மதுரையில் கள்ளழகர் அருளாட்சி புரியும் கள்ளந்திரி ஆற்றுப்பாலம் வடகரையில், குறிஞ்சி நகரில் அமைந்திருக்கும் பாம்பாட்டிச் சித்தர் கோவிலின் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா, பலநூறு பக்தர்கள் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்', "சித்தர் ஆலய தரிசனம் பாபவிமோசனம்' என்று ஆன்மிக உணர்வோடு பயபக்தியோடு வந்திருக்க, இத்திருக்கோவிலின் ஸ்தாபகர் சதயம் மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமையில் சமீபத்தில் சிறப்பாக நடந்தேறியது.
நாடிவரும் அனைத்து பக்தர்களுக்கும் பரிபூரண அருள்தந்து நோய்நொடிகள் ஏதுமில்லாத, சிறிய மனக் குறைகள், மனக்குழப்பங்கள்கூட இல்லாத நிறைவானவாழ்வு தந்துவரும் இத்திருக்கோவில் உருவான விதம், இதன் தனிச்சிறப்புகள், வழிபாட்டு விழாக்கள், நேரங்கள் பற்றி நம்மிடம் விளக்கினார் இக்கோவிலை உருவாக்கியிருக்கும் மீனாட்சி சுந்தரம்.
புண்ணியம் நிறைந்த புனித நகரமாய் விளங்கும்- அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளாட்சி புரியும் மதுரை மாநகரில், வடக்கு திசையில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகிய "திருமாலிருஞ்சோலை' என்று வைணவர்களால் அழைக்கப்படும் அழகர்மலை ஸ்ரீசுந்தராஜப் பெருமாள்-கல்யானா சுந்தரவல்லித் தாயார் ஆலயம் அமைந்துள்ளது. அதுபோல அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலை முருகப்பெருமான், காவல் தெய்வமாகிய 18-ஆம் படி கருப்பணசாமியின் அருளுடன், கள்ளந்திரி ஆற்றுப்பாலம் வடகரையில் அமைந்திருக்கும் பாம்பாட்டிச் சித்தர் பீடமாக இருக்கும் இத்திருக்கோவில் உருவான வரலாறு கேட்டாலே மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
17 வருடங்களுக்குமுன்பு நடந்த சம்பவம். என் அப்பா "அமரர்' வைத்தியர் மாரியப்பன் எப்போதாவது தெய்வ சிந்தனையில் மூழ்கி "அருள்வாக்கு' சொல்வதுண்டு.
அந்த நேரம் சித்தர் அவர் உடலில் இறங்கி பேசிக்கொண்டு இருப்பார். அப்படியொரு நேரம் பகலில் வந்தபோது நான் வீட்டில் இல்லை. நான் ஜோதிடர் என்பதால் வெளியில் சென்று நண்பர் ஒருவர் வீட்டில் ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த நேரம் அசரீரிபோல் "உடனே வீட்டுக்குப் போ' என்று எனக்குக்கேட்டது. நான் ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அந்தக் குரல் கேட்கவில்லை. "சீக்கிரம் வீட்டுக்குப் போ' என்று திரும்பத் திரும்ப அசரீரி குரல் எனக்கு மட்டும் கேட்டுக்கொண்டே இருந்ததால், எனக்கு மனதிற்குள் பரபரப்பு வந்துவிட்டது. சுற்றிலும் யாருமில்லை. அமைதியான பங்களா அது. எனக்கு மட்டுமே குரல் நேரம் ஆக ஆக கூடிக்கொண்டே போனது.
"சொல்லிக்கிட்டே இருக்கேன், போகப் போறியா இல்லையா ?' என்று அந்த அசரீரி என்னை அதட்டியதும் நான் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்தவரிடம், "சார் நான் இப்ப அவசரமா வீட்டுக்குப் போயே ஆகணும்!' என்று பணிவோடு சொல்லிவிட்டு, கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். அந்த காலத்தில் செல்போன் இல்லாததால் வீட்டிற்கு போன் செய்து "யார் அழைப்பது?' என்று கேட்கவும் முடியவில்லை. அதனால் அசரீரி குரலை தெய்வம் இட்ட கட்டளையாகக் கருதி சென்றுவிட்டேன்.
வீட்டில் அப்பா, அம்மா இருவர் மட்டுமே இருக்க அப்பா சித்தருடன் பேசியபடி அருள்வந்து சொல்லிக்கொண்டிருந்ததைப் பார்த்து கைகட்டி வணங்கி அப்பா முன்னால் நின்றேன்.
"வந்திட்டியாப்பா' என்ற அப்பா அவர் சொல்லிவந்த அருள்வாக்கை நிறுத்திவிட்டு, "கோவில் கட்ட இடம் பார்க்கணும் வா' என்று, காரில் என்னை அழைத்துச் சென்றார்.
நாங்கள் வாங்கிய இடத்தில் காரை நிறுத்துச் சொன்னார் அப்பா. காரைத்திறந்து நாங்கள் இறங்கிய இடத்தில் பெரிய பாம்பு சுருண்டு படுத்திருந்தது. சரியான வெயில். என் அப்பா இறங்கும் இடத்தில் பாம்பு படுத்திருந்தது.
