இரண்டாம் பாகம்
ஆன்மிக தொடர்
12
கனச்சேபனைத் தன் மகனாய் ஏற்றுக் கொண்டு அவனோடு புறப்பட்டுவிட்டார் விஸ்வாமித்திரர். போகும்போது அவர் வசிஷ்டரையும் அரிச்சந்திரனையும் பார்த்து முறைத்துவிட்டுதான் புறப்பட்டார். அதில் ஒரு கோபமும் குரோதமும் அடங்கியிருந்தது.
வியாசர், விஸ்வாமித்திரர் குறித்த இந்த தகவலோடு ஜெனமேஜெயனிடம், ""ஜெனமேஜெயா... நானறிந்த சகல செய்திகளையும் உனக்குக் கூறிவருகிறேன். நீயும் அதன்பொருட்டு கேள்விகள் கேட்டுத் தெளிவுபெறுகிறாய்... இதில் விஸ்வாமித்திரர் பற்றி நீ கேட்க நிச்சயம் நிறைய கேள்விகள் இருக்கும். அவற்றையும் கேட்பாயாக! கேட்டாலே சரியான பதில் கிடைக்கும். சரியான பதிலே மனநிறைவைத் தந்து அமைதியையும் அளிக்கும்'' என்றார்.v ஜெனமேஜெயன் அதைக்கேட்டு மெலிதாகப் புன்னகைத்தான். இப்படி ஒரு சிரிப்பை அவன் இதற்குமுன் சிரித்ததில்லை. வியாசரும் அவன் சிரிப்பைப் புரிந்துகொள்ள முயன்றார்.
""உன் சிரிப்பில் ஒரு விரக்கி தெரிகிறது எனக்கு...''
""ஆம் மகரிஷி... எனக்குள் இப்போது அது ஒன்றுதான் மிஞ்சியுள்ளது...''
""தேவியின் பிரதாபங்கள் உனக்குள் பக்தியையும் பரவசத்தையும் அல்லவா அளிக்கவேண்டும்?''
""பக்தியும் பரவசமும் ஏற்படாமல் இல்லை. ஆனால் அதை விஞ்சிக்கொண்டு பிறப்பு குறித்தே என்னுள் பல கேள்விகள் எழும்பி நிற்கின்றன. இந்த உலகில் எவர் ஒருவருடைய வாழ்வும் "ஆஹா... வாழ்ந்தால் இவரைப்போல் வாழவேண்டும்' எனும் படியாகவே இல்லை. எல்லாரிடமும் ஒரு ஏற்ற இறக்கம்- எல்லாரிடமும் ஒரு குணக் கோளாறு! உண்மையில் மனிதப்பிறப்பைவிட மற்ற பிறப்புகள் மேல் என்றுகூட தோன்று கிறது...''
""சரியாகச் சொன்னாய்... உனக்குள் பக்குவம் ஏற்படத் தொடங்கிவிட்டதை இக்கருத்து உணர்த்துகிறது...''
""என் விசாரம் ஒரு பக்குவமா?''
""ஆம்... மகிழ்வான சிந்தனைகள் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. துக்கம், துயரம், கிலேசம், சலனம் இவை எல்லாமும்கூட வாழ்வின் அங்கங்களே! சொல்லப்போனால் இன்பத்தைவிட துன்பங்களே மனிதவாழ்வை அர்த்தமுள்ளவையாகவும் சிறப்பானதாகவும் ஆக்குகின்றன.''
""இது என்ன பதில் மகரிஷி... துன்பமின்றி இன்பமாய் வாழ்வதுதானே வாழ்வு?''
""துன்பமில்லாவிட்டால் இன்பத்தை எப்படி உணரமுடியும்? வெறும் பகல் பொழுதையே பூமி கொண்டிருந்தால் எப்போது உறங்கி, எப்போது செயல்படுவது?''
""அப்படியானால் உங்களுக்கு துன்ப வாழ்வுமீது வருத்தங்கள் இல்லையா? நீங்கள் எத்தனை துன்பம் வந்தாலும் தாங்குவீர்களா?''
