45-ஆவது சர்க்கம்

"சீதையை வனத்தில் விட்டு வா!"

பதைபதைக்கும் உள்ளத்துடன் இருந்த சகோதரர்களைப் பார்த்து பொலிவிழந்த முகத்துடன் இராமன், "நன்மையே விளையட்டும். அனைவரும் கேளுங்கள். சிந்தனையை சிதறவிடாதீர்கள். சீதையைப் பற்றியும் என்னைப் பற்றியும் நகரமக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதைக் கூறுகிறேன். நகர மக்களும் புறநகர்ப் பகுதியிலுள்ள மக்களும் சீதையின்மீது பெரிய பழியைச் சுமத்தியிருக்கிறார்கள். என்மீது வெறுப்புக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டு என் உயிர் நிலைகள் பலகமாகத் தாக்கப்பட்டிருக்கின்றன.

மாட்சிமை பொருந்திய இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் நான். மேன்மை தங்கிய உயர்குடியான ஜனகன் பரம்பரையில் வந்தவள் சீதை'' என்றார்.

Advertisment

அடுத்து லட்சுமணனைப் பார்த்து, "அன்புடையவனே, மக்கள் யாருமற்ற தண்டகாரண்யத்தில் சீதை இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டாள் என்பதை நீ அறிவாய். இராவணனைக் கொன்று நான் பழிதீர்த்தேன். இலங்கையில் இருந்தபோதே, "இந்த அரக்கர் நாட்டில் வெகுநாட்கள் இருந்த சீதையை நான் எவ்வாறு அயோத்தி நகரத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வது' என்று எனக்கு ஒரு தயக்கம் ஏற்பட்டது. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படுவதற்காக அக்னிப் பிரவேசம் செய்தாள் சீதை.

லட்சுமணா, உன் எதிரில் அனைத்து தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே "சீதை குற்றமற்றவள்' என்று அக்னி பகவான் கூறினார். ஆகாயத்திலிருந்து வாயுதேவனும் அப்படியே கூறினார்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் எதிரில், "ஜனகனின் மகள் குற்றமற்றவள்' என்று சந்திர- சூரியர்கள் தெரிவித்தனர்.

Advertisment

தூய்மையான நடத்தையுடைய அவளை, தேவலி கந்தர்வர்கள் எதிரில் இலங்கையில் தேவேந்திரன் என் கையில் ஒப்படைத்தான். என் மனமும் சீதை குற்றமற்றவள் என்று அறிந்துகொண்டது. அதனால்தான் சீதையை ஏற்றுக்கொண்டு அயோதிக்கு வந்தேன்.

ஆனால் மக்கள் என்மேல் சுமத்தியிருக்கும் பெரும்பழி என்னைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. யாரோ ஒருவனுக்கு இகழ்ச்சி ஏற்பட்டு அது உலகமக்களால் பேசப்படுமானால், கீழேயுள்ள நரகம் முதலான உலகங்களுக்கு அவன் தள்ளப்படுகிறான். அந்த இகழ்ச்சி உள்ள காலம்வரை அவன் கீழுலகங்களிலேயே துன்பப்பட்டுக் கொண்டிருப்பான்.

அபகீர்த்தி பெற்றவனை தேவர்கள் நிந்திக் கிறார்கள். புகழ்பெற்றவன் அனைத்து உலகங் களிலும் மதிக்கப்படுகிறான்.

சிங்கம் போன்றவர்களே, மிக உயரிய நிலையிலுள்ள சான்றோர்கள்கூட நிலையான புகழைப்பெற நற்செயல்கள் செய்கிறார்கள். என்மீது சுமத்தப்பட்டுள்ள அபவாதத்திற்கு அஞ்சி என் உயிரையும், உங்களையும்கூட தியாகம் செய்வேன் என்னும்போது, சீதையைத் தியாகம் செய்வது சிரமமான காரியமா என்ன?

