16
மந்த்ராலய மகானின் சிலிர்ப்பூட்டும் தொடர்!
இரண்டாம் பாகம்
அரக்கோணம் கோ.வீ. சுரேஷ்
"திவான் வெங்கண்ணா பந்த்' என்று முறுவலுடன் ஸ்ரீராகவேந்திரர் சொன்னதைக் கேட்டவுடன் அப்பண்ணா பெரிதும் உற்சாகமானார்.
""ஸ்வாமிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங் கள். எனக்கு அதோனி திவான் அவர்கள் முன்பே அறிமுகமுண்டு. தங்களது விஜயத்தினைக் கேட்டால் மட்டற்ற மகிழ்ச்சியடைவார். நான் சென்று தகவல் தெரிவித்து வரலாமா ஸ்வாமி.''
""இல்லை. இன்றிலிருந்து நீர் என்னுடனே தொடருங்கள். சற்று முன்னர் தானே கூறினேன். மூலராமர் வாசம் செய்யும் பெட்டியினை நீர் சுமக்க வேண்டுமென்று...''
""மகிழ்ச்சியில் பதட்டப்பட்டுவிட்டேன். அதனால் வந்த மறதி ஐயனே. மன்னிக்க வேண்டும்.''
ஸ்ரீராகவேந்திரர் மெல்ல புன்னகைத் தார். ""என் பொருட்டு ஒரு பெரும் லோக கைங்கரியத்திற்கான செய்தியை வெகு சீக்கீரம் நீர் சுமந்து ஆங்காங்கே இறக்க வேண்டியிருக்கிறது அப்பண்ணா.''
""காத்திருக்கிறேன் ஐயனே'' என்றார் குதூகலமாய். ஆனால் பிற்காலத்தில் தனது குரு கூறிடும் செய்தியைப் பகிர தான் நிரம் பவே துக்கப்படப்போவதை அப்பண்ணா அப்போது அறிந்திருக்கவில்லை.
அந்த மாளிகை சகல வசதிகளையும் கொண்ட வெளிச்சமான வசிப்பிடம். வேலை களைத் துரிதமாத முடிக்கப் பணியாட்கள். அவசரப் பயணத்துக்கு வாட்டசாட்டமாக உயர்ந்த ஜாதிக்குதிரை. நிம்மதியான பயணத் திற்கு சிறுதேர். தான் பதவி ஏற்றுக் கொண்டதிலிருந்து தேரை மட்டுமின்றி, பல்லக்கினையும் வெங்கண்ணா பந்த் உபயோகப்படுத்த விரும்பவில்லை. ஏனோ நாட்டமும் ஏற்பட்டதேயில்லை. மித எளிய உணவு. பருப்பன்னம், சிறிதளவு பசு நெய், கீரை, பழங்கள் என்பதாக அவர் உணவை அமைத்துக்கொண்டார். தினசரி காலை வழிபாடுகளை முடித்தபிறகு நியாயமான வரிவசூல்கள் அல்லது பாக்கிகள், காலம் தள்ளிப்போகின்ற பல வழக்குகள் மட்டுமின்றி, நிரந்தரமாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்று நேர்த்தி யாகப் பலவற்றைத் தனித்தனியே பிரித்து, கச்சிதமாகத் தனது பணியினை மேம்படுத்திக் கொண்டார்.
வரிபாக்கி செலுத்த வேண்டியவர்கள் நேரில் வந்து காரணம் கூற, அதில் திருமணங்கள், நோயினால் செயல்பட முடியாமை, தள்ளாமை, இல்லாமை போன்ற நியாயமான காரணங்கள் இருப்பின் குறிப்பெழுதி உறுதிப்படுத்திக்கொண்டு, சுல்தானிடம் நேரில் விவரங்கள் கூறுகையில் கால அவகாசமோ அல்லது வரி தள்ளுபடியோ செய்ய மக்களுக்காகப் பரிந்து பேசும் தன்மை கொண்டவ ராக இருந்தார் திவான்.
