1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

கம்பீரத்துக்குரிய கிரகம் சூரியனை எண்ணின் நாயகனாகக் கொண்டவர்கள் நீங்கள். இந்த மாத பலன்கள் கொஞ்சம் அதிரி புதிரிதான். சில செயல்கள் மிகுந்த துன்பம் தந்துவிடுமோ என எண்ணி, பயந்துகொண்டிருக்கும்போது, அவை ஒன்றுமில்லாமல் நீர்க்குமிழிபோல் மறைந்து உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். மாறாக, நீங்கள் சுளுவாக, எளிதாக முடிந்துவிடும் என நினைத்த விஷயம், பூதாகாரமாகி, பிடரியிலேயே இரண்டுபோடு போடும். உங்களின் ஒவ்வொரு சொல்லும், இரண்டு செலவை இழுத்து விடும். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்த அரசியல்வாதிகள் மௌன விரதமிருப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் உங்கள் பேச்சு, உங்களுக்கு இழுக்கைத் தேடித்தரும். அரசியல்வாதிகள் சிலரின் செல்வம் பறிமுதல் செய்யப்படும் அபாயம் உண்டு. பங்குனி மாதம் ஆரம்பிப்பதற்கு முன்னால், செல்வத்தை வேறிடம் மாற்றிவிடுவது நல்லது. உங்கள் இளைய சகோதரியின் காதல் விஷயம் தெரியவரும். அல்லது பெண் பணியாளர்கள்மூலம் துன்பம் நேரலாம். குலதெய்வ தரிசனம் உண்டு. உங்களின் சில பெண் வாரிசுகள், தகவல் தொடர்பு துறையில் வேலை கிடைத்து சேர்வர். அல்லது சொந்தத் தொழில் தொடங்க பூர்வாங்க வேலையை ஆரம்பிப்பர். உங்களின் பெற்றோர் திருமண விஷயமான பயணம் செய்வர். உங்களில் சிலரின் காதல், திருமணத்தில் முடியும். மறுமணம் சம்பந்த விஷயங்களில் இந்த மாதம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உங்களில் சிலர், உங்களின் பூர்வீக தொழில், வியாபாரத்தை மீள் முயற்சி செய்வீர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் இந்த மாதம் லஞ்சப்பணம் கொடுக்கல்- வாங்கலில் மாட்டிக்கொண்டு அல்லாடுவீர்கள். சமையல் கலைஞர்கள் பெரிய விபத்திலிருந்து தப்பிவிடுவீர்கள். இந்த எண் காதலர்களுக்கு, மாதம் பாதி வரை உதவிசெய்யும் உங்கள் இளைய சகோதரி, மாத பிற்பகுதியில் வீட்டில் போட்டுக் கொடுத்து விடுவாள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

Advertisment

பரிகாரம்: சங்கர நாராயணர், கோவிலில் விளக்கேற்றி வழிபடவும். அமாவாசையன்று சிவன் கோவிலுக்கு, விளக்கேற்ற எண்ணெய், பஞ்சுதிரி, தீப்பெட்டி இவற்றை வாங்கி, கோவில் அர்ச்சகரிடம் கொடுங்கள். ஞாயிற்றுக்கிழமை, பைரவருக்கு பன்னீர் அபிஷேகம், கோதுமை இனிப்புடன் வழிபடவும்.

