"நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) பழமலைநாதர் ஆலயம்.

ஆதியில் பிரம்மதேவர் உலகைப் படைக்க எண்ணினார். அதற்காக நீரைப் படைத்தார். அப்போது திருமால் மது- கைடபர் ஆகிய அரக்கர்களை வெட்டி வீழ்த்த, அவர்களது சதைகளும் ரத்தமும் தண்ணீரும் ஒன்றா கக் கலந்து இறுகின. அதைக்கண்ட பிரம்மதேவர் அதை மண்ணுலகமாகத் தோற்றுவிப்பதற்கு சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது சிவபெருமான் ஒரு மலை வடிவமாகத் தோன்றி நின்றார்.

palamalai

Advertisment

அது தெரியாத பிரம்மதேவர் பல மலை களைப் படைத்தார். அந்த மலைகள் இருப்பதற்கு இடமில்லாமல் போயின. அதற்காக பிரம்மதேவர் வருந்த, சிவன் பிரம்மனுக்கு உண்மையை உணர்த்தினார்.

அப்படித் தோன்றிய இந்த பூமிக்கு "மேதமை' என்று பெயரிட்டு, பிரம்மதேவர் படைத்த மலைகளுக்கும் இடம்தந்தார் சிவபெருமான். அப்போது சிவபெருமான், "பிரம்மதேவரே, நான் வேறு; இந்த மலை வேறல்ல. இந்த மலை தோன்றிய பின்னரே உன்னால் பல மலைகளை உருவாக்க முடிந்தது. அதனால் இந்த மலை "பழமலை' என்றே பெயர் பெறும்'' என்று கூறினார்.

அப்படிப்பட்ட பழமலை உலகத்திற்கே அச்சாணியாக நிற்க, அதன்மேல் சிவலிங்கமாக விளங்குகிறார் பழமலைநாதர். "இங்குள்ள சிவலிங்கத்தை வழிபடும் எவரும் விரும்பிய பலனை அடைவார்கள்' என்று அருளினார் சிவ பெருமான்.

ஒருசமயம் குபேரனின் தங்கை காமவல்லி தனது தோழிகளுடன் பூலோகத்தில் மணிமுத்தா நதியில் நீராடி பழமலைநாதரை வழிபட வந்தாள். அதே காலகட்டத்தில் கோசலநாட்டு மணிபிங்கலை நகர வேதியரான விபசித்து முனிவர், பழமலைநாதரின் பெருமையைக் கேள்வியுற்று அவரை தரிசிக்க ஆவல்கொண்டு புறப்பட்டுவந்தார். இந்த நிலையில் காமவல்லி தனது தோழிகளுடன் மணிமுத்தா நதியில் நீராடிக்கொண்டிருந்தபோது, அவளது மூக்குத்தி கழன்று விழுந்துவிட்டது. அதை அந்தப் பெண்கள் தேடிக்கொண்டிருக்க, அந்த மூக்குத்தியை கிச்சிலிப் பறவையொன்று தூக்கிச்சென்று வன்னி மரத்தில் அமர்ந்தது. அப்போது மரத்தின்கீழே அமர்ந்திருந்த விபசித்து முனிவர் மடியில் அந்த மூக்குத்தி விழுந்தது.

அதைத் தேடிக்கொண்டுவந்த காமவல்லியிடம் விபசித்து முனிவர் மூக்குத்தியைக் கொடுக்க, அதைக்கண்டு மகிழ்ந்த குபேரனின் தங்கை விபசித்து முனிவருக்கு பல்வேறு ஆபரணங்களைப் பரிசாக வழங்கினாள்.

அந்த ஆபரணங்களைக் கொண்டுதான் பழமலைநாதர் ஆலயத்தை உருவாக்கி உற்சவம் நடத்தினார் விபசித்து முனிவர்.

அப்படி அவர் ஆலயம் உருவாக்கிக்கொண்டிருந்தபோது பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டது. விபசித்து முனிவர் கோவில் திருப்பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அங்குள்ள வன்னி மரத்திலிருந்து இலைகளை உருவி அவரவர் கைகளில் கூலியாகக் கொடுத்தார்.

ff

Advertisment

அவர்கள் அதை வீட்டுக்குக் கொண்டுசென்று பார்த்தபோது அவரவர் உழைப்புக்குத் தகுந்த பொன் நாணயங்களாக மாறியிருந்தன.

