இன்று முன்னூர் என்று போற்றப்படும் இந்த சிறப்பு வாய்ந்த திருத்தலம், முன்னூற்று மங்களம் என்றும், மூதூர் என்றும், வேத, புராண காலங்களில் வழங்கியதாக சான்றுகளும் கல்வெட்டுகளும் உள்ளது. ஆனந்தமும் அக வாழ்வின் அளப்பரிய ஆற்றலையும் அள்ளி வழங்கும் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருத்தலம் இந்த புண்ணிய பூமியில்தான் பூத்துள்ளது.
உயிர்களின் தோற்றங்கள் எந்தநிலையில் அமையப் பெற்றாலும், அதாவது அசுரன், மனிதன், தேவர்கள் என்ற நிலையில் தேவர்களே ஆனாலும் தலைக்கனமும், அகங் காரமும், தன்னை அழிக்கும் ஆயுதங்கள் ஆகி விடும். இதனை அறியாத தேவகுரு, வேதங்களில் தானே கரை கண்டவன் தனக்கு நிகரானவன் எவனும் இல்லை என்ற கரை கடந்த கர்வத்தில் திளைத்திருந்தார். அந்த சமயத்தில் பொன்னவனான குரு களையிழந்து ஆன்ம பலம் இழந்து ஒலியையும் இழந்து கற்ற வித்தை சாஸ்திரம் யாவையும் இழக்க நேர்ந்தது.
தன்னிலை கண்டு செய்வதறியாது அனல் தகிப்பில் ஆட்பட்ட குருபகவான் இருப்பு நிலையினை அகிலத்தை சிருஷ்டிக்கும் பிரம்ம தேவனிடம் கூறினார். இந்த இழ்நிலைக்கான உபாயத்தையும் கேட்டார்.
நவகிரகங்களின் மிகப்பெரிய சுப கிரகமாக போற்றப் படும் குருவின் நிலை கண்டு நான்முகன் வருந்தி பூவுலகின் கயிலை என்றும் தென்திருகைலாயம் என்றும் அனுஷ்டிக்கப்பட்ட முன்னூற்று மங்களம் என்ற திருத்தலத்தில், அகிலத்திற்கே அன்னையான பார்வதிதேவியுடன் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் பெருமானை சரணடைந்து தவம் ஏற்றுமாறு குரு பகவானுக்கு பிரம்மதேவன் உபாயம் கூறினார்.
அறிவுரையை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றி தன் இழிநிலையை மாற்றி அமைக்க முடிவெடுத்தார் குருபகவான்.
இத்திருத்தலத்தில் அமையப்பெற்ற பிரம்ம தீர்த்தத் தில் நீராடி பொன்னவன் தனது பழைய பொன்மேனி யும் ஞானம் வேத சாஸ்திர நுணுக்கமும், திரும்ப பெற்றதாக கூறுகின்றது தல வரலாறு.
பல இன்னல்களைக் களையும் குரு பகவானே சாபவிமோசனம் பெற்ற திருத்தலம் என்பதனால், ஜோதிடத்தில் ஆறாம் பாவகமான ருண, ரோன, சத்ரு ஸ்தானமும், எட்டாம் பாவகமான ஆயுள், கண்டம் ஆகியவற்றைக் குறிக்கும் எட்டாம் பாவகமும், பலம் குறைந்த நபர்களும், அதீத வலுப்பெற்ற நபர்களும், இந்த ஆலயத்தினை அணுகும்பொழுது இவை சார்ந்த நெருடல்கள் நீக்கப்படுகின்றது என்பது புலனாகின்றது.
சனகாதி முனிவர்களுக்கு திருக்காச்சி பிரம்மனின் புதல்வர்களான சனகாதி முனிவர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் ஆகிய நால்வரும் திருக் கயிலாயத்திற்கு சென்று விடையேறி வீற்றிருக்கும் ஈசன் அருள் பெற எண்ணி முடிவெடுத்தனர்.
அதனால் லோக மாதா அன்னை பராசக்தியை சேவித்து, நந்தி பெருமானிடமும் அனுமதிபெற்று பரமனை தரிசிக்க சென்றனர்.
இறையின் பாதம் பணிந்த சனகாதி முனிவர்களின் நிலையானது மாலை நேர தாமரையாய் மொட்டு அவிழாமல் நிலம் நோக்கி சரிந்து இருந்தது. அதன் காரணத்தை அவர்களின் திருமொழியின் மூலமே உரைக்க கூறினார் உலகாலும் பரமன். சனகாதி முனிவர்கள் வாய் மலர்ந்து நாங்கள் கற்ற கல்வியும், வேதமும் எங்களுக்கு விளங்கவில்லை. விடையேறும் எங்கள் நாயக என முறையிட்டதோடு வேதத்தின் நாயகனான தாங்கள்தான் இதை எங்களுக்கு உணர்த்த முடியும் என்று கூறினார்கள்.
இதை ஏற்ற உலக நாயகன் பரமன் மௌனநிலையில் தென்திசை நோக்கி திருவாகவும் குருவாகவும், அமர்ந்த கோலமே தட்சிணாமூர்த்தி கோலமாகும். அதே தென்புலம் நோக்கி திருமேனி அமர்ந்து உலக மக்களுக்கு குருவாக காட்சியளிக்கின்றது இந்த முன்னூர் திருத்தம்.
