ங்கையைவிடவும் புனிதம்மிக்க "பொன்னி' என்று போற்றப்படும் காவிரி நதியின் கரையினில் வளம்மிகுந்த ஊர் களோடு, பல அற்புதங்கள் நடந்த மகிமை மிக்க திருத்தலங்களும் ஏராளம் உண்டு.

அவற்றுள் ஓர் உன்னதத் திருத்தலமாகப் போற்றப்படுகிறது மோகனூர். கொங்கு வளநாட்டில் அமைந்த இந்தத் திருத்தலம் சைவ- வைணவப் பெருமைகளை இன்றும் பரப்பிவருகிறது. இங்கே காவிரிக்கரையை ஒட்டி அசலதீபேஸ்வரர் திருக்கோவிலும், சற்று உட்புறமாக அதே வீதியில் கல்யாண பிரசன்ன வெங்கடரமணப் பெருமாள் ஆலயமும் அமையப்பெற்றுள்ளது சிறப்பு. மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் காவிரி நதி, மோகனூரில் பகவானது திருவருளால் வடக் கிலிருந்து தெற்குநோக்கி ஓடுகிறது. இவ்வாறு தடம்மாறிப் பாயும் காவிரியின் அழகினைத் தனது மோகனப் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருக்கிறார் பிரசன்ன வெங்கடரமணர்.

ஆதியில் வில்வ மரங்கள் சூழ்ந்திருந்ததால் இத்தலம் "வில்வாரண்ய க்ஷேத்திரம்' என்று அழைக்கப்பெற்றுள்ளது. இங்கே காவிரி அன்னையும், பிரம்மதேவரும் நெல்லிமரமாக இருந்து, இத்தலத்தினில் எழுந்தருளும் ஸ்ரீஹரிக்குக் குடையாக நின்று வணங்கி நிழல் தந்துள்ளனர். மேலும், இங்கு குடிகொண்டருளும் தனது தங்கையின் மணாளரான சிவபெருமானுக்கு மோஹன அவதார தரிசனத்தைக் காட்டியுள்ளார் கரிவரதர். இதனால் மோகனபுரி என்றும் மகனூர் என்றும், வழங்கப்பட்ட இப்பதி தற்போது மோகனூர் ஆகியுள்ளது.

sas

பக்தருக்காக பிரசன்னம் முன்னொரு காலத்தில் இம் மோகனூரில், திருவேங்கடவன்மீது தீராத பக்திகொண்ட பரமபக்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். வருடாவருடம் திருமலை திருப்பதியில் கோலாகலமாய் நடக்கும் பிரம்மோற்சவத் திருவிழாவில் கலந்துகொண்டு, ஏழுமலைவாசனது எழில்மிகு தரிசனத்தைக் கண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதைத் தனது ஆயுள் முழுவதும் செய்யவேண்டு மென உறுதி பூண்டிருந்தார்.

காலங்கள் ஓடியது. வயது முதிர்ந் தது. உடன் வாதநோயும் தொற்றிக் கொண்டது. வீட்டுக்குள் நடப்பதே வெறுங்கதையானது. பின் எப்படி திருமலைக்குச் செல்வது? மனம் வாடினார். குழந்தையைப்போல் அழத் தொடங்கினார். ஸ்ரீனிவாசனது திவ்வியக் காட்சிகளைக் கண்முன் நிறுத்தி வேதனையடைந்தார்.

Advertisment

இனியும் தான் வாழ்வதில் பயனில்லை என்று நினைத்து, காவிரியில் தன் உயிரைவிடத் துணிந்தார். மெல்ல மெல்ல நகர்ந்து, கரை புரண்டோடும் காவிரியில் விழும் சமயம், மிகப்பெரிய நாகம் ஒன்று தோன்றியது. சீற்றமெடுத்து, அந்த பக்தரை அவர் வீடுவரை நகர்த்தியது. அவர் வீட்டிற்குள் புகுந்தவுடன் மறைந்தது. அவரும் அசதியில் தூங்கிவிட்டார்.

இரவும் கடந்துபோனது. விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில் அவர் கனவில் தோன்றினார் திருமலையப்பன். "பக்தனே! திருமலைக்கு நீ வரமுடியாமல் போனதால் நானே உன்னைத்தேடி இங்கு வந்துவிட்டேன். அருகிலுள்ள புற்றினுள் நான் இருக்கிறேன். உனக்குப் பிரசன்னமாகக் காத்திருக்கிறேன். என்னை தரிசித்து மனநிம்மதி அடைவாய்' என்று அருள் மொழிந்தார் அண்ணன்பெருமாள்.