சோகக் கடலில் விழுந்துகிடக்கும் எனது நிலையைப் பாருங்கள். இதைவிட அதிகமான துக்கத்தை வேறெந்த உயிரும் அனுபவித்து நான் பார்த்ததில்லை. லட்சுமணா, நாளைக் காலையில், சுமந்திரன் வசமிருக்கும் தேரில் சீதையை ஏற்றிக்கொண்டு இந்த நாட்டின் எல்லைக்கு வெளியே சென்று விட்டுவிடு. கங்கையின் அக் கரையில் தமஸா நதியையொட்டி வால்மீகி முனிவரின் புனிதமான ஆசிரமம் இருக்கிறது. மக்கள் நடமாட்டமில்லாத அந்த இடத்தில் இவளை விட்டுவிட்டு விரைவில் திரும்ப வா. வாழ்க. என் சொற்படி நடப்பாயாக. சீதையைக் குறித்த இந்த விஷயத்தில் யாரும் எதிர்த்துப் பேசவேண்டாம். லட்சுமணா, நீ இப்போது போகலாம். இந்த காரியத்தைக் குறித்து இனி ஆலோசனை செய்யவேண்டாம். இந்த செயலை நீ தடுத்துநிறுத்த முயன்றால் எனக்கு மனத் துன்பம் ஏற்படும்.

எனது தோள்கள் மீதும் (வீரம்), வாழ்க்கை யின்மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன். என் கால்களில் விழுந்து பணிந்து, நான் கூறியதை மாற்றநினைப் பவன் என் விருப்பத்தை தவிர்த்த குற்றத்தால் எப்போதும் என் நலனில் அக்கறை இல்லாத வனாகவே கருதப்படுவான். நீங்கள் அனைவரும் என் கட்டுப்பாட்டில் உள்ளவர் களாக இருந்தால் நான் கூறியதை ஏற்று செயல் படுங்கள். சீதையை அழைத்துச்சென்று என் கட்டளையை நிறைவேற்றுவாயாக.

மேலும் கங்கை கரையிலுள்ள முனிவர் களின் ஆசிரமங்களைப் பார்க்க விரும்புவதாக பிராட்டி என்னிடம் கூறிய விருப்பமும் நிறைவேற்றப்பட்டதாகும்'' என்றார்.

இவ்வாறு கூறிவிட்டு, கண்ணீர் நிரம்பிய கண்களுடன் சகோதரர்கள் சூழ்ந்து வர, துயரத்தில் மூழ்கிய உள்ளத்துடன் யானைபோல நீண்ட பெருமூச்சு விட்டபடி தன் மாளிகைக்குள் இராமன் பிரவேசித்தார்.

46-ஆவது சர்க்கம்

சீதையை கங்கைக் கரைக்கு அழைத்துச் செல்வது

இரவு கழிந்ததும், வேதனையுடனிருந்த லட்சுமணன் வாடிப்போன முகத்துடன் சுமந்திரரைப் பார்த்து, "தேரோட்டியே, சிறந்த ஒரு தேரில் குதிரைகளைப் பூட்டுவீர் களாக. அரண்மனையிலிருந்து அழகான சிறந்த விரிப்புகளைக் கொண்டுவந்து பிராட்டியாருக்கு சுகமான இருக்கை அமைப்பீர்களாக. புண்ணிய தர்மங்களைச் செய்துகொண்டிருக்கும் மாமுனிவர்களின் ஆசிரமத்திற்கு சீதையை அழைத்துச்செல்லப் போகிறேன். இது அரசரின் உத்தரவு. விரைந்து தேரைக் கொண்டுவாருங்கள்'' என்றான்.

"சரி' என்று சொன்ன சுமந்திரர், உயர்ந்த இன குதிரைகள் பூட்டப்பட்டதும், அழகான சிறந்த விரிப்புகளுடன்கூடிய சுகமான ஆசனம் விளங்குவதுமான தேரைக் கொண்டுவந்து, நண்பர்களின் கௌரவத்தைப் போற்றுபவ னான லட்சுமணனைப் பார்த்து, "ஐயனே, தேர் வந்துவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

அதைக்கேட்ட லட்சுமணன் அரசரின் அந்தப்புரத்திற்குள் சென்று சீதையிடம், "தேவி, மன்னரிடம் தாங்கள் ஒரு வரம் கேட்டீர்கள். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதன்படி கங்கைக் கரையிலுள்ள முனிவர்களின் ஆசிரம வளாகத்திற்குப் போகவேண்டும். அரசர் கொடுத்துள்ள ஆணையின்படி முனிவர்கள் வாழும் காட்டுக்கு இப்போதே தங்களை அழைத்துச்செல்லப் போகிறேன்'' என்றான்.