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அமைதியை அணிகலனாகக்கொண்ட சந்திரனை எண் நாயகர்களாக கொண்டவர்கள் நீங்கள். இந்த மாதம் பணம் கொடுக்கல்- வாங்கல் இருந்து கொண்டே இருக்கும். அதில் லஞ்சப் பணத்தின் போக்குவரத்து அதிகம் உண்டு. அரசு ஒப்பந்தம் முதலில் கை நழுவி போவதுபோல் இருக்கும். அப்புறம் வழக்கம்போல, கொடுக்க வேண்டி யதை கொடுத்து, ஒப்பந்த உறுதி கையெழுத்து போடுவீர் கள். பணியாளர்கள் அடிக்கடி மாறுவார்கள். உங்கள் இளைய சகோதரனால் அலைச்சல் உண்டு. உங்கள் வீடு, வாகனம் முதலில் மக்கர் செய்து, பின் ஓஹோவென்று ஆகிவிடும். சிறுநீர் பிரிவதில் சற்று சிரமம் ஏற்படும். அல்லது கணுக்காலில் பிடித்து இழுத்து வலிக்கும். வாரிசுகள் விஷயத்தில் கவனம் தேவை. இந்த மாதம் பங்கு வர்த்தக விஷயத்தில் மிகுந்த கணக்கீடு அவசியம். கலைஞர்கள் சற்று சிரமப்பட்டாலும் பின் மிகப்பெரிய அரிய வாய்ப்பை பெறுவர். இந்த மாதம் வேலை கிடைப்பதில் சற்று தடை ஏற்பட்டு, பின் வேலையில் சேர்ந்து விடலாம். காதல் திருமணங்கள் களேபரமாகும். வீட்டினர் ஏற்பாடு செய்யும் திருமணங்களும் சற்று சண்டை, சச்சரவை சந்தித்து பின் நடக்கும். தொழில், வேலை செய்யும் இடத்தில் பெரிய அதிகாரிகள், சற்று கோபம் கொண்டு, பின் சரியாகிவிடுவர். வேலைப் பளு அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் உங்கள் மருமகள் அல்லது மூத்த சகோதரி மிகப் பெரிய யோக வாய்ப்பு பெறுவர். இந்த மாதம் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க ஒப்பந்தம் செய்வீர்கள். உங்களில் சிலர் வெளிநாட்டு பணப்புழக்கம் பெறுவீர்கள்.

Advertisment

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: திருவானைக்காவல் ஸ்தலம் சென்று வழிபடலாம். அருகிலுள்ள கோவிலில் சிவன், அம்பாளுக்கு அபிஷேக காணிக்கை பொருட்கள் வாங்கிக்கொடுக்கவும். திங்கட்கிழமை பைரவர் சந்நிதிக்கு அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கிக்கொடுக்கவும்.

dd

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அறிவிற் சிறந்த குருவே உங்கள் எண்ணின் நாயகர் ஆவார். இந்த மாதம் உங்கள் அறிவு மிக வேகமாக வெகு யுக்தியாக வேலை செய்யும். இதனால் நிறைய அதிர்ஷ்ட நிகழ்வுகளை வலுக் கட்டாயமாக இழுத்து வந்துவிடுவீர்கள். வெளிநாட்டுமூலம் அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். அரசு சார்பில் வெளியூர், பிற மாநில வெளிநாட்டு பயணம் உண்டு. இப்போது நடக்கும் திருமணம், உங்களுக்கு நம்பமுடியாத எதிர்பாராத அதிர்ஷ்டம் தரும். வீடு, வயல், வாகனம் வாங்கிவிடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், அரசுத் துறையை நன்கு கவனித்து, தொழிலில் வேகத்தை மட்டுமல்ல, லாபத்தையும் அள்ளிவிடுவீர் கள். இந்த மாதம் எவ்வளவு பணப்பெருக் கம் வந்தாலும் அது அனைத்திற்கும் செலவும் வரும். எனவே பண வரவு வந்தவுடன், அதனை முதலீட்டு செலவாக மாற்றிவிடுங்கள். வேலைசெய்யும் பணியாளர்கள், வேலையைவிட்டு ஓடுவதிலேயே குறியாக இருப்பர். எனவே அவ்விஷயத்தில் அதிக கவனமாக இருக்கவேண்டும். உங்கள் மூத்த சகோதரிக்கு வேலை கிடைக்கும். உங்களின் சிலரின் வாழ்க்கைத் துணை, லஞ்சம் கொடுத்து, அரசுப் பணி பெற்றுவிடுவார். அரசியல்வாதிகள் தங்களின் பிறந்த ஊரில் வெகு சிறப்பு பெறுவர். கலைஞர்கள் நன்மையும்- தீமையும் சரி சமமாக பெறுவர். சிலரின் மாமியார், சற்று உடல்நலம் கெட்டு, பின் சீரடைவர். உங்கள் மாமனாரின் சில பழக்கங்கள், சில வேண்டாத செலவை இழுத்துவிட்டு விடும். உங்கள் தந்தை உங்களின் பூர்வீக நிலத்தை சீர்படுத்த முனைவார். மாணவர்கள் சிறப்பு பலன் பெறுவர். நீங்கள் வாங்கி வைத்துவிட்டு, மறந்துபோன சில பங்குகள், இப்போது வெற்றி ஈட்டித் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: இராமேஸ்வரம் சென்று வழிபடுவது நலம். அருகிலுள்ள சிவன் கோவிலில் வஸ்திர காணிக்கை செலுத்தலாம். அருகிலுள்ள பைரவர் சந்நிதிக்கு வியாழக்கிழமை, சந்தனம் வாங்கிக்கொடுக்கவும்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

