38-ஆவது சர்க்கம் ஜனகர் முதலியோர் திரும்பச் செல்லுதல்
இராமபிரான் தினந் தோறும் அரசவையில் வீற்றிருந்து நகர மக்களையும் புறநகர் மக்களையும் சந்தித்து ஆட்சிபுரிந்து வந்தார். சிலநாள் சென்றபின் மிதிலை அரசர் ஜனகரைப் பார்த்து இராமபிரான் கைகூப்பிய வண்ணம், "மன்னரே, எங்களுக்கு உறுதியான புகலிடம் நீங்கள்தான். தங்கள் பேரன்பை எங்களிடம் காட்டியிருக்கிறீர்கள். உங்களுடைய தவ ஆற்றலின் துணையால் தான் இராவணனை என்னால் வதம்செய்ய முடிந்தது.
இக்ஷ்வாகு குலத்தினருக்கும், மிதிலை அரச பரம்பரையினருக்கும் இடையே பெண் கொடுப்பது- எடுப்பது என்னும் உறவினால் வளர்ந்துவரும் நமது நெருக்கமான அன்புக்கு ஈடிணை இல்லை. மாமன்னரே, நாங்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் ஏராளமான ரத்தினங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டு தங்கள் நாட்டுக்குத் தாங்கள் செல்லலாம். தங்களுக்குத் துணையாக (வழியனுப்பும் பொருட்டு) பரதன் உங்களைத் தொடர்ந்துவருவான்'' என்று கூறினார்.
அதை ஆமோதித்த ஜனகர், "அரசே, நான் உங்களைக் கண்டும், உங்கள் ஆட்சி நிர்வாகத்தைக் கண்டும் திருப்தியுடன் இருக்கிறேன். எனக்குத் தருவதற்காக நீங்கள் குவித்துவைத்துள்ள அரிய செல்வங்களை சீதை முதலான என் மகள்களுக்கு அன்புப் பரிசாகக் கொடுக்கிறேன்'' என்று கூறி, இராமரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் மிதிலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவர் சென்றதும், கேகய நாட்டு அரசனும் தனது மாமனுமாகிய யுதாஜித்தைப் பார்த்து இராமபிரான் பணிவுடன் கரங்களைக் கூப்பியவண்ணம், "அரசரே, இந்த நாடு, நான், என் தம்பிகள் பரதன், லட்சுமணன், சத்ருக்னன் அனைவருமே தங்கள்வசம் இருப்பவர்கள். எங்களுக்குப் புகலிடமானவர் நீங்கள். தங்கள் தந்தை வயோதிகர். அவர் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். அதனால் நீங்கள் இப்பொழுதே தங்கள் நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்வது நல்லதென்று தோன்றுகிறது. ஏராளமான ரத்தினங்களையும் செல்வங்களையும் தங்களுக்குக் காணிக்கையாக வழங்குகிறோம். அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும். லட்சுமணன் தங்களுடன் வருவான்'' என்று கூறினார்.
அதற்கு இசைவு தெரிவித்த யுதாஜித் இராமபிரானை நோக்கி, "இந்த செல்வங்களும் ரத்தினங்களும் அழியாமல் என்றென்றும் உன்னிடமே இருக்கட்டும்'' என்றார்.
முன்னரே தன் மாமனான யுதாஜித்தை வலம்வந்து ஆசிகள் பெற்றார் இராமபிரான். கேகய மன்னர் புறப்படும்முன் இராமரை வலம்வந்து மரியாதை செலுத்தினார். (இராமபிரான் ஒரு நாட்டின் தலைவன் என்பதால்.) பின்னர், விருத்ராசுரனை மாய்த்தபின் மகாவிஷ்ணுவுடன் தேவேந்திரன் அமராவதி நகரத்துக்கு புறப்பட்டுச் சென்றதைப்போல, யுதாஜித் லட்சுமணனுடன் தன் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்.