மாவீரனான லட்சுமணன் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் வைதேகி மிகவும் குதூகலமடைந்து கானகம் செல்ல ஆயத்தமானாள். விலை யுயர்ந்த உடைகளையும் பலவகையான ரத்தினங்களையும் எடுத்துக் கொண்டு புறப் படத் தொடங்கி னாள். "இந்த விளையுயர்ந்த ஆடைகளையும் அணிகலன் களை யும் இன்னும் பல செல்வங்களையும் முனிவர்களின் பத்தினி களுக்கு வழங்கப்போகி றேன்" என்றாள். "சரி' என்று கூறிய லட்சு மணன் இராமனுடைய ஆணையை நினைவில் கொண்டு விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரில் சீதையை அமர்த்தினான்.

அப்போது சீதை லட்சுமணனைப் பார்த்து, "லட்சுமணா, தீய நிமித்தங்கள் பலவற்றைக் காண்கிறேன். எனது வலக்கண் துடிக்கிறது. உடலில் நடுக்கம் ஏற்படுகிறது. நெஞ்சம் அமைதியில்லாமல் தவிக்கிறது. மனம் பதைபதைப்படைகிறது. சஞ்சலத்தின் இறுதி எல்லைக்கே சென்று நிற்கிறது. எதுவுமே இல்லாத வெற்றிடமாக இந்த உலகம் தோற்றமளிக்கிறது.

சகோதரர்களிடம் அன்புடையவரே, உங்கள் சகோதரர்கள் சுகமாக இருக்க வேண்டும். என்னுடைய மாமியார்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும். அவ்வாறே நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலுமுள்ள அனைத்து மனிதர்களும் உயிரினங்களும் நன்றாக இருக்கவேண்டும்'' என்று கைகளைக் கூப்பிக்கொண்டு தேவதைகளை வேண்டிக்கொண்டாள்.

vv

சீதையின் பிரார்த்தனையைக் கேட்ட லட்சுமணன் தலைகுனிந்து அவளை வணங்கி, வெம்பித் துடிக்கும் உள்ளத்துடனும், வெளியில் புன்னகை பூத்த முகத்துடனும் "அவ்வாறே ஆகட்டும்'' என்றான்.

அன்றிரவு கௌதமி நதிக்கரையில் இருந்த ஆசிரமத்தில் தங்கிவிட்டு, பொழுது விடிந்ததும் கண்விழித்து தேரோட்டியை நோக்கி லட்சுமணன், "தேரோட்டியே, விரைந்து தேரை ஆயத்தப்படுத்துங்கள்.முன்பு கயிலை மலையில் பரமசிவன் தன் தலையில் ஏற்ற கங்கை தீர்த்தத்தை நான் இப்போது கண்டு வணங்கப் போகிறேன்'' என்றான்.

கடிவாளம் அணிந்தவையும், மனோ வேகம் கொண்டவையுமான நான்கு குதிரை களை ரத்தத்தில் பூட்டி, கைகளைக் கூப்பிக் கொண்டு, "தேரில் ஏறிக்கொள்ளுங்கள்" என்று வணக்கத்துடன் சீதையிடம் கூறினார் தேரோட்டி. அதையடுத்து சீதை தேரில் ஏறிக்கொண்டாள். லட்சுமணனுடனும், அறிவாளியான சுமந்திரருடனும் பாவங்களைப் போக்கும் கங்கைக் கரையை சீதை அடைந்தாள்.

நண்பகல் வேளையில், வெள்ளம் பெருகியோடும் கங்கைக் கரையை அடைந்த தும், அதைக்கண்ட லட்சுமணன் பெரும் குரலில் பரிதாபமாக வாய்விட்டுக் கதறினான்.

அவன் துக்கத்தில் அழுவதைப் பார்த்ததும் அறம் தெரிந்த சிதை, "லட்சுமணரே, நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட கங்கைக் கரைக்கு வந்ததும் ஏன் இப்போது நீங்கள் அழுகிறீர்கள்? நான் மகிழ்ச்சியோடு இருக்கவேண்டிய இந்தத் தருணத்தில் என்னை ஏன் வருந்தச் செய்கிறீர்கள்?'' நீங்கள் எப்போதும் இராமபிரானுடன்தானே இருக்கிறீர்கள்? ஏதோவொரு சந்தர்ப்பவசத்தால் இரண்டு நாட்கள் அவருடன் இருக்கமுடியாமல் போனதற்காகவா துயரப்படுகிறீர்கள்? லட்சுமணா, எனக்கும் என் உயிரைக் காட்டிலும் இராமன் மிகவும் அன்புக் குரியவர்தான். நான் உங்களைப்போல துக்கப்பட்டு அழவில்லையே. பாலகனைப் போல தாங்கள் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம்.