""நல்லகேள்வி... ஆனாலும் என் கருத்தை வைத்து இப்படியொரு கேள்வியை நீ கேட்கக்கூடாது!''
""வேறெப்படி கேட்கவேண்டும்?''
""இன்பமும் துன்பமுமான வாழ்வில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று கேள்...''
""நீங்களே சொல்லுங்கள். எப்படி வாழவேண்டும்?''
""இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதி செயல்படவேண்டும்... அப்போது வாழ்வு சமநிலையில் இருக்கும்.''
""நீங்கள் சொல்வது சாத்தியமா?''
""சாத்தியமே... அதற்காகவே நான் இங்கே பலரின் வாழ்வில் நடந்த சம்பவங் களையெல்லாம் கூறியவண்ணம் உள்ளேன். இந்த சம்பவங்கள் உணர்த்துவதும் சமமாகக் கருதவேண்டும் என்பதையே!''
""அரிச்சந்திரன் வாழ்வில் நான் அப்படி யொரு பாடத்தை உணரவில்லையே?''
""அரிச்சந்திரன் வாழ்வில் சோதனை என்பதே இனிமேல்தான் வரவிருக்கிறது. நீ அறிந்தது கொஞ்சமே...''
""அப்படியானால் விஸ்வாமித்திரர், அரிச்சந்திரன் தொடர்பான சம்பவங்கள் நிறைய உள்ளனவா?''
""ஆம்... அரிச்சந்திரன் வாழ்வு உலகத்தவர்க் கெல்லாமும்கூட ஒரு பாடம்...''
""என்றால் முதலிலில் அதைக் கூறுங்கள் மகரிஷி.''
""கூறுகிறேன். கவனமாகக் கேள். கனச்சேப னுடன் புறப்பட்டுச்சென்ற விஸ்வாமித்திரர் ஒரு முடிவோடுதான் சென்றார். தனது எந்த வொரு முயற்சியிலும் விஸ்வாமித்திரர் வெற்றியும் அடையவில்லை; தோல்வியும் அடையவில்லை.
அதற்குக் காரணம் அரிச்சந்திரன்! அரிச்சந்திரனை வழிநடத்துபவரோ வசிஷ்டர்... எனவே விஸ்வாமித்திரருக்கு வசிஷ்டர்மீதும் வருத்தமும் கோபமும் மிகவே இருந்தது!''
""மகரிஷி... முற்றும் துறந்தவர்கள் தானே மகரிஷி எனப்படுகின்றனர்.''
""ஆம்... அதிலென்ன சந்தேகம் ஜெனமேஜெயா?''
""அப்படியானால் விஸ்வா மித்திரர் போன்றவர்கள் ஏன் சாமான்ய மனிதர்கள்போல் நடக்கின்றனர்? எல்லாம் துறந்தவர்கள் கோபத்தைத் துறக்க வில்லையே... அடுத்து தானே பெரியவன் என்கிற எண்ணம். இதெல்லாம் என்ன?''
""நல்ல கேள்வியே இதுவும்... விஸ்வாமித்திரர் ஒரு ராஜரிஷியாக ஆனதே ஒரு தற்செயலாள சம்பவத்தால் தான். இன்னும் சொல்லப்போனால் போட்டி மனப் பான்மையால்!
விஸ்வாமித்திரர் உண்மையில் ஒரு அரசன்! கௌசிகன் என்பது அவர் பெயர். இவர் வசிஷ்டரை வனத்தில் சந்திக்க நேரவும் வாழ்க்கை மாறத் தொடங்கியது.''
""விஸ்வாமித்திரருக்கு இப்படி ஒரு பின்புலமா?''
""ஆம்.. ஒருசமயம் காட்டில் வேட்டை யாடச் சென்றான் கௌசிகன். அப்போது நடுக்காட்டில் வசிஷ்டரின் குடிலுக்குச் செல்ல நேர்ந்தது. அந்த குடில் எழிலான ஒரு இடமாய், நறுமணம் மிக்கதாய், மனதுக்கு மிக அமைதி தருவதாக இருந்தது. அதற்குக் காரணம் அங்கு அவரிடமிருந்த காமதேனு எனும் பசுவாகும்.