மாமனுக்கு விடைகொடுத்து அனுப்பியபின், அறத்தின் நாயகனான இராமபிரான் அரியணையி-ருந்து எழுந்துவந்து, தனது நண்பரும் காசி மன்னனுமான பிரதர்தனனை மார்புறத் தழுவிக்கொண்டு "அரசரே, நீங்கள் எனது பட்டாபிஷேக காரியங்களில் பரதனுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து பேருதவி புரிந்து, தங்கள் அன்பையும் நட்பையும் வெளிக்காட்டினீர்கள். காசி அரசரே, உறுதியான மதில்கள், கோட்டை வாயில்களைக் கொண்டதும், தங்களால் சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதுமான வாரணாசி நகருக்கு எழுந்தருளுங்கள்'' என்று கூறினார்.
பயம் என்பதையே அறியாத காசி மன்னர், இராமனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உடனே வாரணாசிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவர் சென்றதும் அங்கிருந்த முந்நூறு அரசர்களைப் பார்த்து புன்னகை புரிந்த இராமபிரான் இனிய குரலில் பேசத் தொடங்கினார்.
"உங்களுக்கெல்லாம் என்மேலுள்ள அசைக்கமுடியாத அன்பை உங்களது வீரத்தினால் காப்பாற்றிவருகிறீர்கள். உங்கள் அனைவரிடமும் சத்தியமும் தர்மமும் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளன. உங்களது வீரத்தாலும் பிரபாவத்தாலும், தீய எண்ணம் கொண்டவனும் கொடியவனுமான இராவணனை நான் மாய்த்தேன். இராவணனுடன் நடந்த போரில் ஒரு நிமித்த காரணமாக மட்டுமே நான் இருந்தேன். உண்மையில் இராவணன் அவனது புதல்வர்கள், அமைச்சர்கள், உற்றார்-
உறவினர்களோடும் வீரர்களோடும் கொல்லப்பட்டதற்குக் காரணம் உங்கள் தவ வலிமைதான்.
காட்டில் ஜனகரின் மகள் சீதை கவர்ந்துசெல்லப்பட்டாள் என்னும் செய்தி கிடைத்ததும் பரதன் உங்களையெல்லாம் அழைத்து இங்கு ஒன்றுசேர்த்தான். வீரம்பொருந்திய அரசர்களாகிய நீங்கள் அனைவரும் அரக்கர்களைத் தாக்குவதற்குத் துடித்துக்கொண்டிருந்தீர்கள். அந்த நாள் முதல் வெகுகாலம் இங்கேயே இருந்து விட்டீர்கள். அதனால் உங்களையெல்லாம் இப்போது உங்கள் நாட்டிற்குத் திரும்ப அனுப்புவதுதான் நியாயமானதென்று தோன்றுகிறது'' என கூறினார்.
அதைக்கேட்ட அந்த அரசர்கள் பேரானந் தத்துடன், "தெய்வத்தின் அருளால் தாங்கள் வெற்றியடைந்தீர்கள். உங்களுடைய நாட்டில் முடிசூட்டப்பட்டீர்கள். இராமபிரானே, இறையருளால் சீதை மீட்கப்பட்டாள். பகைவன் தோற்கடிக்கப்பட்டான். எதிரிகளையெல்லாம் வீழ்த்திய வெற்றித் திருமகனாக உங்களைப் பார்க்கிறோமே... இதுதான் எங்களது மிகப்பெரிய விருப்பம். எங்கள் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம் இதுவே. இராமச்சந்திரனே! தாங்கள் எங்களைப் புகழ்கிறீர்கள். அது உங்களுக்கேயுரிய மேலான இயல்பு. இவ்வாறெல்லாம் புகழ்ந்துபேசும் ஆற்றல் எங்களுக்கில்லை. நாங்கள் புறப்பட்டுச் செல்ல தங்களிடம் அனுமதி கேட்கிறோம். எங்கள் இதயத்தில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். பெருந்தோள்களை உடையவரே, தங்கள் பேரன்புக்குப் பாத்திரமானவர்களாக நாங்கள் எப்போதும் இருந்துவருவோம். பேரரசரே, எங்களிடம் தங்களுக்கு எப்போ தும் அன்பிருக்கவேண்டும்'' என்றனர்.
