"வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே.'
- சம்பந்தர்
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நால்வேதத்தில் இரண்டாவதாக உள்ளது யஜுர் வேதம். அதன் மத்தியில் வரும் ஸ்ரீருத்ரம் சிவனுக்குரியது. அதன் நடுவில் வருவது நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம். இதுவே தியான நிலைக்கு உகந்தது. கருணையுள்ளம் கொண்ட சிவன் தன்னை வணங்க "சிவா' என்ற இரண்டெழுத்தே போதுமென்கிறார். அதுமட்டுமல்ல; "சிவம் வேண்டாம்- விஷ்ணுபோதும் என்றால், "ராம' என்ற இரண்டெழுத்தே போதும் என்பதாக, சிவனே ராமநாம மகிமையைப் பார்வதிக்கு உபதேசித்துள்ளார். காசியில் உயிர்விடுபவர்களின் காதில் விஸ்வநாதரே ராம மந்திரம் ஓதுவதும், அதனால் அவ்வுயிர்கள் முக்திபெறும் என்பதும் காலம்காலமாய் இருந்து வரும் நம்பிக்கை! இதுவரை சொன்னது தியானம். (அருவ வழிபாடு).
பேரின்ப வடிவம்
"அன்பே சிவம்' என்று சிவனுக்கு அன்பையே வடிவமாய்ச் சொல்லியுள்ளனர். "ஏகன், அனேகன்' என்கிறார் மணிவாசகர். "எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும், உருவாய், அருவாய், அருவுருவாய் இருந்தாலும், மனதிற்கு முழுமையான (கலப்பற்ற) பேரின்ப வடிவமாகத் திகழ்வது எதுவோ அதுவே சிவம்' என்பது தாயுமானவர் கருத்து. "எங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே'. (தாயுமானவர்).
அருவுருவம்
கண்ணுக்குத் தெரிவது உருவம்; தெரியாதது அருவம். இரண்டும் கலந்து உருவாயும், அருவுருவாயும் உள்ளது அருவுருவம். அதாவது ஒரு பீடம்; அதன்மேல் வட்டமாகவோ சதுரமாகவோ ஒன்று. அதற்குமேல் நீண்ட உருளை ஒன்று. ஆக இது உருவம். ஆனால் கை கால்கள் இல்லை. இன்னதென்று சொல்லமுடியாது. ஆகவே அருவுருவம். இதுவொரு அடையாளம் மடடுமே. இதுவே அருவுருவ சிவலிங்கத் திருமேனி.
பழமை
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே உலகின் பல பாகங்களிலும் சிவலிங்க வழிபாடு இருந்துள்ளது என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. சிவலிங்க வழிபாடு தமிழகத்தின் தென்பகுதி யிலிருந்துதான் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்றுள்ளது என்று நம்பப்படுகிறது. அதனால் தான்-
"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி'
என்றனர்!
மூன்று நிலைகள்
அருவம்- சத்தர்.
அருவுருவம்- சிவப்பரம்பொருள்.
உருவம்- பிரவிருத்தர்.
நிஷ்களம்- நிர்மலம்
நிஷ்களத்திற்கு வடிவமில்லை. அதில் ஞானசக்தி தனித்தும், கிரியா சக்தி தனித்தும் பொருந்தி வியாபித்திருக்கும் நிலையை "லயசிவம்' என்பர்.
லயசிவம் படைத்தல்முதலான ஐந்தொழில் களைச் செய்யும் இச்சையுடையது. இந்த சிவம் ஞானசக்தியைப் பொருந்தி நின்றால் "சிவம்' எனவும், கிரியாசக்தியைப் பொருந்தி நின்றால் "சக்தி' எனவும் வழங்குவர்.
நிஷ்கள சிவம் ஞானவடிவம். சாமான்யர்கள் வழிபாட்டிற்கு உகந்ததல்ல. இதுவே போக சிவம் எனப்படும்.
சகல, நிஷ்கள சிவமே சிவலிங்கம். அசலம் என்றால் போக்குவரவு இல்லாதது. மூலத்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவது.
