந்தணரும் வேகமாக அதைப் பின்தொடர்ந்து சென்றார். அருகில் சென்றதும் அந்த அந்தணரைப் பார்த்து, "இது என்னுடைய பசு; நிருக மாமன்னரால் தானம் செய்து தரப்பட்டது' என்றார்.
கற்றறிந்த அந்தணர்களாகிய அந்த இருவருக்குமிடையே அந்த பசுவைக் குறித்து பெரும் சச்சரவு ஏற்பட்டது. அவர்கள் வாய்ச்சண்டை இட்டபடி தானம் கொடுத்த அரசனிடமே சென்றனர். அவர்கள் அரசு மாளிகை சென்று பல நாட்கள் இரவு பகலாகக் காத்திருந்தும் அரசரை சந்திக்க இயலாததால் கோபமுற்றனர்.
வேதனையும் கோபமும்கொண்ட அவ்விருவரும், "வழக்கைக் கூறி நியாயம் பெறுவதற்காக வந்த நாங்கள் உன்னைப் பார்க்கக்கூட முடியவில்லை. எனவே எந்த பிராணியாலும் கண்டுகொள்ள இயலாத பச்சோந்தியாகப் போகக் கடவாய். நீ பல்லாயிரம் ஆண்டுகள், பலநூறு வருடங்கள் உன் பொந்திலேயே வசிப்பாயாக.
மகாவிஷ்ணு யது குலத்தின் கீர்த்தியை வளர்க்கும் வாசுதேவன் என்னும் பெயருடையவராக, மனித உருவம்கொண்டு இந்த மண்ணுலகில் அவதரிக்கப் போகிறார்.
அவர் உன்னை சாபத்திலிருந்து விடுவிப்பார். அதுவரை நீ பச்சோந்தியாகவே இருப்பாய். இதுவே நீ செய்த தவறுக்குரிய பிராயச்சித்தமாகும். கலியுகம் பிறக்கும் தருணத்தில் மக்கள் பாரத்தைக் குறைப் பதற்காக மகாவீரர்களான நர- நாராயணர் தோன்றுவர்' என்று மன்னருக்கு சாபம்கொடுத்த அவர்கள் அமைதி யடைந்தனர். அந்த பசுவை வேறொரு அந்தணருக்குக் கொடுத்துவிட்டார்கள்.
அந்த சாபத்தை நிருகன் இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறான். நியாயம்கேட்டு வரும் குடிமக்களை சந்திக்காமல் காத்திருக்க வைப்பது மன்னனுக்கு பாவத்தைத் தருவது. அதனால் மனு கொடுக்கக் காத்திருக்கும் மக்களை என்முன் கொண்டுவருவாயாக. மக்களை பரிபாலித் தல் என்னும் புண்ணிய கர்மாவைச் செய்வதனால் ஏற்படும் நற்பயன் மன்னனை நிச்சயமாக வந்தடையும். எனவே நீ வெளியே சென்று என்னைக் காண்பதற்காக யாரேனும் வந்திருக்கிறார்களா என்று பார்த்து வா'' என்றார் இராமன்.
54-ஆவது சர்க்கம் பொந்துக்குள் நிருகன்
எந்த விஷயத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலுடைய லட்சுமணன், இராமன் கூறியதைக் கேட்டதும் அவரைப் பார்த்து, "காகுத்தரே, ராஜரிஷியான நிருகன் செய்த சிறிய குற்றத்திற்கு எமதண்டம் போன்ற கொடுமையான சாபத்தை அந்தணர்கள் கொடுத்துவிட்டார்கள். தனக்கு சாபம் என்னும் பாவம் வந்துவிட்டதை தெரிந்துகொண்ட மன்னன், கோபத்தோடு இருந்த அந்தணர்களிடம் என்ன கூறினார்?'' என்று கேட்டான்.
இவ்வாறு கேட்ட லட்சுமணனிடம் இராமன், "அன்பனே, சாபத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் என்ன செய்தான் என்பதைக் கூறுகிறேன். அந்த இரண்டு அந்தணர்களும் அரண்மனையிலிருந்து புறப்பட்டு எங்கோ ஒரு சாலையில் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்ட மன்னன், மிகவும் வேதனையுடன் அமைச்சர்கள், குடிமக்கள், புரோகிதர்கள், மற்றுமுள்ள எல்லா சமுதாயத்தாரையும் அழைத்து, "நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். நாரதர், பர்வதர் என்றிரண்டு தேவ ரிஷிகள். பிறர் நலனையே நாடுபவர்கள். அப்பழுக்கற்ற அவர்கள் என்னிடம் வந்து, அந்த இரு அந்தணர்களும் எனக்கிட்ட சாபத்தைக் கூறி, என்னை பேரச்சத்தில் ஆழ்த்திவிட்டு வாயுவேகமாக பிரம்மலோகம் சென்றுவிட்டனர்.