""திவான் அவர்களுக்கு வணக்கம். வாழ்க சுல்தான் அவர்கள். தங்களைக் காண ஒரு பிராமணர் வந்திருக்கிறார். தங்களைக் கண்டு நேரில் முக்கிய சேதி சொல்ல வேண்டுமென்று காத்திருக்கிறார்.'' திவானின் அறைக்குள் நுழைந்த காவலாளி பணிந்து நின்றான்.
""யாரென்று விசாரித்தாயா? ஏதேனும் குறிப்பு தந்துள்ளாரா?''
""இல்லை திவான் அவர்களே. தமிழகத்திலிருந்து தனது குருவுடன் ஒரு பெரும் குழுவாக வந்திருப்பதாக மட்டும் சொன்னார்.''
""என்னது, தமிழகமா? உடனே உள்ள அழைத்து வா அவரை...'' சில நிமிடங்களில் உள்ளே வந்து நமஸ்கரித்தான் இளைஞன் ஒருவன்.
""வணக்கம் திவான்ஜி'' என்றவன் வெள்ளை ஆடை உடுத்தியிருந்தான். அந்த வஸ்திரம் இடுப்பைச் சுற்றி, பிறகு இருகால்களுக் கிடையில் நடுவே சென்று, மறுபடி இடுப் பைச் சுற்றி வயிற்றையும் மார்பையும் மறைத்து முதுகு வழியே இறங்கியிருந்தது. இளந்தாடி யில் மீசையும் சரிவிகிதமாய் வளர்ந்து வாலிபப் பிராயத்தில் அவன் நின்றிருந்தாலும், அதில் வினயமும் பணிவும் இருந்தன.
""சொல் இளைஞனே. எதற்காக என்னைப் பார்ர்க்க வந்தாய்? அதுவும் தமிழகத்திலிருந்து?''
""திவான் அவர்களே. நாங்கள் தமிழகத்தி லிருந்து வந்துள்ளோம். தற்போது துங்க பத்திரை என்ற நதியோரம் வந்து தங்கி, இதோ இப்போது தங்கள் மாளிகை அருகே இருப்பது கேள்வியுற்று, எங்கள் குருமகான் ஸ்ரீராகவேந்திரர் தங்களைக் காண...'' என சொல்லிமுடிக்கும் முன்பாக- ""என்னப்பா... என்ன கூறினாய்? ராகவேந்திரரா! என் அருமை ஆத்ம குரு வந்திருக்கிறாரா. ஐயோ...
அவர் என்னைக் காணவா... நல்லதல்லவே. நானல்லவா அவரை தரிசிக்க வேண்டும்.'' மிகுந்த பதட்டத்திற்குள்ளானார். ""ஏனப்பா... ஸ்வாமிகள் தற்போது எங்கிருக்கிறார்?''
""அநேகமாக மூன்று மைல் தொலைவிற் குள் இருக்கின்றார். சமஸ்தானத்தில்...''
""அனைத்தையும் பிறகு பேசிக் கொள்வோமப்பா. யாரங்கே... சேவகர்கள் எவரேனும் இருந்தால் உள்ளே வரவும்'' என்றவர், தன்னருகிலிருந்த சிறு மேடையில் இருந்த வெண்கலத்தாலான அழைப்புத்தட்டை விரைந்து அடிக்க, ஓடிவந்த சேவகனிடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
""நீ என்ன செய்கிறாய்... உடனே பல்லக்கினை தயார் செய். ஒரே அளவு உயரத்திலும், பலத்திலும் இருப்பவர்களாகத் தேர்ந்தெடுத்து, பல்லக்கை விரைந்து செலுத்தி இவர் வழிகாட்டும் இடத்திற்குச் சென்று, அங்குள்ள ஸ்வாமிகளை பத்திரமாக மரியாதையுடன் அழைத்துவர ஏற்பாடு செய். அதற்குமுன் அருகிலுள்ள ஆஞ்சனேயர் கோவில் குருக்களை பூர்ண கும்பத்துடன் மேளதாளம் சகிதம் ஊர் எல்லையில் தயாராக இருக்கச்செய். ஊர்மக்களிடமும் முக்கியஸ்தர்களிடமும் கூறி, ஒருங்கே கூடியிருக்க உத்தரவிட்டதாக அறிவித்து விடு'' என்றவர், ""உனது பெயர் என்ன?'' என இளைஞனிடம் கேட்டார்.