பெரும் போக்கு குணம் கொண்ட ராகுபகவான் உங்கள் எண்ணின் நாயகர் ஆவார். இந்த மாதம் பணவரவு என்பது "வரவு எட்டணா, செலவு பத்தணா' என்ற முறையில் அமையும். இந்த மாதம், இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த விஷயம், உங்கள் வாழ்க்கைத்துணை கோபித்துக்கொண்டு பிறந்த வீடு சென்றிருந்தால், இந்த மாதம் திரும்பி வந்துவிடுவாள். இது சில கணவருக்கும் பொருந்தும். சில கணவர்கள் ரொம்ப நாள் காணாமல் போயிருப்பர். தற்போது அவர்கள் இருக்குமிடம் பற்றிய தாக்கல் வந்துசேரும். தொலைந்துபோன மனைவி எங்கே வந்துவிடுவாளோ என சில கணவர்கள் பயந்துகொண்டிருந்தாலும், டக்கென்று மனைவி முன்னால் வந்து நின்று கிலியூட்டுவாள். காதல், கலப்பு திருமணம் நடக்கும். அதில் கொஞ்சம் சண்டையை உங்கள் தகப்பனார் இழுத்துவிடுவார். சில கல்லூரி மாணவர்கள் சண்டை காரணமாக, கல்லூரிக்கு சில நாட்கள் வரக்கூடாது என தடைவிதிப்பர். சில அரசியல்வாதிகள், சில சட்ட விதிமுறை நடவடிக்கைக்கு பயந்து, எங்காவது ஓடி ஒளிய நேரிடும். தொழில்புரிவோர் சிலபல அரசு பரிமாற்றத்தின்மூலம் தொழிலை முதல் இடத்துக்கு கொண்டுவந்துவிடுவர். வியாபாரிகளும் இவ்விதமே செயலாற்றுவர். உங்களிடம் பணிபுரிவோர், சிலர் உங்கள்மீது குற்றம் சொல்லி, வழக்கு தொடரப்போவதாக மிரட்டுவர். பின் நஷ்டஈடு வாங்கிக்கொண்டு, நல்ல பிள்ளையாகச் சென்றுவிடுவர். இந்த மாதம், உங்களுக்கு ஏற்படும் செலவுகள், சற்றும் நினைத்து பார்த்திராத, எதிர் பார்க்காத விரயமாக இருக்கும். எனவே, தண்டச் செலவுக்கென்றே கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள். இளம் வயது பையன்களிடம் விவகாரம் வைத்துக்கொள்ளக்கூடாது.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 12, 21, 30.

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.

