தசரதரின் அருந்தவப் புதல்வரான இராமச் சந்திர பிரபு திருமாலின் திரு அவதாரம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த அவதாரம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை உற்றுநோக்கி னால் ஒரு உண்மை புலப்படும். அது யாதெனில் தசரதர் செய்த புத்திரகாமேஷ்டி யாகமாகும்.
தசரதர் என்றால் பத்து திக்குகளிலும் ரதத்தை செலுத்தக்கூடியவர் என்பது பொருளாகும். இந்திரனுக்கே தோழனாய் விளங்கிய தசரதர் அடிக்கடி இந்திரனை சந்தித்து உரையாடுவது வழக்கம். அப்படி ஒரு நாள் இந்திரனை சந்தித்து விட்டு வரும்வழியில் நாரதரை சந்திக்கிறார்.
நாரதர் தசரதரிடம் "இந்திரன் நீங்கள் வந்து சென்ற பின்பு உங்கள் இருக்கையை சுத்தம் செய்கிறான்' எனக் கூறுகின்றார். அதைக் கேட்டு அதிர்ந்த தசரதர், இந்திரனிடமே சென்று இதைப்பற்றி வினவினார்.
அதற்கு இந்திரனோ, "தாங்கள் புத்திர பாக்கியம் இல்லாதவர். ஆதலால் அந்தப் பாவம் என்னை சேர்ந்துவிடக்கூடாது என்பதற் காக தங்கள் இருக்கையை நான் சுத்தம் செய்கி றேன்'' எனக் கூறினான். இதைக்கேட்டு மிகவும் மனம் வருந்தினார் தசரத மகா சக்கரவர்த்தி. இது பற்றி குலகுரு வசிஷ்டரிடம் ஆலோசித்தார்.
வசிஷ்டரோ, "கங்கையை விடவும் கால் மடங்கு அதிக புண்ணியம் பெற்ற, தென்னாட்டி லுள்ள கமண்டலநாக நதிக்கரையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினால் தங்களுக்கு புத்திர பாக்கியம் உறுதி'' என்று ஆலோசனை வழங்கினார். அதை சிரம்தாழ்த்திக் கேட்ட தசரத சக்கரவர்த்தி தனது படை பரிவாரங் களுடன் தென்னாடு புறப்பட்டார்.
ரிஷ்யஸ்ருங்கர்
தர்மாரண்ய க்ஷேத்திரம் என்னும் ஆரணி பகுதியை நெருங்கும்பொழுது அசரீரி வாக்கு ஒலித்திட, அதன்படியே கமண்டலநாக நதிக்கரையை வந்த டைந்தார். அந்த நதியின் வடபுரத்தில் தபோரிஷியான ரிஷ்யஸ்ருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவர் தவம்புரிந்து வந்தார்.
அதோடு, கங்கையைப் போன்று விளங்கும் இந்த நதிக்கரையில் சுயம்புவாய் எழுந்தருள் புரியும் ஸ்ரீ காசி விஸ்வநாதர்- விசாலாட்சியைப் பூஜித்துவந்தார்.
நதியைக் கடந்து படையுடன் வந்த தசரதர், மகரிஷியிடம் தனது வேண்டுகோளைத் தெரிவித் தார். தசரதரின் வேண்டுகோளை ஏற்ற ரிஷ்ய ஸ்ருங்கர் கமண்டலநாக நதிக்கு எதிர்க்கறையில், வடக்கிலிருந்து கிழக்காகத் திரும்பும் திசையில் அவரது திருக்கரங்களினால் தசரதரின் பொருட்டு, சிவலிங்கப் பிரதிஷ்ட்டை செய்து, ஸ்ரீ புத்திர காமேஷ்டீஸ் வரர் என்னும் திருநாமம் சூட்டி, புத்திரகாமேஷ்டி யாகத் தையும் சிறப்புற நடத்தித் தந்தார்.
அதன்பின்பு, தசரதர், அயோத்தி மாநகரை அடைந்து, வசிஷ்டரின் திருக்கரங்களினால் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தினார்.
அப்போது யாகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பாயசத்தை தசரதர் தனது மனைவிகளுக்குப் பகிர்ந்தளித்தார். அதன் பின்னரே இராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்னர் என நால்வரும் பிறந்தனர். இதற் கெல்லாம் மூல காரணமாக, மூலப்பரம் பொருளாகத் திகழ்ந்தவர் புத்திரகாமேஷ்டீஸ் வரர் என்பதனை காஞ்சி மகாபுராணம் சுமார் 60 பாடல்களில் எடுத்தியம்புகின்றது.
நதியின் பெருமை
உலகத்தின் நாயகியாய்த் திகழும் அன்னை பார்வதிதேவி விளையாட்டாக ஈசனின் கண்களைமூட, கோபமடைந்த பெருமான், "பூமியில் எம்மை பல தலங்களில் பூஜிக்க வேண்டும்' என ஆணையிட்டார். அதன் படியே காஞ்சிபுரத்தில் மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டாள் அன்னை பார்வதிதேவி. பெருமானின் இடபாகம் பெறவேண்டி பல திருத்தலங்களில் சிவலிங்க வழிபாட்டை நடத்திவந்தார்.