""முகுந்தன் என்பது எனது பெயர் திவான்ஜி.''
""சரியப்பா முகுந்தா. ஸ்வாமிகளுடன் மொத்தம் எத்தனைப்பேர் வந்துள்ளனர்?''
""பதின்மூன்று'' என்றவன், ""இல்லையில்லை. நேற்று வந்து சேர்ந்தவருடன் சேர்த்து பதினான்குபேர்.''
அப்பண்ணாவின் வரவை விவரித்த முகுந்த னின் பேச்சைக் கேட்டவர் ஆச்சரியத்துக் குள்ளானார். ""உண்மையிலேயே அப்பண் ணாச்சாரியார் பெரும் பாக்கியசாலி'' என்றவர், ஸ்வாமிகளின் உணவுமுறையைக் கேட்டறிந்து அதற்கான ஏற்பாட்டி னையும் செய்ய ஆணையிட்டு, ஸ்வாமி களை வரவேற்க ஆயத்தமானார். அவரின் சந்தோஷப் பதட்டம் மாளிகை சேவகர் களுக்கே புதிரான ஒன்று.
அந்த ஆஞ்சனேயர் சந்நிதி அர்ச்சகர் புதிய பித்தளைக் குடத்தினில் விசேஷமாக பூர்ண கும்பம் செய்வித்து, சந்தோஷமாக ஊரின் எல்லையில் காத்திருந்தார். உடன் மங்கல வாத்தியக்காரர்கள், திக்விஜயத்தை வரவேற்க மந்திரம் தெரிந்த பண்டிதர்கள் என பெருங்கூட்டம் கூடிவிட்டது. எல்லாரும் ஸ்ரீராகவேந்திரரை தரிசிக்க மிகுந்த ஆவலுட னும் பரவசத்துடனும் காத்துக் கொண்டிருந்தனர். அத்தனை ஏற்பாடுகளும் திவான் அவர்களின் ஆணை என்பதால் சீக்கிரமாக செய்திருந்தாலும் சிறப்புடன் செய்வித்துக் காத்திருந்தனர்.
""வாழ்க சுல்தான். வளர்க தேசம். ஸ்வாமி களுக்கு வணக்கம். நான் திவானின் ஆஸ்தான சேவகன். தங்களது விஜயம் எங்கள் தேசத்தின் பாக்கியம். தங்களுக்கு சிரமம் தராது உரிய மரியாதையுடன் மாளிகையில் எழுந்தருளச் செய்யவேண்டி மேதகு திவான் அவர்கள் என்னை அழைத்துவர ஆணையிட்டுள்ளார்.'' அந்த இளவயது வீரனுக்கு மூச்சிரைத்தது. அவன் எங்கும் தங்காது மிகமிக விரைந்து வந்துள்ளான் என யூகிக்க முடிந்தது. ஸ்வாமிகள் புன்னகைத்தார்.
""நல்லது வீரனே. திவான் அவர்கள் நலமா?'' என்றார்.
""நலமே ஸ்வாமிகளே. ஆனால் இன்றைய அவரது படபடப்பும் உற்சாகமும் இதுநாள் வரை நாங்கள் அறியாதது.''
""ஏன்? ஏன் அவர் அப்படி இருந்தார்?''
""ஆஹா... தாங்கள் அறியாததா. பேச்சுக்குப் பேச்சு "எனது குருநாதர் வந்திருக்கிறார். என் ஸ்வாமிகள் வந்திருக்கிறார். எழுதப் படிக்கத் தெரியாத எனக்கு சரஸ்வதி கடாட்சம் அருளிய என் ஸ்வாமிகள் வந்துவிட்டார். வந்து விட்டார். எவ்வளவு நாள் கழிந்த தரிசனம்' என்று இப்படியெல்லாம் பெருத்த உற்சாகமு டன் அவர் விடாது பேசிக்கொண்டிருப்பதை நாங்கள் இதுவரை பார்த்ததேயில்லை'' என்றவன் கூறியதில் ஸ்வாமிகள் பெரிதும் மகிழ்ந்தார்.
