க்தி என்றால் என்ன? இயற்கை என்றால் என்ன? இறைவன் என்றால் என்ன? இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இறைவன்மீது பக்தி கொண்டுள்ளோம் என்று சொல்கிறோம். இறைவன் எங்கே இருக்கிறான் என்ற புரிதல் வேண்டுமல்லவா? இயற்கையே இறைவன்; இறை சக்தியே இயற்கை சக்தி. அப்போது நாம் எதன்மீது பக்தி கொள்ளவேண்டும்? இறைவன் ஏகன்- அனேகனாக இருக்கிறான் என்பதற்கு இயற்கையே மாபெரும் உதாரணம். ஏனென்றால் மரங்கள் பலவிதமாக, கனிகள் பலவிதமாக, செடிகள் பலவிதமாக, காய்கறிகள் பலவிதமாக, விலங்குகள் பலவிதமாக, பறவைகள் பலவிதமாக, நீர்வாழ் உயிரினங்கள் பலவிதமாக இருக்கின்றன. உருவத்திலும் பொருளிலும் இவை வேறுபட்டாலும் இவையனைத்திலும் உள்ளே இயங்கிக்கொண்டிருப்பது உயிர். ஆம்; உயிரெனும் ஒன்றேயாகும். அவ்வைக் குறள் கூறுவதைப் பார்ப்போம்.

"எண்ணில் ஊழி உடம்பாய் இரேசிக்கில்

உண்ணிலைமை பெற்றது உணர்வு.'

உள்ளே இழுத்துவிடும் மூச்சுப் பயிற்சி ஒழுங்காக இருந்தால் ஞான உணர்வை நமது உள்மனம் பெற்றிருக்கும். அதன்காரணமாக எண்ணிக்கையில் அடங்காத வாழ்நாளை உடையதாக நமது உடம்பிருக்கும்.

Advertisment

அப்படிப்பட்ட உயிரே, ஏகன்; அவனே அனேகன். ஆறறிவுக்கு எப்போதும் சந்தேகமே. ஆனால் விடை கண்டு பிடிக்க வேண்டுமென்றால், அதற்கான உபகரணங்கள் வேண்டும். அந்த உபகரணங்களை முதலில் கண்டுகொள்ள வேண்டும். அவை கிடைத்தபிறகு அதனை உபயோகப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக உள்ளப்பூர்வமாகக் கடும் முயற்சியோடு உழைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு வெறுமனே பக்தி செய்கிறேன்; இறைவழிபாடு செய்கிறேன்; பூஜை செய்கிறேன் என்று உதட்டளவில் செயல்பட்டால் அதன் பலன் பூஜ்ஜியமாகவே இருக்கும். திருமந்திரச் சிற்பி திருமூலர், "உண்மையான பக்தி செய்ய உன் அறிவைப் பயன்படுத்து; ஏனென்றால் உன் அறிவே கடவுள்' என்கிறார்.

அறிவைப் பற்றித் திருமூலர்:

Advertisment

"அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை

அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின்றன மறை ஈறுகள் தாமே.'

அறிவே வடிவான ஆருயிருக்கு அழிவென்பதே இல்லை. அதாவது உடம்புதான் அழிகிறதே தவிர, உயிர் அழிவதில்லை. ஒன்றிற்கு அழிவில்லை என்கிறபோது, அதற்குத் தோற்றமும் இல்லை; வளர்ச்சியும் இல்லாமல் போகிறது. எனவே அறிவுக்கு ஆக்கமும் இல்லை; அழிவும் இல்லை. அறிவுக்கு அறிவே ஆதாரமாகும். அறிவாகிய ஆருயிர்- அதாவது அறிவுக்குள் ஒளிந்திருக்கும் பேரறிவை (சிவப் பரம்பொருள்) தன் அறிவுகொண்டு அறிந்துணரவேண்டும். ஆகவே "அறிவே கடவுள்' என்கிறார் திருமூலர்.

ss

இதற்கிடையில் செயற்கை பற்றியும், இயற்கை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். விஞ்ஞான வளர்ச்சியும், விஞ்ஞானத்தில் விரிவான, உண்மையான ஆராய்ச்சியும் எதிர்கால நன்மைக்கு மிக அவசியம். எதிர்காலத்தில் மனித குலத்திற்கு கெடுதி செய்யாத, உலக உயிர்களுக்குப் பயன்படக்கூடிய பல விஷயங்களை விஞ்ஞானத்தின்மூலம் கண்டுபிடிக்க வேண்டியது நமது மாபெரும் கடமை.

இயற்கை எனும் இறைவனால் உருவாக் கப்பட்ட எந்தவொரு விஷயமும் மனித குலத் திற்குத் தீங்கிழைக்காது. ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற பல்வேறு விஷயங்களால், பொருள்களால் ஆபத்தும் அழிவும் எதிர் காலத்தில் காத்திருக்கிறது என்ற உண்மையை மறைக்கமுடியுமா?