ஒருசமயம் வாழைக் காடாய்த் திகழ்ந்த வாழைப் பந்தல் என்னுமிடத்தில் சிவலிங்க பூஜைசெய்ய உத்தேசித்தாள். அதற்கு நீர் தேவைப்படவே, கணபதியையும், கந்தனையும் அழைத்து நீருக்கு வழிசெய்யும்படி ஆணையிட்டாள். கணபதி ஜவ்வாது மலையை நோக்கி நடந்தார். அப்போது அங்கே தவ சிரேஷ்டர்களில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்வதையும், அவரது கமண்டலத்தில் கங்கை இருப்பதையும் கண்ணுற்றார். எப்படி காகமாக மாறி, அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, காவிரியை உற்பத்தி செய்தாரோ... அதுபோலவே ஜமதக்னியின் கமண்டலத்தையும் கவிழ்த்தார்.
அந்த நீரானது நதியாகப் பெருக்கெடுத்தது. அதுவே கமண்டல நதியாகும். (இந்நதி ஆரணி வழியாகப் பாய்ந்து, வாழைப்பந்தலில் செய்யாற்றுடன் கலந்து, பின்பு பழைய சீவரத்தில் பாலாற்றுடன் இணைந்து, சதுரங்கப்பட்டினத் தில் கடலில் கலக்கிறது.) அன்னையின் ஆணையை ஏற்ற முருகப்பெருமான் மேற்கே சென்று பர்வதமலையை நோக்கி தனது வேலாயுதத்தை வீசினார். அங்கே மலை உச்சியில் ஏழு அந்தணர்கள் தவம் செய்துகொண்டிருந்தனர்.
அவர்களது மார்பை ஒரே நேர்க்கோட்டில் துளைத்தது கந்தனின் சக்திவேல். இதனால் அவர்களது ரத்தமானது பீறிட்டு, சிவப்பாக நதி உருவெடுத்தது. அதுவே செய்யாறாகும். இந்த செய்யாறும், கமண்டலநாக நதியும் இணையுமிடத்தில், அன்னையே தனது பிரம்பினால் ஓர் நீரூற்றை ஏற்படுத்தினாள். இதுவே வாழைப்பந்தல் முக்கூட்டு நதி என்று இன்றும் அழைக்கப்படுகின்றது.
ஆலயம்
ஆரணி நகரின் புதுக்காமூர் பகுதியில் கமண்டலநாக நதிக்கரையின் மேற்கில் இயற்கை எழில் சூழ திகழ்கிறது ஆலயம். முதலில் படித்துறை. படிகளின்மீது ஏறினால் வடக்கே முகம்கொண்ட கணபதியையும், தெற்கே முகம் பார்த்தவாறு அமைந்திருக்கும் ஆஞ்சனேயரையும் வணங்கலாம். அடுத்து அரச மரமும், வேப்ப மரமும் இணைந்துள்ளது. அதன்கீழே பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட எண்ணற்ற நாகங்கள் உள்ளன.
அதைத் தொடர்ந்து, உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காத அதிசயமாக, ஏன்- அயோத்தியில்கூட காணக்கிடைக்காத வண்ணம், தனிச்சந்நிதியில் வீற்றிருந்து சிவபெருமானை வணங்கும்படியாக திருக்காட்சி அளிக்கி றார் தசரதர்.
எதிரே மூன்று நிலை ராஜகோபுரம் மற்றும் உயரிய மதில்களுடனான, ஆலயம் அற்புதமாகத் திகழ்கின்றது. உள்ளே நேராக பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம் இடதுப்புறம் நகர்ந்திட வலம்புரி விநாயகர் அற்புதமாக அரசாட்சி செய்கிறார். அருகே மடப்பள்ளியும் உள்ளது. இங்கே தலவிருட்சமான வில்வம் காணப்படுகிறது. எதிரே திருக்கல்யாண மண்டபம். அதைத் தொடர்ந்து இரண்டாம் வாயிலுக்குள் நுழைந்து, மகாமண்டபத்தில் வீற்றருளும் சிவகாமி அன்னையுடனான நடராஜப் பெருமானை வணங்கி மகிழ்கிறோம். எதிரே நால்வர் தரிசனம்.
பின்னர் மூன்றாம் வாயிலும், இடைமண்டபமும் காணப்படுகிறது. இடை மண்டபத்தில் சோமாஸ்கந்தர் மற்றும் உற்சவமூர்த்தங்களை கண்ணுறுகிறோம். கருவறையில் கருணாமூர்த்தி யாக குழந்தை வரம்தரும் பெருமானாக அருள் பாலிக்கிறார் புத்திர காமேஷ்டீஸ் வரர். அழகிய பச்சைக் கல்லாலான சிவலிங்கம். இவரை எண்ணெய்க் காப்பிட்ட பின்பு தரிசித்தால் அனைத்து காட்சிகளும் எதிரொளிக்கும் வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளார்.