இத்தகைய சிறப்புவாய்ந்த பழமலைநாதரும் அம்பாள் பெரியநாயகியும் குடிகொண்டுள்ள இந்த ஆலயத்தை தரிசிப்பதற்காக, 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குரு நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து புறப் பட்டுவந்தார். சிவபெருமானையும் அம்பாளையும் மனம் குளிர தரிசித்துவிட்டு வெளியே வந்தவர், இரவானதால் மண்டபத்தில் படுத்துறங்க முயன்றார். பசி அவரைத் தூங்கவிடவில்லை. பசிக்கும்போதெல்லாம் அம்பாளிடம் கேட்டு சாப்பிடுவது அவரது வழக்கம். அன்றும் இத்தல பெரியநாயகியைப் போற்றிப் பாடினார்.

எப்போதும் அவர் பாடி முடிப்பதற்குள் அன்னத்தோடு வந்து நிற்கும் அம்பாள், அன்றைக்குப் பாடி முடித்தபிறகும் வரவில்லை. அன்னை அன்னம்கொண்டு வரும் வழியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் குரு நமச்சிவாயர். அப்போது நடை தளர்ந்து மூதாட்டி கோலத்தில் அம்பாள் வந்து நிற்க, "எங்கே எனக்கான உணவு?'' என்று கேட்டார். அப்போது மூதாட்டி, "வயதான மூதாட்டியால் எப்படி சாப்பாடு கொண்டுவர முடியும்'' என்று திரும்பக் கேட்டார். அப்போதுதான் "முதுமகள்' என்னும் பொருளில் பாடிய தன் தவறை உணர்ந்த குரு நமச்சிவாயர் மறுபடியும், "காசி அன்னபூரணிக்கு நிகராக இங்கு வலம்வரும் தாயே! இளமைநாயகியான உன்னிடம் பிரார்த்திக்கிறேன். பசிப்பிணியை மட்டுமல்ல; பாவப் பிணியையும் நீக்கி அருள்வாய்' என்று பாடினார். அதைக்கேட்டு மூதாட்டி உருவத்திலிருந்த அம்பாள், பாலாம்பிகையாக இளமைத் தோற்றத் தில் மாறி குரு நமச்சிவாயருக்கு அன்னமளித்தாள்.

ff

அதனால் இவ்வாலயத்தில் மூதாட்டியைக் குறிக்கும் வகையில் பெரியநாயகி, விருத்தாம்பிகை என்றும்; இளமையைக் குறிக்கும் வகையில் பாலாம்பிகை என்றும் அம்பாளை அழைக்கின்றனர்.

தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சுந்தரர் பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று இறைவனையும் அம்பாளையும் பாடிவிட்டு இவ்வழியாகத் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். இவ்வாலயம் வராமல் ஒதுங்கிச் சென்றார். இதைக்கண்ட இறைவன் சுந்தரரை தம்மிடம் வரவழைக்க எண்ணினார். உடனே முருகப்பெருமானை அழைத்தார். "சுந்தரன் எம்மைப் பற்றிப் பாடாமல் ஒதுங்கிச் செல்கிறான். அவனை வழி மறித்து இங்கு அழைத்து வா'' என கட்டளையிட்டார். மயில்மீதேறிப் பறந்துசென்ற முருகப்பெருமான் ஊருக்குத் தெற்கே சுந்தரரை வழிமறித்தார். (அந்த இடத்தில் தற்போது வேடப்பர் என்ற பெயரில் முருகன் கோவில் கொண்டுள்ளார்).

அப்போது சுந்தரர், "உமது தாய்- தந்தை இருவரும் வயது முதிர்ந்த கோலத்தில் உள்ளனர். அவர்களைப் பற்றி என்ன பாடுவது? இளமைக் கோலத்தில் இருந்தால் நான் பாடுவதற்குத் தயார்'' என்றார். சுந்தரரை அங்கேயே நிற்க வைத்துவிட்டு முருகப்பெருமான் தந்தையிடம் சென்று விவரத்தைக் கூறினார். "இளமைக் கோலத்தில் காட்சிதருகிறோம்; சுந்தரனை அழைத்து வா'' என்று கூறினார் சிவன்.