வசு என்னும் பெயருடைய இந்த இளவரசனுக்குப் பட்டம் சூட்டுங்கள். கைதேர்ந்த தொழிலாளர்களைக்கொண்டு நான் வசிப்பதற்கேற்ற மென்மையான பொந்தை செய்யச் சொல்லுங்கள். மழையினால் எனக்கு துன்பம் நேராக வகையில் ஒரு பொந்து; பனியிலிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வகையில் ஒரு பொந்து; கோடைகாலத்தில் வெம்மை உள்ளே புகமுடியாத வகையில் ஒரு பொந்து. இவ்வாறு மூன்று பொந்துகள் அமைக்கச் சொல்லுங்கள். நான் அவற்றில் வசித்துக்கொண்டு அந்தணர்களின் சாபத்தை அனுபவித்துத் தீர்ப்பேன்.
கனிகள் கொடுக்கும் மரங்கள், மலர்கள் கொடுக்கும் கொடிகள், நல்ல நிழல் கொடுக்கும் புதர்கள் போன்றவற்றை பொந்துகளின் எல்லா பக்கங்களிலும் உருவாக்குங்கள்.
அவற்றைச் சுற்றிலும் ஒன்றரை யோசனை தூரத்திற்கு வளம்கொழிக்கச் செய்யுங்கள். மணம்மிக்க மலர்களை நாள்தோறும் பொந்துகளில் குவித்துவையுங்கள். சாபநிவர்த்தி காலம்வரையில் நான் அங்கேயே வசிப்பேன்' என்றான்.
இவ்வாறு தனக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தபின்னர் இளவரசன் வசுவை சிம்மாசனத்தில் அமர்த்தி அவனுக்கு நல்லுரை கூறினான். "மகனே, நீ எப்போதும் அறநெறியில் இருந்துகொண்டு, க்ஷத்ரிய தர்மத்திற்கேற்றபடி குடிமக்களைப் பரிபாலிக்கவேண்டும். நான் செய்த குற்றம் சிறியதுதான் என்றாலும், கோபம்கொண்ட அவர்கள் கொடுத்த சாபத்தின் விளைவை நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய். என்பொருட்டு நீ வருந்தவேண்டாம். முன்னர் செய்த வினைகளின் பயன் இப்போது கிடைத்திருக்கிறது. அடையப்பட வேண்டியவை எவையோ அவற்றை மனிதன் அடைகிறான். இழக்கப்பட வேண்டியவை தாமே அகன்று விடுகின்றன. சுகமோ துக்கமோ- எதை அடையவேண்டுமோ அதனை மனிதன் அடைகிறான்.
மகனே, முன்னொரு பிறவியில் நான் மிகவும் பாவம் செய்திருக்கிறேன். அதனால் இந்த சாபத்திற்கு ஆளாகிருக்கிறேன். நீ வருந் தாதே.' என்று கூறிவிட்டு, மன்னன் நிருகன் தான் வசிப்பதற் காக அமைக்கப்பட்டிருந்த பொந்திற்குள் புகுந்து கொண்டான்.
ரத்தினங்களால் அழகு படுத்தப்பட்டிருந்த அந்த பொந்துக்குள் புகுந்துகொண்ட மன்னன், அந்தணர்கள் கொடுத்த சாபத்தை அனுபவிக்கத் தொடங்கினான்.''
55-ஆவது சர்க்கம் நிமி, வசிஷ்டர் சாபமிடல்
இராமன் லட்சுமணனிடம், "நிருகனுக்கு ஏற்பட்ட சாபம் குறித்த வரலாற்றை விரிவாகக் கூறினேன். மேலும் இத்தகைய வரலாறுகளைக் கேட்பதற்கு உனக்கு ஆவலிருந்தால் இன்னொரு கதையைச் சொல்கிறேன் கேள்" என்றார்.