இவரை மனங்குளிர வணங்கி வழிபட்டபின்பு, ஆலய வலம் வருகையில்... வடக்கு நோக்கி 63 நாயன்மார்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர். சிவன் கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி திருமால், பிரம்மா துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர்.
அருகே சண்டேஸ்வரர் சந்நிதி கொண்டுள்ளார்.
சுவாமி மகா மண்டப வெளிச் சுவற்றில் பல்லவர் கால கல்வெட்டுகள் அதிக அளவில் பொறிக்கப் பட்டுள்ளன. நிருதி மூலை யில் நிருதி கணபதியும், அதைத் தொடர்ந்து மேற்குத் திரு மாளிகைப் பத்தியில் கணபதி மற்றும் பஞ்ச லிங்கங்களும் காணப்படுகின்றன. அடுத்த தாக காளியுடன்கூடிய வீரபத்திரர் அருள் பொழிகிறார். மேற்கில் வள்ளி- தெய்வானையுடன்கூடிய சண்முகர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பாமா- ருக்மணி சமேத கிருஷ்ண பரமாத்மாவும், சகஸ்ர லிங்கமும், அடுத்ததாக கங்கையம்மனும் அருள்புரிகின்றனர்.
அம்பாள் சந்நிதி மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் அமைப்பில் உள்ளது. கருவறையில் பச்சைக் கல்லாலான அம்பிகையின் திருவுருவச்சிலை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. அம்பாளின் அழகில் இந்த அகிலமே மயங்கும் என்பது உறுதி. கருணையே வடிவாக அருள்பொழிகிறாள் அன்னை பெரியநாயகி. வடமொழியில் பிரகந்நாயகி என்றழைப்பர்.
எதிரே தென்முகம் பார்த்த காலபைரவர் சந்நிதி உள்ளது. அதைத் தொடர்ந்து ஈசான திசையில் ஆலய யாகசாலையும், அருகில் நவகிரக சந்நிதியும் அமைந்துள்ளன. சனீஸ்வர பகவானும், சூரியனும் மேற்கே முகம்காட்டி அருள்பாலிக்கின்றனர்.
விசேடங்கள்
சித்ரா பௌர்ணமியில் 108 பால்குட அபிஷேகம், ஆனிப் பௌர்ணமியன்று தம்பதிகள் பங்குபெறும் புத்திரகாமேஷ்டி யாகம், ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை மற்றும் லட்சதீபத் திருவிழா, ஐப்பசி அன்னா பிஷேகம், கார்த்திகை தீபம், ஆரூத்ரா, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலன்று திருவூடல் உற்சவம், காணும் பொங்கலன்று படிபூஜைத் திருவிழா, மாசி மகம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் ஆகிய உற்சவங்கள் மிகவும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.
பிரார்த்தனைகள்
குழந்தையில்லா தம்பதிகள் ஆறு திங்கட்கிழமைகள் வீட்டிலேயே விரதம் அனுஷ்டித்து, ஏழாவது வாரம் இங்குவந்து சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, பின் தலவிருட்சத்தில் தொட்டில் கட்டி பலனடைகின்றனர். நாகப்பிரதிஷ்டை செய்தும் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். திருமணவரம் வேண்டுவோர், அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றுவதாக வேண்டிக் கொண்டு குங்கும அர்ச்சனை செய்கின்றனர். திருமணம் கைகூடுகிறது. அதோடு திருமண பிராப்திக்காக வாழைமர கல்யாணமும் இங்கு செய்யப்படுகிறது.
பல்லவர் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது இவ்வாலயம். இந்து சமய அறநிலைத்துறையைச் சார்ந்த இவ்வாலயத்தில் தினசரி ஒருகால பூஜை நடைபெறுகின்றது. தினமும் காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரையும்; மாலை 4.30 மணிமுதல் 7.30 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும்.
அருணாச்சல குருக்கள் மற்றும் முத்துசாமி குருக்கள் ஆகியோரின் வாரிசுகள் தொன்றுதொட்டு பூஜைசெய்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமண வரம் வேண்டியும் கோவிலுக்கு நாளும் வந்தவண்ணம் இருக்கின்றனர் என்பது கண்கூடான சாட்சியாகும்.
ஆலயம் இருக்குமிடம்: திருவண்ணா மலை மாவட்டம், ஆரணி நகரின் புதுக்காமூர் பகுதியில் கமண்டலநாக நதிக்கரையில் அமைந்துள்ளது புத்திர காமேஷ்டீஸ்வரர் ஆலயம். வேலூர், திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு போன்ற நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ஆரணி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.