ஒவ்வொரு வருடமும், சூரிய பகவான் மகர ராசிக்குள் பிரவேசிப்பதை, தை மாதம் என்றும், அன்றைய தினத்தை தை பொங்கல் என்றும் கொண்டாடுகிறோம். இது சூரியனைக் குறித்து கொண்டாடி வணங்குவது ஆகும். புதுப்பானையில் பொங்கலிட்டு, காய்கறி, பூ, பழம், கரும்பு இவற்றை படைத்து, சூரியனுக்கு தீபம் காட்டி வணங்குவது நமது மரபாகும். இது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவரின் அருளை வேண்டும் வகையிலும் இந்த வழிபாட்டை செய்கிறோம். இதனால் விளைச்சல் செழிப்பாவதோடு, நமது ஆரோக்கியமும், குடும்பமும் செம்மை அடையும்.
மாட்டுப் பொங்கல்
அடுத்தது மாட்டுப் பொங்கல். மாட்டுப் பண்ணை அல்லது நிறைய மாடோ, ஒன்று, இரண்டு மாடு வைத்திருப்பவர்களும், அன்றைக்கு மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் மஞ்சள் பூசி, உடம்பிலும் மஞ்சள், குங்குமம் இட்டு, தொழுவத்தில், பொங்கல் வைத்து, சூரியனுக்கும் மாடுகளுக்கும் தூப தீப ஆராதனை செய்வர். பின் எல்லா மாடுகளையும் கொஞ்ச தூரம் ஓடவிடுவது ஒரு சாஸ்திரமாகும். இதனால் மாடுகள் பெருக்கமும், பால் செழுமையும், மாடுகள் ஆரோக்கியமுமாக இருக்கும். மாடு வளர்க்காதவர்களும், மாடுகளுக்கு பழம் கொடுக்கவேண்டும்.
காணும் பொங்கல்
இது வருடம் முழுவதும் உழைத்து களைத்த மக்கள், சற்றே விட்டேத்தியாக நாலு இடம் சென்று பார்க்கிறார்கள். அப்படி போகும்போது, உறவுக்காரர்களை யும் சேர்த்துக்கொண்டு செல்கிறார். இப்படி சொந்த பந்தங்களுடன் இணைந்து பயணிக் கும்போது நிறைய நன்மைகள் உண்டாகும். சிறு சண்டைகள் சரியாகிவிடும். முக்கியமான விஷயம், அவரவர் வீட்டுப்பெண், பிள்ளைகள் பற்றிய பேச்சு ஆரம்பித்து, பின்னர் அது திருமணத்தில் பூர்த்தியாகும் வாய்ப்பும் உண்டு. நமது முன்னோர்கள் எதை செய்தாலும், அதில் ஒரு பயனும், பலனும் கண்டிப்பாக இருக்கும். காணும் பொங்கலன்று வீட்டுப் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது அவசியம்.
சிறு வீட்டுப் பொங்கல்
இது ஒவ்வொரு வருட தை மாதம் பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படும். இது முழுக்க, முழுக்க சிறுவர்- சிறுமிகளுக்கான பண்டிகை. வீட்டு முற்றத்தில், களி மண்ணால் சிறு வீடு கட்டுவர். சிலர் காவியைக் கரைத்து வீடு மாதிரி கட்டம் போட்டுவிடுவர். அதில் நடுவில் இலைபோட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து, பூ போட்டு வைத்துவிடுவர். சிறு அடுப்பில், சிறு பானையில், சிறுமிகளாக சேர்ந்து பொங்கல் வைத்து முடிப்பர். இது பெரியவர்களின் கண்காணிப்பில் நடக்கும். பின் பொங்கலை, பிள்ளையாருக்கு பூஜை செய்வர். அதன்பின் ஒரு தாம்பளம் அல்லது முறத்தில், மார்கழி மாதம் பூ வைத்த சாணி உருண்டைகளை பரப்பிவைத்து, அதன்மேல் இலை போட்டு, பொங்கல், கரும்பு துண்டு, பழம் இவற்றை வைத்து, பக்கத்திலுள்ள வாய்க்கால், ஆறு குளத்திற்கு எடுத்துச் செல்வர். அங்கு வெற்றிலையில் கற்பூரம் வைத்து, ஏற்றி, அதனை தண்ணீரில் விடுவர்.
பின் கொண்டு சென்ற பொங்கல் காய்ந்த பூச்சாணி உருண்டைகள் என இவற்றை தண்ணீரில் விட்டுவிட்டு விடுவர். இது முழுக்கவே சிறுமிகளுக்கு ஆனது. சிறுவர்கள் துணை நிற்பர்.
இவ்வாறு செய்வதால், சிறுமிகள் நல்ல நாளில் பூப்பெய்துவர். நல்ல மண வாழ்வு கிடைக்கும். குழந்தை பிறப்பும் சிக்கலின்றி, தாமதமின்றி கிடைக்கும். மீன்களுக்கு சாண உருண்டையும், பொங்கலும், பழமும் போடும் போது, அங்கு ஒரு பரிகார பூஜை நடக்கிறது என்றே அர்த்தமாகும். சிறுமிகளுக்கு ஏதேனும் தோஷம் இருந்தாலும், அது, இந்தப் பரிகாரத் தால் அடிபட்டுவிடும். எவ்வளவு இயல்பாக, எளிதாக பரிகாரம் பண்ணி இருக்கிறார்கள் பாருங்கள். ரொம்ப வியப்பாக உள்ளது.
இப்போதும், நிறைய பேர், அடுக்கு மாடி கட்டடங்களில் வசிக்கிறீர்கள். தை பூசமன்று, சிறுமிகளையும் சிறுவர்களையும் அழைத்து, இந்தமாதிரி சிறு வீட்டு பொங்கலை கொண்டாடும் வழக்கத்தை ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்கு பொங்கல் கொண்டாடுவதில் ஒரு பிடிப்பும், ஈடுபாடும் ஏற்படும். மேலும் பிறருடன் இணைந்து செயல்பட ஒரு வாழ்க்கை மாதிரி கிடைக்கும். எல்லாவற்றையும்விட, வீட்டு வேலை செய்வது எப்படி எனும் பால பாடத்தை அவர்கள் படிக்கலாம்.
சிறு வீட்டுப் பொங்கலை கொண்டாடு வதால், சிறுமிகளின் ஜாதக தோஷம் சற்றே நீங்க வாய்ப்புள்ளது. பூசாண உருண்டை இல்லா விட்டாலும், பொங்கல் கரும்பு, பழம் இவற்றை அருகிலுள்ள கோவில் குளத்திலாவது போட்டு வணங்கிவாருங்கள். குழந்தைகளின் ஆரோக்கியம் நல்லபடியாகி, கல்வியிலும் மேன்மை பெறுவர்.
11-2-2025 அன்று தைப்பூசம் வருகிறது.
அன்று சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடி மகிழுங்கள்.