அதைக் கேட்ட லட்சுமணன், "மிகவும் ஆச்சரியமான கதைகளைக் கேட்பதில் எனக்கு அயர்வு தோன்றுவதே இல்லை'' என்றான்.
இவ்வாறு லட்சுமணன் கூறியதும், இக்ஷவாகு பரம்பரைக்கு ஆனந்தத்தைத் தரும் இராமன், அறநிலையிலிருந்து சற்றும் வழுவாத சான்றோர்களின் வரலாறுகளைக் கூறத் தொடங்கினார்.
"இக்ஷவாகு மன்னருக்கு பன்னிரண்டாவது மகனாக நிமி என்பவர் பிறந்தார். வீரத்திலும் தர்மத்திலும் உறுதியாக நிற்பவர் அவர். நிமி கௌதம முனிவருடைய ஆசிரமத்திற்கு அருகில் தேவலோக நகரம் போன்றதொரு சிறந்த நகரத்தை நிர்மாணித்தார். பெரும் புகழ்கொண்ட ராஜரிஷியான நிமி வசித்த அந்த நகரம் தேவலோக நகரத்திற்கு இணையாக இருந்ததால் வைஜயந்தம் என்று பெயரிடப்பட்டு புகழ்பெற்றது.
அங்கு வசிக்கத் தொடங் கியதும், தன் தந்தைக்கு மகிழ்ச்சிதரும் ஸத்ர யாகத் தைச் செய்யவேண்டும் என்னும் எண்ணம் நிமிக்கு உண்டாயிற்று. மனுவின் மகனும் தனது தந்தையுமான இக்ஷவாகு வுடன் கலந்தாலோசித்து, மேன்மைமிக்க பிரம்ம ரிஷியான வசிஷ்டரை வேள்வியின் தலைமை புரோகிதராக இருக்க வேண்டிக்கொண்டார். இக்ஷவாகு குல மாணிக்கமான நிமிலி அத்ரி, அங்கீரசர், தவச்செல்வரான பிருகு முனிவருக்கும் அழைப்பு விடுத்தார்.
அரச முனிவரான நிமியிடம் வசிஷ்டர், "இந்திரன் ஒரு யாகத்தை நடத்திக் கொடுக்கும்படி முன்னரே கேட்டுக் கொண்டுள்ளான். எனவே அதை நான் நிறைவேற்றிவிட்டு வரும்வரையில் எனக்காகக் காத்திரு' என்று கூறினார்.
இதற்கிடையே சிறந்த வேத விற்பன்னரான கௌதம முனிவர் நிமியினுடைய விருப்பத்தை பூர்த்திசெய்ய முன்வந்தார். வசிஷ்டர் இந்திரனுடைய வேள்வியை நிறைவேற்றச் சென்றார்.
நிமி, ஐந்தாயிரம் ஆண்டுகள் ஸத்ர யாகத்தைச் செய்வதாக சங்கல்பம் செய்து, யாக தீட்சையை ஏற்றார்.
இந்திரனுடைய யாகம் நிறைவடைந்ததும் வசிஷ்டர், நிமி அரசர் முன்னர் கேட்டுக்கொண்டபடி யாகத்தை நிறைவேற்றிக் கொடுக்கும்பொருட்டு அங்கு வந்தார். ஆனால் கௌதமரால் அந்த யாகம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டதை அறிந்தார். பிரம்மாவின் புதல்வரான வசிஷ்டருக்குத் தாங்கமுடியாத கோபம் உண்டாயிற்று. அரசரை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக நீண்டநேரம் அவர் காத்திருந்தார். ஆனால் அன்றைய தினம் நிமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
மன்னரை சந்திக்க முடியாமல் போனதால் வசிஷ்டருக்கு மேலும் கோபம் அதிகரித்தது. அவர் நிமியை நோக்கி, "மன்னனே, என்னை அலட்சியப்படுத்திவிட்டு வேறொருவரைக்கொண்டு யாகத்தை நிறைவேற்றி விட்டாய். அதனால் உன் உடல் உணர்வற்றதாகக் கடவது' (சடலம்போல் ஆகப் போகிறாய்) என்று சபித்தார்.