ஒரு ஆராய்ச்சியாளர், "நிலவில் ஒரு குகை யைக் கண்டுபிடித்துவிட்டோம். எதிர் காலத்தில் இந்த குகையில் தங்கி நிலவில் ஆராய்ச்சி செய்யமுடியும்' என்று கூறுகிறார். நிலவில் ஈர்ப்புவிசை பற்றிய புரிதல் முதலில் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். இந்த நிலவியல் ஆராய்ச்சி என்பது கடந்த நூறு வருடங்களாக நடந்துகொண்டிருக்கிறது. வானில் ஒவ்வொரு நாடும் அனுப்பிய செயற்கைக் கோள்கள் அதன் ஆயுட்காலம் முடிந்து எப்போது வேண்டுமானாலும் அவை கீழே விழலாம். நிலத்தின்மீது விழுமா அல்லது கடலில் விழுமா என்பதை நாம் அறுதியிட்டு சொல்லமுடியாது.

உலகிலுள்ள இன்னும் சில விஞ்ஞானிகள், "சூரிய கதிர்வீச்சிலிருந்து வெளிப்படும் காந்தத் துகள்களைப் பற்றி ஆராயப்போகிறோம், கருந்துளையைப் பற்றி ஆராய்ச்சி செய்து சில உண்மைகளைக் கண்டறியப் போகிறோம்' என்கிறார்கள். இதைப்பற்றி எல்லாம் நாம் குறை கூறவில்லை. இந்த சூழ்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இயற்கையின் பெரும் சீற்றத்தால் மூன்று கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டன. பலநூறு உயிர்கள் பலியாகிவிட்டன. இதற்கு என்ன காரணம்? இதுபோன்ற இயற்கைப் பேரிடர் மற்றும் பேரழிவு நிகழ்வுகளை ஏன் நாம் முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாக்க முடியவில்லை.

ஏற்கெனவே நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டிருந் தோம். அதாவது ஆர்ட்டி ஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனும் நவீன ஆராய்ச்சி கண்டு பிடிப்பு. இதில் நன்மையானது இருந்தாலும், தீமைகள் மிகவும் கொடூரமானதாக இருக்கும். எதிர்காலத்தில் இதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. நேர்மையாக செயல் படவில்லை எனில் இந்த கண்டுபிடிப்பு மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

ஆக, நேர்மையாக செயல்பட எது நமக்குத் தேவையாக இருக்கிறது? இங்கே தாய்மொழிக் கல்வி அவசியம். இறை பக்தியும், இயற்கை பக்தியும் மிகமிக அவசியம். நம்மைவிட சிறிய நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் முதல் பத்து இடத்தில் இருக்கின்றன. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது இடத்திலிருக்கும் நாம் மூன்று வெண்கலப் பதக்கத்தை வாங்கிவிட்டு அதையே பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். அது வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. ஏன்... தங்கப் பதக்கத்தை வாங்குவதற்குத் தகுதியானவர்கள் யாரும் இங்கில்லையா? தேர்வுசெய்வதில் தெளிவான நேர்மை வேண்டும். பக்திக்கும் விளையாட்டுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? இயற்கை பக்தியும் இறை பக்தியும் இருந்தால் ஒழுக்கம் இருக்கும்! ஒழுக்கம் இருக்குமிடத்தில் உண்மையான மகிழ்ச்சியும் உண்மையான வெற்றியும் இருக்கும்! உயிர்கள்மீது அன்பு செலுத்தத் தெரியவில்லை என்றால் நாம் வாழ்வதற்கான அர்த்தமே பொய்யாகிவிடும்.

இறைவனும், இயற்கையும் பணம் என்னும் ஒன்றை (ரூபாய் நோட்டுகள்) கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஆறறிவு படைத்த மனித இனம் நூறு, இருநூறு, ஐந்நூறு என்று அச்சிடப்பட்ட காகிதங்களைக் கட்டுக்கட்டாகப் பதுக்கி வைக்கின்றது. அதை வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சமூகம் மட்டும் உலகின் பல்வேறு இடங்களில் நிலங்களை ஏக்கர் கணக்கில் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கூட்டம் உணவுப் பொருளைப் பதுக்கிக்கொண்டிருக்கிறது. ஒரு கூட்டம் போதைப் பொருளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறது. அறத்தில் செயல்படவும், பரிமாறவும், அன்பை சேமிக்கவும் சமூகம் மறந்து கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் அதிகாரமே.