அப்பா இறங்கியதும் நாங்கள் பாம்பு பாம்பு என்று அலறி கத்திவிட்டோம். அப்பாவோ கொஞ்சமும் பயப்படாமல் "உஷ்' பேசாமல் இருங்கள் என்று சைகை செய்தார்.
அந்த பாம்பும் சட்டென்று அங்கிருந்து கிளம்பி வளர்ந்து சரசரவென்று வேகமாக சென்று சின்னசெடியருகே படமெடுத்து நின்று எங்களைப் பார்த்தது. அந்த செடியை சுற்றிவந்து நின்றுவிட்டு புதருக்குள் போய்விட்டது.
அந்த பாம்பு நின்ற இடம்தான் நாம் கோவில் கட்டும் இடம் என்று அப்பா தீர்மானமாய் சொல்லிவிட்டார். நாகர் போய் நின்ற இடம்தான் இப்போது கோவில் பல ஆண்டுகளுக்குப்பிறகு கட்டப்பட்டுள்ளது. நாகர் நின்ற உடனேயே சிலைசெய்து வைத்துவிட்டோம். இந்த இடத்தையும் சீரமைத்து சிறிய கோவில்போல் ஆக்கிவிட்டோம்.
அன்றுமுதலே பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வணங்கிச் செல்லத் துவங்கிவிட்டார்கள். அந்த பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதால் எங்களை தேடிவந்து அவர்களே கோவில்கட்ட நிதி உதவி, பொருட்கள் உதவிசெய்ய துவங்கிவிட்டனர்.
நாங்களும் தொடர்ந்து 17 வருடமாய் பூஜை செய்துகொண்டே வந்தோம். சமீபத்தில் 17 வருட தவம் வென்று இந்த அற்புதமான பாம்பாட்டிச் சித்தர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, எங்களுக்கும், பக்தர்களுக்கும் முழு மனநிறைவை தந்துவிட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் தந்த மற்றும் எங்கள் சொந்த பணம் சேர்த்து படிப்படியாக உருவான இத்திருக்கோவில் இப்போது கோபுர அழகுடன் கம்பீரமாய் கும்பாபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு குதூகலம் தந்து வருகிறது.
இப்போது அமாவாசை, பௌணர்மியில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறோம். மதியம் அன்னதானம் செய்கிறோம்.
காலை 7.00 மணிமுதல் 9.30 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும் இத்திருக் கோவில் திறந்திருக்கும்.
இந்த நேரம் பக்தர்களை வரவேற்று அர்ச்சனைசெய்து தீபாராதனை காண்பிக்க ஒருவரை நிரந்தரமாக அங்கே தங்கியிருக்கச் செய்துள்ளோம்.
"பாம்பாட்டி 18 சித்தர் ஞான கோவை' என்ற நூல் இருக்கிறது. அதில் தோஷங்கள் நிவர்த்தியாக "அஷ்டநாக பந்தனம்' என்று ஒரு அட்சரம் உள்ளது. அந்த நூலில் சொல்லிய அட்சரம்படி அமாவாசை, பௌர்ணமி பூஜை செய்கிறோம். இதனால் ஜாதகத்திலுள்ள அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களும் நிவர்த்தயாகிறது. ராகு- கேது தோஷங்கள், காலசர்ப்ப தோஷங்கள் இப்படி 12 வகையான சர்ப்ப தோஷங்களால் திருமணத் தடை, குடும்பப் பிரச்சினைகள், சண்டை, சச்சரவுகள் அனைத்தையும் இத்திருக்கோவில் வழிபாடு பக்தர் களுக்கு சரிசெய்து பரவசப்பட வைக்கிறது.
குழந்தையில்லாத தம்பதிகள் இங்கேவந்து வழிபட்டு குழந்தை பெற்றெடுத்து, அந்த குழந்தைகளுக்கு "பாம்பாட்டிச் சித்தர்' என்றே பெயர் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது அற்புதமான இத்திருக்கோவிலின் தனிப்பெரும் சக்தியாக திகழ்கிறது.
பல வருடங்களாக திருமணம் தடைபட்டுவந்த ஆண்கள்- பெண்கள் இத்திருக்கோவில் பாம்பாட்டிச் சித்தரை பயபக்தியோடு வணங்கி உடனே திருமணமாகி உள்ளம் பூரித்திருக்கிறார்கள். இத்திருக் கோவிலின் மகத்தான அருள்பற்றி, சக்தி பற்றி பக்தர்களிடம் கேட்டாலே சொல்வார்கள்.
"பாம்பாட்டிச் சித்தர்' மூலவர் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சிவலிங்கம், அஷ்டநாகம் இங்குள்ளது" என்றார்.
ஆற்றுப்பாலம் வடகரை, அழகர்கோவில் சாலையிலுள்ள ஸ்ரீபாம்பாட்டிச் சித்தர்கோவிலுக்கு நாமும் சென்று வணங்குவோம். வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவோம்...
இத்திருக்கோவில் சிறப்புப் பூஜைகள், ஹோமங் கள், யாகங்கள் செய்ய விரும்பும் பக்தர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய கைபேசி எண்கள்: 98945 41577 மற்றும் 80157 12341.