உடனே கண் விழித்த அவர் நடந்ததை ஊர்ப் பெரியவர்களிடம் கூற, பாம்புப் புற்றின் அருகில் சென்று பார்த்தனர். அங்கே தேவாதி தேவர்களுக்கும், மகரிஷிகளுக் கும்கூட காணக் கிடைக்காத மூர்த்தியாக, ஸ்ரீதேவி, பூதேவியுடன் புற்றிலிருந்து வெளிப்பட்டார் புருஷோத்தமன்.

Advertisment

புற்றிலிருந்து பிரசன்னமானதாலும், கல்யாணக் கோலத்தில் சேவை சாதித்ததாலும் அன்றிலிருந்து இப்பெருமாள் ஸ்ரீ கல்யாண பிரசன்ன வெங்கடரமணப் பெருமாள் என்று பக்தர்களால் போற்றப்பட்டார். அதுமுதல் தன்னை நாடிவரும் பக்தர்களது மனக்குறைகளைப் போக்கி மகிமை பல புரிந்து வருகிறார். இன்றும் இவரது திருச்சந்நிதியில் தானாகவே உருவாகும் புற்றுமண் நோய் தீர்க்கும் மருந்தாக, அன்பர்களுக்குப் பிரசாத மாக வழங்கப்படுகிறது.

கோவில்

கிழக்கு நோக்கிய மூன்றுநிலை ராஜகோபுரம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே மூடுதள அமைப்புடன் ஒரே திருச்சுற்று கொண்டு திகழ்கிறது ஆலயம். நேராக... பலிபீடம் மற்றும் துவஜஸ்தம்பம்.

அதன்பின்னே கருடனது தரிசனம். இரண்டாம் வாயிலுள் நுழைந்தால் சிறிய எட்டுக்கால் மண்டபம். இங்கே வடப்புறமாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவத் திருமேனி யராக அருள்பாலிக்கின்றார் பிரசன்ன வெங்கடேசர்.

பின் மூன்றாம் வாயில். இது கருவறையின் வாயிலாகும். கருவறையில் கருணை முகத்துடன், தனது தேவியர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் சங்கு சக்கரதாரியாக சேவை சாதித்தருள்கிறார் கல்யாண பிரசன்ன வெங்கடரமணப் பெருமாள். உச்சிமுதல் பாதம்வரை அழகின் ஜொலிப்பு. இன்றெல் லாம் இப்பெருமாளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

இவரது கீழ் இடக்கரம் இடுப்பில் மடித்திருக்க, வலக்கரமோ "என் பாதங்களை சரணடையுங்கள்; நல்வரங்கள் எல்லாம் கிட்டும்' என்பதுபோல் அபயக்கரமாக அருள் மழை பொழிகிறது. இவரது கருணைப் புன்னகை, திருமலை தரிசனத்தைத் திறம்பட நினைவுகூர்கிறது. அளவில்லாத அழகில் மயங்கி, ஆலய வலம்கூட மறந்துபோகிறது.

பெருமாளை வணங்கிய பின்னர் ஆலய வலம்வருகிறோம். கோஷ்ட மாடங்களில் முறையே சிந்தாமணி கணபதி, லட்சுமி ஹயக்ரீவர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி வராகர், விஷ்ணு துர்க்கை அலங்கரிக்கின் றனர்.

தென் பிராகாரத்தில் ருக்மணி, சத்தியபாமாவுடன் நவநீத கிருஷ்ணர் அருள்கிறார். அருகே சுதர்சன சக்கரத் தாழ்வார் அருள்பாலிக்கிறார். பத்மாவதி தாயார் தனியே சந்நிதிகொண்டு தாமரை பீடத்தின்மீது தயைபுரிகிறாள்.

மேற்கில் தன்வந்திரியும், வடக்கில குடும்ப சகிதராக இராமரும் அருட்காட்சி அளிக்கின்றனர். தலவிருட்சமான வில்வமரத்தின்கீழே பால கணபதியும், பால மாருதியும் திருவருள் பொழிகின்றனர்.

