"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு.'

"தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) மரணத்தை மாற்றும் தகுதியோடு எமனையும் வெல்லமுடியும்' என்கிறார் திருவள்ளுவர்.

மகாபாரதத்தில் கிருஷ்ணனின் உற்ற நண்பனாக இருந்தவன் அர்ஜுனன். அவனது மகன் அபிமன்யு. கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு அடுத்தபடியாக, போரில் சக்கரம்போல் தடுத்து நிற்கும் படைகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகும் வித்தை தெரிந்தவன் அபிமன்யு மட்டுமே. அத்தகைய சிறப்புப் பெற்ற அபிமன்யுவின் மனைவி உத்தரை.

Advertisment

sivan

மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு சிலநாட்கள்முன்பு, பாண்டவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு வந்த முனிவர் ஒருவர் உத்தரைக்கு மாயக்கண்ணாடி ஒன்றைப் பரிசாக வழங்கிச் சென்றார்.

தன்முன்பாக யார் நிற்கிறார்களோ, அவர்களுடைய மனதில் நினைப்பவர்களை அந்தக் கண்ணாடி பிரதிபலிக்கும். திருமணமானது முதல் உத்தரை தனது கணவனையே மனதில் வரித்திருந்தாள்.

அதனைப் பரிசோதனை செய்ய அவளுக்கு ஆவல் உண்டானது. முதல் ஆளாக அந்த கண்ணாடிமுன் சென்று நின்றாள். எதிர்பார்த்தது போலவே அவளது அன்புக் கணவன் அபிமன்யு அதில் தெரிந்தான்.

அதேபோல் அபிம்ன்யுவும் தனது மனைவிமீது தீரக்காதல் கொண்டிருந்தான். அவனைக் கண்ணாடி முன்பாக நிறுத்தியபோது அதில் உத்தரை தெரிந்தாள்.

அப்போது மாயைகளின் மொத்த உருவமான கண்ணன் வந்துசேர்ந்தார்.

அவரைக் கண்ணாடி முன்பாக நிறுத்தினால் யார் தெரிவார்கள் என்பது பற்றி அங்கே ஒரு விவாதமே தொடங்கிவிட்டது!

"அவருக்கு உற்ற தோழன் நான். அதனால்

நான்தான் கண்ணாடியில் தெரிவேன்''

என்றான் அர்ஜுனன்.

"இந்த உலகத்திலேயே தர்மத்தைக் காத்து நிற்பவன் என்பதால், கிருஷ்ணன் மனதில் நான்தான் இருப்பேன்'' என்றான் தர்மன்.

"கிருஷ்ணரின் பாசத்திற்கும் அன்புக்கும் உரியவள் தங்கையாகிய நான்தான். அதனால் நான்தான் அந்தக் கண்ணாடியில் வெளிப்படுவேன்'' என்றாள் திரௌபதி. இப்படி ஆளாளுக்கு விவாதித்துக்கு கொண்டனர்.

Advertisment

sivan

ஒரு கட்டத்தில் கிருஷ்ணரைப் பிடித்து, அந்தக் கண்ணாடி முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். ஆவலோடு கண்ணாடியைப் பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. ஏனெனில் அதில் தெரிந்தது சகுனி. பாண்டவர்கள் நாட்டைவிட்டு வனத் திற்குச் செல்ல யார் காரணகர்த்தாவோ. யாரால் உலகமே அழியும் போர் ஒன்று நிகழப் போகிறதோ, எல்லாவற்றுக்கும் மேலாக கிருஷ்ணனைக் கொன்றே தீரவேண்டுமென்று யார் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறாரோ- அந்த சகுனி கிருஷ்ணனின் மனதில் இருப்பதைக்கண்டு அனைவரும் திகைத்துப் போயினர். இதுபற்றி அவர்கள் கிருஷ்ணனிடமே கேட்டனர்.

அதற்கு கிருஷ்ணன், "சகுனி எனக் கெதிராக திட்டங்களைத் தீட்டுபவன்தான். பாண்டவர்களான உங்கள் பக்கம் நிற்பதால் உங்களோடு சேர்த்து என்னையும் அழிக்கத் துடிப்பவன்தான். அதற்காக அவன் எப்போதும் என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஒருவர் என்னைப் பற்றி நல்லவிதமாக சிந்திக்கிறார்களா அல்லது கெடுதலை ஏற்படுத்த சிந்திக்கிறார் களா என்பது பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்னைப்பற்றி அவர்கள் சிந்திக்கிறார்கள் என்பதே முக்கியம். கணநேரம்கூட தவறாமல் என்னைப்பற்றி சிந்திப்பவர்களுக்கே என்னுடைய இதயத்தில் இடம் கிடைக்கும். அந்த வகையில்தான் சகுனி என் மனதில் இடம்பிடித்துவிட்டான்'' என்றார்.