என்னை கங்கையின் அக்கரைக்கு அழைத்துச்சென்று முனிவர்களைக் காட்டுங்கள். நான் கொண்டுவந்திருக்கும் ஆடைகளையும் அணிகலன்களையும் அவர் களுக்குக் கொடுக்கவேண்டும். அவர்களை வணங்கி, ஓரிரவு தங்கிவிட்டு அயோத்தி நகரத்திற்குத் திரும்பிச் செல்வோம். மனதைக் களிப்படையச் செய்பவர்களுள் முதல்வரான- தாமரைபோன்ற கண்களும், சிங்கம் நிகர் தோள்களும், உள்ளடங்கிய வயிறும் உடையவருமான இராமனைக் காண்பதற்கு என் மனமும் துடிக்கிறது'' என்றாள்.

அவளது பேச்சைக் கேட்ட லட்சுமணன் தன் அழகிய கண்களைத் துடைத்துக் கொண்டான். பின் படகோட்டிகளைக் கூப்பிட்டான். "படகு ஆயத்தமாக இருக்கி றது'' என்று கைகூப்பிக்கொண்டே வணக்கத் துடன் அவர்கள் சொன்னார்கள்.

47-ஆவது சர்க்கம்

இராமனின் ஆணையை சீதையிடம் கூறுதல்

வேடுவர்களுடைய அந்தப் படகு மிகவும் அகலமாகவும், இருக்கை முதலிய சாதனங்கள் உடையதாகவும் இருந்தது. படகில் முதலில் சீதையை ஏற்றிவிட்டு, பின்னர் லட்சுமணன் ஏறிக்கொண்டான். சுமந்திரரிடம், "இங்கேயே இருங்கள்' என்று கூறிவிட்டு, துக்கத்தால் வெப்பமடைந்த மனதுடன், "போகலாம்' என படகோட்டியிடம் கூறினான்.

கங்கையின் அக்கரையை அடைந்தவுடன் கைகளைக் கூப்பிக்கொண்டு கண்ணீர் வழியும் கண்களுடன் மைதிலியைப் பார்த்து லட்சுமணன், "வைதேகிப் பிராட்டியே, என்னிடம் மன்னர் ஒப்படைத்த இந்தப் பணி என்னை முள்ளாகக் குத்துகிறது. இந்த செயலினால் உலகத்தில் எனக்கும் பெரும்பழி ஏற்படப்போகிறது. இந்த நிலையில் எனக்கு இப்போது மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் ஏற்பட்டால் அதுவே எனக்கு நன்மை பயப்பதாக இருக்கும். மக்களால் தூற்றப்படப்போகும் இந்த காரியத் தைச் செய்யும்படி என்னை நியமித்திருக்கக் கூடாது. தேவி, நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். என்னை குறைகூறக்கூடாது'' என்று கூறி, தரையில் சாய்ந்தான்.

கைகளைக் கூப்பியவண்ணம் அழுது கொண்டே தன் மரணத்தை விரும்பி அல்லல் படும் லட்சுமணனைப் பார்த்து மிக மனம் தவித்த சீதை, "லட்சுமணா, என்ன இது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே. மன்னர் நலமாகத் தானே இருக்கிறார்? உன் மனம் அமைதியாக இல்லையென்பதைக் காண்கிறேன். மன்னரின்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்.

உனக்கு இத்தகைய மனவேதனை எதன் பொருட்டு ஏற்பட்டது? உண்மையைக் கூறு. நான் உனக்கு உத்தரவு தருகிறேன்'' என்றாள்.

லட்சுமணன் கண்களில் நீர்வழிய தலை யைத் தாழ்த்திக்கொண்டு, "ஜனகரின் மகளே, நகரத்திலும் புறநகர்ப் பகுதிகளிலும் தங்களைப்பற்றிப் பேசப்படும் மிக மோசமான அபவாதத்தை அரசவையில் நண்பர்கள் கூறக் கேட்ட இராமபிரான் மனம் வெந்துபோனார். எல்லா விஷயத்தையும் என்னிடம் கூறிவிட்டு தன் இருப்பிடத் திற்குச் சென்றுவிட்டார். எந்த பழிச்சொற் களைக் கேட்டு துக்கம் தாங்கமுடியாமல் தன் இதயத்திலேயே புதைத்து வைத்துக் கொண்டாரோ, அந்த சொற்களைத் தங்களிடம் நான் கூறமுடியாது. அதனால் அதைப்பற்றி விரிவாகப் பேச விரும்ப வில்லை. குற்றமற்றவரான தாங்கள் நான் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மன்னரால் புறக்கணிக்கப்பட்டீர்கள். ஊரார் சொல்லுக்கு அஞ்சியே இந்த தியாகம் செய்யப்பட்டது. வேறு எந்த காரணத்துக்காகவும் அல்ல.