அப்போது பெரும் மகிழ்வுடனிருந்த அவர்களைப் பார்த்து, "அவ்வாறே ஆகட்டும்'' என்றார் இராமபிரான். புறப் பட்டுச் செல்வதில் ஆர்வமுடனிருந்த அவர்கள் அனைவரும் கைகளைக் கூப்பி அனுமதிபெற்றனர். இராமபிரானால் நன்கு கௌரவிக்கப்பட்ட அவர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்றனர்.
39-ஆவது சர்க்கம் வானரர் மகிழ்வு
வீரர்களான மன்னர்கள் தங்களது ஆயிரங்கணக்கான யானைகள், குதிரைகள், காலாட்படைகள் ஆகியவற்றுடன் பூமியை நடுங்கச்செய்த வண்ணம் மகிழ்வோடு புறப் பட்டுச் சென்றனர். முன்பு பரதனுடைய ஆணைப்படி இராமபிரானுக்கு போரில் உதவிபுரிவதற்காக பல அட்சௌகினி படைகளுடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் வந்திருந்தனர். அந்தக் குறுநில மன்னர்கள் வீரமும் செருக்கும் நிரம்பியவர்களாகத் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
"இராமர் இராவணனுடன் எதிரே நின்று போர்செய்வதை நம்மால் பார்க்க முடியவில்லை.''
"போர் முடிந்தபிறகு பரதன் நம்மை அழைத்திருக்கிறார். நாம் வந்தது வீண்தான். முன்னரே நாம் போர்க்களத்திற்கு அனுப்பப் பட்டிருந்தால் அரக்கர்களை மிக விரைவில் கொன்றிருப்போம் என்பதில் ஐயமில்லை.''
"இராம- லட்சுமணரின் தோள் வலிமை யால் காக்கப்படும் நாம், பெருங்கடலின் அக்கரையில் கொஞ்சமும் கவலையின்றி மிக எளிதாகப் போர் செய்திருப்போம்.''
இவ்வாறும் இதுபோன்றும் ஆயிரக் கணக்கான எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டு அவர்கள் மிகுந்த குதூகலத்துடன் தங்களது நாடுகளுக்குச் சென்றனர்.
அவர்களது நாடுகள் செழிப்பு, சுகம், ஆனந்தம் நிரம்பியவையாகவும், செல்வம், பயிர்வளம் நிறைந்தவையாகவும், ஏராளமான ரத்தினம்போன்ற மணிகளுடனும் விளங்கின. அவர்கள் தங்கள் தலைநகரங்களைச் சென்றடைந்ததும் இராமபிரானது அன்பைப் பெறுவதற்காக பலவகையான ரத்தினங் களையும் காணிக்கைப் பொருட்களையும் அனுப்பிவைத்தனர்.
குதிரைகள், வாகனங்கள், ரத்தினங்கள், மதங்கொண்ட யானைகள், உயர்வகை சந்தனம், பெறற்கரிய அணிகலன்கள், வைரங்கள், முத்துகள், பவளங்கள், அழகுமிக்க பணிப்பெண்கள், பலவகை ஆடுகள், பல்வேறு அமைப்புகொண்ட தேர்கள் போன்றவற்றைக் காணிக்கையாக சமர்ப்பித்தனர் அந்தக் குறுநில மன்னர்கள்.
அவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் அயோத்தி நகர் திரும்பிவந்து, கிடைத்தற்கரிய அந்த செல்வங்களை இராமனிடம் அர்ப் பணித்தனர். மனத்திருப்தியுடன் அவற்றை ஏற்றுக்கொண்ட இராமபிரான், தனக் குப் பேருதவி செய்த சுக்ரீவன் மற்றும் விபீஷணனுக்கும் மற்றவர்களுக்கும் அவற்றையெல்லாம் பிரித்துக் கொடுத்தார். எந்த வானரர், அரக்கர் துணைகொண்டு போரில் வெற்றியடைந்தாரோ அவர்களுக் கும் பரிசுப் பொருட்களை வழங்கினார். அந்த வலிமைநிறைந்த அரக்கர்கள், வானரர்கள் இராமர் கொடுத்த பொருட்களை வணக்கத்துடன் பெற்றுக்கொண்டு, அவற்றை மதிக்கும் வண்ணம் தங்கள் தலைமேல் வைத்துக்கொண்டனர்; கைகளில் வைத்தும் போற்றினர்.