ஒரு சிவராத்திரி நாளில் வேடன் ஒருவன் புலிக்கு பயந்து ஓடி, ஒரு வில்வமரத்திலே ஏறி அமர்ந்து கொண்டான். புலி அவனைப் பார்த்து உறுமிக்கொண்டே மரத்தின் அடியிலுள்ள சிவலிங்கம் அருகில் பசியோடு காத்துக்கொண்டிருந்தது. தூங்கிவிட்டால் என்னசெய்வதென்று எண்ணி, இரவுமுழுவதும் வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். அந்த இலைகள் சிவலிங்கத்தின்மீது விழுந்தன. சிவன் மனம் குளிர்ச்சியடைய, வேடன் மறுபிறவியில் நாட்டையாளும் சக்கரவர்த்தியாகப் பிறந் தான் என்பது சிவராத்திரி கதைகளில் அனைவரும் அறிந்த ஒன்று.

இப்படி செய்வதறியாது செய்த வேடனைப்போல் இல்லாமல், எதிர்மறை எண்ணத்தோடு எண்ணிய சகுனியைப்போலும் இல்லாமல், நல்ல குறிக்கோளுடன், நற்சிந்தனையுடன் தவமிருந்து இறைவனின் மனதில் இடம் பிடித்த, இராமாயண காலத்திற்குத் தொடர்புடைய ஜடாயு வழிபட்டுப்பேறு பெற்றதொரு உன்னதமான திருத்தலம்தான் திருப்பள்ளி முக்கூடலில் உறையும் திருநேத்ரநாத சுவாமி திருக்கோவில்.

ss

இறைவன்: ஸ்ரீ திருநேத்ரநாதர், முக்கோண நாதர், முக்கூடல் நாதர்.

இறைவி: அஞ்சனாட்சியம்மை, மைமேவும் கண்ணி.

புராணப் பெயர்: திருப்பள்ளி முக்கூடல்.

ஊர்: கேக்கரை திருப்பள்ளி முக்கூடல்.

தலவிருட்சம்: வில்வமரம்.

தீர்த்தம்: சோடஷ தீர்த்தம். (முக்கூடல் தீர்த்தம்).

வேளாக்குறிச்சி ஆதீனத்தைச் சார்ந்த இவ்வாலயம் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அப்பர் பெருமானால் பாடப்பட்ட இத்தலம், இந்து சமய அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் முறைப்படி காலபூஜைகள் நடைபெற்றுவருகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என முப்பெரும் சிறப்புக்களோடு, இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றதொரு திருத்தலம்தான் திருப்பள்ளி முக்கூடல் நேத்ரநாத சுவாமி திருக்கோவில்

"விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை

வேதியனை வெண்திங்கள் சூடும் சென்னிச்

சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்

தத்துவானைத் தன்னொப்பார் இல்லாதானை

அடையாதா மும்மதிலுந் தீயில் மூழ்க

அடுதணைகோத் தெய்தானையயில் கொள் சூலப்

படையானைப் பள்ளியின் முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.'

-அப்பர்

சிவனின் தேவாரப் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 149-ஆவது தலமாகவும், காவிரித் தென்கரைத் தலங்களில், 86-ஆவது தலமாகவும் விளங்குகிறது.

தலப்பெருமை

இத்தலத்து அம்மன் அஞ்சனாட்சி, மைமேவும் கண்ணி எனப்படுகிறாள். தபோவதனி என்னும் அரசி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அம்மனை வழிபாடு செய்தாள். அவளது வேண்டு கோளையேற்ற அம்மன் தாமரை மலரில் அழகிய குழந்தையாகத் தோன்றினாள்.

அப்பெண் மணப்பருவம் வந்தபோது இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என தலபுராணம் சொல்கிறது.

இங்குள்ள குளத்தினுள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால் மகாமகத் தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும்.

இராமர் தசரசக்கரவர்த்திக்கு தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று. முன்னோர் களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால் கயாகரையில் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்குமென்பதால் இத்தலம் "கேக்கரை' என்றும் அழைக்கப்படுகிறது.

தலவரலாறு

ஒருமுறை காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாக தரிசித்து முக்தியடை வதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது.

அதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து, "இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது நீ அதை தடுப்பாய். அதனால் சினம்கொண்ட இராவணன் உனது சிறகுகளை வெட்டிவிடுவான். நீ வேதனையால் துடித்துக்கொண்டிருக்கும்போது இராமபிரான் வருவார். நீ அவரிடம் இராவணன் சீதையை இந்த வழியாகத் தூக்கிச்சென்றான் என்ற விஷயத்தை தெரிவிப்பாய். அதைக்கேட்ட இராமர் மகிழ்ச்சி யடைவார். நீ அவரது பாதத்தில் விழுந்து முக்தி பெறுவாய்'' என கூறினார். அதற்கு ஜடாயு, "இறைவா! நான் காசி, ராமேஸ்வரம் தரிசனம் கேட்டேன். ஆனால் எனது சிறகை இராவணன் வெட்டிவிடுவான் என்று கூறுகிறீர்கள். நான் எப்படி இப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது?'' என கேட்டது. அதற்கு சிவன், "நீ ஒரு சேது சமுத்திரத்தில் நீராட ஆசைப் பட்டாய். ஆனால் இத்தலத்திலுள்ள குளத்தில் நீராடினால் 16 (சோடஷ) சேது சமுத்திர தீர்த்தத்தில் நீராடிய பலன் உனக்கு கிடைக்கும்'' என கூறினார். கோவில் எதிரிலுள்ள இக்குளம் பிருங்கி மகரிஷி காலத்தில் பிள்ளையாரால் வெட்டப்பட்டது என்பர்.

இத்தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்திற்கு இணையானதால் முக்கூடல் தீர்த்தம் என வழங்கப்படுகிறது.

சோழமன்னன் ஒருவன் வேட்டையாட குதிரைமீதேறி செல்லும்போது இவ்வூர் வழியாகச் சென்றான். இரவு நேரமாகிவிட்டதால் இங்கு தங்க நேர்ந்தது. மன்னன் சிவதரிசனம் செய்யாமல் உணவருந்த மாட்டான். இதையறிந்த குதிரைக்காரன் குதிரைக்கு வைத்திருந்த கொள்ளுப் பையை சிவலிங்கமாக அலங்கரித்து, அதைக்காட்டி மன்னனை உணவருந்தச் செய்தான். பின் அந்தப் பையை எடுக்க முயன்றபோது அதுவே சிவலிங்கமாக மாறியது என்றும் இத்தலவரலாறு கூறுகிறது.

சிறப்பம்சங்கள்

ப் இறைவன் நேத்ரநாதசுவாமி, முக்கூடல்நாதர் என்ற திருநாமத்துடன் சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மாசி சிவராத்திரி தினத்தில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுகிறது.

ப் இறைவி அஞ்சனாட்சியம்மன் திருமணத் தடையைப் போக்கி அருள்பவளாய்த் திகழ்கின்றாள்.

ப் 12 அமாவாசை தினங்களில் இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்தால் புத்திரதோஷம், திருமணத்தடை விலகும்.

ப் கோவிலின் முகப்பில் மேற்புறத்தில் இறைவன், இராமர், ஜடாயு, கன்னி விநாயகர், சுப்பிர மணியர் ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளன.

ப் தை, ஆடி, மகாளய அமாவாசை மற்றும் சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

"இத்தல சோடஷ தீர்த்தக் குளக்கரையில் திதி, தர்ப்பணம் செய்தால் கயாவில் தர்ப்பணம் செய்வதற்கு சமம்'' என்கிறார் ஆலய அர்ச்சகரான முத்துக்குமரன். மேலும் அவர் கூறுகையில்-

"ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.

1. ஆயுள்: மனிதனுடைய ஆயுளானது எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடிகூட நீட்டிக்கமுடியாது.

2. வித்தம்: இவ்வளவு பொருள்தான் அதற்குப் பிராப்தம். அதற்குமேல் என்ன முயன்றா லும் ஒரு சல்லிக்காசுகூட சேமிக்க முடியாது; தங்காது.

3. வித்யா: இவ்வளவு கல்விதான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு செய்தாலும், மணிக் கணக்காகப் படித்தாலும் பயனளிக்காது.

4. கர்மா: தொழில், குணம், மனைவி, மக்கள் அமைவது. இந்த தொழில் செய்து தான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.

5. மரணம்: இன்றைய தினத்தில், இந்த க்ஷணத்தில், இந்த நிலையில் இந்த ஜீவனுக்கு பிராண வியோகம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை யாரும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்.

