றைவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்பித்துக் காட்டியது திருமாலின் திரு அவதாரமான ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி. நாளை என்பதில்லை நரசிம்மரிடத்தில். அப்படியான நரசிம்மர் பல திருத்தங்களில் பல வடிவங்களில் கோவில் கொண்டெழுந்து, பல அற்புதங்களைச் செய்து திருவருள் புரிந்துவருகிறார்.

அவ்வாறாக ஸ்ரீ நரசிம்மர் லட்சுமி நரசிம்மராக, சுயம்புவாக மலைமீது எழுந்தருளும் ஓர் உன்னதத் திருத்தலம்தான் போளூர் சம்பத்கிரி.

தொண்டை மண்டலத்தின் பல்குன்ற கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய போளூர், ஆதியில் புலஸ்திய மகரிஷி தவமியற்றியதால் "புலஸ்தியபுரம்' என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்நகரின் மேற்கே அமைந்துள்ள மலையே சம்பத்கிரியாகும். இம்மலையில், நரசிம்மர் குபேரனுக்கு சம்பத்துகளைக் கொடுத்தருளியதால், சம்பத்துகளை வாரிவழங்கும் சம்பத்கிரி என்னும் பெயர் உருவானது.

சம்பத் என்றால் பொருள் என்னும் அர்த்தத்தில் சம்பத்கிரிக்குக் கீழே அமைந்த ஊர், "பொருளூர்' என்றழைக்கப்பட்டு, அது மருவி தற்போது போளூர் என்றழைக்கப்படுகின்றது. சந்திரன் வழிபட்ட இத்தல ஈசனான ஸ்ரீ சோமநாதரைத் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார் அருணகிரிநாதர். முருகப்பெருமானால் உண்டான பாஹுநதி என்னும் சேயாற்றின் வடகரையில் போளூர் அமைந்துள்ளது.

Advertisment

மகிமைமிக்க சித்தர்கள் பலர் வாழ்ந்த புனிதபூமி போளூர் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள், ஹரிதாஸ் சுவாமிகள், இசைமேதை அச்சுததாசர், மகான் விக்டோபா சுவாமிகள், வெட்டவெளி சுவாமிகள் என பலர் இந்த சம்பத்கிரி நரசிம்மரை வழிபட்டுப் பாடல்கள் புனைந்துள்ளனர். ஸ்ரீ சங்கர்ஷணவுடையார், பாஹு நதிக்கரையில் அமைந்துள்ள ஊரான கரைப்பூண்டியில், சம்பத்கிரியின் நிழலில் ஜீவசமாதி யானார். சம்பத்கிரியையொட்டி மேற்குப்புறமாக சப்தரிஷி மண்டல மலையுள்ளது. இம்மலையில், சப்தரிஷிகள் தவம்புரிந்ததாக ஐதீகம்.

இம்மலையில் புலஸ்தியர் மற்றும் பௌலஸ்தியர் ஆகிய இரு மகரிஷிகள் திருமாலை நோக்கித் தவம்புரிந்துவந்தனர்.

தவத்தின் பயனாக கோவிந்தனிடமிருந்து ஒரு மாம்பழம் பிரசாதமாகக் கிடைத்தது. அதைப் பங்கிடும் போட்டியில் பௌலஸ்தியரின் இரண்டு கரங்களும் சிதைந்தன. பௌலஸ்தியர் இம்மலைக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள சேயாற்றில் (செய்யாறு) தினமும் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) நரசிம்மரை நினைத்து இம்மலையினை வலம்வந்தார். 48-ஆம் நாள் சேயாற்றில் மூழ்கியெழுந்தபோது அவரது சிதைந்த கைகள் கூடி, அவர் கரங்களில் ஸ்ரீ நரசிம்மர் விக்ரகமும் கிடைத்தது. அந்த விக்ரகத்தை ஊருக்குள் பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி சொல்லிட, அதன்படியே ஊருக்குள் பிரதிஷ்டை செய்தார்.

Advertisment

dd

பழமைவாய்ந்த இம்மலையின் உச்சியில் கல்லுடைக்கும்போது, உளிபட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக்கண்டு அஞ்சிய மக்களனைவரும் அலறியடித்து ஓடினர். அன்றே ஊரிலிருந்த ஒரு மகானுபாவர் கனவில் தோன்றிய பெருமாள், தான் இங்கு லட்சுமி நரசிம்மராக, சுயம்புவடிவில் எழுந்தருளியுள்ளதாகக் கூறி மறைந்தார். பின்னர் ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் இன்றுவரை சிறப் புடன் நடந்துவருகின்றன.

முதலில் மலைமீது சுயம்புவாக எழுந்தருளும் ஸ்ரீ நரசிம்மமூர்த்திக்கு ஹொய்சாளர்கள் ஆலயம் எழுப்பினர்.

பின்னர் விஜயநகர அரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. பின்னாளில் விஜயநகர வம்சத்தில் வந்த ஓகூர் சீனிவாசராவ் என்பவர் உற்சவர் நரசிம்மரோடு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் விக்ரகத்தையும் ஸ்தாபித்தார்.

