ஓம்' குடும்பத்தினர் அனைவருக்கும், வாசக தோழமை களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு, தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.
சுமார் நூறு வருடங்களுக்கு முன்புவரை நம் முன்னோர்கள் இயற்கையை நேசித்து, இயற்கையோடு இயற்கையாக கூட்டுக் குடும்பமாக சேர்ந்துண்டு மகிழ்ந்து, உழைத்து, உறங்கி விழித்து, உறவாடி மகிழ்ந்தார்கள். ஆனால் இன்று நிலை என்ன? கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துவிட்டன. காரணம் ஒன்றே ஒன்றுதான். நமது அடிப்படைக் கல்வி, தாய்வழி, தமிழ்மொழிக் கல்வியை மறந்ததுதான். பூமிப்பந்தில் பல லட்சம் உயிரினங்கள் உண்டு. ஒவ்வொரு உயிருக்கும் ஒரு குணமுண்டு. அந்த குணம் அதன் மரபணுவைச் சார்ந்தே இருக்கும்.
மனிதனுக்கென்று தனிப்பண்பு, தனி மரபு, தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. அதுபோன்று ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு மரபுண்டு; ஒரு குணமுண்டு. ஒவ்வொரு மண்ணுக்கும், அம்மண் சார்ந்து உயிர் வாழும் மனித இனத் திற்கும் இயற்கையோடு இணைந்த அறிவும் உண்டு. நமது பூர்வகுடிகள் மட்டுமே ஐவகை நிலத்திற்கு சொந்தக்காரர்களாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களில் உழைத்து உண்டு, கூடி மகிழ்ந்து வாழ்ந்தவர்களே நம் முன்னோடி கள். இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் அனைத் திற்கும் நாமே முன்னோடிகள். கண்களால் வானத்தைப் பார்த்து நேரத்தையும், பருவமழையையும், பருவக் காற்றையும், பருவகாலநிலை மாற்றத் தையும் துல்லியமாகக் கணித்துக் கூறியவர்கள் நம் முன்னோர்கள். இதில் முக்கியம் என்னவென்றால் எந்தவித உபகரணங்களும் இல்லை யென்பது தனிச்சிறப்பு.
50 ஆண்டுகளுக்குமுன்பு ஐந்து பாடத்திட்டங்கள் மட்டுமே நமது தமிழக பள்ளிக் கல்வியில் இருந்தது. அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் புவியியல் எனும் ஐந்து பாடத்திட்டங்களே அவை. இதைப் படித்தவர்களே நமது நாட்டின் ஜனாதிபதி யாகவும், மிகப் பெரிய விஞ்ஞானிகளாகவும் உலகம் போற்றுமளவுக்கு உயர்ந்து சிறந்தார்கள். அதில் மிக முக்கிய மானவர் தென் தமிழகத்தில் பிறந்த மேதகு அப்துல்கலாம் அவர்கள். அரசு ஆரம்பப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றவரே இவர். அவர் நமது இந்தியத் திருநாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்புவகித்து பல சாதனைகளைப் புரிந்தார். பொள்ளாச்சி மாவட்டத்தில் பிறந்த மயில்சாமி அவர்கள் இந்தியாவின் "மூன்மேன்' என்றழைக்கப்பட்ட விஞ்ஞானியாவார். இவர் தனது அடிப்படைக் கல்வியை பதினோன்றாம் வகுப்புவரை தாய்மொழிக் கல்வியாம் தமிழில் அரசாங்கப் பள்ளியில் படித்தார்.
இன்றும் பல வெளிநாடுகளில் பலதுறைகளில் நம் தமிழர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக் கிறது. காரணம், நமது அடிப் படைக் கல்வி. ஆம்; நமது அடிப் படைக் கல்வி, கடவுள் வாழ்த்தைத் திருக்குறளில் துவங்குகிறது.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.'
எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டி ருக்கின்றன. அதுபோல, உலகம் ஒன்றே ஆகிப் பலவாய் பிரிந்தவனா கிய (ஏகன்- அனேகன்) முழு முதற்கடவுளை முதல்வனாகக் கொண்டிருக்கிறது.
இந்தப் பாடலின் உட்பொருளை கூர்ந்து கவனித்தோமானால், அது பிரபஞ்சம் முழுக்க ஒலிக்கும் "ஓம்' எனும் ஓங்கார ஓசை (ஒலி) என்பது விளங்கும்.
இப்படி திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துடன் துவங்கியிருக்கிறார். "அகரம்' எனும் ஒலியாற்றலைப் பற்றி திருமூலர் கூறியுள்ளதைப் பார்க்கலாம்.
"ஆரும் அறியார் அகாரம் அவனென்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுவதுமாய்
மாறி எழுந்திடும் ஓசையது ஆமே.'
"அ'காரமே சிவப் பரம்பொருள் என்பதை எவரும் அறியமாட்டார்கள். உலகைத் தாங்கி நிற்கும் "உ' காரம் எங்கும் பரவி நிற்கின்ற பராசக்தியாகும். உலகம் முழுமையையும் தாங்கி நிற்கும் ஆதார சக்தியாம் "ஓம்' எனும் பிரணவத்துக்கு (சுவாசம், உயிர்) துணையானவை இந்த "அ'காரமும், "உ'காரமும். இவை உச்சந்தலைமேல் எழ, ஒலி உண்டாகும்.
அதாவது "அ'கார, "உ'கார, "ம'காரம் சேர்ந்ததே "ஓம்' எனும் உயிர் ஆற்றலாகும். அந்த உயிராற்றலின் தலைமைப் பண்பே பர "சிவம்' ஆகும்.
