தினெட்டு என்பது தெய்வாம்சம் பொருந்திய எண்ணாகத் திகழ்கிறது. இந்த எண்ணின் அடிப்படையில் பல நிகழ்வுகள் நடந்திருப்பதாக ஞான நூல்கள் கூறுகின்றன. சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்க, அவர் எழுந்தருளியுள்ள சந்நிதானத்திற்கு பதினெட்டுப் படிகளைக்கடந்து செல்ல வேண்டும். படிகள் ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைத் தெரிவிக்கிறது.

மெய், வாய், கண், மூக்கு, செவி, அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம், சத்வம், ரஜஸ், தாமசம், ஞானம், அஞ்ஞானம் ஆகிய வையே அவை என்று புனித நூல்கள் கூறுகின்றன. மேலும் பல தத்துவங்களும் உள்ளன.

நமது உடலிலுள்ள இந்திரியங் களும், குணங்களும் 18 என்கின்றன ஞானநூல்கள். அவை: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஐந்து. முக்குணங்களாகிய சத்வ குணம், ரஜோகுணம் தமோகுணம் ஆகியவை மூன்று. வித்யை, அவித்யை ஆகியவை இரண்டு.

ddd

Advertisment

அஷ்ட ராகங்கள் எட்டு.

Advertisment

வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை. மேற்சொன்னவை பதினெட்டுப் படிகளின் தத்துவம். இவற்றைக் கடந்துசென்றால் மூலவர் ஐயப்ப சுவாமி, சின்முத்திரையுடன், யோகப்பட்டை அணிந்து யோகநிலையில் அருள்புரிவதை தரிசிக்க லாம்.

பதினெட்டு என்னும் எண் குறித்து புராணங்கள் கூறும் தகவல்கள்:

துவாபரயுகத்தில் குருக்ஷேத்திரத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனர் கூட்டத் திற்கும் நடந்த பாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றன. அந்தப் போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்தார் கிருஷ்ணர். அர்ச்சுனன் "தன் உறவினர்கள்மீது அம்புகள் செலுத்திக் கொல்வதற்கு மனமில்லை' என்று கிருஷ்ணரிடம் கூறவே, அவனுக்கு போர்க்களத்தில் உபதேசம் செய்தார். அதுவே, பகவத்கீதை என்று போற்றப்படுகிறது. அந்த பகவத்கீதையின் அத்தியாயங்கள் 18.

பதினெட்டு சித்தர்கள் வரலாற்றில் இடம்பெற்றிருகிறார்கள். நந்தீசர், பொதிகை முனி, அகத்தியர், புலத்தியர், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காடர், போகர், கோரக்கர், ராமதேவர், சட்டை நாதர், கொங்கணர், கமலமுனி, புண்ணாக்கீசர், காலங்கி சித்தர், திருமூலர், கருவூரார், மச்சமுனி, அழுகணி, புலிப்பாணி.

இந்தப் பதினெட்டு சித்தர்களின் திருவுருங்களை தமிழகத்தில் ஒரே இடத்தில் தரிசிக்க வேண்டுமென்றால், சென்னை மாடம்பாக்கத்திலுள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு அருகில் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் அருளாணைப்படி கே.வி.எல்.என். சர்மாவின் முயற்சியில் அமைக்கப்பட்டது ஸ்ரீசக்ரமகா மேரு. இங்கு 18 சித்தர்கள் பிருந்தாவன சக்தீபீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவகிரகங்களுக்கு பதிலாக ஒரு கிரகத்திற்கு இரண்டு சித்தர்கள் வீதம் 18 சித்தர்கள் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியிருக்கி றார்கள். இந்த சக்திபீடத்திற்குச் செல்ல தாம்பரத்திலிருந்தும், குரோம்பேட்டையிலிருந்தும் வாகன வசதிகள் உள்ளன.

சித்திகள் பதினெட்டு.

அவை: அணிமா, லகிமா, மஹிமா, ஈசத்துவம், வசித்துவம், பரகாமியம், புத்தி, இச்சா, ப்ராப்தி, ஸர்வகாமம், ஸர்வ சம்பத்ப்ரதம், ஸர்வ பிரயமகரம், ஸர்வமங்கள காரணம், ஸர்வ துக்க விமோசனம், ஸர்வம்ருத் யுப் ரஸவனம், ஸர்வ விக்ன நிவாரணம், ஸர்வாங்க சுந்தரம், ஸர்வ சௌபாக்கிய தயானம்.