இக்ஷ்வாகு பரம்பரையின் திலகமும், மகா பலசாலியும், தேர்வீரருமான இராமபிரான் அனுமனையும் அங்கதனையும் அழைத்து தன் மடிமீது அமர வைத்துக்கொண்டார். இராமபிரான் சுக்ரீவனைப் பார்த்து, "அங்கதன் உனது மகன்; அனுமன் உனது அமைச்சன். எப்போதும் எனது நலனை நாடும் செயல்களில் ஈடுபட்டு எனக்கு அமைச்சர்போல ஆலோசனை கூறியிருக்கி றார்கள். உன்னைச் சார்ந்த இவர்கள் எனக்கு உதவியிருக்கிறார்கள் என்பதால் பலவகை கௌரவத்துக்கும் எனது பாராட்டுக்கும் உரியவர்கள்'' என்று கூறி, தான் அணிந்திருந்த விலையுயர்ந்த அணிகலன்களைக் கழற்றி அங்கதனுக்கும் அனுமனுக்கும் சூட்டினார்.
பின்னர் மகா வீரம்பொருந்திய வானரத் தலைவர்களான நீலன், நலன், கேசரி, குமுதன், கந்தமாதனன், சுஷேனன், பனஸன், மைந்தன், த்விவிதன், ஜாம்பவான், கலாக்ஷன், வினதன், தூம்ரன், வலீமுகன், பிரஜங்கன், ஸந்நாதன், தரீமுகன், ததிமுகன், இந்திர ஜானு ஆகியவர்களை அழைத்து, பாசத்து டன் அவர்களைக் கண்களால் பருகி விடுவதைப்போல பார்த்து தோழமை நிறைந்த இனிய சொற்களால் பேசலானார்.
"வானரர்களே, நீங்கள் எனக்கு நண்பர் கள். எனது உடல். என்னுடைய சகோதரர் கள் நீங்கள். அனைவரும் சேர்ந்து சங்கடமான ஒரு நிலையிலிருந்து என்னைத் தூக்கிவிட்டிருக்கிறீர்கள். உங்களையெல்லாம் படைத்தலைவர்களாகப் பெற்ற சுக்ரீவன் பெரும் பேறு பெற்றவன்.''
இவ்வாறு தலைசிறந்த மன்னனான இராமன் கூறியபிறகு, அவரவர் தகுதிக் கேற்றபடி அணிகலன்களையும் விலைமதிக்க வியலா ரத்தினங்களையும் வழங்கி மார்புறத் தழுவிக்கொண்டார். தேன் வண்ணம் கொண்ட அவர்கள் மது வகைகளையும், அரசபோகம் போன்ற உணவு வகைகளையும், கிழங்குகளையும், பழங்களையும் உண்டு களித்தனர். இத்தகைய பேரின்ப நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக அவர்கள் தங்கியிருந்தும், இராமபிரானிடம் கொண்டிருந்த எல்லையற்ற பக்தியால் அந்த நீண்டகாலம் ஒரு முகூர்த்த காலத்தைப்போல விரைவாகக் கடந்தது. இராமனும்- மனம் போல் உருவமெடுக்க வல்ல வானரர்கள், மாவீரர்களான அரக்கர்கள், வலிமை படைத்த கரடிகள் ஆகியோருடன் ஆனந்த மாகப் பொழுதைக் கழித்தார்.
இவ்வாறு சிசிர ருதுவின் இரண்டாவது மாதமும் மகிழ்ச்சிகரமாகக் கழிந்தது. இக்ஷ்வாகு மன்னர்களின் அந்த அழகிய தலைநகரில் வானரர்களும் அரக்கர்களும் பேரன்பும் மகிழ்ச்சியும்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இராமனுடைய அன்பான உபசாரங்களால் நாட்கள் இனிமையாக நகர்ந்துகொண்டிருந்தன.