கண்விழித்த மன்னர் சாபம் கொடுக்கப்பட்டதை தெரிந்துகொண்டார். உடனே கோபத்தில் மனம் கலங்கி வசிஷ்டரை நோக்கி, "தாங்கள் வந்திருப்பது எனக்குத் தெரியாது. படுத்துக் கிடந்தேன். கோபத்தினால் மனம் குழம்பி என்மேல் எமதண்டம் போன்ற பயங்கரமான சாபம் என்ற நெருப்பை அள்ளி வீசியிருக்கிறீர்கள். பிரம்மரிஷியே, எப்போதும் மனம் கவரும் காந்தியுடன் விளங்கும் உங்கள் சரீரமும் உணர்வற்று விழுந்துவிடப் போகிறது. இதில் ஐயமில்லை' என்றார்.
இவ்வாறு கோபத்தின் வசப்பட்ட மன்னரும் வேத விற்பன்னரும் ஒருவருக்கொருவர் சாபம் கொடுத்து, உடனே உடலைத் துறந்து பிரம்மத்திற்கு நிகரான பெருநிலையை அடைந்தனர்.''
56-ஆவது சர்க்கம் மைத்ரா வருணி ஆதல்
இராமன் கூறியதைக் கேட்டதும், எதிரிகளை அழிப்பவனான லட்சுமணன் வீரப் பொலிவுடன் திகழ்ந்த இராமனைப் பார்த்து கைகளைக் கூப்பி, "காகுத்தரே, வேதோத்தமரும் வசிஷ்டரும் நிமி மன்னரும் தேவர்களுக்கு இணையானவர்கள். ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொண்ட சாபத்தினால் உடலைத் துறந்த அவர்கள் மீண்டும் எவ்வாறு புதிய உடலைப் பெற்றனர்?" என்று கேட்டான்.
அதைக்கேட்டதும் இராமபிரான்," தவச்செல்வர்களும் தர்மாத்மாக்களும் ராஜரிஷி- பிரம்ம ரிஷியுமான அந்த இருவரும், தங்களுக்குள் கொடுத்துக் கொண்ட சாபத்தால் உடலையிழந்து வாயுரூபமாக மாறினர்.
ஆன்மப்பொலிவு மிக்க வரான வசிஷ்ட முனிவர் உடலற்றவராகப் போனதும், வேறொரு உடலை அடைவதற்காக தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார். பிரம்மாவின் திருவடிகளில் வணங்கிய வாயு ரூபத்துடன் இருந்த வசிஷ்டர், "உலகத்தின் தலைவரே, மகாதேவரே, முட்டை வடிவமான பிரம்மாண்டத்திலிருந்து தோன்றினா லும், தாங்கள் மகாவிஷ்ணுவின் உந்திக் கமலத்திலிருந்து தோன்றியவர் என்பது பிரசித்தம். இறைவனே, நிமியினுடைய சாபத்தால் நான் இப்போது உடலையிழந்து நிற்கிறேன். உடலற்ற எல்லா உயிர்களுக்கும் மிகுந்த துன்பங்கள் உண்டாகின்றன. உடலில் லாத உயிர்களின் எல்லா செயல்களும் பயன்தராமல் போகின்றன. அதனால் நான் வேறொரு சரீரத்தை அடையும்படி தாங்கள் அருளவேண்டும்' என்று வேண்டினார்.
எல்லையற்ற ஆற்றல்கொண்டவரும் தான்தோன்றியுமான பிரம்மா அவரைப் பார்த்து, புகழ்மிக்க அந்தணோத்தமரே, மித்திரன், வருணன் ஆகியோரால் விடப்படும் வீரியத்தில் புகுந்துகொள். அவ்வாறு புகுந்து வேறொரு பிறவியெடுத்தாலும், நீ கருப்பையிலிருந்து தோன்றாதவன் என்றே கருதப்படுவாய். பின்னர் பெரும் தர்மத்தை அறிந்தவனாக நீ என்னையே மீண்டும் வந்தடைவாய்' என்றார்.
இவ்வாறு பிரம்மா கூறியதைக் கேட்டவர் நான்முகனை வலம்வந்து வணங்கிவிட்டு வருணனுடைய இருப்பிடத்திற்கு வேகமாகச் சென்றார்.