இன்று அமெரிக்க விஞ்ஞானிகள் சூரியனைச் சுற்றி "ஓம்' எனும் ஒலியாற்றல் கேட்கிறதென்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சத்தியம் எனும் உண்மையை மறைத்துவைக்கமுடியாது. உண்மை என்பது சுயம்பு. ஆம்; அதுவே இயற்கை. அதன் அதிபதி பஞ்சபூத பேராற்றலின் பெருந்தலைவன், ஐந்தொழிலுக்கும் அரசன் சிவப் பரம்பொருளேயாகும். சிவத்தின் பிறப்பிடம் ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை எனும் ஊராகும். இதுதான் உலகில் முதன்முதலில் தோன்றிய கோவிலாகும். இதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
அண்ட சராசரங்களின் தலைவன் சிவப் பரம்பொருள், மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் எனும் திருநாமத்தோடு உத்தரகோச மங்கை நல்லூரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஐந்தடி உயரமுள்ள மரகதத் திருமேனியுடன் காட்சிதருகிறார். இத்திருத்தலத்தைப் பற்றி விரிவாக விவரிக்க முடியாது. ஏனென்றால் நாம் இப்போது "அ, உ, ம' என்பதன் தத்துவத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆதிகாலத்தில் நவகிரகங்கள் அறியப்படாத காலங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக அமையப்பெற்றுள்ளன.
மகாபாரதப் போர் சுமார் 5,000 ஆண்டுகளுக்குமுன்பு நிகழ்ந்தது என்றும், அதற்கும் முந்தைய இராமாயணக் காலத்தில் இலங்கேசுவரன் இராவணன் இங்கேவந்து வணங்கியதாகவும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. உத்திரம் என்பது உபதேசம்; கோசம் என்பது ரகசியம். அதாவது பிரணவ மந்திரத்தை (சுவாசம், உயிர்) மங்கைக்கு ரகசிய உபதேசம் செய்த இடமே உத்தரகோச மங்கையாகும். "மண் தோன்றியபோதே மங்கை (உத்தரகோசமங்கை) தோன்றியது' என்பதிலேயே இதன் பழமை விளங்கும்.
உயிர்களின் உயிரெழுத்து "அ'விலே துவங்குகிறது. அதுவே தமிழின் முதலெழுத்து. "அ'கார, "உ'கார, "ம'காரத்தை உத்ரகோசமங்கையில் சிவப் புரம்பொருள் உமையம்மை மங்களாம்பிகைக்கு உபதேசித்தது. இதன் சிறப்பை திருமந்திரத்தில் புரிந்து தெளிந்து உணர்வோம்.
"அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச்
சிகாரம் சிவமே வகாரம் பரமே
அகாரம் உயிரென்று அறையலும் ஆமெ.'
"ஓம்' எனும் பிரணவம் அகார, உகார, மகாரம் ஆகும். அகாரம் உயிராகும். உகாரம் பரமாகும். மகாரம் சிவமாம்.
அ, உ, ம எனும் மூன்றெழுத்தில் (முப்பதம்) சிவாய என்றுள்ளதில் "சி' சிவமாகும். "வ' பரம்பொருளாகும். "ய'வை உயர் சீவன் எனச் சொல்லுதலும் பொருந்தும்.
"ஓம்' எனும் பிரணவமும், "சிவய' என்னும் ஐந்தெழுத்து (நமசிவாய) மூலமும் ஒன்றேயாகும்.
உயிர்களின் உயிரெழுத்து, "அ' என்பதும், "அ'காரம் எனும் தமிழ் எழுத்தின் தலைவன் "சிவம்' எனும் சிவப் பரம்பொருள் என்பதையும் நாம் எளிமையாகப் புரிந்துகொள்ளமுடியும். தமிழ் என்றால் சிவம்; சிவமே தமிழாகும்.
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் "நீத்தல் விண்ணப்பம்' எனும் பகுதியில் கூறியுள்ளதைப் பார்ப்போம்.
"என்னை அப்பா அஞ்சேல் என்பவர் இன்றி
நின்று எய்த்து அலைந்தேன்
மின்னை ஒப்பாய் விட்டிடுதி கண்டாய்
உவமிக்கின் மெய்யே
உன்னை ஒப்பாய் மன்றும் உத்தர
கோச மங்கைக்கு அரசே
அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய்
என் அரும் பொருளே.'
என்னை "அப்பனே, எதற்கும் நீ
அஞ்சாதே' என்று ஆறுதல் கூறி தேற்றுவார் எவருமில்லாமல் கவலையால் அலைந்து திரிகிறேன். மின்னல்போலும் ஒளிவடிவத் திருமேனி உடையவனே! என்னைக் கைவிட்டு விடுவாயோ? விடாதே பெருமானே! உனக்கு உவமை நீயே! வேறெவரும் நினக்கு ஒப்பாகமாட்டார். திருஉத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கும்.
அரசே, பெருமானே! எனக்குத் தாய் போன்றவனே! தந்தைக்கு நிகரானவனே! அடைதற்கு அரிய பெரும் நிதியமே!' என்று உள்ளம் உருகுகிறார் மாணிக்கவாசகர்.
பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்வரிகள்...
"தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ்
இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ...'
அவரவர் தாய்மொழிக் கல்வியில் படிப்பதே காலச்சிறந்தது. அதேசமயம் அவரவர்க்கு எத்தனை மொழிகளை கற்க விருப்பமிருக்கிறதோ அதனை கற்றுக் கொள்வது அவரவர் தனித் திறமையாகும். அதற்குத் தடையேதுமில்லை.
தமிழின் தலைவனாம் சிவப்பரம்பொருள்- உத்தரகோச மங்கை நல்லூரின் அரசே, பரம்பொருளே போற்றி. சிவமே தமிழ்.... தமிழே சிவம்