40-ஆவது சர்க்கம் அனுமனது வேண்டுகோள்
இவ்வாறாக வானரர்கள், கரடிகள், அரக்கர்கள் இன்பமாக இருந்து கொண்டிருக்கும்போது, இராமன் சுக்ரீவனை அழைத்துக் கூறினார்:
"அன்புடையவனே, தேவாசுரர்களாலும் கைப்பற்ற இயலாத கிஷ்கிந்தைக்குச் செல்வாய். ஆபத்துகள் இல்லாத அந்த நாட்டை அமைச்சர்களின் ஒத்துழைப்புடன் பரிபாலித்து வருவாயாக. அங்கதன், அனுமன், நலன் ஆகியோரை மிகவும் அன்புடன் நடத்திடவேண்டும். வீரரான உனது மாமனார் சுஷேனன், ஆற்றல் பொருந்தியவர்களுள் முதன்மையான தாரன், வெற்றிகொள்ள இயலாத குமுதன், வலிமைமிக்க நீலன், வீரனான சதபலி, மைந்தன், த்விவிதன், கஜன், கவாக்ஷன் கவயன், சரபன், ரிஷபன், அளவிடமுடியாத ஆற்றல்கொண்ட ஜாம்பவான் மற்றும் கந்தமாதனன் ஆகியோருடன் அன்புடன் பழகவேண்டும்.
இவர்களும் இன்னும் பலரும் என்பொருட்டு உயிரை விடுவதற்கும் துணிந்து போரிட்டனர். எனவே இவர்கள் அனைவருடனும் ஆழ்ந்த அன்புடன் பழகவேண்டும். இவர்களுக்குப் பிடிக்காததை ஒருபோதும் நீ செய்யக்கூடாது.'' இவ்வாறு கூறிய இராமன் சுக்ரீவனைப் பலமுறை மார்புறத் தழுவிக்கொண்டார். பின்னர் விபீஷணனைப் பார்த்து இனிய குரலில் பேசலானார்.
"அறநெறி அறிந்தவன் நீ என்பது எனது கருத்து. இலங்கை நகர மக்களும், உனது சகோதரன் குபேரனும் அவ்வாறே எண்ணுகின்றனர். எனவே இலங்கையில் அறநெறியில் நின்று ஆட்சிபுரிவாயாக. மன்னனே, ஒருக்காலும் உன் மனதை அதர்மத்தின்மேல் செலுத்தாதே. நன்னெறியில் நிற்கும் மன்னர்கள் தங்கள் நாட்டை வெகுகாலம் அனுபவிக்கிறார்கள். அரசனே, என்னையும் சுக்ரீவனையும் நீ எப்போதும் மனதில் வைத்துக்கொண்டிருக்க வேண்டும். கவலை ஏதுமில்லாமல் இப்போது உன் நாட்டிற்குச் செல்வாயாக.''
இராமனுடைய சொற்களைக் கேட்ட கரடிகள், வானரர்கள், அரக்கர்கள், "ஆமாம்; மிகவும் சரி!'' என்று காகுத்தனை வெகுவாகப் புகழ்ந்தனர். "தான்தோன்றியான பிரம்மாவைப்போல தங்களிடம் இனிய இயல்பு நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கிறது. தங்களது தெளிந்த அறிவும் வீரமும் மிகவும் ஆச்சரியமானவை.''
இவ்வாறு அவர்கள் தங்களது மகிழ்ச்சி யைத் தெரிவித்துக் கொண்டிருந்தபோது, அனுமன் மிகப் பணிவுடன் இராமனைப் பார்த்து, "அரசரே, தங்களிடம் எனக் குள்ள ஆழ்ந்த நட்பானது என்றென்றும் குறையாமலிருக்க வேண்டும். மாவீரரே, தங்களிடம் கொண்டுள்ள பக்தி எப்பொழுதும் நிலைத்திருக்கவேண்டும். எனது மனம் வேறொன்றையும் நாடிச் செல்லக்கூடாது. இந்த மண்ணுலகில் எதுநாள்வரை ராமகதை பேசப்படுகிறதோ, அந்தநாள்வரை என்னுடைய உடலில் உயிர் இருந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
ரகு நந்தனரே, தங்களது புனிதமான கதையை அப்சரப் பெண்கள் இசைக்க, நான் கேட்கவேண்டும். அமுதம் போன்ற தங்களது சரிதத்தைக் கேட்டு, பெருங்காற்றானது மேகக் கூட்டங்களை சிதறடிப்பதுபோல என் மனத்தவிப்பைப் போக்கிக்கொள்வேன்'' என்றான்.
