ராம நாமத்திற்கு எவ்வளவு சிறப்புள்ளது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதேபோல் இராமர் பாதம்பட்ட இடங்களைப் புனிதமான இடங்களாகவும் நாம் வழிபட்டு வருகிறோம்.

"கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ' என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இதில் நம்மாழ்வார் இராமாயணத்தை மட்டும் படிக்கச் சொல்லவில்லை. இராமபிரானைப் பக்தியோடு கற்கவேண்டும் என்கிறார்.

hanuman

Advertisment

இந்திரஜித்துக்கும் இளைய பெருமாளாகிய இலக்குவனுக்கும் போர் நடக்கிறது. போர்க்களத்தில் இந்திரஜித் கடுமையான போர் செய்தான். சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்கிறான் இலக்குவன். ஆயினும் இந்திரஜித்தை வெல்ல முடியவில்லை.

அப்பொழுது ஒரு அர்த்த சந்திர பாணத்தை எடுத்து இராமனுடைய பெயரைச் சொல்லி பிரயோகம் செய்கின்றான் இலக்குவன். அந்த பாணமானது இந்திரஜித்தை கீழே தள்ளுகிறது. பாணத்தைப் பிரயோகிக்கும்போது அவன் என்ன சங்கல்பம் சொல்கிறான்? "வேதங்களால் தேறத்தக்கவரும், வேதத்தை உணர்ந்த பிரம்ம ஞானிகளால் வணங்கத்தக்கவருமான அந்த பரம்பொருள்தான் இராமனாக அவதாரமெடுத்து வந்திருக்கிறான் என்பது சத்தியமானால், இந்த அர்த்த சந்திர பாணமானது, இந்த அரக்கனைக் கொல்லட்டும் என்று சங்கல்பம் செய்து பிரயோகிக்கிறான். அந்த சங்கல்ப பலத்தினால் இந்திரஜித்தை வெல்கிறான்.

Advertisment

இப்படிப்பட்ட பெருமைமிக்க இராமனுக்கு ஏராளமான திருக் கோவில்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அதில் சில கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பல சரித்திர சம்பவங்களோடு தொடர்புடைய கோவில்கள். பல அற்புதமான நிகழ்வுகள் நடந்தேறிய கோவில்கள்.

அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வழியில், முட்லூர் முக்கூடல் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீராம அனுமன் திருக்கோவில். ஸ்ரீராமரும், அனுமனும் அமைந்த சந்நிதிதான் இந்த .மிக எளிமையான கோவில்.

hh

இங்கே 127 அடி உயரத்திற்கு, தியானம் செய்யும் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீராம அனுமன் கோவில் திருப்பணி நடைபெற்றுவருகிறது. பக்கத்திலேயே தனியாகப் பத்தடி உயரத்தில் நின்ற கோலத்தில் கையில் இராமரையும் சீதையை யும் ஏந்தியவண்ணம் நிற்கக்கூடிய அற்புதமான அனுமான் திருவுருவம் உண்டு.

ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் எளிய மக்கள் வந்து பஜனை பாடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஏராளமான கிராம மக்கள் இந்த திருமஞ்சனத் தில் கலந்துகொள்கிறார்கள். மிகச் சிறந்த வரப்பிரசாதி. திருமணத் தடைகள் நீங்கவும், திருமணமான தம்பதிகள் விரைவில் தங்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார்கள். அவர்கள் வேண்டுதல்களை எல்லாம் ஸ்ரீராம அனு மனும் ஸ்ரீ பட்டாபிஷேக இராமரும் நிறைவேற்றிக் கொடுப்பதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் அனுமன் ஜெயந்தியன்று ஸ்ரீ ராம நாமம் கோடிக்கணக்கில் எழுதிய சுவடிகளை, தங்கள் தலையில் வைத்துக்கொண்டு, இங்குவந்து பிரதிஷ்டை செய்வது இந்த ஆலயத்திற்குரிய ஒரு விசேஷம். தினமும் அன்னதானம் நடந்துவருகிறது.

ஸ்ரீஆஞ்சனேயருக்கு வலது பக்கத்திலே ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சிதருகிறார். இந்த பட்டாபிஷேக கோலத்தில் பல திருக் கோவில்களிலும் அவர் காட்சிதருகிறார். என்றாலும், இங்கே என்ன விசேஷம் என்று சொன்னால், பரத சத்ருக்னனும் இந்த பட்டாபிஷேகத்தில் இருப்பதாகும்.

அதைப்போலவே இராமாயண தத்துவங்களை பரப்பிய ஸ்ரீராமானுஜரின் கோலம் பார்க்கப் பார்க்க கண்களுக்கு பெருவிருந்தாக இருக்கும். முக்கோல் ஏந்தி அஞ்சலி செய்தவண்ணம் அவர் கருணை விழிகளோடு நம்மைப் பார்க்கின்ற காட்சி பரவசப்படுத்தும்.