ஞானசக்தி குறைந்து கிரியா சக்தி மிகுந்திருக்கும் நிலையில் ஐந்தொழில் புரிவது மகேஸ்வரன் என்பர். ஞானசக்தி மிகுந்து கிரியா சக்தி குறைந்து நிற்பது "சுத்த வித்யை' எனப்படும்.
ஐம்முகச் சிவன்
சிவப்பு, பச்சை, நீலம், கருப்பு, வெள்ளை என்று பல நிறங்கள் கொண்ட உருவம்.
ஆகமேஸ்வரர்
மனிதர்கள், தேவர்கள் அறநெறி செய்ய வேண்டிய கடமைகள், வழிபாட்டு நெறிகள், கடவுள், உயிர், உலகம்- இவற்றிற்கு இடையேயுள்ள உறவு முதலியவற்றை விளக்கும் புனித நூல்கள் ஆகமங்கள்.
அவை கர்ம காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என்று மூன்று பிரிவுகளையுடையது. அதில் ஞானகாண்டமே சைவ சித்தாந்தம்! இலங்கைக்கு அப்பால் கடலின் நடுவே இருந்தது மகேந்திரமலை. (இம்மலைபற்றி கந்த புராணத்தில் வருகிறது). இந்த மலையில் அருளிச் செய்யப்பட்டவைதான் சைவ ஆகமங்கள். தமிழ் ஆகமங்களும், தமிழ் வேதங்களும் இத்தலத்தில் தோற்றுவிக்கப் பட்டவை. "மன்னுமா மலை மகேந்திரமதனுள் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும் மகேந்திரத்திலிருந்து உற்ற ஐம்முகங்களால் பணிந்தருளியும்' என்கிறது திருவாசகம்.
திருமந்திரம்
இருபத்தெட்டு ஆகமங்களில் ஒன்பது ஆகமங்களை மூவாயிரம் பாடல்களில் திருமந்திரம் என்ற நூலாக திருமூலரால் அருளிச் செய்யப்பட்டது.
காமாட்சிக்கு உபதேசம்
சிவனே ஐந்து முகவடிவில் அன்னை காமாட்சிக்கு ஆகமங்களை உபதேசம் செய்தார்.
தரிசித்தவர்கள்
ஐம்முகச் சிவனை தரிசித்தவர்கள் மெய்ப்பொருள் நாயனார், கைலாச நாதர் கோவிலைக் கட்டிய பல்லவ மன்னன் முதலியோர். ஆகமேஸ்வரர் குரலைக் கேட்டவர் பூசலார் நாயனார்.
சதாசிவ மூர்த்தியின் முகங்களாகிய ஈசானம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம் என்னும் ஐந்து முகங்களின் அம்சத்தையும் அதிகாரத்தையும் கொண்டவை இந்த மூர்த்தங்கள்.
மகேச்வர மூர்த்தங்கள் 25. இவையல்லாமல் இன்னும் 39 மூர்த்தங் கள் சேர்ந்து 64 சிவ மூர்த்தங்கள் சொல்லப் படுகின்றன.
இவற்றில் மகேச்வர மூர்த்திகளாகிய சந்திரசேகரர், ரிஷபாரூடர், சோமாஸ் கந்தர் முதலிய மூர்த்தங்களே திருவிழாக் காலங்களில் உலா வருவர். இவர்களுடன் உமா மகேச்வரரும் சேர்ந்து போகமூர்த்திகள் என்பர். இவர்களை வழிபட்டால் இன்பமும் புகழும் பெறலாம்!
அம்மன் இன்றி வீர மூர்த்தங்களாக காலாரி, கங்காளர், வீரபத்திரர் ஆகியோர் விளங்குவர். இவர்களை வழிபட்டால் பகை வெல்லலாம். வினை நீங்கும்.
சுகாசீனர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் யோகமூர்த்திகள். இவர்களை வழிபட்டால் முக்தி பெறலாம்.
மண்ணிலும் அமைத்து வழிபடக்கூடிய எளிமைத் திருவுருவம் சிவலிங்கமே.
மண்ணில் செய்யவும் இயலாதவர்கள் மனத்திற்குள்ளேயே சிவாலயம் எழுப்பி வழிபட்டால் அங்கும் எழுந்தருளும் எளிய பிரான் எம்மான் ஈசன்!