தென்புலம் நோக்கிய சிவன் எங்கெல்லாம் வீற்றிருக்கின்றாரோ அங்கெல்லாம் பிர பஞ்சத்தின் குருவாகிய பேரொளி பெரும் கருணை யாகிய, அறிவின் விருட்ச மாகிய தட்சிணாமூர்த்தி யின் நிலையும் கலந்தே பயணப்படும் என்பதே திண்ணம். மேலும் ஜோதிடத் தின் தென்புலம் என்பது கர்மாவை அளிக்கக்கூடிய கர்மகாரகன் சனிபகவானின் திக்காகும்.
சனிக்கு ஒதுக்கக்கூடிய திகில் ஆடல் அரசன் சிவன் வந்து அமரும்பொழுது, ஒரு மனிதனின் கர்மத்தில் ஏற்படக்கூடிய ஒட்டுமொத்த மாற்றங்களையும், அல்லது அவனின் கர்ம காரியங்களால் நிகழக்கூடிய விளைவு கள் அனைத்தையும், போக்கி அவனின் கருமத்தில் இருந்து விடுதலை கொடுக்கக்கூடிய இடம்தான் தென்திசை என்பது.
தக்ஷணம் என்ற வட மொழி சொல்லுக்கு தென்திசை என்று பொருள்.
இந்த தென்திசையின் நாயகன் சனி பகவான் ஆவார், அதனால்தான் ஜோதிடத்தில் மகரத்திற்கு தெற்கு திசையும் கும்பத்திற்கு மேற்கு திசையும் நம் முன்னோர்களால் பகுத்தறிக்கப்பட்டுள்ளது.
அந்த அற்புத சூட்சமமே இந்த ஆலயத்தின் கருவறை நாயகன் தெற்கு நோக்கியும், ஞானத்தை நல்கும் தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கியும் அமர்ந்து அருள்பாலிக் கும் சூழ்நிலை அமையப்பெற்றுள்ளது.
அம்பிகை பார்வதியின் பிரதிஷ்டை முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருத்தலத்தில் நடந்துகொண்டிருக்கும், ஐயன் அன்னையின் பொருட்டே இத்தலத்தில் எழுந்தருளி இருப்பதாக தல வரலாறு கூறுகின்றது.
அனுதினமும் அன்னையின் ஐயனை நோக்கிய வழிபாட்டின்பொழுதும், ஈசன் மோனகோலத்திலேயே இருந்துவந்தாராம். இதை ஏற்றுக்கொள்ள சற்று மறுத்த நாயகியின் மன சஞ்சலத்தை, அண்ணனான மகாவிஷ்ணுவிடம் கூற, தங்கைமேல் அளவற்ற பற்றுக் கொண்ட அண்ணன், பூவுலகில் முன்னூற்று மங்களம் என்ற ஊரில் தவம் மேற்கொள்ளும்படி கூறினாராம்.
அதை ஏற்று அம்பிகை பிரதிஷ்டை செய்த லிங்க ரூபமே ஆடவல்லீஸ்வரர் என்று கூறுகின்றது புராணங்கள்.
அங்கு அமையப்பெற்ற ஆலய தல விருட்சம் அன்னை யின் கைகளால் பூமியில் பதிக்கப்பட்ட வன்னி மரமே என்கின்றது வரலாறு. ஆடல் அரசனுக்கு திருமஞ்சனம் செய்ய நிர்மாணித்த புனித தீர்த்தம் தற்பொழுது பிரம்ம தீர்த்தம் என்று பக்தியோடு பூஜிக்கப்படுகின்றது. இத்தனை நிகழ்வினையும் பார்த்து ரசித்த ஆடல் அரசன் முக்கண்ணன், தனது ஆனந்த தாண்டவத்தை அன்னைக்கு காட்டினார். அதே தருணத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், இத்தலத்தில் எழுந்தருளி ஸ்ரீ ஆடவல்லீஸ் வரனின் நர்த்தனத்தையும், அம்பிகையின் திரு தரிசனத் தையும் ஒருங்கே கண்டு அக மகிழ்ந்தனர். திரு தாண்டவத்தை கண்டு ஆனந்தம்கொண்ட அம்பிகை இத்தலத்திலேயே ஸ்ரீ பிரகன்நாயகி என்றும் பெரிய நாயகி என்ற திருநாமங்களோடும் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
ஏழு உலகிலும் காணக்கிடைக்காத பேரழகு அன்னையின் தரிசனம், ஆயிரம் நிலவுகளின் ஒளியில், அமிர்தத்தை ஏந்தி அன்னையின் அன்பை ஊற்றி கரம் சேர்க்கும் பேரானந்தத்தை ஒரு நொடியில் நம்வசம் சேர்க்கின்றாள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ள இந்த ஜெகன் மாதா.