ஒரு திருக்கோவிலுக்குள்ள பெருமை அங்குள்ள மூர்த்தி விசேஷத்தால் மட்டுமல்ல. அந்தத் திருக்கோவிலை அபிமானித்து வருகின்ற மக்கள், மக்களின் நம்பிக்கை, வழிபாடு முதலியவற்றையும் சார்ந்திருக்கிறது.

ff

சித்திரை மாதத்தில் ஸ்ரீ ராமானுஜர் திருநட்சத்திர வைபவம் கொண்டாடப்படும். ஆவணி மாதத்தில் கோகுலாஷ்டமி. கிட்டத்தட்ட 600-700 பசுமாடுகளுக்குமேல். கன்றுகளோடு கோவிலுக்கு முன்னால் வந்து நிற்கும் காட்சி மகத்தான காட்சி. சுற்று வட்டாரத்திலிருந்து பல கிராம மக்கள் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு பசுமாட்டுக்கும் தனித்தனியாக கோபூஜை நடைபெறுவது வேறெங் கும் காணமுடியாத ஒரு விசேஷம்.

புரட்டாசியில் நவராத்திரி வைபோகம், கொலுவோடு விசேஷமாக நடக்கும். மார்கழி மாதத்தில் 30 நாட்களும் காலையில் திருப்பாவை நடைபெறும்.

இங்குள்ள 12-13 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் கலந்துகொண்டு திருப்பாவையை ஓதுவார்கள். நிறைவுநாளில் அந்தப் பெண் குழந்தைகளுக்கு ஆடைகள், ஆபரணங்கள் கொடுத்து ஆண்டாளைப்போலவே நினைத்து வணங்கும் நிகழ்ச்சி அற்புதமாக இருக்கும்.

அடுத்து பிரம்மோற்சவமாக ஸ்ரீராமநவமி உற்சவம் 10 நாட்கள் நடை பெறும். இந்த ஆண்டு அந்த உற்சவம் 30-3-2023 அன்று தொடங்கி 9-4-2023 விடியற்காலை வரை நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கலைநிகழ்ச்சிகளும் விசேஷ பூஜைகளும் நடைபெறும். ஸ்ரீராமநவமி கொடி ஏற்றி துவக்கி வைக்கப்படும் இந்த விழாவில் பல அறிஞர்கள் சொற்பொழிவாற்றுவார்கள். பட்டிமன்றங்கள் நடைபெறும். இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அதோடு முக்கியமாக கிராம மக்களே பங்குகொண்டு நடத்துகின்ற இராமாயண நாடகம் ஐந்து நாட்கள் மிக விசேஷமாக நடைபெறும். இரவு பத்து மணிக்கு துவங்கும் நாடகமானது விடியவிடிய நடைபெறும்.

அதுவும் பட்டாபிஷேக நாளன்று சூரிய உதயத்திற்குமுன் ஊர்மக்கள் எல்லாம் திரண்டிருப்பார்கள். மங்கல வாழ்த்தோடு கோலாகல மாக பட்டாபிஷேக வைபவம் நடைபெறும்.

இன்னும் திருப்பணிகள் நடைபெறவேண்டிய நிலையில்தான் ஆலயம் இருக்கிறது. எதுவாக இருந்தா லும் அந்த எம்பெருமான் மனதுவைக்க வேண்டும். அவன் மனது வைக்கும்படியாக நமது பிரார்த்தனை இருக்கவேண்டும்.

இந்த சந்நிதிமுன்பு ஒரு நிமிடம் தியானித்து அவன் அருளாசி பெறாமல் போவதில்லை. எல்லா ஜெயத்தையும்விட ஸ்ரீராமஜெயம் முக்கியமல்லவா! வெற்றியைத் தரும் மூர்த்தியை தரிசிக்காமல் எப்படிச் செல்வது? இத்திருக்கோயிலின் அறங்காவலராக வி.சீனு (ராமதாஸ்) என்பவர் இருக்கிறார்.

தன்னுடைய குடும்பத்தோடும் நண்பர்களோடும் இணைந்து திருக்கோவிலையும் விழாக்களையும் திறம் பட நிர்வகித்துவருகிறார். திருப்பணி மற்றும் கோவில் தொடர்பு எண்: 94862 22993.

கோவில் திறக்கும் நேரம்: காலை 5.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை; மாலை 4.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை.

அமைவிடம்: கடலூர்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் முட்லூர் எம்.ஜி.ஆர் சிலை பேருந்து நிறுத்தம் எதிரில் கோவில் அமைந்துள்ளது.

பிரதான சாலையில் ஆலயம் அமர்ந்திருப்பதால், வாகனத்தில் செல்லுகின்ற யாராக இருந்தாலும், இந்த இராமனையும் அனுமனையும் வணங்காமல் செல்வதில்லை.