ந்த காரியம் தொடங்கும் முன்பும் விநாயகரை வணங்கவேண்டும் என்பது சிவனது நியதி. ஏனெனில் தடைகளை ஏற்படுத்துபவரும் அவரே- அதனைக் களைபவரும் அவரே- செயலில் வெற்றி தருபவரும் அவரே!

"சர்வ விக்னகரம் தேவம் சர்வ விக்ன விவர்ஜிதம்

சர்வ சித்தி பிரதாதாரிம் வந்தே அஹம் கணநாயகம்.'

அதுபோல சிவ பெருமானை வணங்கு வதற்குமுன், அவர் எதிரே அமர்ந்திருக்கும் நந்திதேவரை வணங்க வேண்டும். அவர் சிவனது வாகனம் மட்டுமல்லாது காப்பாளரும்கூட!

Advertisment

பஞ்சாங்கம் இவ்வாண்டு 8-4-2022 அன்று நந்திகேசர் ஜெயந்தி என்றும், 9-4-2022 அன்று நந்திகேசர் திருமணம் என்றும் குறிப்பிடுகிறது.

நந்தி என்பது காளை. ஒரு காளைக்குக் கல்யாணமா? அதை நடத்திவைத்தவர் சிவ பெருமானேவா? ஏழு தலங்களுக்கு ஊர்வலமா? இது என்ன வினோதம்! ஆம்; இப்போதும் சிவ புண்ணியத் தலங்களில் இவ்விழா நடக்கிறது.

அதுகுறித்து சற்று சிந்திப்போமா...

Advertisment

திருவையாறில் நந்தீசர் அவதார விழா நடக்கும். மறுநாள் திருப்பழனம் (திருமணத்தலம்), திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு ஊர்வலமாகச் சென்று மீண்டும் திருவையாறுக்குத் திரும்பிவருவார்.

இந்த ஏழு தலங்களும் பாடல் பெற்ற சிவத்தலங்கள். சப்தஸ்தான திருவிழா என்றே இதற்குப் பெயர். திருவையாறு, சங்கீதம் தெரிந்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் பரிச்சயமான ஊர். ஏனென்றால் சங்கீத மும்மணிகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் அதிஷ்டா னம் இருக்குமிடம்.

ff

இந்த தலத்திற்குத் திருவையாறு என ஏன் பெயர் வந்தது? காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து நதிகள் பாய்வதால் திரு+ஐ+ஆறு- திருவையாறு என பெயர்பெற்றது.

ராஜராஜ சோழனின் பட்டத் தரசியான உலகமாதேவி இந்த திருவிழாவை ஆரம்பித்தார். அவரே திருவையாறில் வட திருக்கயிலாயக் கோவிலைக் கட்டினார். அந்த கோவிலுக்கு மன்னர் ராஜராஜன் வர, யாரோ ஒருவர் சில தேவாரப் பாடல்களைப் பாட, அந்தப் பொறியே தேவாரப் பாடல்களை சிதம்பரத்திலிருந்து மீட்க மன்னரைத் தூண்டியது.

இந்த தலத்திற்கு ஜப்பேசம், ஜீவன்முக்திபுரம், காவிரிக் கோட்டம் போன்ற பெயர்களும் உண்டு. தஞ்சாவூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில், காவிரியின் வடகரையில் உள்ள தலமிது.

இத்தல ஈசனின் பெயர் ஐயாறப்பர், பஞ்சநதீஸ்வரர். (இவர் மண்ணாலான லிங்கம்.) அம்பாள் அறம்வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி. இது தர்மபீடம் எனும் சக்திபீடமும்கூட!

அப்பர் காளஹஸ்தீஸ்வரரைக் கண்டு, பின்னர் கயிலைநாதனை தரிசிக்க நடந்தார். முதிர்ந்த வயது. எவ்வளவு தூரம் நடப்பது! ஆக, ஊர்ந்து சென்றார். அப்போது சிவனே ஒரு முனிவராகத் தோன்றி, "இங்கிருக்கும் குளத்தில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுக; கயிலைநாதன் தரிசனம் பெருக' என்றார்.

அவ்வாறே ஆடி அமாவாசையன்று இங்கு கயிலை தரிசனம் பெற்றார் அப்பர்.

ff

நந்திகேசர் பிறப்பு

சிலாத முனிவருக்கு பிள்ளைப் பேறில்லை. ஐயாறப்பரை ஆழ்ந்து துதித்தார். ஜப்பேச மண்டபத்தில் ஜெபம் செய்தார். சிவபெருமான் அவருக்குக் காட்சியளித்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்யுமாறு கூறினார்.