""சரியப்பா. நான் எனது சீடர்களுடன் வந்து கொண்டேயிருக்கிறேன் என நீ திவானிடம் தெரிவித்துவிடப்பா'' என ஆயத்தமானார்.
""மன்னிக்க வேண்டும் ஸ்வாமிகளே. தாங்கள் நடந்து வரக்கூடாது. சிரமமில்லாது வரவேண்டுமென்று ஏற்பாடுகள் செய்தாகிவிட்டன.''
""அதற்காக...''
""பல்லக்கு வெளியில் தயாராயிருக்கிறது.''
""படாடோபம் வேண்டாமப்பா. இந்த எளிய சந்நியாசிக்கு ஆரவாரம் வேண்டாம்.''
""மறுபடியும் மன்னிக்கவேண்டும் ஸ்வாமி களே. இந்த பல்லக்கு உருவாகி இதுவரை திவான் அவர்கள் இதில் அமர்ந்ததே யில்லை. ஆனால் பராமரிக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. நீங்கள் அமரவேண்டும் என்பதற்காகவோ என்னவோ இதுநாள்வரை காத்திருக்கிறது. இதையும்கூட திவான் அவர்கள் கூறுகையில் கண்கள் சற்றே கலங்கிவிட்டன ஸ்வாமிகளே!'' என்ற வீரனின் வார்த்தைகளில் தென்பட்ட விசுவாசம் தெளிவாயிருந்தது.
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் திவானின் அன்பையும் பக்தியினையும் கண்டு நெருக்குருகிப்போனவர், மேலும் விவாதிக் காது பல்லக்கில் ஏற திருவுளம் கொண்டார்.
""அதோ... அதோ... நமது ஸ்வாமிகள் வரும் பல்லக்கு வருகிறது.'' வெகு விரைவில் வந்துசேர்ந்த அந்த வீரனின் முன்னறிவிப்பு கேட்டு மேளதாளம் முழங்கியது. பல்லக்கு மெல்ல மெல்ல நெருங்கி எல்லை வந்து நிற்க, ஸ்வாமிகள் அதனுள்ளிருந்து இறங்கினார். மெல்ல இறங்கி இரு பாதங்கள் பதித்து அவர் நிற்க, ஸ்ரீராகவேந்திர பக்தியில் ஒடுங்கிப்போன திவான் வெங்கண்ணா எல்லை என்றும் பாராது நெடுஞ்சாண் கிடையாய் அவர் பாதம் பணிந்து எழுந்துநிற்க, பக்திப் பரவசத்தில் உடல் நடுங்கத் தொடங்கியது. ஸ்வாமிகள் மெல்ல புன்னகைத்தார். ""நலமா வெங்கண்ணா'' என்றார் வாஞ்சையுடன்.
""குருவான தங்களது பார்வையின் நிழலில், அருள்வெள்ளத்தில் திக்குமுக்காடும் நித்திய சந்தோஷத்தில் இருக்கிறேன் ஐயனே. தாங்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்று கூறியிருந்தால் போதுமே. நான் எத்தனை காததூரம் இருந்தாலும் கடந்து வந்தேனும் தங்களை தரிசித்திருப்பேனே. இந்த எளியேனுக்குப்போய் இத்தனை அனுசரணையா...''
""அல்ல வெங்கண்ணரே. உலகியல் நியதி என்பது அரசனுக்கும் உண்டு. துறவிக்கும் உண்டு. ஒருசில விலக்கைத்தவிர நியதியைக் கடைப்பிடிப்பதென்பது மீறக்கூடாத ஒன்றல் லவா?''
""என் இறைவனே. உங்களுக்குக்காக சம்பிரதாயங்களை நாங்கள் மீறிவரலாம் என்ற விதிவிலக்கும்...''
""உன் பக்தி மிகுதியின் வெளிப்பாட்டை நீ வெளிப்படுத்துகிறாய். நல்லது. உன்னிடம் ஓர் உதவி கோரவே வந்துள்ளேன்.''