அங்கு பரிசோதித்துவிட்டு மருத்துவர் "அரைமணிநேரம் முன்பு வந்திருந்தால் பிழைத்திருப்பார்' என்கிறார். அரைமணி நேரம் முன்பு ஏன் போக முடியவில்லை என்பதுதான் கேள்வி. அரைமணிநேரம் முன்பு போயிருந்தாலும் மருத்துவர் இதையேதான் சொல்லியிருப்பார். பிழைக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டிருந்தால்தான் பிழைப்பார். ஆக, இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும்போதே பூர்வவினைக்கேற்ப நிர்ண யிக்கப்படுகிறது! இதை மாற்ற யாராலும் மாற்றமுடியாது.

ஆனால் இத்தல ஈசன் நேத்ரநாத சுவாமி பூர்வபுண்ணிய தோஷத்தை விலக்கி முக்தி நிலையை அருளச் செய்பவர்'' என்றார்.

விதியை மதியால் வெல்லலாம் என்பர். அப்படி வெல்லவேண்டுமானால் திதி வழிபாட்டைக் கடைப்பிடிக்கவேண்டும். திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள தூரத்தைக் குறிப்பதாகும்.

பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, பௌர்ணமி அல்லது அமாவாசையென்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.

அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகள் தவிர மற்ற 14 திதிகளால் சில சுப- அசுபப்பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப்பலன்களும், அசுபப்பலன்களும் ஏற்படும்.

நற்பலன் தரும் திதிகள்:

ஞாயிறுலி அஷ்டமி, திங்கள்- நவமி, செவ்வாய்- சஷ்டி, புதன்- திரிதியை, வியாழன்- ஏகாதசி, வெள்ளி- திரயோதசி, சனி- சதுர்த்தசி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்தவொரு நல்லகாரியம் செய்தாலும் அதில் வெற்றியே கிட்டும்.

சுபகாரியங்களுக்கு கூடாத திதிகள்:

ஞாயிறு- சதுர்த்தி, திங்கள்- சஷ்டி, செவ்வாய்- சப்தமி, புதன்- துவிதியை, வியாழன்- அஷ்டமி, வெள்ளி- நவமி, சனி- சப்தமி. மேற்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலனளிக்காது.

வயல்வெளிகளுக்கு நடுவில் நாற்புறமும் அழகிய மதில்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலின் முன்புறம் சோடஷ தீர்த்தக்குளம் உள்ளது. நுழைவாயிலின் உள்ளே சென்றால் ஒரே ஒரு பிராகாரத்துடன், நடுவில் சற்று உயரத்தில் பழங்காலக் கருங்கல் தூண்களால் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளது.

பிராகாரத்தின் மேற்குப் புறத்தில் க்ஷேத்திர விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட தெய்வங்கள் சிவாகம நெறிப்படி உள்ளன. பிராகாரத்தில் தலவிருட்சம் வில்வமரம் உள்ளது. நால்வர் சந்நிதி, காலபைரவர், சனிபகவான், நாகர், சூரியன், சந்திரன், வள்ளியம்மை அருள்கின்றனர்.

உள்நுழைவாயிலில் பிரதோஷ நந்தியைக் கடந்தால் சுயம்புவடிவாக மூலவர் நேத்ரநாத சுவாமி கிழக்கு நோக்கியும், அஞ்சனாட்சி யம்மை தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர்.

கிராம எல்லையில் பிற தெய்வங்களுக்கும் காவல் தெய்வங்களுக்கும் சந்நிதி உண்டு.

"நீத்தார்கடன் செய்யத் தவறியவர்களும், முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருந்தாலும் அவர்கள் கவலைப்படாமல் இத்தலத்திற்கு வந்து வழிபாடுகள் மேற்கொண்டால், தொடர்தோல்விகள் தொலைந்து வாழ்வில் புத்தொளி கிட்டும். பித்ருதோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை விலகி, எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிகிட்டும். ஆத்மார்ந்தமான சிவழிபாட்டுக்கு எமனையே வெல்லும் ஆற்றல் உண்டு'' என்கிறார் ஆலயப் பிரதான அர்ச்சகரான மணிகண்ட சிவாச்சாரியார்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், திருநேத்ரநாத சுவாமி திருக்கோவில், திருப்பள்ளிமுக்கூடல். கேக்கரை அஞ்சல், திருவாரூர் மாவட்டம்- 610 002.

பூஜை விவரங்களுக்கு: மணிகண்ட சிவாச்சாரியார், அலைபேசி: 97916 68756, முத்துக்குமரன் குருக்கள், அலைபேசி: 93455 88420.

அமைவிடம்: திருவாரூரிலிருந்து கேக்கரை சென்றால், திருப்பள்ளி முக்கூடல் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிற்றுந்து உள்ளது. ஆட்டோமூலமும் செல்லலாம்.

படங்கள்: போட்டோ கருணா