மேலும், "யாகம் பூர்த்தியாகும்போது பூமியில் ஒரு பெட்டகம் கிடைக்கும்; அதில் ஒரு குழந்தை இருக்கும்; ஆனால் அது 16 வருடங்கள் மட்டுமே வாழும்' என்றார்.

(அதுவே சிவனின் பக்தி சோதனை போலும்.)

முனிவர் அவ்வாறே செய்ய, பெட்டியில் ஒரு குழந்தை கிடைத்தது; சிரித்தது. குழந்தைக்கு ஜப்பேசன் என்று பெயரிட்டனர்.

14 வயதுவரை குழந்தை எவ்வாறு வளர்ந்தது என்பதுபற்றி குறிப்புகள் இல்லை. பெற்றோர்,

பிள்ளையின் இறுதிநாள் நெருங்குகிறது என்று அஞ்சினர்; மனம் நொந்தனர்.

விதியை மாற்றமுடியுமா? மார்க் கண்டேயன் சிவனையே தழுவினார்.

காலனை உதைத்து "அவன் என்றும் 16 வயது சிரஞ்சீவி' என்றார் சிவபெருமான்.

இங்கு ஜப்பேசன் சூரிய புஷ்கரணியில் ஒற்றைக்காலில் நின்று தவம்செய்ய ஆரம்பித்தான். குளத்திலிருந்த மீன்கள் அவன் சதையைத் தின்ன ஆரம்பித்தன. எலும்பும் தோலுமாக விகார உருவமானான். தாய்- தந்தையர் பெரும் துயரம் கொண்டனர்.

இந்தநிலையில் சிவபெருமான் அங்கு தோன்றி கங்கைநீர், பிரம்மனின் கமண்டல நீர், அம்பிகையின் பால், மேகத்தின் நீர் ஆகியவற்றைக்கொண்டு ஜப்பேசனுக்கு அபிஷேகம் செய்ய, அவன் உடல்நலம் பெற்றான். அதன்பின்னர் அவனை சிவகணங்களுக்குத் தலைவனாக்கினார்- நந்திகேஸ்வரர் ஆக்கினார் சிவபெருமான். கயிலையில் திருவாயிலைக் காக்கும் பணியையும் தந்தார். பஞ்சாட்சர உபதேசம் செய்வித்தார். அதிகார நந்தியாக்கினார். ஆச்சாரியார்களுள் முதல் குருவாக ஆனார் நந்திகேஸ்வரர்.

இவ்வளவும் செய்த சிவபெருமான் நந்திகேஸ்வரருக்குத் திருமணமும் செய்துவைக்க விரும்பினார். வியாக்ரபாத முனிவரின் மகளும், உபமன்யுவின் தங்கையுமான சுயம்பிரகாசையை மணமகளாகத் தேர்ந்தெடுத்தார். பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திருப்பழனத்தில் திருமணப் பந்தல் அமைக்கப்பட்டது. திருமணத்திற்கு உகந்த பொருட்கள் வேண்டுமல்லவா? திருப்பழனம் விதவிதமான பழங்களை ஈந்தது. திருப்பூந்துருத்தியிலிருந்து கூடைகூடையாக மணமுள்ள மலர்கள், மாலைகள் வந்துசேர்ந்தன. திருநெய்த்தானம் நெய்யும் பாலும் கொடுத்தது. திருச்சோற்றுத்துறை விதவிதமான உணவு வகைகள் கொடுத்தது. திருக்கண்டியூர் நவரத்தின- தங்க ஆபரணங்கள் தந்தது. திருவேதிக்குடி திருமணம் செய்விக்க தகுந்த வேத விற்பன்னர் களை அளித்தது.

ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம் நடக்கும். பௌர்ணமியன்று முடியும். மறுநாள் நந்தியும் சுயம்பிரகாசையும் பல்லக்கில் காலை ஆறு மணிக்குப் புறப்படுவார்கள். திருப்பழனம்,

திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் என்று வரிசையாகச் செல்வார்கள். ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த தலத்திலுள்ள சிவபெருமானும் அம்பாளும் ஊர் எல்லையில் காத்திருந்து, எதிர்கொண்டழைத்து உபசரிப்பார்கள். பின்னர் அவர்கள் யாவரும் புறப்பட்டு அடுத்த தலத்திற்குச் செல்வார்கள். இவ்வாறு ஒவ் வொரு தலங்களி லும் உபசரிப்பு தொடரும்.

இறுதியாக திருநெய்த்தானத் திலிருந்து அனைத்து பல்லக்குகளும் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் திருவையாறு வந்துசேரும். விடியவிடிய இந்த வைபவம் நடைபெறும். திருவையாறில் பூஜைகள் நடந்தபின், சற்று நேரம் கழித்து அந்தந்த ஊர் பல்லக்குகள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்லும். இதுவே சப்தஸ்தான திருவிழா. அந்தந்த ஊரின் மக்கள் குழுமி சேவைகள் புரிந்து, தரிசனம்செய்து பரமானந் தத்தில் மூழ்கித் திளைப்பார்கள்.