""ஸ்வாமிகள் இப்படிப் பேசலாமோ? எனக்கு உத்தரவிடுங்கள் என்ன செய்ய வேண்டுமென்று...''
""நான் அதனை நாளை உரைக்கின்றேன். நான் சிலகாலம் இங்கு தங்கவேண்டியுள்ளது.''
""தங்கள் சித்தம் ஸ்வாமிகளே. தாங்கள் சிரமப்பரிகாரம் செய்து கொள்ளுங்கள். நாளை காலை வந்து தங்களை தரிசிக்கிறேன். ஸ்வாமிகளிடம் ஒரு விண்ணப்பம்.''
""சொல்லுங்கள் வெங்கண்ணா.''
""சுல்தான் அவர்களிடம் தங்கள் விஜயம் பற்றித் தெரிவிக்க ஆவலாய் இருக்கிறேன். முடிந்தால் தங்களை தரிசிக்க அவரையும் அழைக்கலாம் என்று ஆவலாய் இருக்கி றேன்.''
""நல்லது திவான். அப்படியே ஆகட்டும்.''
ஆதோனி கோட்டை சற்றே உயரே, தனியே மக்கள் ஜாகையைத் தவிர்த்து அழகுறக் கட்டப்பட்டிருந்தது. கற்கோட்டை யாக இருந்தாலும் காற்றோட்டம் நிறைய கிடைக்கும்படி விசாலமான சாளரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழையும் காற்று நறுமணம் நிறைந்தும்-
அதேசமயம் உஷ்ணம் தணிக்க என்றும் இரு காரணங்களுக்காக முல்லை, மல்லி என பலவித மலர்க்கொடிகள் ஏற்றிவிடப் பட்டிருந்தன. தவிர, உள்ளே ஆங்காங்கே அகிலும் சந்தனப்பொடிகளும் மெல்லிய தணல்கள்மீது தூவப்பட்டு, அதனால் எழுந்த நறுமணப் புகை கிறங்கடிப்பதாக இருந்தது.
ஆதோனி சுல்தான் பெரும் சுகவாசி. விலையுயர்ந்த பனாரஸ் வஸ்திரங்கள் போர்த்திய சந்தனக்கட்டிலில், லேசான போதையில் கண்கள் சிவக்க, இலவம் பஞ்சு மெத்தையுடன்கூடிய தலையணைமீது சரிந்து ஒருக்களித்து அமர்ந்திருந்தார். நன்கு பக்குவப்படுத்தப்பட்ட, பலநாள் பாதுகாக்கப்பட்ட திராட்சை ரசம் கோப்பையில் நிரம்பியிருக்க, அதைத் துளித்துளியாக அருந்தி சுவைத்துக் கொண்டிருந்தார். மெல்லிய, வளைந்த, கேள்விக்குறி போன்ற குழாய் பொருத்திய நீண்ட கூஜாவை ஒரு பணிப்பெண் சுமந்திருக்க, அதன் மற்றொரு பகுதியில் பொருந்தியிருந்த இன்னுமொரு மெல்லிய குழாயினை வாய்வைத்து இழுத்திழுத்து புகை விட்டுக்கொண்டிருந்தார். அதுவும் போதை தரும் "உக்கா' என்ற லாகிரி வஸ்தாகும்.
