ஸ்ரீகண்டேஸ்வரர் ஆலயம் கர்நாடக மாநிலத்தில் நஞ்சன்கூடு என்னும் ஊரில் உள்ளது. நஞ்சன் கூடேஸ்வரர் ஆலயம் என்றொரு பெயரும் உண்டு. இது பழமையான கோவில். காவிரியின் ஒரு கிளை நதியான கபிலா என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென் பிரயாகை என்று புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.
நஞ்சு என்றால் விஷம். விஷத்தைப் பருகியவர் சிவன். அந்த விஷத்தை அருந்திய சிவன் குடிகொண்டிருக்கும் ஆலயம் இதுவென்பதால் நஞ்சன்கூடேஸ்வரர் ஆலயம் என்னும் பெயர் வந்தது. பாற் கடலைக் கடைந்தபோது வெளிவந்த விஷத்தை அருந்திய சிவபெருமானின் இந்த ஆலயம் மிகவும் புகழ்பெற்றது.
இந்தக் கோவிலில் தோடா என்னும் பெயரில் ஒரு விழா நடக்கும். அதைப் பார்ப்பதற் காக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் வந்து குவிவார்கள். அப்போது ரதத்தில் சிவபெருமான் ஊர்வலமாகக் கொண்டுவரப் படுவார். சிவனைக் கண்குளிர தரிசித்து அவரது பேரருளைப் பெறுவார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்திற்கு அருகிலேயே பரசுராமரின் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்திலிருக்கும் பிரதான கோபுரத்தின் உயரம் 120 அடி. ஒன்பது நிலைகளைக்கொண்டது. ஆலயத்தின் வெளிப்பகுதியை மன்னர் மூன்றாம் கிருஷ்ணதேவராயரின் மனைவி மகாராணி தேவராஜம்மணி உருவாக்கியிருக்கிறார்.
சிவ புராணத்தில் இந்த இடம் கரலாபுரி என்று குறிப்பிடப்படுகிறது. தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றாக இது இருப்ப தால், இதை தட்சிண காசி என்றழைக்கி றார்கள்.
இந்த ஆலயம் தோன்றியதற் கான கதை இது...
கேஷி என்ற அரக்கன் தேவர்களுக்குப் பல தொல்லை களைத் தந்தான். பிரம்மா, விஷ்ணு ஆகியோரிடம் வரம் பெற்றவன் அவன். அதனால் யாருக்குமே அஞ்சாதவனாக இருந்தான். அவனது கொடுமைகளைப் பொறுத்துக்கொள்ளமுடியாத நிலைக்கு வந்த தேவர் களும் நாரதரும் தங்களின் நிலையை சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவன் அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்களித் தார். தான் கூறியபடி அரக்க னான கேஷியை அவர் வதம் செய்தார். அதன்மூலம் நாரத முனிவரும் தேவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
அரக்கனின் பாவச் செயல்களுக்கு இந்த இடத்தில் பரிகாரம் செய்யப்பட்ட தால், பாவ வினாசினி என்றொரு பெயரும் இந்த இடத்திற்கு இருக்கிறது. இங்கிருக்கும் கபிலா நதிக்கு கபினி என்றொரு பெயரும் இருக்கிறது. இங்குவரும் பக்தர்கள் இந்த நதியில் நீராடியபிறகு சிவபெருமானை வழிபடுவார்கள்.
இந்த ஆலயம் குறித்து கூறப்படும் இன்னொரு கதை இது...
புராண காலத்தில் பரசுராமர் தன் தந்தை ஜமதக்னி முனிவர் கூறினார் என்பதற்காக, தன்னைப்பெற்ற அன்னையின் தலையை வெட்டினார். அந்த பாவச் செயலுக்குப் பரிகாரம் காண்பதற்காக இந்த இடத்திற்கு வந்தார் பரசுராமர். இங்கு சிவபெருமானை நினைத்து தவம் செய்தார். ஒரு மண்டபத்தை உருவாக்கி அதில் தன்னை வழிபடும்படி கூறினார் சிவபெருமான்.
அதன்படியே மண்டபத்தை உருவாக்கி சிவனுக்குப் பூஜை செய்தார் பரசுராமர். அப்போது அவரது பரசு என்னும் கோடரி சிவலிங்கத்தின்மீது எதிர்பாராமல் பட்டுவிட, அந்த இடத்தில் குருதி வழிந்தது. அதைப் பார்த்துக் கதறியழுதார் பரசுராமர்.
அப்போது அவருக்குமுன் சிவபெருமான் தோன்றி, குருதி வருமிடத்தில் மண்ணை அப்பும்படி கூறினார்.
பரசுராமர் அவ்வாறே செய்ய குருதி நின்றது. பரசுராமருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. அப்போது அன்னை பார்வதியும் சிவனுடன் சேர்ந்து காட்சியளித்தாள்.
அந்த சமயத்தில் ஆற்றில் நீராடுவதற்காக பார்வதி சென்றாள். குனிந்து நீரைத் தொடும்போது, பார்வதியின் மகுடத்திலிருந்து ஒரு மணி உதிர்ந்து கீழே விழுந்தது. அதைப் பார்த்த சிவபெருமான், "இதுவரை இங்குவரும் பக்தர்களுக்கு என்னுடைய ஆசீர்வாதம் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தது. இனி உன்னுடைய அருளும் ஆசீர்வாதமும் அனைவருக்கும் கிடைக்கும்'' என்று அருளினார். பார்வதியின் மணி விழுந்த அந்த இடத்திற்கு "தட்சிண மணிகர்னிகா காட்' என்னும் பெயர் வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்கு அருகிலுள்ள நகரம் சாம்ராஜ் நகர். விமான நிலையம் மைசூரு. ரயில் நிலையம் நஞ்சன்கூடு. மைசூரு விமான நிலையத்திலிருந்து ஆலயம் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நஞ்சன் கூடு ரயில் நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர். சென்னையிலிருந்து மைசூரு 473 கிலோமீட்டர்.