அதன்படி சுந்தரர் பழமலைநாதர் ஆலயம் வந்துசேர்ந்தார். அங்கே அப்பனும் அம்மையும் இளமைக் கோலத்தில் அவருக்குக் காட்சி யளித்தனர். அவர்களைப் போற்றி சுந்தரர் பதிகம் பாடினார். அதைக் கேட்டு இன்புற்ற இறைவன், "உனக்கு என்ன பரிசு வேண்டும்'' என்று கேட்க, சுந்தரர், "ஐயனே, எமக்கு 12 ஆயிரம் பொற்காசுகள் வேண்டும்'' என்றார். இறைவனும் அப்படியே பொற்காசுகளை அள்ளிக் கொடுத்தார். அப்போது சுந்தரர், "அடியேன் திருவாரூர் தியாகராசரை தரிசிக்கச் செல்கிறேன். இந்தப் பொற் காசுகளை எடுத்துச் சென்றால் வழி யில் கள்வர்கள் பிடுங்கிக் கொள்ளக் கூடும். எனவே இவை எனக்கு திருவாரூ ரில் கிடைக்கச்செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

ff

இதைக்கேட்ட எம்பெருமான், "இந்த காசுகளை இங்குள்ள மணி முத்தா நதியில் போட்டுவிடு. திருவா ரூர் சென்று அங்குள்ள கமலாலயக் குளத்தில் எடுத்துக்கொள்'' என்று கூறினார். அப்போது சுந்தரர், "இங்கு போட்ட அதே பொற்காசுகள்தான் திருவாரூர் குளத்தில் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?'' என்று கேட்க, எம்பெருமான் தமது மூத்த பிள்ளை விநாயகரை அழைத்து, தான் கொடுத்த 12 ஆயிரம் பொற்காசுகளை சுந்தரர் முன்பாக உரசி சோதித்துப் பார்க்க சொன்னார். அதன்பிறகு அவற்றை சுந்தரரிடம் கொடுத்து மணிமுத் தாற்றில் போடச்சொன்னார். பிறகு சுந்தரரிடம், "பொற்காசுகளை பரிசோதித்த எமது மகன் விநாயகன், நீ திருவாரூர் சென்று கமலாலயக் குளத்திலிருந்து பொற்காசுகளை எடுக்கும்போதும் உன்னுடன் இருப்பான். பொற்காசுகளின் உண்மைத் தன்மையை அவனை வைத்து சோதித்துக் கொள்ளலாம்'' என்று உறுதி கூறினார்.

அதன்படி திருவாரூர் சென்ற விநாயகர், மணிமுத்தாற்றில் போட்ட பொற்காசுகள்தான் என்பதை உறுதிசெய்து சுந்தரரிடம் கொடுத் தார். இந்தப் பணியைச் செய்த விநாயகருக்கு மாற்றுரைத்த விநாயகர் என்று பெயர் உருவானது. இவர் பழமலைநாதர் கோவிலில் தென்மேற்கு மூலையில் அமர்ந்துள்ளார். அதே பெயரில் திருவாரூர் கமலாலயக் குளத்தருகே சாட்சியாகக் காட்சி கொடுக்கிறார்.

இன்றைக்கு வங்கியில் நாம் செலுத்திய சேமிப்புப் பணத்தை எந்த ஊரில் வேண்டு மானாலும் ஏடிஎம் எந்திரத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு முன்னோட்டமாக, சிவபெருமான் அந்த காலகட்டத்திலேயே செய்துகாட்டிய நிகழ்வு இதுவென்று சிவனடி யார்கள் கூறுகின்றனர். எட்டாம் நூற்றாண்டில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உள்ளன. இவற்றை 28 லிங்கங்களாக இவ்வாலயத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் ஆலயத்தின் வடமேற்குப் பகுதியில் தனிச் சந்நியில் உள்ளன. இவ்வாலயம் 3,500 ஆண்டுகளுக்குமுன்பு உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