அகலமான மேஜை, படுக்கையினையொட்டிப் போடப்பட்டிருந்தது. அதில் ஒரு தட்டில் நெய்யில் வறுத்த முந்திரியும், மற்றொரு தட்டில் உயர்ந்த ரக பேரீச்சம் பழங்களும், காரமான உணவு வகைகளும், மற்றொரு தட்டினில் பொறித்த மீன் துண்டங்களும், நெய்யினில் நன்கு சிவக்கப் பொறித்தெடுத்த இறைச்சி வகைகளும் படர்ந்திருந்தன. சுல்தான் இத்தனையையும் அடுத்தடுத்து சுவைத்துக்கொண்டிருக்க, பின்னணியில் மெல்லிய ஷெனாய் என்ற இசைக்கருவியை ஒரு கலைஞர் தனது கோஷ்டிகளுடன் இசைத்துக் கசிய விட்டுக்கொண்டிருந்தார். ஒரு பக்கம் மயிலிறகால் செய்த விசிறி, மற்றொரு பக்கம் பட்டால் செய்யப்பட்ட விசிறி என இருபக்கமும் பணிப்பெண்கள் விசிறிக்கொண்டிருக்க, கட்டிலுக்கு நேர் மேலே உயர்ரக வெட்டிவேரால் செய்யப்பட்ட- பன்னீர் தெளிக்கப்பட்ட நீண்ட பெரிய விசிறி போன்றவற்றால் சுல்தானின் அறையே நறுமணம் நிரம்பிய ஈரமான காற்றால் குளுமை கூடியிருந்தது.
சுல்தான் அதிக மகிழ்ச்சியில் இருக்கும் போதெல்லாம் இந்த ஏற்பாடுகளை அவரின் மெய்க்காப்பாளன் குறிப்பறிந்து செய்துவிடுவான். அன்றும் அவரது மனைவி யிடமிருந்து நல்ல செய்தி வந்திருந்தது. மகனுக்கு ஒரு வயது பூர்த்தியாகும் தேதி நெருங்கிவருவதாகவும், அதற்குள் அவன் தவழ முயற்சிப்பதாகவும், கவிழ்ந்து தலை தூக்கிப் புன்னகைப்பதாகவும், மசூதிகளில் இறையழைப்பின் குரல்கேட்டு வெகு அமைதியாய்க் கூர்ந்து கவனிப்பதாகவும், நெருங்கிவிட்ட அவன் பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவிகளும், குடிமக்களுக்கு வரிவிலக்கு தரும்படியும் கேட்டிருந்தாள். இந்த விஷயமனைத்துமே சுல்தானை மிகவும் குஷிப்படுத்தியதாலேயே அந்த லாகிரி லயிப்பில் திளைத்திருந்தார்.
அப்போது உள்ளே நழைந்த அவரின் மெய்க்காப்பாளன் வணங்கி நின்றான்.
""என்ன விஷயம் அப்துல்?''
""தாங்கள்தான் சந்திக்கச் சொல்லி காலையிலேயே எனக்கு ஆணையிட்டிருந் தீர்கள் சுல்தான் அவர்களே.''
""ம்... மறந்தே விட்டேன். நாளை காலை நீ என்ன செய்கிறாய். வரிசெலுத்தமுடியாது தவிக்கும் நியாயமான ஏழைகளது ஒட்டுமொத்த பெயர்களையும், அது குறித்த விவரங்கள் அனைத்தும் எடுத்துக் கொண்டு வரும்படி நான் தெரிவித்ததாக திவான்ஜியிடம் கூறி அழைத்துவரவும். என் மகனின் முதல் பிறந்த நாளில் நல்ல அறிவிப்புகளை வெளியிட வேண்டியிருப்ப தாகவும், அதுபற்றிப் பேசுவதற்காக சந்திக்க வேண்டி இருப்பதாகவும் சொல். மேலும்...'' என அவர் முடிக்கும் முன்பாக, ""வாழ்க சுல்தான். வளர்க நாடு'' என்ற அறிவிப்புடன் இடைபுகுந்தான் அரண்மனை சேவகன்.
""ம்... என்ன விஷயம் சொல்.''
""மன்னிக்க வேண்டும் சுல்தான் அவர்களே.
திவான்ஜி தங்களை அவசர நிமித்தம் சந்திக்க வந்துள்ளார்.''