கிழக்கு பார்த்தபடி தனியாக தரிசனமளிக்கிறார் சம்மோஹனர். எம்பெருமானின் மகிமை பொருந்திய அவதாரங்களுள் ஒன்று கிருஷ்ணாவதாரம். அவரது லீலை மிகுந்த திருக்கோலங்களில் ஒன்றே சம்மோஹன கோபாலன். தனது கரங்களில் சக்கரம், சங்கு, அங்குசம், தாமரை, கரும்பு வில், புஷ்பபாணம், புல்லாங்குழல் கொண்டு, தனது உடலில் பாதியாக ருக்மணியைக் கொண்டு, அர்த்த நாரி மூர்த்தியாக திருக்காட்சியளிக்கிறார். இவருக்கு வாசனை திரவியங்களை சாற்றி (அத்தர், புனுகு, அரகஜா, ஜவ்வாது) முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து, கற்க்கண்டு, பசு வெண்ணெய் மற்றும் பழங்கள் நிவேதனம் செய்திட குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதோடு, திருமணத்தடை நீங்கும். தம்பதிகளிடையே நெருக்கும் அதிகரிக்கும்.

ராஜகோபுரத்திற்கு உட்புறமாக துவார கணபதியும், நாகராஜரும் ஸ்தாபிக்கப் பட்டுள்ளனர். அமைதியான ஆலயம் அழகால் மிளிர்கிறது.

பிரார்த்தனைகள்

பிரதி வாரம் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் துளசி மாலை அல்லது பூமாலை சாற்றி, துளசி மற்றும் மரிக்கொழுந்து ஆகியவற்றால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, கற்க்கண்டு, திராட்சை, பேரீச்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற உலர் பழங்களை நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்து, வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் படைத்து, எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் அகண்ட தீபத்தில் (கருவறையில்) பசுநெய் சேர்த்து, "ஓம் நமோ நாராயணா' என்கிற நாமத்தை உச்சரித்து வழிபட, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்குவகைப் பலன்களையும் பெறுகின்றனர் பக்தர்கள்.

அதோடு, திருமணம், குழந்தை, நல்ல கல்வி, சிறப்பான உத்தியோகம், வியாபார வளர்ச்சி போன்ற விசேடப் பலன்களையும் கூடுதலாகப் பெறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள் திருக்கல்யாண உற்சவம் செய்வதாகப் பிரார்த்தனை செய்ய, திருமணத் தடங்கல் நீங்குகிறது. குழந்தை வரம் வேண்டுவோர் டோலோற்சவம் செய்து பலன்பெறுகின்றனர்.

திருவோண நட்சத்திரத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்தால் அனைத்துவித நோய்களும் நீங்கும்.

பத்மாவதி தாயாருக்கு வெள்ளிக்கிழமை, வளர்பிறை பஞ்சமி மற்றும் உத்திர நட்சத்திரத்தில் வாசனைப் புஷ்பங்களைச் சாற்றி, தாமரையால் அர்ச்சனை செய்து, தீபத்தில் பசுநெய் சேர்த்து, கற்கண்டு கலந்த பசும்பாலை நிவேதனம் செய்து வழிபட, மிகுந்த செல்வவளம் உண்டாகும். சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் விலகி, நல்ல தாம்பத்திய சுகம் ஏற்படும்.

பிரதி மாதம் திருவோண நட்சத்திரத்தில் காலை பெருமாளுக்கு விசேஷ கலசாபிஷேகமும், ஸ்வர்ணதீப ஆராதனையும் நடக்கிறது. பின் ஐஸ்வர்ய லட்சுமியுடன் சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது. இதுபோன்று மாலையும் சத்தியநாராயண பூஜையும் தீபாராதனைகளும் நடத்தப்படுகின்றன. இந்த பூஜையில் அளிக்கப்படும் நார்த் தேங்காயைப் பெறும் பக்தர்கள், அதை வீட்டில் வைத்து தினமும் பூஜிக்கலாம். இதனால் அவர்களது துயரம் நீங்கி, சுபிட்சம் உண்டாகும் என்பது இங்கு நிலவும் நம்பிக்கையாகும்.

பிரதி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் கலந்துகொண்டு வழிபட, தீய சக்திகளால் ஏற்படும் பயம் மற்றும் தீவினைகள் அகலும்.

தன்வந்திரி பெருமாளை செவ்வாய்க் கிழமைதோறும் பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாற்றி, சுக்குப் பொடியுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து நிவேதனம் செய்து, தீபத்தில் இலுப்பை எண்ணெய் சேர்த்து, 12 முறை வலம்வந்து வழிபட நீராத நோய்கள் நீங்கும்.

கல்யாண பிரசன்ன வெங்கடரமணப் பெருமாள் தாள்பணிந்து, அனேக வரங் களைப் பெற்று அற்புதமாக வாழ்ந்திடு வோம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஓர் பேரூராகத் திகழ்கிறது மோகனூர். மோகனூர் பேருந்து நிலையத் திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள் ளது ஆலயம்.