பழமலைநாதர் ஆலயம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் அடையாளமாக- படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத் தல் ஆகிய சிவபெருமானின் ஐந்தொழில்களின் அடையாளமாக விளங்குகிறது. இறைவனின் பெயர்கள் முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், விருத்தாசல ஈஸ்வரர், விருத்தகிரிநாதர் என ஐந்து. இங்குள்ள விநாயகர்கள் ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த பிள்ளையார், வல்லப கணபதி, தசபுஜ கணபதி, முப்பிள்ளையார் என ஐவர். இறைவனை வழிபட்ட தேவர்கள் திருமால், பிரம்மா, இந்திரன், குபேரன், குபேரனின் தங்கை காமவல்லி என ஐவர். விபசித்து முனிவர், உரோமச முனிவர், அனவர்த்தினி, நாதசர்மா, குரு நமச்சிவாயர் என முனிவர்கள் ஐவர். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்கு கோபுரங்களுடன், முதல் வாயிலைக் கடந்து உட்பிராகாரத்தில் நுழையும்போது கண்டராதித்த கோபுரம் என ஐந்தாவது கோபுரம் உள்ளது. கோவிலைச் சுற்றி ஐந்து பிராகாரங்கள். (திருச்சுற்று). இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என நந்திகள் ஐந்து. வெளி மண்டபங்கள் ஐந்து.

தினசரி இறைவனுக்கு ஐந்துகால வழிபாடுகள் நடக்கின்றன. வைகாசி வசந்த உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரத் திருக்கல்யாணம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் பத்து நாள் உற்சவம் என ஐந்து திருவிழாக்கள். விநாயகர், முருகன், பழமலை நாதர், பெரியநாயகி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு ஐந்து தேர்கள். அதேபோன்று ஐந்து கொடிமரங்கள். ஆகாயம், பூமி, காற்று, நீர், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களை உள்ளடக்கியது இவ்வாலயம். காசியைவிட வீசம் பெரிது- விருத்தகிரீஸ்வரர் ஆலய தரிசனம்!

சிவபெருமானுக்கு சிறப்புமிக்க 1008 தலங்கள் உள்ளன. அதில் நான்கு தலங்கள் மிக முக்கியமானவை. அவற்றுள் ஒன்று விருத்தாசலம். அடுத்து நடனத்திற்காக உருவான சிதம்பரம். இறைவன் பக்தர்களோடு திருவிளையாடல் புரிய உருவான தலம் காளஹஸ்தி. பக்தர்களின் பக்தியை மெச்சி, அவர்கள் கேட்டதைக் கொடுத்து அவர்களோடு விளையாடி வீற்றிருக்கும் சிறப்புமிக்க ஆலயம் விருத்தாசலம்.

அதேபோன்று, விபசித்து முனிவருக்குப்பிறகு பல மன்னர்கள் கோவிலைப் புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்தியிருக்கிறார்கள். அதற் கான கல்வெட்டு ஆதாரங் கள் ஏராளம் உள்ளன.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல்பெற்ற தேவாரத் தலமிது. மூன்றரை லட்சம் ஆண்டுகளுக்குமுன்பு தோன்றியது பழமலை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தமிழகத்தின் பழமையான பல சிவாலயங்களில் தல விருட்சங்களாக வில்வ மரங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வன்னி மரங்களே தல விருட்சங்களாக உள்ளன, விருத்தாசலம் சிவன் கோவில் என்று கூறினாலே வன்னி மரம் ஞாபகத்திற்கு வரும். இராமபிரான், இராவணனுடன் போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தைத் தொட்டு வணங்கிச் சென்றதாகவும், முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்வதற்கு முன்பாக வன்னி மரமாகக் காட்சிதந்ததாகவும், பஞ்ச பாண்டவர்கள் அக்ஞாதவாசம் செல்வதற்கு முன்பாக தங்களின் ஆயுதங் களை ஒரு துணியில் கட்டி வன்னி மரத்தின் பொந்தில் மறைத்துவைத்ததாக மகா பாரதமும் கூறுகிறது. விஜய தசமி நாளில் மகிஷாசுரனை துர்க்காதேவி அழிப்பதற்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில்தான் நடந்தது. வன்னி மரம் தோஷங் களைத் தீர்க்கும். இக்கோவிலிலுள்ள வன்னி மரம் குறித்து திருச்சி பாரத மிகுமின் நிறுவனத் தினர் ஆராய்ச்சி செய்தனர். அதன்படி காஞ்சிபுரம் கோவிலில் உள்ள மாமரம் 3,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும்; பழமலைநாதர் ஆலயத்திலுள்ள வன்னி மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள இவ்வாலயம் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் உருவானதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு கி.பி. 1893- 1983 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு ஐந்து ராஜ கோபுரங்கள், விமானங்களைப் புனரமைப்பு செய்து 29-4-2002-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தற்போது நகரப் பிரமுகர்கள், வணிகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு ஆலயத் திருப்பணிகளில் தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். இதற்காகத் திருப்பணிக் குழு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக திருப்பணிச் செம்மல் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் அகர்சந்த், செயலாளராக கே.கே.டி. பழமலை, பொருளாளராக விசுவநாதன் உள்ளனர். சிறப்புத் தலைவர்களாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன். விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பிரபல கண் மருத்துவர் வள்ளுவன், விருத்தாசல நகர மக்களால் அன்போடு "மாப்பிள்ளை' என்று அழைக்கப்படும் நக்கீரன் கோபால் உள்ளனர். சிறப்புக் கமிட்டி உபதலைவர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜி. என்கிற கோவிந்தசாமி, முத்துக்குமார், கலைச்செல்வன், முன்னாள் நகர சேர்மன் தீவளூர் லட்சுமணம்பிள்ளை உள்ளனர்.

