ஆங்கிலத்தில் வரும் "It, But' (இருந்தால், ஆனால்) என்னும் இரண்டு சொற்களும் வரலாற் றில், சமூக நியமங்களில் மாபெரும் திருப்பங் களை, வீழ்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளன.
"அவர் சிறந்த அறிவாளி, நல்ல படிப்பாளி, மிகுந்த விவேகி. திரண்ட செல்வம், காடு, கழனி என்று மிகுந்த செல்வாக்கு உடையவர். சகல புருஷார்த்தங்களும் பெற்றவர். "ஆனால்' அவர் ஒரு நிரந்தர நோயாளி. அதனால் அவதிப் படுகிறார்.'
முதலில் சொன்ன அத்தனை சிறப்புக்களையும் அடித்து வீழ்த்திவிட்டது அந்த "ஆனால்' என்ற சொல் அல்லவா? அதைப்போல மற்றொன்று "இருந்தால்' என்ற பதம்.
"அவன் அகம்பாவம் உடையவனாக இல்லாமல் இருந்தால், அவனுடைய மகத்துவம் உன்னதப்பட்டு இருக்கும். அவன் தீய நட்பு இல்லாதவனாக இருந்திருந்தால் அவன் புகழ், அவன் செம்மை ஓங்கியிருக்கும்.' இப்படி "இருந்தால்', "இல்லாமல் இருந்தால்' என்ற நிபந்தனை, அடித்தள அமைப்பையே ஆட்டம் காணவைக்கும்.
இதைதான் ஆங்கிலத்தில் சற்று பெரிதாக... "It and But are always Dangerous' என்பர்.
கைகேயி மட்டும் மந்தரையின் வார்த்தையைக் கேட்காமல் இருந்தால் ராமன் வனவாசம் செல்வது நடந்திருக்காது. சூர்ப்பனகை ராமனது அழகில் லயிக்காமல் இருந்தால் இராவண வதம் ஏற்பட்டிருக்காது.
மகாபாரதத்தில் தருமன் சூதாட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால் பாண்டவர்கள் அவ்வளவு சோகங்களையும், வேதனைகளையும் அனுபவித்திருக்க வேண்டியிருக்காதே. மகாபாரதத்தில் கர்ணன் மிகச்சிறந்த பாத்திரம். நல்ல பண்புகள் கொண்டவன். மாபெரும் வீரன். நல்ல அறிஞன். மகா மேதாவி. ஆனால் துரியோதனன் என்ற துஷ்ட சகவாசம் அவனது வீழ்ச்சிக்கு வித்திட்டது.
"கிளியோபாட்ராவின் மூக்கு நீளமாக இருந்திருந்தால் கிரேக்க வரலாறே மாறியிருக் கும்' என்று "ஒற்' என்ற சொல்லின் பெருமையைப் புலப்படுத்த ஆங்கிலப் பழமொழியே உண்டு. ரைட் ஆனரபிள் ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் "It There is No India, There is no England' என்ற வாக்கியத்தை இந்திய வரலாற்றில் சொல்லியுள்ளார்.
நம் தேசத்தின் வடக்கில் இமயமலை இல்லா மல் இருந்தால் என்னென்ன உத்பாதங்கள் நிகழ்ந்திருக்கும் என்று அறிவியலார் கூறுவர்.
இலக்கியங்களில்கூட இந்த "ஆனால், இருந்தால்' சுவாரஸ்யப்படுத்தியுள்ளதை ரசனையோடு காண முடிகிறது.
இதைப்போலவே வடமொழியான சமஸ்கிருதத்தில் "ச' என்ற எழுத்தும், "ஏவ' என்ற பதமும் மிகப்பெரிய சூட்சுமமான வேதாந்த விசாரங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜகத்குரு காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள், "ச' என்ற எழுத்து, "ஏவ' என்ற பதம் பற்றி கூறிய விளக்கம் மிக ஆழமான கருத்துக்கொண்டது. சுவாரசிய மான, சிந்திக்க வைக்கும் விஷயம். அதை அனுபவிப்போம்.