அதிகாரம் என்பது சுயநலவாதிகளிடம் இருக்கும் பொழுது சுற்றுச்சூழல் கெடுகிறது. அதனால் ஆரோக்கியம் கெடுகிறது. இது பூமிக்கும் பொருந்தும்; மனித இனத் திற்கும் பொருந்தும். இப்படியே சென்றுகொண்டிருந்தால் இறுதியில் எந்த விஞ்ஞானமும், யார் வைத்திருக்கும் பணமும் இந்த பூமிப்பந்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. அன்பே சிவம்; அறமே தவம். இறைவனே மிகப் பெரியவன். உலகம் சமநிலை பெறவேண்டும், உயர்வு தாழ்விலா நிலை வரவேண்டும். இங்கு பூமிப்பந்தில் ஐந்தறிவிற்கு குறைவாகவுள்ள எந்தவொரு ஜீவனும் தன்னைப் பெரிதாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அத்தனை உயிர்களும் இயற்கையோடு இயற்கையாக இறைவனை ஒன்றியே தங்களது வாழ்க்கை சூழ்நிலையை தகவமைத்துக் கொள்கின்றன. ஆனால் மனித இனமோ அடிப்படை ஒழுக்கத்தை மறந்து பக்தி என்று வாயில் சொல்லிக்கொண்டு, புத்தியில் சக மனிதனுக்குத் தீங்கை விளைவித்துக்கொண்டிருக்கிறது இவற்றையெல்லாம் பரம்பொருள் சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணால் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கி றார். சரியான நேரத்தில் அவரவர் செய்த காரியங்களுக்கான துர்பலன்களையும், நற்பலன்களையும் கர்மப் பலன்களாக அனுபவிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. இவ்வளவு நவீன வசதிகள் வந்த இந்த காலத்தில் முதலில் நாம் செய்யவேண்டியது, நீர் மேலாண்மை; அடுத்தது நில மேலாண்மை; அடுத்தது உணவு மேலாண்மை. இதையெல்லாம் கட்டமைக்க மனித குலத்திற்கு அவசியமானது, கல்வி அறிவுடன்கூடிய ஒழுக்க மேலாண்மை. மழை வரும்பொழுதும் வெள்ளம் வரும்பொழுதும் அதை பாதுகாத்து சேமிக்கத் தவறுகிறோம்.

ஒரு கூட்டம் யாரையாவது குறை கூறிக் கொண்டே இருக்கிறது. நீர் வழித்தடங்களில் வசிக்கக்கூடிய மக்கள் நினைத்தால், அரசின் தயவை நாடாமல் நீர் வராத காலகட்டங் களில் அந்தந்த ஊரிலுள்ள ஏரிகள், குளங்கள், சிறுசிறு குட்டைகள், ஊருணிகள் ஆகியவற்றை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி கரைகளை வலிமையாக வைத்திருந்தால், மழை வெள்ளம் வரும் காலங்களில் நீரைத் தேவையான அளவுக்கு சேமிக்க முடியும்.

அதன்காரணமாக அங்குள்ள நிலத்தடி நீரின் அளவு அதிகரித்து நிலமும் வளமாக இருக்கும்; நீரும் வளமாக இருக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவுகூர்வோம்.

"பரமசிவன் கழுத்திலிருந்து

பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா?

யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால்,

எல்லாம் சௌக்கியமே!

கருடன் சொன்னது...'

இயற்கையை இயற்கையாக இருக்க நாம் முயற்சிக்கவேண்டும். மலைகளையும், மலைவாழ் உயிர்களையும், வனங்களை யும், அங்குள்ள கனிம வளங்களையும் பாதுகாக்கவேண்டும். இனியாவது இதற்கான அவசியமான செயல்களில் நாம் கவனம் செலுத்தாவிட்டால் வரப்போகும் பேராபத்தையும், பெரும் அழிவையும் எந்த இயந்திரத்தாலும், காப்பாற்ற முடியாது.

மருத்துவ ஞானி திருவள்ளுவர் கூறுவதைப் பார்ப்போம்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.'

ஒருவன் தனக்குக் கிடைத்ததைப் பகிர்ந்துகொடுத்து, தானும் உண்டு பலவகை உயிர்களையும் பாதுகாத்தல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலை சிறந்ததாகும்.

எனவே நாம் இயற்கை வடிவானவர்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும். இறைவனும், இயற்கை என்றே உணர வேண்டும். இறைவன் இயற்கையானவன் என்பதை நாம் புரிந்துகொண்டால் எதன்மீது பக்தி செய்யவேண்டும்- எதற்காக பக்தி செய்யவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும். இயற்கையாக இருக்கும் இறைவனைப்பற்றி திருமூலர் அருளிச் செய்ததைப் பார்க்கலாம்.

"அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்

இன்பமும் இன்பக் கலவியுமாய் நிற்கும்

முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்

அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே.'

அன்பாக, அறிவாக, அடக்கமாக, இயல்பாக விளங்குபவனே சிவபெருமான். இந்த இயல்புகள் அனைத்தும் அனைத் துயிர்களின் ஆன்மாக்களிடம் விளங்கும் என்பதே பொருளாகும். ஐந்து என்பது ஐந்தெழுத்து ஆரோக்கிய மந்திரமான, பஞ்சபூதங்களின் தத்துவமே "நமசிவாய' என்பதைக் குறிக்கிறது. சிவப் பரம்பொருள் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐந்துள்ளும் இருந்து அவற்றை இயக்குகிறான்.

இன்பத்திற்கும், இன்ப நுகர்வுக்கும் காரணமாக இருப்பவனும் அவனே. உலகின் தோற்றம், முடிவு என்ற இரண்டிற்கும் காரணமானவனும் அவனே.

இதைப் புரிந்துகொண்டால் இறைவன்மீதும் இயற்கைமீதும் நாம் எப்படி பக்தி செய்யலாம் என்பதை உணரமுடியும்.

அன்பே சிவம்; அறமே தவம்!