இந்தப்பசு அமிர்தம் கடையும் நிகழ்வில் பாற்கடல் தந்த பல பரிசுகளுள் ஒன்று! இது தானாக விரும்பி வசிஷ்டரை அடைந்து அவரோடு சேர்ந்து வாழ்ந்து வந்தது. இந்த காமதேனு கேட்பதையெல்லாம் தரவல்லது. ஆயினும் வசிஷ்டர் அது எல்லாம் தரும் என்பதற்காக அதனிடம் எதையும் கேட்க வில்லை. அதை பரப்பொருளாய்க் கருதி வணங்கிவந்தார். கௌசிகன் அந்தப் பசுவைப் பார்த்தவுடன் பேராசை வயப்பட் டான். அந்தப் பசு ஒரு அரசனான தன்னிடம் இருந்தால்தான் இந்த உலகிற்கே சக்கரவர்த்தி யாகத் திகழ முடியும் என்று கருதினான்.
கேட்டதையெல்லாம் தருகின்ற காமதேனு விடம் எதுவும் கேளாமல் இருப்பதை அவன் விசித்திரமாகவும் முட்டாள்தனமாகவுமே கருதினான்.
எனவே வசிஷ்டரிடம் அந்தப் பசுவை தனக்குத் தந்துவிடும்படி கேட்டான். வசிஷ்டரோ, "அந்தப் பசு உன்னோடு வரவிரும்பினால் தாராளமாய் அழைத்துச் செல்' என்றார்.
"நான் ஒரு மன்னன்- நான் போய் ஒரு பசுவிடம் கேட்பதா? முடியாது. அது என்னோடு வரவேண்டும். இது என் கட்டளை' என்று தன் வீரர்களை அனுப்பி அதை இழுத்துவரச் சொன்னான்.
ஆனால் காமதேனுவிடம் எவராலும் நெருங்க முடியவில்லை.
வந்த அவ்வளவுபேரையும் காமதேனு விடம் தோன்றிய வீரர்கள் விரட்டியடித்தனர்.
இதை கௌசிகன் எதிர்பார்க்கவில்லை. இறுதியில் கௌசிகன் தோற்று நின்றான்.
வசிஷ்டர் அப்போது அவனிடம், "அன்பாலும் பக்தியாலும் உயரிய பண்புகளாலும் மிகச் சுலபமாக சாதித்திருக்க வேண்டியதை- அகந்தையாலும் ஆத்திரத்தாலும் கெடுத்துக் கொண்டு விடடாய்' என்றார்.
கௌசிகனுக்கும் அப்போதுதான் சில உண்மைகள் புரிய ஆரம்பித்தன. ஒருவன் அரசன் என்பதால் மட்டுமே எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது. அதற்கு அப்பாற் பட்டு சில காரணிகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டவன், "நான் என்ன செய்தால் இந்தப் பசு என்னிடம் வரும்?' என்று வசிஷ்டரிடம் கேட்டான்.
"ஆசைகளைத் துறந்து, அது உன்னிடம் வரவேண்டும் என்னும் விருப்பத்தையும் துறந்து, நீ மேலான துறவியானால் அதனிடம் நீ வேண்டத் தேவையேயில்லை. அப்போது காமதேனு தானாக உன்னைத் தேடிவரும்' என்றார்.
"முற்றும் துறந்தவனுக்கு எதற்கு எல்லாவற்றையும் உடைய காமதேனு?' என்று அப்போதும் திருப்பிக் கேட்டான் கௌசிகன்.
"ஒரு இரும்புப் பெட்டியில்தான் உயரிய மாணிக்கக் கற்களைப் பூட்டி வைக்கிறோம்.
பெட்டியிடம் இருப்பதால் பெட்டிக்கு அதனால் ஒரு பயனுமில்லை. கல்லுக்குதான் பாதுகாப்பு. அந்த பெட்டிபோல்தான் துறவி. ஆனால் துறவியாவதென்பது உன் போன்ற க்ஷத்ரிய புருஷர்களுக்கு சாத்தியமேய இல்லை' என்றார் வசிஷ்டர்.
