ஊழ்வினையால் மனிதர்கள் பலர் இன்று பல துன்பங்களால் உழல்கின்றனர். அதில் மிகவும் கொடுமையானது, மாந்தீரிகத் தால் ஏற்படும் செய்வினை போன்ற கோளாறுகள். இவற்றினால் பலர் பல சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்துவருகின்றனர்.
அத்துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி? என்று கேட்பவர்களுக்கு அரு மருந்தாக திகழ்கிறது நெரூர். இங்கு குடி கொள்ளும் குமரனை வழிபட செய்வினைக் கோளாறுகள் நீங்கு வதாக நம்பப்படுகின்றது.
ஆறுமுகப்பெருமான் சூர பத்மனைக் கொன்ற பாவம், பிரம்ம ஹத்தி தோஷமாகச் சூழ்ந்தது. இதனால் தேவர் உலகை அடைய முடியாமல் போனது.
வழிபடுவோர் யாராகினும் விமோசனம் தந்தருளுபவர் விஸ் வேஸ்வரரே. கந்தனும் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி நீங்கிட, முதலில் திருமுருகன் பூண்டியில் தனது சக்திவேலால் தீர்த்தம் உண்டாக்கி, லிங்கம் ஸ்தாபித்து பரமனை மனங்குளிர பூஜிக்கின்றார்.
ஆயினும், விட்டு விலகவில்லை பிரம்மஹத்தி தோஷம்.
நாரதரின் ஆலோசனைப்படி, கொடுவினைத்தீர கொடுமுடி நாடினார். மகுடேஸ்வரரை மலர்கள்கொண்டு மனம் ஒன்றி மகிழ்விக்கின்றார். தீரவில்லை துன்பம். மனம் வருந்தினார் மால்மருகன்.
மீண்டும் நாரதரை நாடிவந்து, நடந்ததைக் கூறினார். நாரதரின் கூற்றுப்படி மகனூர் என்னும் மோகனூருக்கு எதிர்கரையில் காவிரி நீர்கொண்டு கலசங்கள் நிறுவினார்.
பிரம்மனது துணைக்கொண்டு சிவாகம முறைப்படி சிவயாகம் நடத்தினார். அந்த யக்ஞத்தினால் குளிர்ந்த யக்ஞேஸ்வரர் தோன்றி, ஞானஸ்கந்தரின் தோஷம் போக்கி சந்தோஷம் அளித்தார்.
நெருப்பினிலிருந்து தோன்றியதால் இத்தல பெருமான் ஸ்ரீ அக்னீஸ்வரர் என்று அழைக்கப்பெற்றார்.
யக்ஞம் வளர்த்த இடமாத லால் நெருப்பூர் என்றானது இத்தலம். அது மருவி நெருவூர் ஆகி, தற்போது நெரூர் என்று வழங்கப் படுகிறது.
இவ்வாலயத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத் தால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந் திரரது ஜீவசமாதி அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் முக்கிய இடமாக திகழ்கிறது இந்த அதிர்ஷ்டாணம். சதாசிவ பிரம்மேந்திரர் இத்தல அக்னீசப் பெருமானை வழிபட்டு, அவரது அனுமதிபெற்ற பின்னரே இங்கு ஜீவசமாதி அடைந்ததாக அவரது வரலாறு எடுத்துரைக்கின்றது.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத்தலங்களுள் ஒன்றாகத் திகழும் இவ் வாலயத்தை விஜயாலய சோழனது பேரனான முதலாம் பராந்தக சோழன் கற்றளியாக (கல் கோவிலாக) அமைத்துள்ளான்.
ஆலயம் காவிரி ஆற்றங்கரையில் இல்லாமல் சற்று உட்புறமாக ஊரின் வடபகுதியில் அமைந்துள்ளது. ஆலயத்தை ஒட்டி காவிரியில் இருந்து பிரிந்து ஓடும் ஓடை ஒன்று உள்ளது. 1,200 வருடங்கள் பழமைவாய்ந்த ஆலயம் முற்றிலுமாக சிதைந்த காரணத்தால், பழைய இறை சிற்பங்களைக் கொண்டு புதிய கருங்கல் ஆலய திருப்பணி நடந்துவருகின்றன. கோபுரங்கள் முதற்கொண்டு அனைத்தும் கருங்கல்லால் உருவாக்கப்படுகின்றன.