அதோடு, பாமா, ருக்மணி உடனான ஸ்ரீ வேணு கோபால சுவாமியையும் கற்சிலையாக நிறுவி, சம்ப்ரோக்ஷணம் நடத்தினார். மலைக் கோவிலுக்கும் திருப்பணிகள் செய்தார்.

ஒருசமயம் திப்புசுல்தான் போருக்காக இங்கு தங்கியிருந்தபோது, சம்பத்கிரி மலையில் மணியோசை கேட்டு, போர்புரியாமல் மனம் மாறி, இங்கிருந்து சென்றதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

நகரின் மேற்கே நெடிதுயர்ந்த இந்த சம்பத்கிரி சுமார் 850 படிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் சிறிய திருவடிகளான ஸ்ரீ ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்துள்ளது. நான்கு ஓய்வு மண்டபங்கள் உள்ளன. இரண்டு குளிர்ந்த நீர்ச் சுனைகள் காணப்படுகின்றன. மேலே ஏற ஏற செங்குத்தான படிகள் அமைந்துள்ளன. அங்கிருந்து கீழே பார்க்கத் தலைசுற்றும். கீழே பார்க்காமல் ஏறவேண்டும். மலையுச்சியில் அரணமைப்புபோல் சுற்றிலும் மதில்கள் அமைந் துள்ளன. நடுவே தென்முகம் பார்த்த பெருமாள் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

பலிபீடம், தீபஸ்தம்பம் மற்றும் கருடாழ் வார் சந்நிதி அமைந்துள்ளன. மின்னொளியில் சங்கு, சக்கரத்துடனான திருநாமம் பிரம்மாண்ட மாக அமைக்கப்பட்டுள்ளது.

கருவறையுள் சுயம்பு வடிவில் தென்முகமாக அருணாச்சலம் என்னும் திருவண்ணாமலை யைப் பார்த்தபடி ஸ்ரீ நரசிம்மர் திருக்காட்சி யளிக்கின்றார். முன்னே ஸ்ரீ லட்சுமி தேவியுடன் நரசிம்மமூர்த்தி சிலாரூபமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளார். வலப்புறம் கனகவல்லித் தாயாருக் கும் தனியே சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. மலைமீது பிரம்ம தீர்த்தமும், கீழே புலஸ்திய தீர்த்தமும் அமைந்துள்ளன. பாஹுநதி என்னும் செய்யாறு இத்தலத்தின் தீர்த்தமாகும்.

இந்த மலைத்தல தரிசனத்தில் ரம்யமான இறையனுபவத்தோடு இயற்கையின் இன்பமும் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

சுவாதி, மாதப் பிறப்பு, ஏகாதசி, திரு வோணம், புனர்பூசம், ரோகிணி, பஞ்சமி திதி, சப்தமி திதி ஆகிய நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு மலைக்கோவிலில் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. சித்திரை வருடப்பிறப்பில் படிவிழா, வைகாசி 10-ஆம் நாள் பிரம்மோற்ச வம், ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தனுர் (மார்கழி) மாத பூஜைகள், வைகுண்ட ஏகாதசி போன்றவையோடு, கீழேயுள்ள வேணுகோபாலர் ஆலயத்திலும் அனேக வைஷ்ணவ விசேஷகங் கள் சிறப்புற நடைபெறுகின்றன.

வருடத்தின் முக்கிய விசேஷமாக, சித்ரா பௌர்ணமியன்று கீழ்க்கோவிலிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ நரசிம்மமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள கரைப் பூண்டிக்குச் சென்று பெருமாள் தீர்த்தம் கொடுக்கும் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

திருமணவரம், புத்திரப்பேறு, அரசு வேலை, கடன் நிவர்த்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமானுஷ்ய- மாந்திரீகத் தொல்லை களிலிருந்து விடுபட, பிரதிமாதம் பிரதோஷத் தன்று சம்பத்திரி ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கும், ஊரிலுள்ள பாமா- ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி மற்றும் உற்சவர் நரசிம்மருக் கும் திருமஞ்சனம் செய்து, துளசிமாலை சாற்றி, பானகம் மற்றும் வெல்லத்தினாலான பட்சணங் களை நிவேதனம் செய்து, கிரிவலம்வந்து வழிபட்டு, உரிய பலனைப் பெற்றிடலாம்.

வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் நடந்திடும் இங்கு தினமும் கீழ்க்கோவில் நரசிம்ம ருக்கு நிவேதிக்கும் பானகத்தை பிரசாதமாகப் பருகிட, எல்லாவித ரோகங்களிலிருந்தும் விடுபடலாம்.

பிரதி சனிக்கிழமைகளில் அதிகாலை 4:30 மணிமுதல் 6,00 மணிவரை மட்டுமே மலைக் கோவில் திறந்திருக்கும். அச்சமயம் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஊரிலுள்ள ஸ்ரீ வேணுகோபாலர் ஆலயம் தினமும் காலை 6:00 மணிமுதல் 8:30 மணிவரையும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் திறந் திருக்கும். சம்பத்கிரியைக் கண்டு வணங்கி, சகல செல்வங்களையும் பெற்றிடுவோம்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கில் அமைந்துள்ளது சம்பத்கிரி.