எப்போதும் ஒருவனிடம் "உன்னால் முடியாது; விட்டுவிடு' என்னும்போது, சுயமரியாதை உணர்வு தூண்டப்பட்டு, "என்னாலும் முடியும்' என்று சொல்ல வைக்கும். கௌசிகனும் சொன்னான்.
"என்னால் முடியும்... நான் மனது வைத்தால் எதுவாகவும் ஆவேன்' என்று பலத்த குரலிலில் சொன்னான்.
"புலன்களை ஒடுக்கித் தவம் செய்வது சுலபமல்ல' என்று சிரித்தார் வசிஷ்டர்.
"எனக்கு அது சுலபமே...'
"எதற்கு இந்த விஷயத்தில் போட்டி?'
"போட்டிதான் அரசர் பெருமக்களுக்கு மிகப்பிடித்த விடியம்.'
"ஆனால் சந்நியாசிக்கு துளியும் பிடிக்கக் கூடாத விடியம் அது!'
"நீங்கள் என்னதான் கூறவருகிறீர்கள்?'
"அரசனாய் வந்தாய்- அரசனாகவே திரும்பிச்செல்.'
"இல்லை... இதுநாள்வரை மண்ணுலகின் அரசனாகத் திகழ்ந்த நான் இனி விண்ணுலக மும் வணங்கும் ஒருவனாக ஆவேன். நீங்கள் முடியாதென்று சொன்ன இந்த புலன்களை அடக்கி, நான் முனிவனாகி அதன்மூலம் எல்லா வல்லமைகளையும் பெற்று, நீரே என்னை வணங்கிடும் உயர்ந்த ராஜரிஷி யாகவும் ஆகிவிடுவேன்' என்று கூறிச்சென்ற கௌசிகன், தான் சொன்னதுபோலவே ராஜரிஷியாகவும் ஆனான்!''
வியாசர், விஸ்வாமித்திரர் பற்றிக் கூறிய விவரங்கள் ஜெனமேஜெயனை ஆச்சரியப்படுத்தின.
""மகரிஷி... கௌசிகன் என்னும் மன்னனா இன்று விஸ்வாமித்திரராக நடமாடுவது?''
""ஆம்... கௌசிகன்தான் விஸ்வாமித்திரர்.''
""பரவாயில்லையே... சொன்னதைச் செய்துகாட்டிவிட்டாரே?''
""உண்மைதான். ஆனாலும் ஒரு மனிதன் துறவியாவதன் பின்புலம் போட்டியும் ஆசையும் உடையதாக இருக்கவே கூடாது ஜெனமேஜெயா...''
""ஆனால் அந்த போட்டியும் பொறாமை யும்தானே விஸ்வாமித்திரரை உருவாக்கின?''
""சரியாகச் சொன்னாய்... அதனால்தான் ஒரு ராஜரிஷியாக அவர் மாறியும், அவரிடம் அந்த துர்குணங்கள் ஒளிந்திருந்து வெளிப் பட்டபடியே உள்ளன.''
""இது ஒரு ஆச்சரியமான விஷயம்.''
""ஆம்... எவ்வளவோ ரிஷிகள்- அதில் விஸ்வாமித்திரர் தனி ரகம்!''
""உண்மைதான். அவரது பூர்வக் கதையை அறிந்தேன். அரிச்சந்திரன் விஷயத்தில் அடுத்து அவர் என்ன செய்தார்?''
""என்ன செய்வார்? ஒரு மனிதன் பரிபூரண மானவனாக இருக்கமுடியாது என்பது அவர் கருத்து. ஏனென்றால் அவர் ராஜரிஷியாக மாறியபோதிலும், மேனகை என்னும் பேரழகியிடம் மயங்கி சகுந்தலை என்னும் மகளுக்குத் தந்தையானவர். அதாவது புலன்களை அடக்க முடிந்ததுபோலவே அடக்கமுடியாமலும் போனவர்.''