பரிகாரம்: காளஹஸ்தி சென்று வணங்லாம் சனிக்கிழமையில் கால பைரவருக்கு கருப்பு திராட்சை கொண்டு வணங்கவும். அருகிலுள்ள சிவனுக்கு விளக்கேற்றி வழிபடவும்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

புத்திசாலியான புதன் கிரகம், உங்கள் எண்ணின் நாயகன் ஆவார். இந்த மாதம் என்னடா வாழ்க்கையிது, ரொம்ப சொய்ங் என்று சொங்கி மாதிரி ஆகிவிடும் போலிருக்கே என முழித்துக்கொண்டிருந்தவர்களுக்கு, மாயம்போல் திடீர் வெளிச்சம் வந்துவிடும். பல நன்மைகள் வரிசை கட்டி வரும். யார் எக்கேடு கெட்டுப்போனாலும், நீங்கள் ரொம்ப ஆசைப்பட்ட விரும்பிய வரனுடன் திருமண மாகிவிடும். அது வெளிநாட்டு பெண், அல்லது தூர தேச பையனாகவும் இருக்கக்கூடும். எல்லை தாண்டி திருமணம் நடக்கும். வெளிநாட்டு கனவு பலிதமாகும். அது கல்வி, வேலை, வியாபாரம், திருமணம் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். புது தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு அரசு அனுகூலம் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சற்று தொய்ந்து பின் முதல் மார்க் வாங்கிவிடுவர். வீட்டில் பழுது பார்க்கும் செலவுண்டு. இந்த மாதம் நிறைய நல்ல விஷயங்களை எதிர்பாராமல் தரும்தான். அதோடு உங்கள் வாரிசு உங்களை கும்மி எடுத்துவிடுவார். உங்கள் புத்திசாலித் தனத்தை வீட்டுக்கு வெளியே வைத்துக்கொள்ளவும். வீட்டில் பையன், பெண்ணிடம் வேண்டாம். அடிபின்னி எடுத்துவிடுவார். அப்புறம் அவர்களே ஆஸ்பத்திரியில் சேர்த்தும்விடுவர். மற்றும் வாரிசு சின்னப்பிள்ளைதானே என இரண்டு அறை கொடுத்தீர்களானால், பயபுள்ள பள்ளிகூடம் போகும்போது போலீஸ் இட்ட போட்டுக்கொடுத்துவிடும்; கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24,

எச்சரிக்கை எண்கள்: 9, 18, 27.v பரிகாரம்: திருபரம்புரம் சென்று வணங்குவது நலம். பைரவர் சந்நிதிக்கு மரிக்கொழுந்து மற்றும் பச்சைப் பயறு சார்ந்த நைவேத்தியம் செய்து வணங்கலாம். அருகிலுள்ள கருடர் சந்நிதிக்கு நெய் விளக்கேற்றவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

சுக்கிரன் அழகியலை அடிப்படையாகக் கொண்ட எண்ணின் நாயகர் நீங்கள். இந்த மாதம் நீங்கள் நல்லபடியாகத்தான் இருப்பீர்கள். ஆனால் உங்களைச் சுற்றி உள்ளவர்கள்தான் அல்லாடி போவார்கள். அதுவும் மாத பிற்பகுதியில் நீங்கள் பண்ணும் அலம்பல் தாங்க முடியாது. எதிர்பாராத யோகம் உங்களை வந்தடையும். சும்மாவே குதிக்கிற குரங்கு, ஒரு பெக் அடிச்சது மாதிரி ரொம்ப எக்காளமிடுவீர்கள். சுற்றி உள்ளவர்கள் வெறுப்பாகி, பல்லைக் கடிப்பா. இந்த பங்கு பத்திர சம்பந்த பணம் நன்கு கிடைக்கும். குறிப்பாக கலை சம்பந்த இனங் களில் ஈடுபட்டோர் மிக மேன்மை உச்சமும் அடைவர். இதனால் இவர்களின் புகழ் ஓங்கும். இந்த மாதம், இந்த இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு. உயரிய மேன்மை கிடைப்பதோடு, வெகுநாட்களாக உங்களைத் தொற்றி, ஓடிவந்த ஒரு அவமானமும் உங்களைவிட்டு விலகும். மனை விஷயம் நன்மை தரும். மனைமூலம் வரவேண்டிய பணம் வந்துசேரும். காதல் துளிர்க்கும். வந்த வேகத்தில் ஒரு சண்டையையும் கூட்டிக்கொண்டு வரும். உங்களில் சிலர், செயற்கை கரு பற்றிய தரவுகளை ஆய்வு செய்வீர்கள். அல்லது செயற்கை கரு மருத்துவ மனையை நாடுவீர்கள். நிறைய செலவுக்குப்பின், அரசு பதவி கிடைக்கும். நிறைய உழவாரப் பணியில் ஈடுபடுவீர்கள். இப்போது நடக்கும் திருமணத்தில், காதலும் கலாட்டாவும் கைகோர்த்து நிற்கும். உங்களின் சிலரின் தந்தை சிறு மருத்துவ செலவுக்கு உள்ளாகி சரியாவர். அரசியல்வாதிகள் மிக மேன்மை பெறுவர். இவர்களின் பதவி உயர்வுக்கு, மறைமுக செலவு அதிகம் செய்யவேண்டியிருக்கும். சிலரின் கடன் அடையும் காலமிது.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 14, 23.