இந்த ஏழு தலங்களும் கோவில் பெரிதோ சிறிதோ- பாடல்பெற்ற உன்னதத் தலங்கள். இதன் தலபுராண விவரங்களை இந்த ஒரு கட்டுரையில் விரிவாக விவரிக்க இயலாத தால், திருவையாறை சிறிது விரிவாகவும், மற்ற ஆறு தல சிவன்- அம்பாள் விவரங்களையும் காண்போம்.

திருவையாறு

ஏழுநிலை ராஜகோபுரத்தைக் கொண்டது. ஐந்து பிராகாரங்களுடையது. நான்கு நுழைவாயில்களிலும் கோபுரம் உண்டு. தெற்கு கோபுர வாயிலுக்கு எதிரே காவிரிப் படித்துறை உள்ளது. பூச மண்டபம், கல்யாண சிந்து என்று பெயர்கள் உண்டு. தெற்கு கோபுர வாயிலின் மேற்கு முனையில் ஓலமிட்ட விநாயகர் உள்ளார். காவிரி வெள்ளத்தைத் ஒதுங்கச்செய்து சுந்தரருக்கு உதவியவர் இவர்.

உள்ளே நுழைந்தால் திருவையாற்று ஆட்கொண்டார் சந்நிதி உள்ளது. இவர் தல காவல் தெய்வம். இவருக்கு ஒரு கதையே உண்டு. சுசரிதன் என்றொரு சிறுவன் தாய்- தந்தையை இழந்தவன். தலம்தலமாக சிவதரிசனம் செய்து வந்தான். அவ்வாறு திருப்பழனம் வந்தவன் கனவில் காலன் வந்தான்; 'இன்னும் ஐந்து நாளில் உன் னைப் பற்றுவேன்' என்றான். கதியற்ற சுசரிதன் திருவையாறு தெற்கு கோபுரம் வந்து சிவ பஞ்சாக்ஷரீ ஜெபம் செய்தான். சொன்னவாறு எமனும் வந்தான். பக்த தயாபர ஐயாறப்பர் துவாரபாலகரிடம் தோன்றி, காலனை காலடியில் மிதித்து சிறுவனைக் காப்பாற்றினார். சுசரிதனுக்கு ஒளிமயமாக தரிசனம் தந்தார். ஜப்பேசன், சுசரிதன் ஆகிய இருவரின் உயிரைக் காத்த சிவன் ஐயாறப்பர். இங்கு குங்கிலியம் புகைந்துகொண்டிருக்கும். அது எமபயம் நீக்கும் என்பர். அடுத்த துவார பாலகரின் பெயர் உய்யக்கொண்டார்.

தெற்குச் சுற்றில் அப்பருக்கு கயிலை தரிசனம் தந்த கயிலாயர் பஞ்சநதிவாணர், அஞ்சலை அம்பிகையையும் காணலாம்; மன சாந்தி பெறலாம்.

நான்காம் பிராகாரத்தில் ராஜராஜ சோழனின் மனைவி உலக மாதேவியார் கட்டிய வட கயிலாயம் சந்நிதியைக் காணலாம். மூலவர் லோகமாதேவீச்வரமுடையார்.

தெற்கு வாயில் கோபுரம் திரட்டி கோபுரம் எனப்படுகிறது. இவ்வழியாகதான் ஐயாறப்பர் வெளியே வருவார். கயிலையில் சிவனை தெற்கு வாயில் வழியாகத்தான் தரிசிக்கலாம் என்பர். மூன்றாம் பிராகாரம் சப்த ஒலிப் பிராகாரம் எனப்படுகிறது. ஏழொலிப் பிராகாரம் என்கிறார் அப்பர். "ஐயாறு அகலாத செம்பொன் சோதி ஓசை ஒளி எல்லாம் நீயே' என்று பாடுகிறார். அங்கு ஒரு குழி காணப்படுகிறது. அதில் "ஐயாறப்பா...' என்று கூவினால் பலமுறை எதிரொலிக்கிறது.

சந்நிதியில் ஒரு சிறிய பெட்டியில் ஸ்படிக லிங்கமும் ஸ்படிக அம்பாள் விக்ரகமும் உள்ளன. காலையில் சிவன் தன்னைத்தானே பூஜித்துக் கொள்கிறார் என்கிறார்கள். இதற்கும் ஒரு வரலாறுண்டு.