""ஓ... விஸ்வாமித்திரர் அடக்குவது- அடக்க முடியாதது என்னும் இரண்டிற்கும் உதாரணமானவரா?''
""ஆம்... அவர் அப்படிப்பட்ட தன்னைப் போலவே எல்லாரையும் கருதினார். நூறு சதவிகிதம் ஒருவன் பூரணமாக இருக்க முடியாது என்கிற கொள்கையையும் கொண்டிருந்தார்.''
""இந்த கொள்கை அரிச்சந்திரன் வரையில் பாதிப்பை உண்டாக்கிற்றா?''
""ஆம்... பெரும்பாதிப்புகளை அரிச்சந்திரன் வாழ்வில் உருவாக்கிற்று''.
""எப்படி?''
""அரிச்சந்திரன் அயோத்தி அரசனாக, லோகிதாசன் என்னும் மகனுக்குத் தந்தையாக வாழ்ந்த சமயத்தில் ராஜசூய யாகம் ஒன்றை நிகழ்த்தினான். இதன் பொருட்டு உலகத்தவர் அனைவரையும் அழைத்தான்!''
""அதில் விஸ்வாமித்திரரும் ஒருவர். இல்லையா மகரிஷி?''
""சந்தேகமே வேண்டாம். விஸ்வாமித்திர ரும் வந்தார். "ராஜசூய யாகம் செய்பவர்கள் எல்லா தகுதிகளையும் பெற்றிருக்கவேண்டும். அரிச்சந்திரனுக்கு எல்லா தகுதிகளும் வந்து விட்டதாக நான் எண்ணவில்லை' என்று சிக்கலைத் தொடங்கினார்.''
""அடடே... அதன்பிறகு என்னாயிற்று?''
""வசிஷ்டர் இடையிட்டார்... "அரிச்சந்தி ரனுக்கு தகுதி இருக்கிறது. அவன் வாய்மை ஒன்றுபோதும் இந்த யாகத்தை அவன் நிகழ்த்த' என்றார்.''
""விஸ்வாமித்திரர் பிறகு என்ன செய்தார்?''
"" "அவன் மட்டுமல்ல. எவராலும் பூவுலகில் நூறு சதவிகிதம் வாய்மை யோடு வாழமுடியாது. இந்த உலகம் வாழவும் விடாது' என்றார் விஸ்வாமித்திரர். அரிச்சந்திரனோ, "வாய்மையின் பொருட்டு நான் உயிரைக்கூட தருவேன்' என்றான்... துவங்கிவிட்டது அடுத்த போராட்டம்...!''
வசிஷ்டர் அரிச்சந்திரனுக்கு நேரிட்ட சம்பவங்களுக்குள் நுழைந்து அரிச்சந்திரனின் சோதனைக்குரிய வரலாற்றைக் கூறத் தொடங்கினார்.
ஒரு நாள் அரிச்சந்திரன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். இந்த வேட்டை என்பது, மிருகங்களை வேட்டையாடி அதன் புலாலை உண்டு சுவைக்க அல்ல...
மிருகங்கள் நாட்டிற்குள் வந்து மனிதர் களையே அடித்து விழுங்க முற்படும்போது அவற்றை அடக்கி அழிப்பது வேந்தனின் கடமை!
அதன் நிமித்தம் வந்த அரிச்சந்திரன் காட்டில் ஒரு பெண்ணின் ஓலலிக் குரலைக் கேட்க நேர்ந்தது! நெருங்கிச் சென்று பார்த்தபோது அந்தப் பெண்ணின் அழிவு நிமித்தம் விஸ்வாமித்திரர் தவம் புரிவது தெரிந்தது. அதாவது அந்தப் பெண்ணைத் தன் அடிமையாக்கி தன் கட்டளைக்கேற்ப செயல்பட வைப்பது விஸ்வாமித்திரர் விருப்பம். அவளோ விசேஷ சக்திபடைத்த கந்தர்வப்பெண். விஸ்வா மித்திரரின் விருப்பத்தை ஏற்க மறுத்த அவளை அடக்குவதே விஸ்வாமித்திரரின் நோக்கம்!