எச்சரிக்கை எண்கள்: 7, 16, 25.

பரிகாரம்: திருவிடந்தை நாராயணனை வணங்குவது சிறப்பு. வெள்ளிக்கிழமைகளில், அருகிலுள்ள பைரவருக்கு, தேன் கலந்த பேரிச்சம் பழத்தை காணிக்கை ஆக்கி வணங்கவும். ஸ்ரீதேவி, பூதேவி சமேதர பெருமாளை, வெள்ளை நிறப் பூச்சரம் கொண்டு வணங்கவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ஞானகாரன், கேதுவை நீங்கள் எண்ணின் நாயகனாகப் பெற்றுள்ளீர்கள். இந்த மாதம் நடக்கும் திருமணம்மூலம் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான வியாபாரம் தொடங்குவீர்கள். அல்லது நீங்கள் தற்போது நடத்திவரும் வணிகத்தில், பிறநாட்டு சம்பந்தம் ஏற்படும். காதலில் சிறிது இடைவெளி உண்டு. பணவரவில் மிகுந்த ஏற்றம் காணப்படும். சிலர் வெளிநாட்டு பண பரிவர்த்தனை செய்வர். குடும்பத்தில் குதூகலம் கண்ஃபார்ம். பணியாளர்கள் சற்று தொல்லை தருவர். இதனால் மனஉளச்சல் உண்டாகும். சில ஒப்பந்தங்கள் குளறுபடியாகும். இதற்கு உங்களின் புதிய யோசனை காரணமாகும். வாரிசுகளுடன் சண்டை உண்டு. சில டாக்குமெண்ட் காணாமல் போகக்கூடும். தனியார் சம்பந்த வேலை கிடைக்கும். அல்லது சிலர் சீருடை பணிகளில் சேர்வர். இந்த எண்ணில் பிறந்த குழந்தைகளின் தந்தை, வெளிநாடு சம்பந்த அதிர்ஷ்டம் பெறுவர். உங்களில் சிலர் அரசு ஆதரவில் வெளிநாடு செல்லக்கூடும். எழுத்தாளர்கள், புதுமையான கருத்து வடிவம் உருவாக்குவர். நிறைய புதுவித மனிதர்களின் சந்திப்பு இந்த மாதம் நடக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: பிள்ளையார்பட்டி விநாயகரை வணங்கவும். அருகிலுள்ள பைரவரை, புதன்கிழமையில், வில்வமாலை சாற்றி வணங்கவும். விநாயகருக்கு அர்ச்சனை, அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