இந்த ஆலயத்தில் ஸ்ரீ பிரகன்நாயகி, ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ ஈஸ்வரி என்று அன்னை முப்பரிமாண முகடுகளில் நமக்கு அருள் பாலிக்கும் இத்திருக்காட்சி வேறெந்த கோவில்களிலும் காணக் கிடைப்பதில்லை.
இந்த ஆலயத்தின் சிறப்புக்கு ஒரு சான்று. வேல் ஆகிய முன்னூர் முருகன் சோழவள நாட்டின் வடக்கு பகுதியில் எல்லையாக விளங்கியது ஓய் மாநாடு. நீர் வளமும், நில வளமும், இறையின் அருள் வளமும் பொதிந்து ஆட்சி மேற்கொண்டான் நல்லியக்கோடான் என்னும் மன்னன்.
சங்க நூல்களில் ஒன்றான பத்துப்பாட்டில் நல்லூர் நத்தனார் இயற்றிய சிறுபாணாற்றுப் படையில் பாட்டு டைத் தலைவனாக நல்லியக்கோடான் அமைந்துள்ளார்.
ஓவியர் குடியில் பிறந்த ஒரு சிறப்புமிகு சீராளன், இந்த மன்னன். கடை ஏழு வள்ளல்களின் குணம் ஒத்த மன்னன் அதி அற்புதமாக ஆட்சி நடத்திய மாபெரும் ஆட்சியாளன். நல்லியக்கோடானின்மீது பொறாமைகொண்ட தொண்டை நாட்டு மன்னன் ஓய் மாநாட்டின்மீது படை எடுத்தான். இதனை எதிர்த்து போர்புரிந்து நல்லியக்கோடான் போரில் வெற்றி பெற்றான். பின்னர் சேரனும் போர் தொடுத்து தோல்வியை தழுவினான். இறுதியாக சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் ஒன்றிணைந்து, நல்லியக்கோடானின் ஓய் மாநாட்டின்மீது போர்தொடுக்க முற்பட்டனர்.
இவர்களின் படையானது ஓய் மாநாட்டின் முப்புரமும் சூழ்ந்து நிற்க, கலக்கம் அடைந்த நல்லியக்கோடான் முன்னூரில் அமையப்பெற்ற முருகனின் ஆலயத்திற்கு சென்று தனது இருப்பு நிலையை கூறி வேண்டினான்.
நல்லியக்கோடானின் கனவில் முருகப்பெருமான் அசரீரியாக போர்க்களத்திற்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்களுடன் தண்டுடன்கூடிய தாமரை மொட்டையும் சேர்த்து கட்டி எடுத்து செல்லும்படி கூறினார்.
இதையெற்று மனம் மகிழ்ந்த நல்லியக்கோடான் அசரீரி சொன்ன விதத்திலேயே போர்க்களத்திற்கு பயணித்தான். போர்க்களத்தில் சூரியன் உதயமாகி தாமரை மொட்டுக்கள் ஒளியின்வசம் பட்டு, மொட்டு அவிழ்ந்து, உள்ளே வீற்றிருந்த வண்டுகள் எதிரியின் யானை படைகளின் காதுகளில் பயணித்து மதம் பிடிக்கச் செய்து, யானைகள் எதிரியின்வசமே திரும்பி போர் புரிய துவங்கியது. நல்லியக்கோடான் வெற்றிக்கு இந்நிலையே வழிவகுத்தது என்று கூறுகின்றன தலபுராணங்கள்.
இந்த நிகழ்வை பாம்பன் சுவாமிகள் தன்னுடைய ஸ்ரீமத் குமாரசுவாமியம் என்னும் நூலில் பெருவேல் வேண்டுகோள் பகுதியில் இடம்பெறச் செய்துள்ளார்.
குருபகவானின் இடர் தீர்த்ததால், குரு தசா புக்தி அந்தரங்கள் நடப்போவதும் குருவின் சூழ்நிலை ஜாதகத்தில் சரிவர அமையாதவர்களும், குழந்தை வரம் இல்லாதவர்களும், இந்த ஆலயத்தை நாடிசென்றால் ஆடவல்லீஸ்வரன் அருள் புரிவான்.
மேலும் அன்னையின் பொருட்டு அமையப் பெற்ற திருத்தலத்தில் ஆனந்த நடனம் காட்டிய ஐயனின் திருவிளையாடல் கணவன்- மனைவியிடையே ஏற்பட்டுள்ள சில இன்னல்களை தீர்க்கும் தலமாகவும். தெற்கு நோக்கி அமர்ந்து மௌனத்தில் சனகாதி முனிவர் களுக்கும், வேதத்தையே விளங்க வைத்த நாயகன், மனக் குழப்பத்தில் உள்ளவர்களையும், தியானத்தின் வழி அல்லது கர்மத்தின் வழி பயணிக்கும் நபர்களுக்கும், ஆக்கினை சக்கரத்தின் சுடர் பற்ற துணைபுரிவான் என்பது திண்ணம்.
இத்திருத்தலம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆலப்பாக்கம் என்னும் ஊரில் இருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ளது. ஆலப்பாக்கம் ஊரிலிருந்து ஷேர் ஆட்டோக்கள் இந்த கோவிலுக்கு அடிக்கடி செல்கின்றன.