அரசரின் ஆணைப்படியும், தங்கள் விருப் பத்தின்படியும் முனிவர்களின் ஆசிரமத்துக்கு அருகில் விடப்போகிறேன்.

கங்கைக் கரையில் அமைந்துள்ள பிரம்ம ரிஷிகளின் இந்த தபோவனம் மிகவும் புனிதமானது; அழகு வாய்ந்தது. தாங்கள் வருந்தவேண்டாம். எனது தந்தை யான தசரத மன்னருக்கு மிக நெருங்கிய நண்பரும், கருணையுள்ளவரும், பெரும் புகழ்கொண்டவருமான வால்மீகி மகரிஷி இங்கே இருக்கிறார். அவரைத் தஞ்ச மடைந்து, ஆகார நியமம் மற்றும் ஒருமுக சிந்தனை நோக்குடன் சௌக்கியமாக வாழ்வீர்களாக. தேவி, எப்போதும் இராமனையே மனதில் வைத்து, கற்புநெறியைக் கைக்கொண்டிருந்தால் தங்களுக்கு மேன்மை ஏற்படும்'' என்றான்.

48-ஆவது சர்க்கம்

சீதையைத் துறத்தல்

லட்சுமணன் கூறிய பயங்கரமான இந்த செய்தியைக் கேட்ட ஜானகி மிகவும் துயரமடைந்து தரையில் சாய்ந்தாள். சிறிதுநேரம் உணர்விழந்து கிடந்தாள். பின்னர் கண்ணீர் ததும்பும் கண்களுடன் லட்சுமணனைப் பார்த்துப் பரிதாபமான குரலில், "லட்சுமணா, துக்கங்களை அனுபவிப் பதற்காகவே எனது இந்த உடலை பிரம்மா படைத்திருக்கிறார் போலும். உலகத்தின் துயரமெல்லாம் உருவமேற்று என்முன் வந்து நிற்பதுபோல தெரிகிறது. கற்புடைய வளும், தூய்மையான நல்ல பழக்கவழக்கம் உடையவளுமான நான் அரசரால் துறக்கப் பட்டேன் என்றால், நான் முற்பிறவிகளில் செய்த பாவம் என்னவோ? எவரை மனைவி யிடமிருந்து பிரித்துவைத்தேனோ! சுமித்திரை யின் மகனே, முன்பு காட்டுக்குச் செல்வதிலிருந்து நான் தடுக்கப்பட்டாலும், இராமனை அடியொற்றி சென்றேன். முனிவர்களின் ஆசிரமங்களில் வசிப்பது சிரமமாக இருந்தா லும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது உற்றார்- உறவினரிடமருந்து பிரிக்கப்பட்ட நான் முனிவரின் ஆசிரமத்தில் எவ்வாறு வசிப்பேன்? எனக்குத் துயரம் ஏற்பட்டால் எவரிடம் சொல்லி ஆறுதல் பெறுவேன்?

"மகாத்மாவான ராகவன் உன்னைத் தியாகம் செய்ய காரணமென்ன' என்று முனிவர்கள் கேட்கும்போது, நான் என்ன குற்றம் செய்தேனென்று கூறுவேன்? லட்சுமணா, கங்கையில் மூழ்கி என் வாழ்வை இப்போதே முடித்துக் கொள்ளலாம். அவ்வாறு நான் உயிர்விட்டால் என் கணவரின் வம்ச பரம்பரை தடைப்பட்டுப் போகும். அரசரின் ஆணைப்படி, துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் என்னைத் துறந்து செல்வீர். அரசரின் கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருங்கள். இப்போது நான் சொல்வதையும் கேளுங்கள்.

எனது மாமியார் எல்லாரது முன்னிலை யிலும் கைகுவித்து திருவடிகளைப் பற்றி, என் சார்பில் வணக்கம் கூறுங்கள். அரசரது திருவடிகளில் தலைவைத்து வணங்கி அவரை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள்.

அந்தப்புரத்திலுள்ள வணக்கத்திற்குரிய அனைத்துப் பெண்களுக்கும் தலை வணங்கி, அவர்களை நான் நலம் விசாரித்ததாகக் கூறுங்கள்.