முதலில் கிழக்குமுக சந்நிதியில் அருள் பாலிக்கின்றார் ஸ்வாமி ஸ்ரீ அக்னீஸ்வரர். சுயம்பு மூர்த்தம் என்பதற்குச் சான்றாக லிங்கத்தில் ஒழுங்கான உருவ அமைப்பினை காணமுடியவில்லை. அந்த அளவிற்கு இந்த லிங்கத் திருமேனியில் பழமையும், விசித்திரமும் நிறைந்துள்ளது. ஸ்வாமி சந்நிதிக்கு இடப்புறம் ஸ்ரீ ஷண்முகரின் தனிச் சந்நிதி அமைந்துள்ளது.
கருவறையுள் கருணை வடிவான வடிவேலன் ஆறுமுகங்களும், பன்னிரு கரங்களும்கொண்டு, சாந்த ரூபியாக திருக் காட்சி தந்தருளுகின்றார். அருள் ததும்பும் திருருமுகம். மனம் குளிரும் தரிசனம்.
ஆறுமுகப் பெரு மான் இங்கு அப்பன் ஈசனுக்கும், அம்மை ஊமைக்கும் நடுவில் வீற்றெழுந்து சோமாஸ் கந்த தரிசனத்தை அருளிக்கொண்டிருக் கின்றார். சூரனைக் கொன்ற பாவம் தீர கந்தன் இங்கு ஈசனை பூஜைக்கும் சமயம் அவ ருக்கு திருமணம் ஆக வில்லை. அதன்காரண மாக இங்கு வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய தேவியர்கள் இல்லாமல் தனித்து தரிசனம் தருகின்றார்.
கந்தனுக்கு இடப்புறமாக அடுத்த சந்நிதியில் இரு கரங்களுடன் திருவருள் பொழிகின்றாள் அன்னை ஸ்ரீ சௌந்தரநாயகி. பெயருக்கு ஏற்றார்போல் அழகில் குறைவின்றி, புன் முறுவல் பூத்தவளாய், நம்மை வரவேற்று அருள் புரிகின்றாள்.
மிகவும் அற்புதமான கலை படைப்பு களாகத் திகழும் இவ்வாலய கோஷ்ட தெய்வங்கள் பாலாலயம் செய்யப்பட்டு, தனியாக பாதுகாக்கப் பட்டுள்ளனர். இவ்வாலய தட்சிணாமூர்த்தி, ஆதி சாஸ்தா மற்றும் ஸ்ரீ கால பைரவர் ஆகிய சிற்பங் களை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். அவ்வளவு அழகான படைப்புகள். இத்தலத்தின் தீர்த்தமாக காவிரியும், தல விருட்ச மாக வில்வமும் திகழ்கின்றன.
பல வருடங்களாக இவ்வாலய கருங்கல் திருப்பணி நடைபெற்று வருவதால், பெருவிழாக் கள் ஏதும் நடைபெற வில்லை. இருப்பினும், வருடாவருடம் ஆடி மாதத்தில் தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களால் நடத்தப்படும் நாத உற்சவம் வெகுசிறப்பாக நடைபெறுகின்றது.
ஒருவரது ஜாதகத்தில் காணப்படும் சனி - குரு சேர்க்கை மற்றும் பார்வையினால் ஏற்படும் பிரம்மஹத்தி தோஷம் இத்தல வழிபாட்டால் நீங்கும் என்பது உறுதி. அதோடு, தீராத வியாதிகள் நீங்கவும், திருமணத்தடை, குழந்தையின்மை மற்றும் வியாபாரத்தடை ஆகியன நீங்கவும் இங்கு முருகனுக்கு அபிஷேகம், அர்ச்சனைசெய்து பலனடைகின்றனர் பக்தர்கள். செய்வினைக் கோளாறு மற்றும் துஷ்ட சக்திகளால் ஏற்படும் தொல்லைகளும் இத்தல வழிபாட்டால் நீங்குகிறது என்கின்றனர் கந்தனது அடியார்கள்.
கரூர் மாவட்டத்திலுள்ள இந்த ஊர் கரூர்- திருமுக்கூடலூர் சாலையில் தனியாக நெரூருக்கு சாலை பிரிந்து செல்கிறது. கரூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நெரூர்.