""அடடே! நான் பார்க்க நினைத்தேன். அவரே வந்துவிட்டார். ம்... அவர் சுத்த பிராமணர் ஆயிற்றே. இங்குள்ள அனைத் தையும் அகற்றிவிடுங்கள். பன்னீர் தெளித்து சுத்தம் செய்துவிடுங்கள். நறுமணப்பொடியை அதிகம் புகை போடுங்கள். நீ சற்று பொறுத்து அவரை உள்ளே அழைத்து வா'' என்றவரின் அடுத்த குறிப்பறிந்த மெய்க்காப்பாளன் அகன்ற பாத்திரத்தில் நீர்கொண்டுவர, சுல்தான் தன் முகம் கழுவி, கைகளையும் சுத்தம் செய்துகொண்டார். பிற மதத்தினருக்கு அவர் தந்த மரியாதையான நாகரிகம் மெய்க்காப்பாளரை பெரிதும் கவர்ந்தது.
சில நிமிடங்களில் வெங்கண்ணா உள்ளே வந்து வணங்கிநின்றார்.
""வாழ்க மன்னர். வணக்கம் சுல்தான் அவர்களே.''
""ஏது திவான்ஜி இந்த அவசரம். உடல்நிலை ஏதேனும் பாதிப்போ...'' என்ற அவரது கரிசனத்தில், உண்மைத்தனத்தில் வெங்கண்ணா மகிழ்ச்சியானார்.
""மன்னரின் கனிவால் எனக்கேது குறை? நான் எனது குருநாதர் பற்றிய சேதி கொண்டு வந்திருக்கிறேன்.''
""குருநாதர்... யார்... எந்த குருநாதர்?''
""தங்களுக்கு ஞாபகத்திற்கு வரவில்லையா சுல்தான் அவர்களே. தாங்கள் முதன்முதலில் என்னை சந்திக்கையில் ஒரு லிகிதம் படிக்கக் கூறி கொடுக்கையில், படிப்பறிவே இல்லாத நான் ஸ்ரீராகவேந்திரர் அருளால் எழுத்து களை மளமளவென்று படித்து முடித்தேனே...''
""ஆமாம். ஆமாம். எப்போதுமே சொல்லிக் கொண்டேயிருப்பீர்களே அந்த பிராமண சந்நியாசியைப் பற்றியா?''
""ஆம் சுல்தான் அவர்களே. மகாபவித்ரமான என் குருநாதர் நமது தேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். இப்போது மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரைத் தாங்கள் தரிசிக்கவேண்டுமென்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.''
""நான் எதற்கு அவரைக் காணவேண்டும்? நாளை எனது மகனின் பிறந்தநாள் குறித்து நல்ல அறிவிப்புகளை வெளியிடவேண்டி உங்களை சந்திக்க அழைக்க இப்போதுதான் அப்துல்லிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். பிறகு ஒருநாள் உங்கள் குருநாதர்- அதுதான்...
அந்த சந்நியாசியைப் பார்க்க முடிவு செய்கிறேன். இப்போது வேண்டாம்.''
"சுல்தான் அவர்கள் அப்படி சொல்லக் கூடாது. இதை எனது வேண்டுகோளாய் ஏற்கவேண்டும். மேலும் அந்த அருளாளரின் கருணைப்பார்வை தங்கள்மீது படவேண்டும். தங்களது தேக நலனும் தேச நலனும் மேம்படும் என்பது என் உள்மனது அனு மானம். தயவுசெய்து மறுக்க வேண்டாம்.''
""எனக்கு இப்போதுகூட நம்பிக்கை இல்லை. அவர் அருளால்தான் படித்தீர்... அவர் அற்புதமானவர் என்பதில் துளிகூட நம்பிக்கையில்லை திவான். ம்... சரி... நீங்கள் இந்தளவுக்கு வற்புறுத்துகிறீர்கள். சரி வருகி றேன். நான் மட்டுமல்ல; எனது மகனுடனும் மனைவியுடனும் அவரைப்பார்க்க வருகிறேன்.''
""ஆஹா... வாருங்கள் வாருங்கள். நான் பெரிய பாக்கியம் செய்திருக்கிறேன். அந்த அற்புத மகானைப் பார்ப்பதே பேரற்புதம்.
அற்புதங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.''
""ஆமாம் ஆமாம்... நான் பார்க்கத்தானே போகிறேன்'' என்ற அவரின் பேச்சிலிருந்த மர்மத்தை வெங்கண்ணர் அப்போது உணர வில்லை.