மிகவும் கவனத்துடன் அறத்தைக் காப்பவரான அரசரிடம், "ரகு நாயகரே, சீதை தூய்மையானவள்: பிரேம பத்தி கொண்டவள்; எப்போதும் தங்கள் நலனையே கூறுபவள் என்பதை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். வீரம் மிக்கவரே, தங்களைப் பற்றிய பழிச்சொல் மக்களிடம் பரவி வருவதால், அப கீர்த்தி ஏற்பட்டுவிடும் என்னும் அச்சத்தி னால் என்னைத் துறந்தீர்கள். அத்தகைய ஓர் இகழ்ச்சி தங்களுக்கு ஏற்பட்டால் அதைப் போக்குவது என் கடமை. ஏனென்றால் தாங்கள்தான் எனக்குப் புகலிடம். தாங்கள் எவ்வாறு சகோதரர்களிடம் பழகுகிறீர்களோ அவ்வாறே குடிமக்களிடமும் நடக்க வேண்டும். மிக உயர்ந்த இந்த நெறியைப் பின்பற்றினால் நிகரற்ற புகழ் தங்களுக்குக் கிடைக்கும். மக்களை தர்ம முறைப்படி பரிபாலித்தால் புண்ணியம் கிடைக்கும்.

ஆண்மை மிக்கவரே, என் சரீரத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களின் பழிச் சொல்லி-ருந்து எவ்வாறு தப்பிப் பிழைக்கமுடியுமோ அவ்வாறே செய்யுங்கள். பெண்களுக்கு கணவரே தெய்வம்; கணவரே உறவு; அவரே ஆசாரியன்; உயிரைக் காட்டிலும் மேலானவர். எனவே அவருக்குப் பிரியமான செயலைச் செய்யவேண்டும்' என்று நான் சொன்னதாக இராமனிடம் கூறுங்கள். ருதுகாலம் கடந்து நிற்கும் என்னை இப்போது நன்றாகப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்'' என்றாள்.

துயரத்தில் ஆழ்ந்திருந்த லட்சுமணன் சீதை இவ்வாறு கூறியதைக் கேட்டபின் தரையில் தலைவைத்து வணங்கினான். அவனால் எதுவும் பேசமுடியவில்லை. உரத்த குரலில் அழுதவாறே சீதையைப் வலம்வந்து, சிறிது நேரம் மனதிற்குள் ஆலோசனை செய்து, "தாயே, தாங்கள் எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள்? குற்றமற்றவரே, உங்கள் உருவத்தை நான் முழுமை யாகப் பார்த்ததில்லை. தங்கள் இரு திருவடிகளை மட்டுமே இதுவரை தரிசித்திருக்கிறேன். இப்போது இந்தக் காட்டில், இராமபிரான் இல்லாத நேரத்தில் உங்களை எப்படிப் பார்ப்பேன்!'' என்று கூறி அவளை வணங்கியபின், மீண்டும் சென்று படகில் ஏறிக்கொண்டான். "படகை செலுத்து'' என படகோட்டிக்கு ஆணையிட்டான்.

சோகச் சுமையைத் தாங்கிக் கொண்டு கங்கையின் வடகரையை அடைந்து, துயரத்தினால் உணர்விழந்தவன் போன்ற நிலையில் வேகமாகத் தேரில் ஏறினான். கங்கையின் எதிர்க்கரையில் ஓர் ஆதரவற்றவளைப்போல தரையில் அமர்ந்துகொண்டிருக்கும் சீதையைப் பலமுறை திரும்பிப் பார்த்தபடியே லட்சுமணன் சென்றுகொண்டிருந்தான்.

கொஞ்சங்கொஞ்சமாக தேரும் லட்சுமணனும் தொலைவில் சென்றுமறைவதைப் பார்த்துப் பார்த்து சீதை மனம் வெதும்பினாள். அவளை பெரும் சோகம் ஆட்கொண்டது. இப்போது அவளைக் காப்பாற்றுபவர்கள் யாருமில்லை. புகழ்பெற்றவள்; புகழையே செல்வமாக உடையவள் சோகம் தாங்க இயலாமல் குறுகிப் போனாள். மயில்களின் அகவல் ஒலிக்கும் அந்த காட்டில் உரத்த குரலில் அழத் தொடங்கினாள் அந்த கற்புக்கரசி!

(தொடரும்)