ஐயாறப்பரை ஆதிசைவர்கள் 24 பேர் ஒருவர்மாற்றி ஒருவர் என வரிசைக்கிரமமாக பூஜித்து வந்தனராம். ஒருவர் காசிக்குச் சென்றார். அவர் பூஜை செய்யவேண்டிய காலத்திற்குள் திரும்ப வரவில்லை. இதனையறிந்த சில கயவர்கள் அவரது நிலம், பயிர் வசூல் போன்றவற்றை அனுபவித்தனர்.

மனைவி, குழந்தைகள் அவதியுற்று ஐயாறப்பரிடம் வேண்டினர். சிவனுக்கு "க்ஷிப்ர ப்ரசாதி' என்னும் பெயருண்டு.

அதாவது உடனே அருளும் தயாநிதி என்று பொருள். சிவபெருமானே அந்த வேதியரின் கோலம்பூண்டு அங்குவந்தார். நித்திய ஆராதனைகள் நடந்தன. கயவர்கள் மறைந்த னர். மனைவி, குழந்தைகளின் துன்பமும் தீர்ந்தது.

சில நாட்கள் கழித்து காசிக்குச் சென்ற வேதியர் வந்தார். மனைவி, குழந்தைகள் இது என்ன விந்தை என்று வியந்தனர்.

"இப்போதுதான் காசியிலிருந்து நான் வருகிறேன்' என்றார் அவர். விசாரணை நடந்தது. இருவரும் தங்களது அடையாளங் களைக் காட்டினர். இறுதியில், இடையில் வந்தவர் போலியானவர் என்று தீர்மானித்த னர். உடனே அவரோ, ரிஷபாரூடராக பார்வதி தேவியுடன் காட்சிதந்தார்.

இங்கு நந்திகேஸ்வரரை மனைவியுடன் காணலாம். வேறு தலங்களில் உள்ளதாகத் தெரியவில்லை. மேலும் சோமாஸ்கந்தர் சந்நிதி, சட்டநாதர் சந்நிதி, முக்தி மண்டபம், பஞ்சபூத லிங்கங்கள், சப்தமாதர்கள் ஆகியோரை இங்கு காணலாம். நவகிரங்கள் சூரியனைப் பார்த்தபடி உள்ளனர்.

ஜப்பேசன் மண்டபம் தட்சிணாமூர்த்திக்கு நேராக உள்ளது. இங்கு ஒருமுறை பஞ்சாட்சரம் ஜெபித்தால் 50 லட்ச ஜெபங்களுக்கு சமம் என்கின்றனர். இங்கு இந்திரன் ஜெபம் செய்ய, அசுரர்களுடன் போர்புரியும் ஆற்றலை சப்த மாதர்கள்மூலம் சிவபெருமான் இந்திரனுக்கு வழங்கினா ராம். ஆக, சப்த மாதர்களைப் பிரதிஷ்டை செய்தது இந்திரனே.

மகாவிஷ்ணு இங்கு ஜெபம் செய்து, பின்னர் சிவபெருமானிடமிருந்து சக்கராயுதம் பெற்று ஜலந்தராசுரனை அழித்தார். விஷ்ணு, பஞ்சாக்ஷர சஹஸ்ரநாமம் இயற்றினார் என்பர். வில்லேந்திய முருகனை இங்கு காணலாம்.

மூலவர் சுயம்புமூர்த்தி- மண் லிங்கம் என்பதால் ஆவுடையாருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. கர்ப்பகிரகத்தை பிராகார வலம்வர இயலாது. சிவனுடைய ஜடாமுடி பரவியுள்ளதாம். கோவிலில் அம்பாள் விஷ்ணு ரூபிணியாக- சங்கு, சக்கரத் துடன் காணப்படுகிறாள். இதுவும் வித்தியாசமானது.

மற்ற ஆறு தலங்கள் திருப்பழனம்: நந்தீஸ்வரர் திருமணம் நடந்த இடம். சிவன்- ஆபத்சகாயநாதர்;

அம்பாள்- பெரியநாயகி. திருச்சோற்றுத்துறை: சிவன்- தொலையா செல்வநாதர்;

அம்பாள்- ஒப்பிலா அம்மை. அன்னபூரணி- போதவனேஸ்வரர். திருவேதிக்குடி: சிவன்- வேதபுரீஸ்வரர்; அம்பாள்- மங்கையர்க்கரசி. திருக்கண்டியூர்: சிவன்- வீரட்டேஸ்வரர்; அம்பாள்- மங்களநாயகி. திருப்பூந்துருத்தி: சிவன்- புஷ்பவன நாதர்; அம்பாள்- சௌந்தராம்பிகை. திருநெய்த்தானம்: சிவன்- நெய்யாறப்பர்; அம்பாள்- பாலாம்பிகை.

சப்தஸ்தான உற்சவம் காண்போம்; சிவனருளில் திளைப்போம்.