மருத்துவர் வள்ளுவன் ஆலயத் திருப்பணி குறித்துக் கூறும்போது, "கடந்த 2002-ஆம் ஆண்டு கோவில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக கும்பாபிஷேகக் குழு உருவாக்கப்பட்டது. அந்த குழுமூலம் கோவில் திருப்பணிக்காக வங்கியில் கணக்கு துவக்கப்பட்டது. (அந்தக் கணக்கு எண் 104; கூட்டு எண்-5). கோவில் மேல்விதானத் தில் கருங்கற்கள் பதிப்பதற்காக ஒரு ஊரில் பணம் கொடுக்கப்பட்டது. பிறகு ஐந்து ஊர்களிலிருந்து கற்கள் வந்துசேர்ந்தன. இப்படி இந்த கோவில் சார்ந்து எந்தப் பணிகளைச் செய்தாலும் அது ஐந்து என்னும் எண்ணிலேயே முடிந்தது. தற்போதைய திருப்பணிக் குழுவினர் திருப்பணிக்கான வரவு- செலவு செய்வதற்காக கரூர் வைசியா வங்கியில் கணக்கு துவக்கினர். முதல் முதலாக 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டது. அந்த பணம் கோவில் கணக்கில் சேர்வதற்கு முன்பாக, அந்த வங்கியின் மேலாளர் கோபிநாத் என்பவரது சொந்த கணக்கிலிருந்து அவரையறியாமலேயே அவரது பணம் பத்தாயிரம் ரூபாய் கோவில் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிட்டது. இது என்ன விந்தை என்று அதிசயித்த மேலாளர், இதுகுறித்து தமது துணைவியாரிடம் கூறியுள்ளார். அவர் "கோவில் திருப்பணிக்கு முதன்முதலில் நமது பணம் பயன்படவேண்டுமென்று அந்த இறைவனே முடிவு செய்துள்ளார். இது இறைவனின் திருவிளையாடல். எனவே அந்தப் பணத்தைத் திரும்ப எடுக்கவேண்டாம்' என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு பக்தர்கள் மனநிறைவோடு தினசரி தேடிவந்து கோவில் திருப் பணிக்கான செலவினங்களில் பெரும் பங்கெடுத்துவருகிறார்கள்'' என்றார்.

திருப்பணிக் குழுவினரின் ஆலோசனைகளின்படி, விருத்தாசலம் நகரில் இயங்கிவரும் அர்த்தஜாம அடியார் வளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த சிவனடியார்கள் இறைவனுக்கு நேரம் காலம் பாராமல் பல்வேறு உடலுழைப் புப் பணிகளை திறம்பட செய்துவருகிறார்கள்.

ஆலயத் திருப்பணிகள் பக்தர்கள் பிரம்மிப் போடு பார்க்குமளவில் முடிக்கப்பட்டு, 6-2-2022 ஞாயிற்றுக்கிழமை (தை மாதம் 24-ஆம் தேதி) அன்று காலை 9.00 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

வழிபாட்டுத் தொடர்புக்கு: சிவாச்சாரியர்கள் கல்யாணராமன், நாகேஸ்வரன், ரத்தினசபாபதி, பாலசுந்தரமூர்த்தி, சண்முகசுந்தரம், பிச்சப்பா, நாகராஜன். அலைபேசி: 97870 87784, 94434 67775, 94869 35757, 98944 64194, 99942 93864.