ஸ்த்ரக் குணமுள்ள சனிபகவானே உங்கள் எண்ணின் நாயகர் ஆவார். இந்த மாதம் பணவரவு மிக அதிகமாக இருக்கும். அது நீங்கள் மனை விற்ற லாபமாக இருக்கலாம். அரசியலில் உண்டாகும் மிகப்பெரும் தொகையாக கைக்கு கிடைக்கலாம். உங்களது சமையல் வகையில் வரும் மிகப்பெரிய பரிசாக சமையலாம். உங்களது மூத்த சகோதரன் மிகப்பெரிய வெகுமதியை உங்களுக்கு கொடுக்கலாம். புதிய வாகனம், குறிப்பாக விவசாயத்தேவை வாகனத்தை சிலர் வாங்கக்கூடும். உங்கள் வாரிசுவகையில் ஒரு நற்செய்தி கிடைக்கும். அரசு ஒப்பந்தம் கையெழுத்து ஆகும். அல்லது அரசு வேலைக்கு கையெழுத்து இடுவீர்கள். சிலர் வெளிநாட்டு வேலை, தொழில், பணி கான்ட்ராக்ட் இவற்றை உறுதிசெய்வீர்கள். உங்களுக்கு அரசு பணியாளர் உங்கள் வீட்டில் வேலைசெய்ய கிடைப்பார். இதன் அர்த்தம், அரசுப் பணியில் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது என்பதாகும். சிலர் சிறைச்சாலையில் பணிபுரிய செல்லலாம். சிலர் சிறையின் உள்ளே கம்பிக்குள்ளும் செல்லலாம். பணி அல்லது குழந்தைகளின் பள்ளி சார்ந்து வீடு மாற்றம் உண்டு. உங்களில் சிலர் பசுமாடு வளர்க்க ஆரம்பித்து விடுவீர்கள். சிலர் விவசாயம் செய்யத் தொடங்குவீர்கள். உங்களில் சிலர் அரசியல் ஆர்வம் பொங்கி பெருகி, ஒரு கட்சியில் சேர்ந்து, வட்ட, மாவட்ட, சதுரச் செயலாளராகி விடுவீர்கள். புதிய கைபேசி வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 15, 24.

எச்சரிக்கை எண்கள்: 1, 10, 19, 28.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு சிறப்பு. பைரவருக்கு வடை மாலை சாற்றி விநியோகித்து விடவும். சனீஸ்வரருக்கு சனிக்கிழமை எள் எண்ணெய் தீபமேற்றவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்களின் எண்ணின் நாயகர், வியத்தகு வீரம்கொண்ட செவ்வாய் ஆவார். இந்த மாதம் முழுவதும் நீங்கள் பயணத்திலேயே காலம் ஓட்டுவீர்கள். அது குடும்ப சுற்றுலாவாக இருக்கலாம். அரசு தகவல் தொடர்பு சார்ந்த பயணமாக அமையலாம். வேலை செய்வதற்காக மாநிலம் விட்டு மாநிலம் மாறலாம். வாரிசுகளை சந்திக்கும் பயணமாக அமையலாம். காதல் செய்வதற்கு கண்டம் விட்டு கண்டம் செல்லாம். சிலர் மருத்துவ சம்பந்தமாக வேறிடம் நகரலாம். பணி கிடைத்து, பாதை மாறலாம். திருமணமாகி வேறிடம் வாழச் செல்லலாம். ஆன்மிக பயணமாக அமையலாம். தொழில் தொடங்கும் முன்னூட்டம் சம்பந்தமாக அலையலாம். குழந்தைப் பேற்றுக்காக, தாய்வீடு அல்லது மருத்துவமனை மாறலாம். அரசியல்வாதிகள் பதவி வெறிகொண்டு பரபரக்கலாம். கலைஞர்கள் தங்களது தொழில் மேன்மையின் பொருட்டு, நாடு விட்டு நாடு செல்லலாம். உயர்கல்வி சிலரை இடம் மாற்றலாம். ஆக இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு, ஒரேயொரு செயல்தான். பயணம் மட்டுமே. காரணங்கள் பல பல. காரியம் ஒன்றே. ஒன்லிட்ராவல். சிலசமயம் பயணங்கள் அலுப்பும், கவலையும் தரும். ஆனால் கடவுள் அருளால் இந்த மாதப் பயணங்கள் மனமகிழ்வை மட்டுமே தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: அனைத்து எண்களும்.

எச்சரிக்கை எண்கள்: 4, 13, 22, 31.

பரிகாரம்: பைரவரை செவ்வாய்கிழமையன்று மாதுளம் பழம் வைத்து வணங்கவும். செம்பருத்தி பூ மற்றும் பால் பாயசம் கொண்டு அர்ச்சனை செய்யலாம். வீரபத்திரரை வணங்குவது நல்லது.

செல்: 94449 61845