அனுமன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் பொழுதே இராமன் சிம்மாசனத்திலிருந்து எழுந்துவந்து மிகுந்த அன்புடன் அனுமனைத் தழுவிக்கொண்டு, "வானரர்களில் உத்தமனே, நீ கூறியபடியேதான் எதிர்காலத்தில் நடக்கப்போகிறது என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. எனது கதை உலகத்தில் நிலவும் காலம்வரை உனது புகழும் நிலைத்து நிற்கும். உன் உடலில் உயிர் இருந்துகொண்டிருக்கும். இந்த உலகங்கள் எல்லாம் எவ்வளவு காலம் அழியாமலிருக்குமோ அவ்வளவு காலம்வரையில் என் கதை நிச்சயமாக மக்களால் பேசப்படும்.
வானரனே, நீ செய்த உதவிகளில் ஒரே ஒன்றுக்காகவேகூட நான் என் உயிரைத் தியாகம் செய்வேன். அவ்வாறு செய்தாலும் மற்ற உதவிகளுக்காக உன்னிடம் நான் கடன்பட்டவனாகவே இருப்பேன். வானரர் திலகமே, நீ எனக்குச் செய்த உதவிகள் அனைத் தும் என்னுள்ளேயே கரைந்து போகட்டும். உனது உதவிகளுக்கு நன்றிசெலுத்தும் வகையில் நான் உனக்கு உதவிசெய்யும் நிலை ஏற்படவேண்டாம். ஏனென்றால் ஒருவன் செய்த உதவிக்கு பதிலுதவி செய்யும் வாய்ப்பு, அவனுக்குத் துன்பம் வந்தால்தானே ஏற்படும்'' என்றார்.
பின்னர் இராமர் தன் கழுத்திலிருந்து, பதக்கத்தின் நடுவில் வைடூரியம் பதிக்கப்பட்டதும், சந்திரனைப்போல ஒளிவீசுவதுமான ஒரு மாலையைக் கழற்றி அனுமனின் கழுத்தில் அணிவித்தார். மிக உயர்ந்த அந்த மாலை அனுமனுடைய மார்பில், பொன்மயமான சுமேரு மலையில் முழுநிலா உதயமானதைப்போல விளங்கி, அவனை மேலும் பிரகாசிக்கச் செய்தது.
இராமபிரான் விடைகொடுத்து விட்டதைக் கேட்ட வானரர்கள் ஒவ்வொரு வராக எழுந்துவந்து அவரது திருவடிகளை வணங்கியபின் வெளியே சென்றார்கள்.
விபீஷணனையும் சுக்ரீவனையும் இராம பிரான் நீண்டநேரம் இறுகத் தழுவிக் கொண்டார். அவர்கள் அனைவரும் பிரிவைத் தாங்கவியலாமல் கண்ணீர் உகுத்தனர்.
இராமனைவிட்டுப் பிரியவேண்டிய தருணம் வந்துவிட்டதால் அவர்கள் அனைவரும் கண்ணீரைப் பெருக்கினார்கள். உணர்வு மங்கிப்போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள். இராமபிரான் அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் உடலைவிட்டு உயிர் தனித்துச் செல்வதைப்போல அவரை விட்டுத் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லத் தொடங்கினர்.
அந்த அரக்கர்கள், கரடிகள், வானரங்கள், ரகு குலத்தில் புகழை வளர்க்கும் இராமனின் திருவடிகளில் விழுந்து வணங்கி, பிரிவாற்றா மையால் துளிர்த்த கண்ணீருடன் தத்தமது இடங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
(தொடரும்)