மேற்கூறியவையே பதினெட்டு சித்திகளாகும். இவையனைத்தும் சித்தர் பெருமக்களுக்குக் கைவந்த கலைகள் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

வேதவியாசர் என்று போற்றப் படும் மகாமேதை துவாபர யுகத்தில் வாழ்ந்தவர். அவர் எழுதிய புராணங்கள் பதினெட்டு. சிவ புராணம் பத்து. அவை: சைவம், பவிஷம், வாமனம், மத்ஸ்யம், கூர்மம், பிரம்மாண்டம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராகம்.

விஷ்ணு புராணம் நான்கு. அவை: காரூடம், நராதியம், வைஷ்ணவம், பாகவதம்.

பிரம்ம புராணம் இரண்டு- பிரம்மம், பத்மம்.

அக்னி புராணம் ஒன்று- ஆக்னேயம்.

சூரிய புராணம் ஒன்று- பிரமகைவர்த்தம்.

மேலும், உப புராணங்கள் பதினெட்டு. அவை:

ஸரத்குமாரம், நாரஸிம்மம், ஸ்காந்தம், சிவதர்மம், நந்தி, தூர்வாஸ், நாரத, காபில, மாநவ, ஔசநஸ, பிரும்மாண்ட, லாருண, காளி, மஹேச்வர, ஸாம்ப, ஸௌர, பாராச்சர்ய, மாரீசி.

யாகம் (வேள்வி) நடத்தும்போது ஹோமகுண்டத்தில் போடப்படும் பொருட்கள் பதினெட்டு. விறகு, நெய், பால், தயிர், துவரை, பொரி, கடுகு, சமித்து, பயறு, பணியாரம், வெல்லம், பொரிமா, தேன், செந்நெல், உளுந்து, சம்பா நெல், எள், சருவாதீய அமுது.

தமிழ் மாதங்களில் ஆடிமாதம் 18-ஆம் தேதி காவேரி நதியில் "ஆடிப்பெருக்கு' என்று போற்றப்பட்டு, அன்று பெண்கள் காவேரி நதிக்குப் பூஜை செய்வது வழக்கம்.

இராமபிரான், இலங்கையில் இராவணனுடன் போர் செய்யும்போது அரக்கர்களைக் கொல்லும் நிலை ஏற்பட்டது. அது அவர் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இதனைப் போக்க தன் குலகுருவான வசிஷ்டரின் ஆலோசனைப் பேரில் ஆடி 18 அன்று காவேரி நதியில் நீராடி மன உறுத்தலைப் போக்கிக் கொண்டார் என்று புராணம் கூறுகிறது.

ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ரங்கநாதர் ஆடி பதினெட்டு அன்று கோவிலின் தென்புறத்தில் ஓடும் காவேரி நதிக்கரைக்கு வருகைதந்து, காவேரித் தாயாருக்கு பட்டுப்புடவை மற்றும் மங்கலப் பொருட்களை சமர்ப்பணம் செய்வது வழக்கம். மேலும், அங்கிருந்து வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, ஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு கோவிலுக்குச் செல்வார். இந்த வைபவம் ஆடி 18 அன்று மட்டுமே நடைபெறும்.

திருச்சி ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மனிதன் மனிதனாக வாழ 18 விஷயங்களை அளித்திருக்கிறார்கள். அவை:

முதலில் வணங்கவேண்டிய தெய்வம்- தாய், தந்தை.

மிகமிக நல்ல நாள்- இன்று.

மிகப்பெரிய வெகுமதி- மன்னிப்பு.

மிகவும் வேண்டியது- பணிவு.

மிகவும் வேண்டாதது- வெறுப்பு.

மிகப்பெரிய தேவை- நம்பிக்கை.

மிகக்கொடிய நோய்- பேராசை.

மிகவும் சுலபமானது- குற்றம் காணல்.

கீழ்த்தரமான விஷயம்- பொறாமை.

நம்பக்கூடாதது- வதந்தி.

ஆபத்தை விளைவிப்பது- அதிக பேச்சு.

செய்யக்கூடாதது- நம்பிக்கை துரோகம்.

செய்யக்கூடியது- உதவி.

விலக்க வேண்டியது- சோம்பேறித்தனம்.

உயர்வுக்கு வழி- உழைப்பு.

நழுவவிடக்கூடாதது- வாய்ப்பு.

பிரியக்கூடாதது- நட்பு.

மறக்கக்கூடாதது- நன்றி.

பொதுவாக தெய்வங்கள் இரண்டு கரங்களுக்குமேல் அருள்புரிவதை தரிசிக்கலாம். இதில் சண்டிகாதேவி என்னும் காளிதேவி யின் கரங்கள் பதினெட்டு. இந்தக் காளியை வழிபட சகல பாக்கியங்களும் பெற்று வளமுடன் வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.