இந்த சம்சார சாகரத்திலிருந்து விடுபடு வதற்கு குறுக்கு வழி இல்லையா என்று ஒரு பிரச்சினையை அவரே எழுப்பி, அதற்கு சுவாமிகளே பதிலும் கூறினார்.
"ஒன்றே ஒன்று இருக்கிறமாதிரி பகவானே சொல்லியிருக்கிறார். என்ன சொல்லியிருக்கி றார்? கீதாச்சார்யன் அருளிய கீதையின் எட் டாவது அத்தியாயத்தில், அக்ஷர பிரம்ம யோகத்தில் பகவான் சொல்கிறார்...
அந்த காலே "ச' மாமேவ ஸ்மரன்
முக்த்வா கலே வரம்/
ய: ப்ராதிஸ மத்பாவம் யாதி
நாஸ்யத்ர ஸம்சய://
ஒருவன் இறந்துபோகிற சமயத்தில் எதை நினைத்துக்கொண்டு உடலை விடுகிறானோ அதையே மறுஜென்மாவில் அடைகிறான்.
யம் யம் வாபி ஸ்மரண்
பாவம் த்யத்யந்தே கலேவரம்/
தம் தாமனவதி கௌந்தேய
ஸதாதத்பாவ பாவித://
"அந்த காலே ச'- என்னையே ஸ்மரித்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்து விடுகிறான் என்று சொல்லி
, "நாஸ்தி சுத்ர சம்சய:'- இதில் சந்தேகமே இல்லை என்று கேரண்டி கொடுத்திருக்கிறார்.
"அட, அப்படின்னா ரொம்ப சுலபமான வழியா இருக்கே. வாழ்க்கை முழுவதும் எப்படி தப்பாக நடந்தாலும் அந்திம சமயத்தில் மட்டும் பகவானை நினைத்துக்கொண்டால் போதுமாமே- அதனாலேயே இந்த ஜனன- மரண சக்கரத்திலிருந்து தப்பித்துக்கொண்டு விடமுடியும்போல' என்று தோன்றுகிறதல்லவா?
ஆமாம் அப்படித்தான் தோன்றுகிறது.
ஆனால் ஸ்ரீகிருஷ்ணன் இங்கே பொடிவைத்துப் பேசுகிறார்.
"கடைசிக்காலத்தில் என்னை நினைத்துக் கொண்டு' என்பதற்கு, "அந்த காலே மாம் ஸ்மரன்' என்று சொன்னால் போதுமில்லையா?
ஸ்ரீகிருஷ்ணன் அப்படிச் சொல்ல வில்லையே. அந்த காலே "ச' மாம் "ஏவ' என்று, ஒரு "ச'வும், "ஏவ'வும் போட்டு, அது அத்தனை சுலபமில்லையப்பா என்று ஆக்கிவிட்டார் பார்த்தீர்களா?
இந்த "ச', "ஏவ'லிவுக்கு என்ன அர்த்தம். "அந்த காலே ச' என்றால் சாகிற சமயத்திலும் என்று அர்த்தம்.
"மாம் ஏவ' என்றால் "என்னை மட்டும்' என்று அர்த்தமில்லை; "என்னை மட்டுமே' என்று அர்த்தம்.
அவரை மட்டுமே எப்போதும் ஸ்டெடியாக ஸ்மரிக்க வேண்டும். அப்போதுதான் முக்தி, மோக்ஷம். இப்போது புரிகிறதல்லவா? இந்த "ச' என்ற சொல்லுக்கும், "ஏவ' என்ற பதத்திற்கும் உள்ள விசேஷ அர்த்தம்; அழுத்தம்.''
"புலியூரானை பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே' என்றார் ஒரு அடியார். இறைவன் பற்றிய சிந்தனை எப்போதும் நம் மனதில் இருந்தால் எல்லாமே சாத்தியமாகும்.