அந்த காலகட்டத்தில் மித்திரன் என்னும் தேவதையும் வருணனுடைய அதிகாரத்தைப் பெற்று, வருணனோடு இருந்துகொண்டு தேவ உத்தமர்களால் பூஜிக்கப்பட்டு வந்தார். அந்த சமயத்தில் மிகச்சிறந்த அப்சரப் பெண்ணான ஊர்வசி தன் தோழிகள் புடைசூழ வருணன் இருந்த இடத்திற்கு வந்தாள். மிகுந்த அழகு பொருந்தியவளும், கடலில் நீராடித் திளைத்துக் கொண்டிருந்த வளுமான ஊர்வசியைக் கண்டதும் வருணன் மனம் தடுமாறிப் போனார். மலர்ந்த தாமரை போன்ற கண்களையுடையவளும், மனம் கவரும் முழுநிலாபோன்ற முகத்தை யுடையவளுமான அவளை சிற்றின்ப உறவு கொள்ள அழைத்தார்.
அவளோ கைகளைக் கூப்பியவண்ணம் கெஞ்சும் குரலில், "தேவர் தலைவரே, மித்திரன் முன்னதாகவே என்னை விரும்பி அழைத்திருக்கிறார்' என்று பதில் கூறினாள்.
காமதேவனின் மலரம்புகளால் பீடிக்கப்பட்ட வருணன், "தேவர்களால் வனையப்பட்ட இந்தக் குடத்தில் என் வீரியத்தை விட்டுவிடுகிறேன். நீ என்னுடன் உறவுகொள்ள விரும்பாமல் போனாலும், எனது வீரியத்தை வெளியேற்றிவிடுவதால் நான் ஆசை நிறைவேறியவனாவேன்' என்று கூறினார்.
திசைக் காவலரான வருணன் உகந்த முறையில் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஊர்வசி, "ஐயனே, உங்கள் விருப்பம்போலவே செய்யுங்கள். என் மனம் தங்களைத்தான் நாடிநிற்கிறது. தங்களிடமே எனக்கு அதிக வேட்கையுள்ளது. ஆனால் இந்த உடல் தற்சமயம் மித்திரனின் ஆதிக்கத்தில் இருக்கி றதே' என்றாள்.
ஊர்வசி இவ்வாறு கூறியதும், பிரமிட்பூட்டுவதும் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு போன்றதுமான தன் வீரியத்தை அங்கிருந்த குடத்தில் விட்டார் வருணன்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஊர்வசி மித்திரன் இருந்த இடத்துக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் மிகுந்த கோபம்கொண்ட மித்திரன், "நான் உன்னை முன்னரே அழைத்திருந்தேன். என்னை அலட்சியப்படுத்திவிட்டு வேறொருவருடைய அழைப்புக்கு இணங்கிவிட்டாய். நடத்தை கெட்டவளே! இந்த பாவச் செயலால் எனக்கு கோபம் உண்டாகி, அதனால் நீ மாசுபடுத்தப்பட்டு விட்டாய். எனவே நீ மனித உலகில் பிறந்து, சிலகாலம் அங்கேயே வசிக்கப் போகிறாய். கெடுமதி கொண்டவளே, புதனுடைய புதல்வன்- ராஜரிஷியான காசி மன்னன் புரூரவஸ்.
அவனிடம் நீ இப்போதே செல். அவன் உனது கணவனாக இருப்பான்' என்றார்.
ஊர்வசி அந்த சாபத்தின் விளைவாக புதனுடைய சொந்த மகனாகிய புரூரவஸிடம் சென்றாள். ஊர்வசியின் வயிற்றிலிருந்து புரூரவஸின் மகனாக, மகா ஆற்றல் பொருந்திய ஆயு என்பவன் பிறந்தான். அவனது மகன் இந்திரனுக்கு நிகரான வலிமை படைத்த நகுஷன்.
இந்திரன் விருத்திராசுரன்மீது வஜ்ராயுதத்தை ஏவிக் கொன்றதும், பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொள்ளுமே என்ற அச்சத்தினால் தேவலோகத்திலிருந்து வெளியே சென்று மறைந்து வாழ்ந்த காலத்தில், ஒரு லட்சம் ஆண்டுகள் இந்த நகுஷன்தான் இந்திரபதவி வகித்து ஆட்சிசெய்தான்.
அழகான பல்வரிசையும் கவர்ச்சிமிக்க கண்களையும் கொண்ட ஊர்வசி, மித்திரனின் சாபத்தின்படி மண்ணுலகில் பல ஆண்டுகள் வசித்துவந்தாள். சாபத்தின் காலம் முடிந்ததும் மீண்டும் இந்திரசபையை அடைந்தாள்.''
(தொடரும்)